வெள்ளி, 1 மே, 2020

புட்டாமாவு (முகப்பூச்சு மாவு)

பழங்காலத் தமிழர்கள்  (பெண்டிர் )   முகத்துக்கு மஞ்சள் தேய்த்துக்கொண்டனர். மஞ்சள் என்பது நோய்நுண்மிகளைக்  கொல்லும் ஆற்றல் மிக வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.  எனினும் இக்காலத்தில் அம்மி குழவி முதலியவை இல்லாமலாகவே,  மளிகைக் கடைகளிலிருந்து சிறு பைக்கட்டுகளில் மஞ்சள் பொடி கிடைக்கிறது. இது குழம்பு வைக்கப் பயன்படுகிறது,  தவிர முகத்துக்குப் பூசப்படுகிறதா என்று தெரியவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலத்தில் முகமாவு சிறு கட்டிகளாகச் சீனாவிலிருந்து வந்தன. அவற்றைத் தேய்த்தால் கையில் மாவு கிடைக்கும். வாசனை உள்ள மாவுதான்.  மலேசியா சிங்கப்பூர் முதலிய இடங்களில் பெண்களும் சிறு பிள்ளைகளும் இம்மாவு பூசிக்கொண்டு  முகம் சற்று வெளிறிக் காணப்பட்டு அழகுநிலையை அடைந்து மகிழ்ந்தனர்.

உலோகப் புட்டிகளில் முகமாவு வேண்டுவோர்க்கு  அதுவும்  கிடைக்கவே செய்தது. இப்போது நெகிழிப் பெட்டிகளில் வருகிறது.

நெகிழி - பிளாஸ்டிக்.

மேற்கூறிய முகமாவுக் கட்டிகளைத் தமிழர்கள் "புட்டாமாவு" என்றனர். மாவுக் கட்டியைப் பிட்டால்  ("புட்டா" ) அது மாவாகிவிடும்.

பிட்டு என்பதைப்  புட்டு என்பதும்  பிட்டால் என்பதைப் புட்டா என்பதும் பேச்சுத் திரிபுகள்.

பிட்டுக்காக மண்சுமக்க வந்தவரும்
வாங்கினார் முதுகுவீங்கப்
பாண்டியன்  கைப் பிரம்பாலே

என்பது ஒரு சிற்றூர்ப் பாட்டு.

நம் மூத்த குடிமக்களிடம் யாம் அறிந்துகொண்டது இது. ( புட்டாமவு)

பிட்டால் மாவு >  புட்டாமாவு, புட்டாமா.

இது இப்போது வழக்கில் இல்லை.


உங்களில் யாராவது முனைவர்ப் பட்டத்துக்கு வழக்கிறந்த சொற்களை ஆய்வு செய்யலாமே. சுரிநாம் முதல் உலகில் பல மூலைகளிலும் தமிழர்கள் இருந்துகொண்டுள்ளனர்.  அவர்களிடம் ஒருகாலத்தில் இருந்து இப்போது மறைந்துவிட்ட சொற்களை ஆய்வுசெய்தல் நன்மை பயக்கும்.

தட்டச்சுப் பிழை - திருத்தம் பின்னர்.

வியாழன், 30 ஏப்ரல், 2020

ஸ்தாபித்தல் அடிச்சொல் எது?

இப்போது நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? அல்லது இருக்கின்றீர்கள்? அந்த இடத்தில் நீங்கள் உங்களையும் உங்கள் நடவடிக்கைகளையும் நன்றாகவே நிறுவிக்கொண்டிருப்பீர்கள். நிரந்தரவாழ்நராக இல்லாவிட்டாலும்கூட, தற்காலிகமாக ஓரளவு நிறுவிக்கொண்டுதான் அங்கு இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களை நிலைப்படுத்திக்கொள்வதென்பது இடத்துக்கும் காலத்துக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்ப வேறுபடுமென்பது சொல்லாமலே புரியக்கூடியதாகும்.

அந்த இடத்திலிருந்து நீங்கள் இன்னோர் இடத்துக்குச் செல்வதானால், நீங்கள் உங்களை ஆங்கு மறுநிறுவுதல் செய்துகொள்ளவேண்டும். வேறுவிதமாகச் சொல்வதானால், தாவிச் சென்ற புதிய இடத்தில் உங்களை நீங்கள் தாவித்துக்கொள்ள வேண்டும்.

தாவுதல் என்ற சொல்லிலிருந்து தாவித்தல் என்பதும்,  அதிலிருந்து தாபித்தல் என்பதும் தோன்றின..  வகரம் பகரமாய்த் திரியும்.  இந்த ப-வ திரிபென்பது தமிழில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் காணப்படுவதாகும். தாவிய நிலையில் எங்கு பறந்துவிட்டாலும் கூட ஓரிடத்தில் இறங்கிக் காலூன்றவே வேண்டும்.  அந்தக் காலூன்றுதலையும் உள்ளடக்கித்தான் தாபித்தல் - ஸ்தாபித்தல் என்று மொழியில் சொல் ஏற்பட்டுள்ளது.

தாவுதல் என்பது வன்மையுடன் தாவுதலையும்,  மென்மையாகத் தாவுதலையும் முயன்று தாவுதலையும்  முயற்சி வெளியில் அறியப்படாமல் தாவுதலையும் -  ஆக பலவகைத் தாவுதல்களையும் குறிக்கும் என்பதை அறிக.   ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு ஓர் உறுப்பினர் தாண்டும் போது அந்தத் தாவுதலில் வன்மை தென்படுவதில்லை. மாறாக மென்மையும் தந்திரமும் காணப்படலாம்.  ஆகவே தாவுதல் என்னும்போதும் தாபித்தல் என்னும் காலையும் எப்போதும்  வன்மை இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதை இப்போது மாற்றிக்கொள்ளுங்கள்.

