செவ்வாய், 17 ஜனவரி, 2017

சாவிலிருந்துதான்.........ஜாதகம்

மனிதன் இறைவனனுண்மையைப்  பகுத்தறிந்ததும்  வழிபாட்டு முறைகளை உணர்ந்துரைத்ததும் சாவிலிருந்துதான். மரணமே இல்லையென்றால், இறந்தோனுயிர் எங்குச் சென்றதென்கின்ற கேள்வி
எழ இடமில்லை. இறப்பு ஒரு முடிவு போல் தோன்றுவதால் இறவாத‌
ஒருவன் இருக்கின்றானோ என்ற கேள்வியும், இறவாமல் இருந்துகொண்டுதான் அவன் இறப்புகளை ஏற்படுத்துகின்றானோ என்ற ஆய்வும் விளைகின்றன. அப்படிச் சென்றொழியாமல் நின்று நிலவுவோனை வணங்கினால் நன்மைகள் பல பெறலாம் என்கின்ற‌
கருத்தும் தோன்றுகின்றது.  அது நித்தியம் என்றனர். நில்+து+இயம் = நிற்றியம் > நித்தியம் > நித்யம் என்ற சொல்லும் உண்டாயிற்று. நித்தியமாவது, நின்று இயல்வதாகிய நிலை. இதைப் பிற  அறிஞர்களும் உரைத்துள்ளனர்.


எனவே சாய் ‍~ சா என்ற தமிழ்ச் சொற்களிலிருந்து சாய்தல் என்பதும்
சாதல் என்பதும்  ஆன  சொற்கள் உண்டாயின.  சாய்தல் என்பது பொதுப் பொருளிலும் இறப்பு என்ற சிறப்புப் பொருளிலும் வழங்கும், "வேரோடு சாய்ப்போம்" என்ற வழக்கையும் நோக்குக. மீண்டும் எழுந்துவிடாமல் அழித்தல் என்பது பொருளாம். போரில் சாய்ந்தான் என்றால் செத்துவிட்டான் என்று பொருள். நின்றுகொண்டிருப்பவன்    தி டீரெனச் சாய்ந்து இறப்பது உண்டென்பதால், சாய்தல் கருத்தில் சாதல் கருத்துத் தோன்றிற்று. சாய் என்பதிலுள்ள யகர ஒற்றுக் கெட்டுச் சொல் அமைந்தது.

சாய்தலும்  சாதலும் தொடர்புடைய சொற்கள் .

சாத்தியம் என்பது சாய்த்தல்  அடிப்படையில் எழுந்த சொல்லே.   இது முன் விளக்கப்பட்டுள்ளது.  இச் சொல்லில் ஒரு யகர ஒற்றுக்  கெட்டது . சாத்திரமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மனிதன் சாவின் தொடர்பில் தெரிந்துகொள்ள விரும்பியவற்றுள்  சாதகமும்
ஒன்று.  குழந்தை பிறந்தவுடன் இறப்பது infant mortality முற்காலத்தில் மிகுதி.
பிறந்த குழந்தைக்கு  ஆயுள் குறைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்பது தாய் தந்தை  உறவினர் இவர்களின் கவலை,பிறந்தது  சாவுக்குரியதோ ?   எனவே இதைக் கணித்தனர்,  சாவுக்குத் தகுவதோ  என்று பார்ப்பதே சா + தகு + அம் = சாதகம்
ஆனது, இப்பொருள்  நலமாகத் தோன்றாதபடியினால்  இது ஜாதகம் என்று மாற்றி  இடக்கர் விலக்கப்  பட்டது.   ஜா  = பிறப்பு என்று பொருள் கூறி  மரண எண்ணத்திலுருந்து  சொல் விடுதலை பெற்றது.

