சனி, 21 நவம்பர், 2020

தீபத்தம்பம் - தமிழில்?

 இச்சொல்லை இக்காலத்தில் நாம் பெரும்பாலும் எதிர்கொள்வதில்லை. இக்காலங்களில் மிகுதியானோர் வான்வழிச் செலவு  என்னும் பறந்து செல்லுதலை மேற்கொள்வதுதான் காரணம். கப்பலில் சென்றால் ஒரு துறைமுகத்தை அடையுமுன் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களைக் காணவேண்டிவரும். கலம் என்பது நீர்மேலூர்தி. கரைதல் ஆவது அழைத்தல். விளக்கு -  இங்கு எரியும் நிலைப்பந்தம். இது ஓர் அழகான சொல்தான்.

நீர்மேலூர்திகள் -  ஓடம், படகு, கட்டுமரம்,  தோணி, கலம் எனப்பலவுள்ளன. இதைப் படிக்கும் நேயர்கள், நிமேதி என்பது என்ன ஊர்தி என்று எனக்குத் தெரிவியுங்கள். (பின்னூட்டமிடுங்கள்).

கப்பல் என்பது நல்ல தமிழ்ச்சொல் என்று ஒரு  தமி ழாசிரியர் வெளியிட்டிருந்தார். அதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்திருந்தார். அதை அவர் நூலில் கண்டுதெளிக. ( உரிமைப்பதிவு செய்த நூல்: அதிலுள்ளதை இங்கு விரித்தல் இயலாது, , மன்னிக்கவும் ).

கப்பலென்பது  "கப்பு கப்பு" ஒலிசெய்த வண்ணம் புகைவிட்டுக்கொண்டு  சென்றதால்  (  அந்தக்காலத்தில் எல்லாம் நீராவிக் கப்பல்கள்)  ஏற்பட்ட பெயர் என்று சில மூத்த பெருமக்கள் கூறுகின்றனர்.  இருக்கலாம்.

இயங்கு ஈருருளிகள்  வந்த காலத்தில் வாழ்ந்த அம்மையார் ஒருவர்,   "மோட்டோர் சைக்கிள்" என்பதை "திக்குதிக்கு வண்டி" என்றாராம். இதிலிருந்து "திக்குருளி" என்ற சொல் ஏற்படவில்லை.

அதைப்போல ஒலிக்குறிப்புகளிலிருந்து சொற்கள் எல்லாமொழிகளிலும் ஏற்பட்டுள்ளன.  காவ்காவ் என்று குலைப்பதால் (குரைப்பதால்)  காவ் என்பது சீனமொழியில் நாய்க்குப் பெயராய் உள்ளது.  குர்ர்ரோ குர்ர்ரோ என்று கத்துவதால் காக்கைக்குக் குரோ என்று ஆங்கிலத்தில் பெயர் அமைந்தது.  கப்பல் என்ற சொல்லும் ஒலிக்குறிப்பு அடிப்படையில் எழுந்த பெயராயும் இருக்கலாம்.  பெயர்கள் பல காரணங்களால் ஏற்படுவன ஆகும்.

ஆனால் கப்பலென்பது பெரிய கடல்களைக் கடத்தலுக்கு (கடந்துசெல்லுதலுக்கு)  உதவும் பொருட்டு ஏற்பட்ட நீர்மேலூர்தியாம். கடப்பு+ அல் = கடப்பல் என்ற பெயர் இடைக்குறைந்தும் கப்பல் என்ற பெயர் வந்துற்றது.  இச்சொல் ஒரு பல்பிறப்பி ஆகும். இது, பல உள்ளுறுப்புகள் அடங்கிய உடலின் மேற்பாகம்,  அடங்கம் > அங்கம் என்று இடைக்குறைந்து பெயர் ஏற்பட்டது போலுமே. இடைக்குறைச்சொற்கள் மிக்கு மிளிரும் மொழி தமிழாகும்.  இத்தகைய சொற்கள் (திரிபுகள்) மிக்கிருந்த காரணத்தால், தொல்காப்பியர் செய்யுளீட்டச் சொற்களில் திரிசொற்களையும் உள்ளடக்கினார். இயன்மொழியாம் தமிழ் தன் திரிபுகளால் பலமொழிகளைப் பிறப்பித்துத் தாயானது.

