ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

கடத்தற்கு அரியவையும் கடுமையானவையும்.

ஆதிகாலத்திலிருந்து தமிழர் கடல் என்று நாம் சொல்லும் நீர்ப்பரப்பினை அறிந்திருந்தனர்.  அது கடப்பதற்கு அரியது என்று அவர்கள் முடிவு செய்தனர். அதைக் குறிப்பதற்கு ஒரு சொல் தேவைப்பட்டது.  கடப்பதற்கு அல்லாத நீர்ப்பரப்பு என்ற பொருளில்  கட+ அல் என்று புணர்த்துச் சொல் படைத்தனர். இதற்கு முன்னரே நீர் என்ற சொல் இருந்தமையால் " நீர்விரி" என்று படைத்திருக்கலாம். நீர் விரிந்தது என்பதை விட அவர்களுக்கு மண்டையின் முன்னணியில் நின்ற கருத்து ஒரு கவலை:  கடக்க முடியவில்லையே என்பதுதான்.

"விரிநீர் வியனுலகு" என்ற தொடரை வள்ளுவம் வழங்குதல் காணலாம். ஆழி என்பது கடல் ஆழமானது என்பதைக் குறிக்கும்.  "ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள"  என்று கம்பனில் வந்துள்ளது.

கடப்பதற்கு அல்லாதது என்று சும்மா இருந்துவிடவில்லை.  படகு தோணியென்று மிதவூர்திகளை உருவாக்கி இறுதியில் கடந்தே வெற்றிகண்டனர்.  போலிநீசியர் என்போர்  இந்தோனீசியர்களின் மூதாதைகள் என்பர்.  அவர்கள் தென் கண்டத்துக்கு அடுத்துள்ள நியூசிலாந்து வரைசென்று மவுரிகள் ஆனார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் எல்லா மனித இனத்தவரும் முயற்சி திருவினை ஆக்கும் என்றே உலக வரலாற்றில் இயங்கியுள்ளமை காணக்கிடக்கின்றது.

கடத்தற்கு அரிது என்ற கருத்தில் இன்னொரு சொல்லும் அதே அடிச்சொல்லிலிருந்து பிறந்தது.  அதுதான் வேங்கடம் என்ற இடப்பெயரில் உள்ள கடமென்ற சொல்.  அது கட + அம் என  அம் விகுதி பெற்று அமைந்தது என அறிஞர் சுட்டிக்காட்டியதுண்டு.  மிக்க வெம்மையான இடம் என்பதுதான் " வேம்" என்ற அடைமொழி பெற்றுச் சொல் அமைந்துள்ளது.  வேகும் > வேம்.  இடைக்குறை.  ( மற்ற உதாரணங்கள்:  ஆகும்> ஆம்;  போகும் > போம்.)  (  மலையாளம்:  ஆணு என்பது ஆகுன்னு  (ஆகிறது) என்பதன் திரிபு).

வேம்<>வெம்.  வெம்+ கட+ ஆசலம் = வெங்கடாசலம்.  வேகும் வெம் என்பன தொடர்பின. வெங்கிடாசலம் என்றும் சிலர் எழுதுவதுண்டு.

ஓரிடத்தைத் தாண்டிச் செல்வதென்பது அத்துணை எளிதன்று. இன்று நாம் இதை உணர்வதில்லை. சிறிய நீர்வடிகாலொன்று வந்து நீங்கள் செல்லும் திசையில் குறுக்கிட்டாலும் அதற்கும் ஒரு சிறுபாலம் அமைக்கப்பட்டு நீங்கள் எங்கேயும் தவறி விழுந்துவிடாமல் பெரும் பாதுகாப்பு வழங்கப்படும் உயர்ந்த காலத்தில்  வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். ஆதலால் கடந்து செல்லற் கரிது என்னும் கருந்து ஆழ்ந்து சிந்தித்தாலன்றித் தோன்றிவிடாது.

கடப்பதன் எளிதின்மையை புலப்படுத்திய  இதுபோன்ற சொற்கள் உங்களுக்கும் கடப்பது கடுமையான காரியமென்பதை உணர்வித்திருக்கவேண்டும்.  எனவே கடு என்பதிலிருந்தே கட என்பது தோன்றியது என்ற சொல்லாய்வின் விளிம்பில் நீங்கள் கொணர்ந்து நிறுத்தப்பட்டிருக்கவேண்டுமே.   சொல்லைச் சிந்தியாதவர்க்கு இந்தச் சொற்பயணம் நேர்வதில்லை.

