புதன், 7 அக்டோபர், 2020

தூரமும் தொலைவும்

 முன் காலங்களில் தொலைவைக் கணக்கிட சில வழிகள் இருந்தன.  ஆனால் தொலைந்து போய்விட்ட ஒரு பொருள் எட்டாத தூரத்துக்குச் சென்றுவிட்டதாக எண்ணி அது தொலைவை அடைந்துவிட்டது என்றனர். ஆகவே தொலைவு என்ற சொல்லுக்கு  "தூரம்" என்ற பொருள் ஏற்பட்டது. பண்டை மனிதன் இவ்வாறு உணர்ந்துகொண்டது ஒரு வகையில் அவன் சிந்தனைத் திறனைக் காட்டுகிறது. ஒரு நாய்க்கு அதன் இயமானன் ( எஜமானன்)  தொலைவிற்போய்விடின் ஊளையிட்டுக் கேட்டுவந்திடுவான் என்று நம்பிக்கொண்டிருக்கும்.

தொலைவைக் கணிக்க முற்பட்டுவிட மாட்டாது

ஒருவன் துரத்தப்பட்டு தொலைவிற் சென்றுவிட்டால் துரத்தியவனுக்கும் துரத்தப்பட்டவனுக்கும் உள்ள இடைவெளி தூரம் எனப்பட்டது. தூரம் அல்லது தொலைவு என்பதை இப்படியும் அறிந்துகொண்டனர். துர > துரத்து.  துர + அம் = தூரம். முதனிலை நீண்டு விகுதிபெற்ற தொழிற்பெயர். இல்லற வாழ்வு வேண்டாமென்று ஒருவன் தானே தொலைவிற் சென்றுவிட்டால்,  அதுவும் துறவு என்றே சொல்லப்பட்டது. இவ்வாறு கூறவே.  துர> தூரம்,  துற > துறவு என்பனவற்றின் தொடர்பு இவற்றிலிருந்து தெளிவாகிறது.

துருவு என்ற வினைச்சொல்லும் ஒருபுறம் தொடங்கி மறுபுறம் துளைத்துச் செல்லுதலைக் குறிக்கும்.

துள் > துளை. ( ஐ )

துள் > துருவு.   துள்> துர.

இவற்றுள் உள்ள உறவினை ஆய்ந்து தெளிந்துகொள்ளுங்கள்.


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்.


திங்கள், 5 அக்டோபர், 2020

சாதி, தொழில் சில கற்பனை உதாரணங்கள். நெல்லர், கடலையர்.