வருகிறான், போகிறான் என்பவற்றில் { இடைநிலைகள்  கிறு (கின்று, ஆநின்று) } ---- கிறு என்பது கு+இன்று என்பதன் புணர்வில் விளைந்த இடைக்குறையாகிய இடைநிலை என்பதை அறிஞர் வரதராசனார் கண்டுரைத்துள்ளார். இஃது நுண்மாண் நுழைபுலம் ஆகும்.

இப்போது தீபத்தம்பம் அல்லது தீப ஸ்தம்பம் என்ற சொல்லைக் காண்போம்.  ஸ்தம்பம் என்பது தானாய் நின்றுகொண்டிருப்பது. தன்+பு+அம் = தம்பம்.  இச்சொல் பின்பு +அம் = பிம்பம்  போலும் அமைந்தது.  பிம்பம் என்பது பின்வீழ் ஒளிநிழல்.  தன்பம் - தம்பம் தானாய் ( ஒற்றையாய்) நிற்பது.  தன் பின் பிறந்தவன் தம்பி (தன்பின்) என்றானது கண்டு தெளிந்துகொள்க. பின்னாளில் தீபத்தம்பம் தீபஸ்தம்பம் என்று மெருகுற்றது.

தீபம் என்பது தீ  பற்றி எரியும் கோலைக்குறித்தது.  தீ + பற்று + அம் > தீப(ற்ற)ம் > தீபம் என ஆகிய இடைக்குறைச் சொல்.  தமிழில் இடைக்குறைகள் கூடுதல்.

இதைச் சுருக்கமாக ஆய்வாளர் தீ + பு+ அம் :  தீபம் என்று விளக்கிக்கொள்ளலாம்.  மோசம் இல்லை.

இதைப் பாருங்கள்

பத்தினோடு ஒன்று >  பத்தின் ஒன்று > பதினொன்று.( பதுனொண்ணு ). நன்றாக இருக்கின்றது.

பன்னிரண்டு:  பத்தினோடு இரண்டு > ப(த்தி)ன் இரண்டு > பன்னிரண்டு.

பத்து என்ற சொல் பல் என்பதிலிருந்து வருகிறது.  பல்>பன் திரிபு. இன்னொரு வகை விளக்கம்.

விளக்கம் பலவென்று துளக்குறா நெஞ்சம் வாழ்க.

மெய்ப்பு பின்.

வெள்ளி, 20 நவம்பர், 2020

சூழ்தருதனம் அல்லது செல்வச்சூழல்.- சுதர்சனம்

 பண்டமாற்றுப் பொருளியல் தேய்ந்து பணப்புழக்கம்  நாட்டில் ஏற்பட்ட பின்பு மக்கள் தாங்கள் தேட்டினை உலவும் பணத்தாள்களாக மாற்றிவைக்க முனைந்துவிடவில்லை. நகைபகை1*யெல்லாம் ஒரு குடத்துக்குளிட்டுப் புதைத்து வைத்துக்கொள்ளவே தலைப்பட்டனர். கல்யாணம் காட்சி என்று வரும்போது தோண்டி எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள இவ்வழக்கம் உதவியது.

ஓருவனின் செல்வம் குடத்துள் இட்டுப் புதைப்புறாமல்,  அவனிடத்துச் சூழப் பலராலும் காணப்படுமாயின், அத்தனத்தைச் சூழ்தரு தனம் என்று சொல்வதே சரி.  புதையல் அன்று என்பது யாரும் அறிவார்.  தனம் என்பது தன் சொந்தச் சேமிப்பில் தான் வைத்திருப்பது.  தன் + அம் = தனம்..  இதைத் தனம் என்க.  த என்பதை எடுத்தொலிக்கவேண்டாம். இது பெர்சனால்டி என்பதுபோலும் சொல்.

இனித் திரிபு காண்போம்.

சூழ் >  சூ > சு. (கடைக்குறையும் முதனிலைக் குறுக்கமும்).

தரு -  தர். உகரம் கெட்டது.

தனம் > சனம்.    முன் இடுகைகளில் த ச திரிபு கண்டுகொள்க.

