ஞாயிறு, 21 மார்ச், 2021

தொப்பை, தொங்குதல்

 ஓரிடத்தில் முட்டி வெளிவந்து ஏனைச் சுற்றுவட்டப் பகுதிகளில் உட்பொதிவாக உள்ள ஒரு பொருளைக்  குறித்த சொற்கள் தமிழில் "தொ"  என்ற முதலெழுத்திலும் அதற்கு வருக்கமான எழுத்துக்களிலும்  தொடங்குவதைக் கண்டறிவதில் தொல்லை ஒன்றுமில்லை.  இதற்கு எடுத்துக்காட்டாக ஒருபொருளைச் சுட்டிக் காண்பிக்க வேண்டுமெனில் இருக்கவே இருக்கிறது தொப்பி.   தொ என்ற எழுத்திலே தொடங்கும் இன்னொரு சொல் "தொப்பை" என்பது ஆகும்.  ஒரு மனிதனின் தொந்தி  அல்லது தொங்குவயிறு.  முட்டி ஓரிடத்தில் திரண்டு வெளிப்பட்டுக் காண்புறும்.  அதனால்  அது தொப்பை எனப்பட்டது.

உடல்பருத்தவர்கள் எல்லாப்  பகுதிகளிலும் அளவாகச் சுவரைப்போல மேடுகளின்றிப்  பருத்திருப்பதில்லை. அங்கிங்கெனாதபடி எங்காவது சிலவிடங்களில் சதைபருத்து இருக்கும். கொழுப்பும் சதையென்ற குறிப்பில் அடங்கும். இவ்வாறான பருமனை பழந்தமிழர் தொம்மை என்று குறித்தனர். அளவாக இல்லாமல் வெளித்தொங்கும் பருமன்.  பிற்காலத்தில் இச்சொல்லின்  விழேடத் தன்மையை மக்கள் மறந்தமையினால்,  தொம்மை என்பது பொதுப்பொருளில் வழங்கி இப்போது வழக்கில் அல்லது புழக்கத்தில் பெரும்பாலும் இல்லையாகிவிட்டது.  தொப்பை, தொம்மை என்ற பதங்களை ஒப்பிட்டு அறிக.   தொம்பை மாலை என்ற வழக்கும் நோக்கற்பாலது.

பந்தியின்போது பலருக்குச் சமைக்கப்பட்டுள்ள சோறு ஓரிடத்தில் துணியால் மூடப்பெற்றுப் பரப்பி வைக்கப்பட்டிருக்கும்.   இது தொகு ( தொகுத்து அல்லது சேர்த்துவைத்து) பரப்பி வைக்கப்பட்டமையின்   "தொகு+ பரம் " > தொகும்பரம் >  தொம்பரம் எனப்பட்டது.  இக்காலங்களில் நல்ல ஏனங்கள் கிட்டுவதால் இது குறைந்துவிட்டது.

தொகுத்தல் என்பது ஓரிடத்தில் சேர்ந்திருப்பது, அல்லது சேர்த்துவைப்பதுதான் --  தொ என்று தொடங்குவது காணலாம்.  தொகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதியாய் வருகிறது.   பகு, வகு, நகு என்று பல சொற்களில் வந்து இது வினைச்சொல் நீர்மை அடையும்.  தொகு> தொகை: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலியன. 

தோம்பு என்ற சொல்  தொகு : தோ.  முதல்நீண்டது.  பகு>பா> பாதி என்பதிலும் நீட்சி. சித்திரவேலைப்பாடு போல நிறங்களுடன் சொலிப்பது நாகம் என்னும் மலைப்பாம்பு. நகு>  (ஒளிவீசுதல்: )  நகு+அம் = நாகம், நகர்தல் என்ற சொல் தொடர்புடையது.   தோம்பு என்பது நீர் சேர்த்துவைக்கும் பெரும்  "தொப்பை". தொம்பை என்பது குதிர் என்னும் கலம்.    தொம் > தோம் > தோம்பு என்பதிலும் இதன் தொடர்பு அறியலாம்.  தொகு+ பு > தொகும்பு> தோம்பு எனினுமாகும்.

தொம் + தி > தொந்தி.  

தொப்பூழ் , தொப்புள்.   தொப்பு+ உள்.

தொப்பாரம் -பெருமூட்டை.  பொட்டணம் (பொட்டலம்). கொப்புளமும் ஆகும்.

தொந்தி.  -- ---தொந்திப்பு இரட்டிப்பு ஆகும்.

வேறு சொற்களும் உள. இன்னொரு நாள் அளவளாவுவோம்.

மெய்ப்பு பின்னர்.


