ஞாயிறு, 21 மார்ச், 2021

டெய்லர் என்ற ஆங்கிலச் சொல்

ஆங்கில மொழியில் "டெய்லர்" என்ற சொல் எப்படி உண்டானது என்பதை நம் ஆங்கில ( இந்தோ ஐரோப்பிய) மொழி வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இவர்கள் ஆய்வினில் டைலர் என்ற ஆங்கிலச் சொல் "பிளவு செய்தல் "   [ Modern French tailleur), literally "a cutter," from tailler "to cut," from Late Latin or old Medieval Latin taliare "to split" ]  என்பதிலிருந்து வந்ததாக மொழிவல்லுநர் முடிவுக்கு வந்ததாக  எழுதியுள்ளனர்.  ஆனால் இவர்கள் இந்தச் சொல்லைத் தேடிப்பிடித்ததற்குக் காரணம் உண்டு.  அதை அவர்கள் குறிப்பிடவில்லை.  இதன் உண்மைக் காரணம்,      வேட்டி என்ற சொல் வெட்டுதல் என்பதிலிருந்து தமிழில் வந்துள்ளது.  துணி என்ற சொல் துணித்தல்  ( துண் > துண்டு;  துண் > துணி ) என்பதிலிருந்து வந்துள்ளது.  இதை மனத்துக்குள் பின்புலமாக வைத்துக்கொண்டே  tailler என்ற  வெட்டுதல் கருத்திலிருந்து வந்தது என்று கூறிப்போயினர்.  தையல்காரன் துணியை வெட்டித்தான் தைக்கிறான்.   ஆனால் வெட்டுவது என்பது அவன் தைப்பதற்கு மேற்கொள்ளும் முன்னோடிச் செயலே அன்றி அதன் இறுதிச் செயலன்று.  இறுதி நோக்கம் தைப்பதுதான்.  நீங்கள் டெய்லரைப் பார்க்கச் செல்வது துணியை வெட்டுவதற்கு அன்று.  அதைத் தைத்து வாங்குவதற்குத் தான்.  ஆகவே வெட்டும் செயலானது துணி, வேட்டி என்பதற்குப் பொருந்துமே தவிர, தைப்பதற்குப் பொருந்தாது.

தமிழில் தைத்தல் என்ற வினைச்சொல் இருப்பதை அவர்கள் மறைத்துவிட்டனர்.  அல்லது ஓர் உள்ளடியாக வைத்துக்கொண்டனர்.

டெய்லர் என்ற சொல்,  தையல் என்ற தமிழிலிருந்து அமைந்த சொல்.

தையல் >  தையலர் >  டைலர் ஆகிவிடும்.

அவர்கள் இந்தியாவிற்கு வந்தபின் அமைத்துக்கொண்ட சொல்லே தையலர்,  அல்லது டெய்லர்.  தையலர்> தைலர் என்பதில் யகர ஒலி விடுபட்டது.

இச்சொல் ஆங்கிலத்தில் 1832ல் இருந்து காணபட்டதாக அவர்களே சொல்கிறார்கள். தையல் என்ற சொல்லுடன் அர் விகுதி சேர்ந்து அமைத்துக்கொண்ட சொல்லே தை(ய)லர்!!

நாரெங்ஆ என்பது ஓரஞ்ச் அல்லது ஆரஞ்ச் ஆனதுபோலத்தான்.


மெய்ப்பு பின்னர் 




தென்னாடு என்றாலே சண்டைக்களம்.

 தென்னாட்டுப் போர்க்களங்கள் என்றொரு நூலை, பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் எழுதினார். தனித்தனிச் செய்யுள்களை வாசிக்குங்கால் தென்னாட்டில் பலப்பல போர்கள் நடைபெற்றுள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிந்தாலும், இந்த நூலை வாசிக்கும்போதுதான் போரே ஓர் இணையற்ற ஈடுபாடாகத் தமிழ் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நம்முன் ஒரு திரைப்படம்போல் கொண்டுநிறுத்தப்படுகிறது என்னலாம். போரைத் தொழிலென்றே கூறுவதுமுண்டு.

வாழ்க்கை இவ்வாறு ஓடியதால்,  தமிழர்களிடை மிகப்பெரிய ஒற்றுமைக்கேடு மலைபோல் வளர்ந்திருந்தது என்பது தெளிவாகின்றது.