சு + தர் + சனம் = சுதர்சனம்.( பாக்கியவான்.)

சுதர்சனம் > சுதனம்


குறிப்புகள்:

1*நகை என்பது பெரும்பாலும் பொன்னாலான அணிகலன்கள் அல்லது ஆபரணங்கள்.  பகை என்பது எதிரிகள் அல்லர்.  ஒருவர் வைத்திருக்கும் முழு நகைத்தொகுதியிலும் ஒரு பகுதி.    பகு > பகு+ ஐ > பகை. --  எனில் பகுதி.  பகை என்ற பகுதி  எதிரியைக் குறிக்கக் காரணம் அவன் நம்மிலிருந்து பகுந்து வேறுபட்டு நிற்பதுதான்.  இப்பொருளும் சொற்பொருண்மையுடன் தொடர்புபட்டதே ஆகும்.

எழுத்துப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

உந்தன், உன்றன் எந்தன் என்றன் எது சரி

 இந்த இடுகைக்கு நல்ல தலைப்பு எது என்று சற்று சிந்தித்தேம். "ஓருமை பன்மை மயக்கம்" என்பது சரியான தலைப்பு என்றாலும், இதில் வரும் "மயக்கம்" என்பது புரியாமல் போய்விடும் என்னும் தடை எண்ணம் வந்தது. இலக்கணம் அறிந்தாரும் சிலவேளைகளில் தெரிந்தே அதை மீறவேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக:

"கண்ணல்ல தூங்கம்மா - நீ என்

கண்ணல்ல தூங்கம்மா"

என்ற மக்களுக்குப் புரியும் பாட்டில்,  கண் அன்றோ தூங்கம்மா என்றிருக்கவேண்டும் என்று மாறுபடலாகும். இதற்குக் காரணம்,  கண் ஒருமை; அல்ல என்று முடித்தல் ஆகாது என்னலாம்.   ஆனால் அப்படிச் சொல்வதும் சரியில்லை.   இதன் முழு வாக்கியம், " நீ என் கண் அல்லளோ"  என்பது. ஆகவே, அல்லளோ என்று முற்றுறுவதே சரி என்னலாம்.  ஆனால் அதுவுமே  ஏற்கத் தக்கதன்று;  "நீ  என் கண் அல்லையோ"  என்பதே மிக்கச் சரியானது என்று எதிர்த்தெழலாம்.

தமிழ்ச்சான்றோர்  எவ்வாறு எழுதினரோ - பேசினரோ அவ்வாறு எழுதுவதே சரியான இலக்கணம் (மரபு).  என்று ஒரு விதியை முன்வைத்துப் போற்றுதல் வேண்டுமென்பது சரியான கொள்கையே. அதன்படி,

நீ அல்லை;

நீர் அல்லர்.

யான் அல்லேன்

யாம் அல்லேம்

யாங்கள் அல்லோம்

நீம்  அல்லீம்

நீர் அல்லீர்

நீவிர் அல்லீர்

நீங்கள் அல்லீர்கள்

என்பவும் இன்ன பிறவுமே போற்றி எழுதுதலே சரி  என்று சொல்லவேண்டும்., இவையெல்லாம் சரியே என்றாலும் இவற்றில் பாதிக்குமேல் மொழியிலிருந்து ஒழிந்துவிட்ட வடிவங்கள். "விளங்காததை யாரும் படிக்கமாட்டார்கள்" என்பதே சரி. மொழி என்பது ஒரு கருத்தறிவிப்புக் கலையே ஆதலின், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த மொழிநிலையை மீட்டெடுத்து அதன்படி எழுதினால் எவனுக்கும் புரியப்போவதில்லை என்பது உண்மை.  ஆ.எல். ஸ்டீவன்சன் கூறியபடி, நாம் எழுதுவது அடுத்தவனுக்குப் புரியவில்லை என்றால் குற்றம் நமதே  ஆகும்.  அவன் என்ன செய்வான் பாவம். அந்தச் சுமை, அறிவிக்க முயல்வோனுடையது ஆம்.