தா என்பது அடிச்சொல். அது பெயர்ச்சிக் கருத்தை அடிப்படையாக உடையது ஆகும். பெயர்ச்சி என்றால் ஓரிடத்திலிருந்து இன்லொரு தலத்துக்கு மாறுதல். அது கண்காண் பொருளாகவும் இருக்கலாம். காணாப் பொருளாகவும் இருக்கலாம்.  அன்பைத் தா என்றால், அன்பு திடப்பொருளில்லை, இருப்பினும் மக்கள் அப்படியும் சொல்லை வழங்குகிறார்கள். பறப்பது என்ற சொல்லும், இவ்வாறு மனவுணர்வைக் குறிக்கக்கூடும்.  "கற்பனையில் பறந்துவிட்டாய்"  என்றால், கற்பனை என்பதும் திடப்பொருளன்று,  பறப்பது என்பதும் நடப்பதன்று. நாம் பேசும் எந்த மொழியும் இத்தகு  வன்மை - மென்மை, காட்சியுண்மை, காட்சியின்மை என்னும் எதையும் வெளிக்கொணர வல்லது ஆகும். இதில் பேசுவோனே ஊர்தி செலுத்துவோன் ஆவன்.

இப்போது பெயர்ச்சிக் கருத்து மேலும் வளர்கிறது.  தா என்பதினின்றே ----

தா -  தாண்டு;
தா - தாவு

என்று தமிழ்ச்சொற்கள் அமைவுறல் காணலாம்.  தாவுமுன் ஓரிடத்தில் நின்றுகொண்டுதான் இருப்பான்.  அவனும் தன்னைத்:

தான்

என்றுதான் கூறுகிறான்.

தா என்பது (கொடு)  குறுகித் தரு என்று ஆகிறது.  தருதல் என்ற வினை அங்கு உருவாகிறது.  குகையிலும் காட்டிலும் வாழ்ந்த பண்டைக் கால மனிதன், முதலில்

தா என்றானா?  தரு  என்றானா? தார் என்றானா?  எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

தரு > தரை  ( தரு+ ஐ)  :  பல வளங்களையும் பலன் களையும் தருவதாகிய மண்.

தரு > தரு. (பொருள்விரி).  பழம், காய், இலை என இன்ன பிறவும் தருவதான மரம்.

தரு > தார் >  தார்+ அணி =  தாரணி.   எல்லாம் தரும் அழகுடைய இப்பூமி.

தரு + அணி = தரணி.

இந்த வினைச்சொற்களைக் கவனியுங்கள்:

அதைத் தா.
அதைத் தரு-கிறார்.
அதைத் தாரார்.

ஒருவன் வேடம் தரித்தால், அவன் ஒரு காட்சியைத் தருகிறான்.  அவன் வேடதாரி.   தரு> தரி > தாரி.

எடையை அறியத் தருவது  தரு+ ஆசு = தாராசு.  ஆசு என்றால் ஆக்கம், பற்றிக்கொள்ளத் தருவது.

அறிக மகிழ்க.

 


நஹி என்ற இந்திச் சொல்.

இந்தி முதலிய மொழிகளில் இல்லை என்பதை  நஹி  என்று சொல்வது குழந்தைகளும்  அறிந்த ஒன்றாகும்.

ஒன்று  நைந்து போமாயின் பெரிதும் அஃது  இல்லை யாகிவிட்டது என்றே கொள்ள வேண்டும்.  நைதல் எனற்பால பதத்திலிருந்தே இது முகி ழ் த் து ள் ளதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி  ஆகும்.

சில ஆண்டுகளின் முன் யாம் வெளிப்படுத்தியதே  இது.

தெக்காணி மொழியினின்று  இந்தி வந்த தென்றாரும் உள்ளனர்.   தெற்காணி ஆவது  தென் + கண் + இ.  கண் > காணி.  காண் என்பதும் கண் என்று
குறுகியவாறு   காண்க.  கண் = 1.இடம் 2. விழி.. இங்கு அஃது இடப்பொருளதாம்.

இது ஆங்கிலத்தில் நே நோ என்றெல்லாம் வரும்.  ஐரோப்பிய மொழிகளிலும் இடம்கண்டு புகுந்து வீட்டுச்சொல்லாகிவிட்டது,

[ இது கைப்பேசியிலிருந்து இடப்பட்டது,  ஆனால் ஒழுங்காக எழுத இயலவில்லை, தமிழ்ப்  பேசிமென்பொருள் இன்னும் பண்படவில்லை.  வந்த என்பது வன் த { வன் த்ஹ )  என்று வருகிறது.  இவ்வாறே பல மாறுகோள்கள்.  தன்திருத்த அறிவுறுத்துகள் ( auto correct prompts ) பேசியில் முழுமை பெறக் காலம் ஆகலாம்.  சில பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்தரவிகள்  (apps)  இடைமறிப்புகள் விளைத்திருக்கலாம்.   அப்புறம் மடிக்கணினியைப் பயன்படுத்தவேண்டியதாயிற்று.  படித்து மகிழ்க.]

மறுபார்வை பின்.