போர்மறவரிடைப் பல தரநிலைகளும் படிநிலைகளும் நிலவியபடியால் மொத்தமாகத் தமிழரிடைப் பெரியவர்,  அதற்குக் கீழுள்ளவர்,  அதற்கும் கீழுள்ளவர் என்று ஏற்றத் தாழ்வுகள் தோன்றி  அவை போர் முடிந்துபோனபின் முடிந்துவிடாமல் இன்றளவும் தொடர்ந்தன. இவற்றுள் பல சாதிகளாக மாறிவிட்டன.

தென்னிலம் என்ற சொல்லே தமிழில் "போர்க்களம்" என்ற பொருளைத் தருகிறது.   பல ஊர்கள் "கோட்டைகள்" என்ற அடைமொழி பெற்றுள்ளன. எடுத்துக்காட்டு:  புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை,  கள்ளிக்கோட்டை,  கந்தருவகோட்டை, பாளையங்கோட்டை  என்பன காண்க.  இவையெல்லாம் வீரத்தை ஒருபுறம் முன்வைத்தபோதும்  விரிசல்களையும் விரித்துவைத்தன.

தென்னிலம் போர்க்களம் ஆதலால் போர்கள் பெருந்தொழில்கள் ஆயின.

அறிக மகிழ்க.



சனி, 20 மார்ச், 2021

சாய், சமர்ப்பித்தல்

 ஓர் அரசு அதிகாரியிடம் போய் ஒன்றை வாய்மொழியாய்த் தெரிவித்து, எனக்கு உதவுங்கள் என்று வேண்டிக்கொள்ளலாம்.  அவரும் அவசரத்தில் சரி சரி என்று புகன்றுவிட்டுப் போய்விடக்கூடும். அவர் ஒன்றும் செய்யாமல் ( மறந்து) விட்டார் எனில், இன்னோர் அதிகாரியிடம் கூறுகின்ற போது,  வாயால் சொல்லிக்கொண்டிருந்தால் ஆகாது, எழுதிக்கொடுங்கள் என்று அவர் கேட்டால் அதையும் செய்தால் அப்போது அது மனுவாகிறது.   மன்னுதல் எனில் நிலையாக  இருத்தல். இங்கு நிலையாக முன்வைத்தல்.  வாய்ச்சொற்கள் சுவடின்றி மறைந்துவிடும்.  எழுத்து கொஞ்சநாள் நிற்கும்.  ஒரு தாளில் எழுதிக் கொடுக்க, அது மனு ஆகிறது.  ஒரு மனுவுக்கு இருப்புக்காலம் வாய்மொழியினும் நீண்டதாகும்.

ஞானம் வாய்க்குமொருமனு வெனக்கிங் கில்லாமை யொன்றினையும் என்றார் தாயுமான சுவாமிகள்.  

மன்னுதல் :  ஏவல்வினை: மன்னு.   மன்னு என்பது முதனிலைத் தொழிற்பெயர். மன்னு என்பது  மனு என்றது இடைக்குறை.    என்னும் > எனும் என்ற தொகுத்தல் போலவே.

நிலையாக இருக்கும் காலம் என்பது பொருளுக்குப் பொருள் வேறுபடும். நிலையானது என்றால் உலகம் முடியும் வரை நிலையானது என்பது பொருளன்று.

ஒரு மனுவை  அலுவல்மேலாளர் ஒருவர்முன் கிடத்துதலே சமர்ப்பித்தல்.   இது அமர்த்தல், அமர்த்துதல், அமர்ப்பித்தல் > சமர்ப்பித்தல் என்று  அமைகிறது.  அகர வருக்கம் சகர வருக்கமாகும்.  இதற்கு எடுத்துக்காட்டு:  சமர் > சமர்,  அமைத்தல் > சமைத்தல் என்று பல.  பல இடுகைகளில் இது கூறப்பட்டுள்ளது. ஒரு தாளில் எழுதுங்கள், மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.

சில  இறைப்பற்று உய்விப்பாளருக்குச் சாய் என்ற சொல் வழங்கும். எடுத்துக்காட்டு:  சாய்மாதா.     ஆய் - சாய்.    இது தாய் ,  அதாவது பற்றின் ஊற்று என்று பொருள்படும்.  இது அயலிலும் சென்று நன்கு வழங்குவது.