கட்டியாய் உள்ள எதையும் துருவித் திருகி மென்மையாக்குவதே கடைதல் ஆகும்.  கடையக் கடையச் சில பொருள் குழைவாகிவிடும்.  சில உடைந்து துகள்கள் பறக்கும்.   இங்கு கடு > கடை என்பதன் தொடர்பை நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.  கடலை என்ற கடுமை உடைய விளைபொருளை வாயிலிட்டால் அதைக் கடிக்க வேண்டும்.  கடு> கடலை; கடு > கடி என்பதன் தோற்றமுணர்ந்தீர் அல்லீரோ? மென்மையானது இறுகிவிட்டால் கடு> கட்டி என்பதும் கற்பனையாகாதன்றோ?

கடுமையான சூழ்நிலைகள் வாழ்வில் தோன்றிக்கொண்டே இருப்பவை. திருமணம் செய்துகொள்வதுகூட எளிதாய் இருப்பதில்லை.  கடு>கடி;  கடி - கடிமணம் என்ற சொல்லமைப்பின் பொருளை உணர்ந்திருக்கவேண்டுமே.

மரக்கட்டை என்பதில் கடு> கடு+ஐ > கட்டை என்பது வெள்ளிடைமலையாம்.

கட்டை என்பது நீளமின்றியும் காய்ந்து இறுகியதாகவும் இருக்கும்.  மரக்குழம்பைக் காயவைத்து இறுக்கமாக்கிக் காகிதம் செய்யப்படுகின்றது.  காய் என்பது காய்தல் வினை.  காய்> காய்+கு+இது+அம் >  காய்கிதம் > காகிதம் ஆனது. (இது அது என்பன சொல்புனைவில் இடைநிலைகளாக வரும்: இன்னொன்று எடுத்துகாட்டாக:  பரு(த்தல்+ வ் ( உடம்படுமெய்) + அது + அம் = பருவதம் எனக் காண்க)

காய்ந்தாலும் காகிதம் சற்று மென்மை கொண்டதாதலின் அதற்கேற்ப, காய்க்கிதம் என்று வல்லெழுத்துக்களை மிகுக்காமல் காகிதம் என்றே சொல் மென்மையை வருடி நிற்கிறது. (வல்லெழுத்து மிகுதல் காய்த்தல் என்னும் வினையுடன் சென்று மயங்கும் )  இப்படிச் சொற்களைக் கவனத்துடன் அமைப்பது தமிழில் சொல்லமைப்பு உத்தியாகும். இதைப் பல சொற்களில் சுட்டிக்காட்டியுள்ளோம்.  பழைய இடுகைகளைக் கவனத்துடன் படிக்க.

தொடக்க காலத்துக் காகிதங்கள் கடுமையாக இருந்தன. பின்னரே அழகும் ஒளியும் நெளிதிறலும் உடைய காகிதங்கள் மனிதனால் செய்ய முடிந்தது.
ஆகவே கடுதாசி என்ற சொல் முன்னர் படைக்கப்பட்ட சொல்லாதல் தெளிவு. கடுதாசி என்பதன் இறுதியில் வரும் தாசி,  தாசி என்னும் வேசி யென்று நினைத்துவிடாதீர்.   கடுதாள்சி என்பதே மருவிக் கடுதாசி ஆனது,  புணர்ச்சியில் கடுதாட்சி என்று ஆகி டகர ஒற்று நீக்கப்பட்டாலும்  கடுதாசி என்றே வரும். இப்படி ஒற்று வீழ்ந்த சொற்கள் பல.  சொல்லிக்கொடுக்கும் வாத்தியார் உட்பட:  வாய்த்தி ( வாய்ப்பாடம் சொல்பவர்) > வாத்தி > வாத்தியார்.
உப அத்தியாயி> உபாத்தியாயி  என்பது வேறுசொல்.    தேய்ந்து அழிதலை உடைய உடல் தேய்கம் >  தேகம் ஆனது போல.  ஆட்சி என்ற சொல்லும் சிற்றூராரால் ஆச்சி என்று பேச்சுவழக்கில் வழங்கப்படுதல் காண்க.