சொல்லுக்கு ஆக்கப்பொருள் நிறைவு அளிக்க வில்லை என்றால்,  அதைப் புலவர்  வேறு பொருள் குறி அழகுபடுத்தினர்.அபசகுனத்தை  ( கெடு  பொருள்)
விலக்குதல் நல்லது என்பது ஒரு மன்பதைக்  குறிக்கோள் ஆகும் .

This will be edited later as our draft went missing twice and had to be retrieved with some
difficulty.




திங்கள், 16 ஜனவரி, 2017

பாலித்தல்

பாலித்தல் என்ற சொல், பெரும்பாலும் பேச்சில் வழங்கவில்லை. பாடல்களில் ஆங்காங்கு தலைகாட்டுவதுண்டு.

அம்மை அருள்பாலிக்கிறாள் என்பதை இறைப்பற்று ஏடுகளில் கண்டின்புறலாம்.

பாலித்தல் என்பதனைச் சிந்திப்போம்.

பால் என்பது பகுதி என்று பொருள்படும், இதற்கு வேறு பொருள்பல‌
உண்டெனினும். திருக்குறளில் மூன்று பால்கள் உள. அறத்துப்பால்
முதலாவது. அறிதற்பாற்று, உணரற்பாலது என்ற வழக்குகளிலும்
இதே பொருள்தான்.

பால் என்பது தொழிற்பெயர். பகு > பகல் > பால். குறிலடுத்துக் ககரம், குகரம் முதலியன வரின் முதலெழுத்து நீண்டு திரியும்.  தொகுப்பு > தோப்பு என்பதும் அது. மலையாள மொழியிலும் தோப்பு என்னும் சொல்
உண்டு.  "தோப்பில் வீடு" என்பது அங்கு ஒரு வீட்டின் பெயர். தோப்பு இருந்த இடத்தில்  கட்டிய வீடு.

பகு> பகவு > பகவன் என்பதும் பகிர்ந்தளிப்போன் (படியளிப்போன்) என்றே பொருள்தரும் என்பதை முன் விளக்கியதுண்டு. அது இங்கு இன்னும்
உள்ளது என்று நினைக்கிறோம்.

பகு> பகல் > பாலி > பாலித்தல்: படியளத்தல் அல்லது பகிர்ந்தளித்தல்.அருளை யாவருக்கும் வழங்குவோன், அதில் ஒரு
பகுதியை பெறுவோனிடம் அளிக்கிறான் என்பது.

இனி, பர > பார் > பாரித்தல் > பாலித்தல். ரகரம் லகரமாய்த் திரிந்தது.
பர என்பது விரிவுக் கருத்தாகலின், பாலித்தல் என்பது விரித்தல் என்றும்
பரந்து கொடுத்தல் என்றும் ஏற்றபடி பொருள்தரும்.

பாலித்தல் என்பது ஓர் இருபிறப்பி ஆகும்.

தமிழறிஞர்  பிறரும் இதை விளக்கி யுள்ளனர் .

will edit later.




ஞாயிறு, 15 ஜனவரி, 2017

மீனாட்சி சுந்தரம் பிள்ளை " நாற்காலி"



ஒரு சமயம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்னும் பெரும்புலவருக்கு ஒரு நாற்காலி தேவைப்பட்டது. அதை எப்படிப் பெறுவது என்று எண்ணிப்பார்த்துத் தம் மாணாக்கரான ஞானப்பிரகாசம் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஒரு கவிதையாய்
அமைந்தது. அதில் ஒரு பாட்டு, அவர் கேட்பது என்ன " நாற்காலி" என்பதை  நகைச்சுவை உணர்வுடன் விவரித்தது. அது வருமாறு:

உறுவலியின் இடங்கொண்டு வனப்பமைந்த
நாற்காலி ஒன்று வேண்டும்;
மறுவறு நாற்காலி எனல் யானையன்று
குதிரையன்று வல்லேறன்று
கறுவகல் பால் பசு அன்றால்; இவையெலாம்
இயங்குதல்செய் கடன்மேற் கொள்ளும்;
பெறுபவர்பால் இயங்காது வைத்தவிடத்
தேயிருக்கப் பெற்றதாமே.

