புதன், 20 பிப்ரவரி, 2013

யாவருக்கும் இடமுண்டு

கற்பனை பாவின்  கலையே   அதன் நிழலில்
 நிற்பன பாவலர்தம்  நெஞ்சங்கள் ---- வெற்பென
ஓங்கும் உயர்நிலையில் நின்றோரை, மற்றோரைத்
தாங்கும்  நிலத்தாய் மடி .




பாவின் கலையே =  கவிதைக்குரிய கலையாம் ;   வெற்பென -  மலைபோல  ;

நிலமானது  கற்பனையில்   வாழ்வோரையும்  பிறரையும்   தாங்கிக்கொள்கிறது  யாவருக்கும்  இடமுண்டு  என்பது என்பது  கருத்து
  

சின்னஞ்சிறு கிளிகள்

சின்னஞ்  சிறுகிளிகள்   சீரும்  அழகேதான்
 பன்னிவரும்  சொல்லசைகள்  தாமும்  பயிலமுதே
தின்னவொரு வண்பழமாம் தேனாம் மயங்காமல்
உண்ணப்பே ரூற்றாம் உரை

இது சிறுபிள்ளைகள் பற்றியது

அசை   சீர்    தளை  முதலியவற்றைக்  பாவலர்கள்  பாட்டெழுதும்போது  கவனித்துச்  சுவைத்து  எழுதுவர் .  ஆனால்   சின்னப் பிள்ளைகளின்  பேச்சிலே இவையெல்லாம்  உள்ளன,  அவர்களின் பேச்சில் வரும்   சீர்களும் அழகுதான். அவர்கள்  பன்னிப் பன்னிப்  பேசுகையில் வரும் அசைகளும் பயிலும் அமுதமே, பழம், தேன் . நீரூற்று  என்பவையெல்லாம் அவர்களிடம் பேசுகையில்  காணலாம் .  எத்துணை  இனிமை !!    




Moon trapped by gravity of earth

 நிலமகள்  நீள்கவர்ச்சி நேர்ப்பட்ட  நிலவும்
உலவும் சுழல்சுற்றின் உண்மை ---சொலவும்
அறிவியலார் முன் நிற்க ஆங்குப்பா வல்லோர்
 நெறிவியக்க நீங்கிற்றே காண்


இதன் பொருள் :நிலமகள்  -  பூமியின்,  நீள் கவர்ச்சி -நீண்ட இழுப்புச் சக்தி ;
நேர்ப்பட்ட  -  வழிப்பட்ட ;  நிலவும் - சந்திரனும் ;  சுழல் சுற்றின் = சுழன்றுகொண்டும்  சுற்றிக்கொண்டும்;   உலவும் உண்மை -  நடைபெறுகின்ற தென்ற சரியான நிலையை ;  சொலவும்  = சொல்லவும் ;  அறிவியலார் = விஞ்ஞானிகள்  ; பா வல்லோர் -  கவிவாணர்கள் ;  நெறி  = பாடும்  முறைகள் ; வியக்க -  நாம் வியக்கும்படியாக ; நீங்கிற்றே காண்  -  அவறிவியலார் வழியினின்றும்  நீங்கிச் செல்கின்றதே , காண் = கண்டுகொள்ளுங்கள்