மேலும் சில  "கடு"  அடிச்சொல் :  http://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_87.html

அறிவீர் மகிழ்வீர் 

(மறுபார்வை நிகழும்.)

சில எழுத்துக்கள் வேறு கணினிகளில் வேறுபடத் தோன்றுகின்றன.} மறுபார்வை : 1136 03092018/      0507  06092018

சனி, 1 செப்டம்பர், 2018

கொளுத்துதல்,

கொள் என்பது பலபொருளொரு சொல்.  கொள் என்றொரு கூலம் (  தானியம் ) உண்டு, அதைக் குறிப்பிடவில்லை. இந்தக் கொள் என்பது குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படுவதாம்.

கொள் என்று ஒரு துணைவினை உள்ளது. எடுத்துக்கொள் என்ற வினையில் தானே கொள்ளுதலை அது குறித்தது.

கொள் என்பது தல் என்ற விகுதிபெறின் கொள்தல் >  கொள்ளுதல் என்றாகும். முதனிலை திரிந்த தொழிற்பெயராய் கொள்தல் > கோடல் என்றுமாகும்.

கொளுத்து என்பது கொள் என்பதன் பிறவினை.  கொள்ளும்படி செய்தல் என்பது பொருள். கதவில் உள்ள கொண்டி  கொளுத்து என்றும் சொல்வதுண்டு. கதவைப் பிறர் திறக்காமல் அடைக்கும் விதமாகக் கதவில் கொளுத்து இடப்படும். ஒரு நெட்டாணி அதற்குரிய வளையத்தில் ஏற்றப்பட்டுக்  கதவு திறக்க இயலாமல் அடைப்பது  கொளுத்திடுவது என்பர்.

கொளுத்து என்பது தீயேற்றப்படுவதையும் குறிக்கும்.  மடமையைக் கொளுத்து என்று பாரதி பாடியதில்  தீயால் அழிக்கப்படுவதைக் குறித்தது.

இனி  ஓர் இடுகையில் அறிவு கொளுத்துதல் என்று எழுதியிருந்தோம். இங்கு அறிவுபெறுமாறு செய்தல் என்று பொருள்படும்.

ஆனால் பயிர் கொளுத்துதல் என்று சொன்னால் பயிர் நட்டு வளரச் செய்வது என்று பொருள். பயிருக்குத் தீவைப்பது என்று பொருளன்று என்பதை மனத்திலிருத்தவும்.

கொள் > கொள்ளி. இது நெருப்பேற்றிய கோல் குச்சி முதலியவற்றைக் குறிப்பது.  கொள்ளி வைத்தல் : பிணத்துக்குத் தீயிடுதல்.   கொள்ளிப்பேய் : வாயில் நெருப்புக் கக்குவதாகச் சொல்லப்படும் பேய்.

கொள் என்பதில் பிறந்த சொற்கள் பல. சில அறிந்தோம். நன்றி.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

வான்மீதிலே இன்பத் தேன்மாரி: இராமராவின் மெல்லிசை.

நாம் இன்னும் தமிழ்மொழியைப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் எம் போன்றோர் வெளிநாட்டினர்.  தமிழைத் தாய்மொழியாகப் போற்றும் நாட்டில் அல்லது மாநிலத்தில் வாழவில்லை. வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் சீரகம் சோம்பு பட்டமிளகாய் தாளிப்பு வகையறாக்கள் விற்கும் கடைக்குப் போனால்தான் தமிழ்ப் பேச வாய்ப்புக் கிட்டுகின்றது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நாம் வெளியில் சந்திப்பவர்கள் 99 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் அல்லது சீனர்கள்.  ஆங்கிலம்,  சீனம்,  மலாய் முதலிய மொழிகள் பெரிதும் பயன்படுகின்றன.