என்பது.

இதன் பொருள்:

உறுவலியின்  ‍~  வலிமையுள்ள; எளிதில் உடைந்துவிடாத.
இடங்கொண்டு ~  கொஞ்சம் விரிவுடைய;
வனப்பமைந்த ~  அழகுடைய;
நாற்காலி  ~  இருக்கை;
மறுவறு ~ குறையற்ற; ( முறைப்படி எண்ணுவதாயின் ...)
நாற்காலி எனல் ~  நாற்காலி என்பது;
வல்லேறன்று  ~  வலிமை பொருந்திய காளை ஆகாது;
கறுவகல் ~  கரிய நிறமுள்ள பெரிதான;
பால் பசு அன்றால் ~ பால் கறக்கும் ஆவும்  அன்று.   ஆல் ‍: இங்கு
அசை; பாட்டில் சந்தம் குறைவுபடாமல் வரும் சொல்.
இவையெலாம்
இயங்குதல்செய் கடன்மேற் கொள்ளும்  = இத்திறத்தன யாவும்
நடக்கும் செயலைக் கடமையாய் உடையவை;
பெறுபவர்பால் இயங்காது வைத்தவிடத்தே   யிருக்கப் பெற்றதாமே = அங்கும் இங்கும் அசையாது நானிட்ட‌ விடத்து இருக்கக் கூடியதாகும். பெறுபவர்பால் : ஏற்பவர் பாங்கில். என்றவாறு.

நாற்காலி என்ற சொல் நான்கு கால்கள் உடையது என்று காரணம் விரித்துக் காட்டுவதாகும். .  இருப்பினும் காரண இடுகுறி யாகையால், யானை
குதிரை முதலியவற்றைக் குறிக்கமாட்டாது. அது மாணவர் ஞானப்பிரகாசம் பிள்ளைக்கும் தெரியும். பின் ஏன் இந்த விளக்கம் தேவைப்பட்டது?

"ஞானப்பிரகாசா! நான் பெரிதாக எதையும் கேட்கவில்லை.
ஒரு மர நாற்காலிதான் கேட்கிறேன். எனக்கு அதைத் தந்து
உதவமாட்டாயா?" என்பதுதான் செய்தி. " பெரிதாகக் கேட்டு உன்னைத் தொந்தரவு செய்பவன் நானல்லேன்" என்பதே இங்கு
சூழ்ச்சுமமான உட்பொருள்.

(  சூழ்ச்சுமமான  :  பொதிந்து மறைத்துவைத்த.   இதைச்  சூட்சுமமான என்று எழுதுவர். சூழ்தல் ‍ : ஆலோசித்தல். சூழ்ச்சுமம் ‍:
ஆலோசித்து அமைத்தது. சூழ்+சு+ம் + அம்.  சு மற்றும் அம்: விகுதிகள்
ம் : ஒரு  சொல்லமைப்பு இடைநிலை.  )

இயங்காத பொருள் நாற்காலி. ஏனையவை ஓரிடத்து நில்லாதவை.

"யானை குதிரை நீ கொடுத்தாலும் என்னால் அவற்றின் பின் ஓடி
அவற்றை அடக்கமுடியாது. எனக்கும் அவற்றிலேதும் தேவையில்லை. நாற்காலி என்பதை காரண இடுகுறியாகவே வழக்கில்போல் இங்கு பயன்படுத்துகிறேன்."

ஒரு சொல்லின் சொல்லமைப்புப்  பொருள் வேறு.  வழக்குப் பொருள் வேறு 
என்பதை நன்குணர்ந்த பெரும்புலவர்  அவர்.

Has been edited. Hackers or their software may make  wilful changes, Will review..
Inherent paragraphing flaw in the posting software. Pl ignore. 
These apply to all our posts.