குறிப்புகள்:

[ விழேடம் என்பது விழுமிதாக எடுத்துக்கொள்ளபடும் பொருளின் தன்மை.  இதன் அடிச்சொற்கள் விழு+ எடு. அம் விகுதி. ]






டெய்லர் என்ற ஆங்கிலச் சொல்

ஆங்கில மொழியில் "டெய்லர்" என்ற சொல் எப்படி உண்டானது என்பதை நம் ஆங்கில ( இந்தோ ஐரோப்பிய) மொழி வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இவர்கள் ஆய்வினில் டைலர் என்ற ஆங்கிலச் சொல் "பிளவு செய்தல் "   [ Modern French tailleur), literally "a cutter," from tailler "to cut," from Late Latin or old Medieval Latin taliare "to split" ]  என்பதிலிருந்து வந்ததாக மொழிவல்லுநர் முடிவுக்கு வந்ததாக  எழுதியுள்ளனர்.  ஆனால் இவர்கள் இந்தச் சொல்லைத் தேடிப்பிடித்ததற்குக் காரணம் உண்டு.  அதை அவர்கள் குறிப்பிடவில்லை.  இதன் உண்மைக் காரணம்,      வேட்டி என்ற சொல் வெட்டுதல் என்பதிலிருந்து தமிழில் வந்துள்ளது.  துணி என்ற சொல் துணித்தல்  ( துண் > துண்டு;  துண் > துணி ) என்பதிலிருந்து வந்துள்ளது.  இதை மனத்துக்குள் பின்புலமாக வைத்துக்கொண்டே  tailler என்ற  வெட்டுதல் கருத்திலிருந்து வந்தது என்று கூறிப்போயினர்.  தையல்காரன் துணியை வெட்டித்தான் தைக்கிறான்.   ஆனால் வெட்டுவது என்பது அவன் தைப்பதற்கு மேற்கொள்ளும் முன்னோடிச் செயலே அன்றி அதன் இறுதிச் செயலன்று.  இறுதி நோக்கம் தைப்பதுதான்.  நீங்கள் டெய்லரைப் பார்க்கச் செல்வது துணியை வெட்டுவதற்கு அன்று.  அதைத் தைத்து வாங்குவதற்குத் தான்.  ஆகவே வெட்டும் செயலானது துணி, வேட்டி என்பதற்குப் பொருந்துமே தவிர, தைப்பதற்குப் பொருந்தாது.

தமிழில் தைத்தல் என்ற வினைச்சொல் இருப்பதை அவர்கள் மறைத்துவிட்டனர்.  அல்லது ஓர் உள்ளடியாக வைத்துக்கொண்டனர்.

டெய்லர் என்ற சொல்,  தையல் என்ற தமிழிலிருந்து அமைந்த சொல்.

தையல் >  தையலர் >  டைலர் ஆகிவிடும்.

அவர்கள் இந்தியாவிற்கு வந்தபின் அமைத்துக்கொண்ட சொல்லே தையலர்,  அல்லது டெய்லர்.  தையலர்> தைலர் என்பதில் யகர ஒலி விடுபட்டது.

இச்சொல் ஆங்கிலத்தில் 1832ல் இருந்து காணபட்டதாக அவர்களே சொல்கிறார்கள். தையல் என்ற சொல்லுடன் அர் விகுதி சேர்ந்து அமைத்துக்கொண்ட சொல்லே தை(ய)லர்!!

நாரெங்ஆ என்பது ஓரஞ்ச் அல்லது ஆரஞ்ச் ஆனதுபோலத்தான்.


மெய்ப்பு பின்னர் 




தென்னாடு என்றாலே சண்டைக்களம்.

 தென்னாட்டுப் போர்க்களங்கள் என்றொரு நூலை, பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் எழுதினார். தனித்தனிச் செய்யுள்களை வாசிக்குங்கால் தென்னாட்டில் பலப்பல போர்கள் நடைபெற்றுள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிந்தாலும், இந்த நூலை வாசிக்கும்போதுதான் போரே ஓர் இணையற்ற ஈடுபாடாகத் தமிழ் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நம்முன் ஒரு திரைப்படம்போல் கொண்டுநிறுத்தப்படுகிறது என்னலாம். போரைத் தொழிலென்றே கூறுவதுமுண்டு.

வாழ்க்கை இவ்வாறு ஓடியதால்,  தமிழர்களிடை மிகப்பெரிய ஒற்றுமைக்கேடு மலைபோல் வளர்ந்திருந்தது என்பது தெளிவாகின்றது.

போர்மறவரிடைப் பல தரநிலைகளும் படிநிலைகளும் நிலவியபடியால் மொத்தமாகத் தமிழரிடைப் பெரியவர்,  அதற்குக் கீழுள்ளவர்,  அதற்கும் கீழுள்ளவர் என்று ஏற்றத் தாழ்வுகள் தோன்றி  அவை போர் முடிந்துபோனபின் முடிந்துவிடாமல் இன்றளவும் தொடர்ந்தன. இவற்றுள் பல சாதிகளாக மாறிவிட்டன.

தென்னிலம் என்ற சொல்லே தமிழில் "போர்க்களம்" என்ற பொருளைத் தருகிறது.   பல ஊர்கள் "கோட்டைகள்" என்ற அடைமொழி பெற்றுள்ளன. எடுத்துக்காட்டு:  புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை,  கள்ளிக்கோட்டை,  கந்தருவகோட்டை, பாளையங்கோட்டை  என்பன காண்க.  இவையெல்லாம் வீரத்தை ஒருபுறம் முன்வைத்தபோதும்  விரிசல்களையும் விரித்துவைத்தன.

தென்னிலம் போர்க்களம் ஆதலால் போர்கள் பெருந்தொழில்கள் ஆயின.

அறிக மகிழ்க.