நம்மில் பலர் தமிழை அறிந்து வைத்திருப்பதற்குக் காரணம் பேரளவில் திரைப்படங்களையே சாரும். திரையரங்குகட்குச் சென்று படங்களைப் பார்க்காவிட்டாலும் தமிழ்த் திரைப்பாடல்களை ஆங்காங்கு வானொலி தொலைக்காட்சி வாயிலாகக் கேட்க முடிகிறது. இது ஊட்டச்சத்தினை உட்கொண்டது போலாகும். சற்றுத் தரம் தாழ்ந்த திரைப்படங்கள் வருவதைக் கருத்தில்கொண்டு  அவற்றில் நாம் விரும்பும் பண்பாட்டுக் கூறுகள் குறைந்துகொண்டு செல்வதனால் பரத நாட்டியம் பழைய இசை (கர்நாடக சங்கீதம் ) முதலியவற்றைக் கற்றறிய ஒரு சாரார் செல்வதும் வரவேற்றற்குரியதே ஆகும். கோவில்களிலும் ஓரளவு தமிழ் வழங்குகிறது. கிறித்தவ தேவாலயங்களிலும் தமிழ் போற்றப்பட்டு வருகிறது.

திரைப்பாடல்களில் பல இனிய மெட்டுகளிலமைந்த மெல்லிசைப் பாடல்கள் நம் மனத்தைவிட்டகலா இடத்தினைப் பிடித்துக்கொண்டுள்ளன. அத்தகைய பாடல்களிலொன்றுதான் "வான்மீதிலே' என்ற பாடல்.  பானுமதி ஆண்பாடகருடன் இனிமையாக வழங்கியது இப்பாடல்.

அண்மையில் இரண்டு குருசாமிகள் எம்மைக் காண வந்தனர்.  தேநீர் (கொழுந்துநீர்)  முறுக்கு முதலியவை கொண்டு பணிவன்பு தெரிவிக்கப்பட்ட பின்பு அவர்கள் இந்தப்பாடலைப் பற்றிப் பேசி அதை எம்மைப் பாடும்படி கேட்டனர். யாமும் இயன்றவரை இதைப் பாடினோம்.

வான்மீதிலே இன்பத்
தேன்மாரி பெய்யுதே;
வண்ணம்சேர் கலாமதி
வீசும் வெண்ணிலாவினில்   (வான்)

சுகாதீத மேவும்
அனுராக கீதம்
சுதியோடு பாடும்
மதுவண்டு கேளாய்.
சதாநந்த ஜீவிய கானம் இதே (வான்)

வசந்தத்தில் ஆடும்
புனர்ஜென்மம் நீயே
மையல்கொண்டு நாடும்
தமிழ்த் தென்றல் நானே

மனம் ஒன்று சேர்ந்தே
உறவாடும் போது ( I stopped here)
நிஜம்தான் என் ஆருயிர்)
மெய்வாழ்வு நான்)
எனை ஈன்ற ? போகமும்)
மோகமும் மாறாது.)

BRACKETED LINES  IN DOUBT. supplied by the swamis
I tried to elicit the lines from youtube but owing to
frequent reloading unable to retrieve them.

இதை அவர்களுக்காகப் பாடினேம். இதை யாம் கேட்டிருக்கிறோமே அன்றிப் பாடிப் பயிற்சி செயததோ அடிக்கடி பாடியதோ இல்லை;  வரிகளும் சரியாகத்
தெரியவில்லை என்றேம். இருந்தாலும் நன்றாகப் பாடியதாகத் தெரிவித்தனர்,
மணிப்பவழ நடையில் (  மணிப்பிரவாளம் ) அமைந்த நல்ல பாடல். பலரையும் கவர்ந்தது ஆகும்.  ( நீங்கள் அறிந்திருந்தால்,  இப்பாடலின் வரிகளை இங்கு பின்னூட்டம் இடுங்கள். மேலே தரப்பட்ட வரிகளில் தவறுகள் சில இருக்கலாம் என்று நினைக்கிறேம்  ).

இந்தப் பாடலுக்குத் திரையில் பானுமதியும் மறைந்த ஆந்திர முதல்வர் ராமராவும் நடித்திருந்தனர்.  அண்மையில் அவர் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் காலமானது நம்மைச்  சோகத்துள் உய்த்தது. அவர்கள் குடும்பத்தாருக்கு நம் இரங்கல் உரித்தாகுக,  இருவரின் நினைவாகவும் இப்பாடல் உள்ளது.

திருத்தம் பின்