சனி, 7 ஜனவரி, 2017

வேதவியாசன்

வேதவியாசன் என்னும் சொல்லும் வியாசம் என்னும் சொல்லும்
தமிழிலும் வந்து வழங்குகின்றன எனினும் இவை தமிழ் என்று
வகைப்படுத்த இயலாதவை என்ப.

வேதம் என்பது வித் (அறிதல்) என்ற சொல்லினின்று தோன்றிற்று என மேலை ஆராய்ச்சியாளர் கூறினும், இது வித்து (விதை) என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து அறிவே வித்து என்ற அடிப்படையில் எழுந்தது
ஆகும். அன்றியும் வேதம் என்பது, செய்யப்பட்டவை என்ற பொருளில்
வேய்தல் என்பதினின்று தோன்றியது எனினுமாம். "வேத"ச் சொல்லை
ஆய்ந்தோர் வேய்தல் என்ற சொல்லை அறியாதவர் ஆதலின், அதினின்று அது தோன்றுமென்பதை அறியார். வேய்தல் > வேய்தம் > வேதம். யகரம்
கெட்டது.  வாய்த்தி என்பது வாத்தி > வாத்தியார் என்றானது போல. (வாய்ப்பாடம் சொல்பவன்).

வியன், வியனுலகு என்பன தமிழ் வழக்குகள். வியன் என்பது விரிவு.
விர் > விய். விர் > விரி > விரிவு.  விய் > விய > வியாசம்,  அதாவது
விரிவாய்ச் சொல்லப்படுவது, எழுதப்படுவது.
எனவே வேதவியாசன் என்பது தமிழன்று என்று  முடிப்பினும் மூலச்
சொற்கள் தமிழென்பது காணலாம்.

வியாழன், 5 ஜனவரி, 2017

சளியுடன் காய்ச்சல்

சளியுடன் காய்ச்சல் கலந்துவர  யானே
ஒளி‍யிழந்த வானத் துடுப்போலும் ஆனேன்;
வெளியில் உலவாது வீடடங்கின் வாரா(து )
உளிசெதுக்கல் ஒக்கும் வலி.

வாரா(து)  உ ளி  - வாரா துளி.....

புதன், 4 ஜனவரி, 2017

புட்டாமா. face powder

தமிழ் நாட்டில் பேசப்படும் தமிழ் ஒரு கலவைத் தமிழ். பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்தித் தம் கருத்தை வெளிப்படுத்துகின்றனர் தமிழ்நாட்டு மக்கள். சென்டிமன்ட்ஸ், எஞ்சாய்மென்ட் முதலிய ஆங்கிலச் சொற்கள் தாராளமாய்ப் பயன்பாடு காண்கின்றன.

பொட்டலம் என்ற சொல், தமிழ்நாட்டின் சிற்றுண்டியகத்தில் திகைப்பை ஏற்படுத்தியது.  தமிழ் வித்துவானுக்கு விளங்கிப் புண்ணியமில்லை.
பொட்டலம் வழக்கில் இல்லாத சொல். தமிழ்நாட்டுக்குப் போகும் வெளிநாட்டுத் தமிழன், அங்கு என்னென்ன தமிழ்ச்சொற்கள் வழக்கில் இல்லை என்று முதலில் தெரிந்துகொண்டு அப்புறம் தமிழ்ப் பேசவேண்டும். பொட்டலம் என்னாமல் பார்சல் என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தினாலே இட்டிலி மடிப்பவன் புரிந்துகொள்வான்.

முகத்துக்குப் பவுடர் உதட்டுக்குச் சாயம்
மூக்குக்கண்ணடி மாட்டி,
முடிசூடாத மகாராணிபோல் நடக்கிறாள் சீமாட்டி
ப்யூட்டி நடக்கிறாள் சீமாட்டி;
சீமாட்டி கையிலே ராட்டினம் ஆடும் சிங்காரப் பையி ப்ளாஸ்டிக்
(.....பையைத் ) திறந்து பார்த்தால்
பணங்காசில்லே சீப்புக் கண்ணாடி லிப்ஸிடிக்....
ஸ்னோ கிரீம் ஐடெக்ஸ்.....

என்று திரைப்பாடல் வருவதால், முகமாவுக்கு பவுடர் என்றுதான்
தமிழ் நாட்டில் சொல்கிறார்கள் என்று தெரிகிறது.

மாவு என்பது தோசை மாவு, ஆட்டா மாவு என்பன போலும் பொருள்களைக் குறிக்க வழங்குவதால், இதை முகப்பூச்சுக்கு வழங்குவதில் மனத்தடை இருக்கிறது போலும். ஆனால் ஆங்கிலத்தில் பேஸ் பவுடர், கறி பவுடர் என்று உணவு பிற‌ என்ற பேதமின்றி வழங்குவதில் தடையேதும் இல்லை. இது
வாங்கிப் பேசிய மொழியில் இல்லாத வரையறவு ஆகும்.

நிற்க 40 50 களில்  சிங்கப்பூர் மலேசியாவில் வாழ்ந்த தமிழர் முகப்பூச்சு மாவுக்கு புட்டாமா என்று சொன்னார்கள் என்று அறிகிறோம்.

முன்பு முகப்பூச்சுகள் கட்டியாகவே சீனா முதலிய நாடுகளிலிருந்து
வந்தன. இப்போது கட்டிப் பூச்சுகள் அருகிவிட்டன. இவற்றைத் தேய்த்து முகத்தில் பூசிக் கொள்ளவேண்டும். இக்கட்டிகள் பிட்டால் (பிட்டு எடுத்தால் ) மாவாகிப் பூசத் தயாராகிவிடும்.

பிட்டால் மாவு > புட்டால் மாவு > புட்டாமா.

புட்டாமா இப்போது குறைவு.