விளக்கிச் சொல்லிப் புரியவைக்கலாம். ஆனால் சில வேளைகளில் அது முடியாதது ஆகிவிடுகிறது.  செய்தியறிக்கை வாசிப்பவர்  கடினச் சொற்களைப் போட்டு வாசித்தால்,  கேட்பவன் அகரவரிசையைக் கையில் வைத்துக்கொண்டு கேட்கவேண்டும்.  சொல்லைத் தேடிக் கண்டுபிடித்து அறிவதன்முன், செய்தியறிக்கை முடிந்துவிடும்.

ஆனால் எழுதும்போது நிலைமையைச் சற்று சரிப்படுத்திக்கொள்ள வசதி இருக்கிறது என்றாலும் அதற்கும் ஓர் எல்லை உள்ளது.

புறநானூறு முதலியவற்றில் எத்துணை அழகிய கவிதைகள் உள்ளன. அதனில் ஒரு பாட்டு:

இரவலர் புரவலை நீயும் அல்லை

என்று தொடங்குகிறது.  கேட்பதை வழங்கி அறம் செய்வோன் என்று எண்ணி அவன்பால் நண்ணி   இரந்து நிற்பவனுக்கு  அப்பொருளை வழங்கி அவனைக் காப்பவன்  நீ  'அல்ல' என்பதே இதன் பொருள்.

இதைப் பாடிய தமிழ்ப் புலவன் நாலே சொற்களில் அதைச் சொல்லிவிட்டான்.

"நீயும்" என்பதில் வரும் உம்,  ஈதல் செய்யார் பட்டியலில்  உன்னையும் சேர்க்கவேண்டும் என்று இடித்துரைக்கிறது.

இதை இங்கே எழுதக் காரணம்,  "அல்லை" என்ற சொல்தான்.  இதுபோல் சொல் வடிவங்கட்கு அகரவரிசையில் பொருளறிதல் கடினமே.  நீ அல்லை என்பதே சரி. நீ அல்(?/?) என்ற பிறவடிவங்கள் வழுவாம்,  பழைய இலக்கணப்படி.

"எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்

இன்பமே ஓடிவா"  

என்பது ஒரு பாட்டு வரி.  இதைப் படிக்க நேர்ந்த ஒரு தமிழ்ப்புலவர்,  எந்தன் என்ற சொல் தவறு என்றார்..  உண்மைதான். எந்தன் என்பது எம்+தன்.  எம் என்பது பன்மை.  தன் என்பது ஒருமை.  இதுதான் ஒருமை paன்மை மயக்கம் என்பர். இது ஒரு வழூஉச்சொல் ஆனாலும் இக்காலத்து அது ஏற்கப்படுமாயின் வழுவமைதி ஆகிவிடும்.  ஒருமையில் என்றன்  என்றும் பன்மையில் எந்தம் என்றும் இருக்கவேண்டும்.

"அவர்தானே என் ஆருயிர் வாழுந்தெய்வம்,

அடியாள் என்னை ஆட்கொண்ட காதல் தெய்வம்".

அவர் - ஒருவரைக் குறிப்பின் பணிவுப் பன்மை.  தானே என்பது ஒருமை. இங்கு அவர் என்பது வடிவில் பன்மையாய் இருப்பினும் பொருளில் ஒருமையே ஆதலின் தானே என்ற ஒருமை பொருந்திற்று என்னலாம். என்றாலும் அவர் என்பது பன்மை ஆதலின், வழுவமைதி என்று முடிப்பதே நன்று எனலாம். இங்குப் பணிவின் பொருட்டு அவர் என்று வந்தமை சுட்டிக்காட்டுவர்.

எனவே:

என்+தன் = என்றன்  ( சரி)

உன் +தன் =  உன்றன் (சரி).

எந்தன் உந்தன் என்பவை தவறான சொல்வடிவங்கள் எனினும்,  வழுவமைதிகளாகக் கொள்ளலாம்.

ஒருமை பன்மை இல்லாத மொழிகள் உலகில் உள்ளன. அவற்றுக்கு இந்தத் தொல்லை எழவில்லை. இலக்கணம் அதிகமிருந்த மொழிகள் சில இறந்துபட்டன. கன்னித்தமிழ் இன்னும் மாறாத மாண்பின் ஆட்சியைச் செலுத்திக்கொண்டுள்ளது. மாறிவிட்டவை சில.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.