சாதி (ஜாதி)களை வகுத்தவர்கள் அரசர்களா பூசாரிகளா என்பது ஒரு கேள்வி. இது அவ்வந் நிலப்பகுதிகளில் இருந்த நிலைமைகட்கு ஏற்ப, அரசனாகவோ அல்லது பூசாரிகளாகவோ இருக்கலாம். கோயிலுக்கு வழங்குவதற்காக ஒரு கூட்டத்தார் எப்போதும் கடலை என்னும் கூலத்தையே கொணர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தனர். பூசாரியும் அதைப் பெற்றுக்கொண்டார். அம்மனுக்கும் அதை ஆக்கிப் படைத்துத் தாமும் தம் குடும்பத்தினரும் வீட்டிலும் ஆக்கி உண்டு மகிழ்ந்தார். வந்து பணிந்த பிறருக்கும் வழங்கினார். நாளடைவில் இவர்கள் கடலை கொடுத்தோர் என்பதனால் "கடலையர்" என்று குறிக்கப்பட்டனர். இப்படிக் குறிப்பது ஒரு சுட்டும் வசதிக்காகத்தான் என்றாலும் அது ஒரு சார்பினரைக் குறிக்க வழங்கும் சொல்லாகிவிட்டது. இதற்குக் காரணம், நெல் க ொடுத்தோரிடமிருந்து இவர்களைப் பிரித்துச் சுட்ட ஒரு தேவை இருந்ததுதான். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு ஒரே மாதிரி நிகழ்வுகள் அமைந்துவிடின், கடலையர் என்பது ஒரு சாதியாகிவிடும். தொடங்கிய தொழிலானது, பிறப்பினோடு ஒட்டிக்கொண்டு பிறப்பின் அடிப்படை உடையதாக மாறிவிடும். இவர்கள் என்ன சார்பினர் எனின், "கடலையர்" சார்பினர் என்றாகிவிடும். சார்பு - சார்பினர்; சார்பு (பு விகுதி) > சார்தி ( தி விகுதி). இது இடைக்குறைந்து சாதி ஆகிவிடும். ரகர ஒற்றுக்கள் ( ர் ) மறைதல் பெருவரவு. எம் இடுகைகளைப் படிக்கும்போது குறித்துக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்வதா அல்லது கூடாதா என்பதை முடிவில் செய்துகொள்ளுங்கள். பிற்காலத்தினர் இந்தக் கடலையர் பிறப்பினால் அவ்வாறு ஆனார்கள் என்று எண்ணுவது இயல்பான ஒரு விளைவுதான். சொல்லும் கடலையர் > கலையர் என்றோ, கடலையர் > கடயர் என்றோ, கடலையர்> கயர் > கயரி என்றோ வந்து தொலையும். இலத்தீன் மொழியாயின் கயருஸ் என்று திரிந்திருக்கும். சீனமொழியாயின் "கைருங்" என்றிருக்கும். மலாய் மொழியில் கய்ராங் என்பது ( சீமாங் போல ) தோன்றக்கூடும். அவனவன் வாய்க்கிசைய வருமாயினும் சில விதிகள் மேல் எடுபடலாம். நெல் கொடுத்தோர் நெல்லர் என்று பெயர் பெறுவது இயல்பு. எப்படியும் இதெல்லாம் காலப்போக்கில் திரியும். நாக்கு என்னும் உறுப்பும் உதடுகளும் காரணம். பூசாரிக்குப் பதில் கடலை அரசன் அல்லது அவனது அதிகாரிகளிடம் இறுக்கப்பெற்றிருப்பின், இதெலாம் அரசு தொடர்பான நிகழ்வுகளும் விளைவுகளாகவும் ஏற்பட்டிருக்கும். நெல்லர் உயர்வும் கடலையர் தாழ்வும் எப்படி வந்திருக்கும்? நெல்லுக்கு அதிக விலை அரசு க ொடுத்தால் நாளடைவில் உயர்வு தாழ்வு ஏற்படும். சில நாடுகளில் உயர்வு தாழ்வு ஏற்படவில்லை. இது மக்களையும் மனப்பாங்கையும் பொறுத்ததாகும். கடலை கொடுத்தோர் தங்கள் சாதிப்பெயரை கடலை + அர் என்று பிரித்தறிதலின்றி, கடல் + ஐயர் என்று பிரித்து, கடலாடு பிரபுக்கள்1 என்று கூறி, மேனிலை கூர்தல் கூடும். எவையாயினும் எளிமையாகுவதில்லை. நெல்லர் கடலையர் என்ற சொற்கள் புனையப்படவில்லை என்று தெரிகிறது. அதனால் இல்லாத சொற்களைக் கொண்டு உணர்விக்க இவ்விடுகை முனைந்துள் ளது. நெல்லரி என்ற சொல் உள்ளது. நெல்லரி தொழுவர் என்ற தொடர் புறநானூற்றில் (209) வந்துள்ளது. நெல்லரி - கைப்பிடி நெல்கதிர். நெல் உழவு தொடர்பான சொற்கள் பல வழக்கிழந்து வருகின்றன. இற்றை நாளில் இவற்றைக் காப்பதும் கடினமே. முயற்சி செய்க. திருத்தம் பின்னர். குறிப்பு: 1. பெரு > பெருமை; பெரு > பெருபு > பிரபு ( திரிசொல் ). ஆகுபெயராய் பெருமை உடையவரை (ஆளைக்) குறிக்கும். edits and paragrahing have been lost. (error) after posting.

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

முல்லும் மூலதனமும்

 இந்நாள் வேறொரு கோணத்தில் சிந்திப்போம்.

முல் என்பதொரு தமிழ் அடிச்சொல். பழங்காலத்தில் மொழியில் புதிய சொற்கள் தேவைக்கேற்பத் தோன்றிக்கொண்டிருந்த சமையத்தில்,  விகுதிகள் சேர்க்காமல் அகத்திரிபுகளின் மூலமாகவே சொற்கள் உருவாகின.  அவ்வாறு சொற்கள் தோன்றியமையை பின்வரும் சொல்லமைப்பில் கண்டுகொள்ளலாம்.

முல்   ( அடி )  >   முன்..

முன் என்ற சொல் காலமுன்மை,  இடமுன்மை இரண்டுக்கும் உரியதாய் வரும்.

எடுத்துக்காட்டு:

நேற்று முன்  (  இது கால முன்மை).

வீட்டின் முன்  ( இது இடமுன்மை).

தந்தைக்கு முன் ( இதுவும் காலமுன்மை).

முல் என்பதிலிருந்து முன் என்பதை உண்டாக்க,  விகுதி ஏதும் இன்றியே ஓரெழுத்து மாற்றத்தின்மூலம் சொல் பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறே  ஆள் என்ற பெண்பால் விகுதியினின்று ஓர் ஆண்பால் விகுதியைப் படைக்க, ஓரெழுத்துத் திரிபே போதுமானதாய் இருந்தது.

ஆள் >   ஆன்.   ( ள் >ன்) 

வந்தாள் >  வந்தான்.

ஆள் என்பது திறச்செயல் குறிக்கும் சொல்லாகும்.   அரசி ஆள்கிறாள். அதாவது எதை எப்படிச் செய்து எவ்வாறு நடத்திமுடிக்க வேண்டுமென்பதை அரசி தீர்மானிப்பதுடன், அதற்கான செயல்பாட்டு மக்கட்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறாள். செயல் முற்றுறுவிக்கின்றாள்.   இதுதான் ஆள் என்பதன் பொருள். பெண்கள் இது செய்தமையால்,  அவள் வெறுமனே  வந்து, தந்து என்று வினைகளால் சொல்லப்படாமல்  வந்தாள், தந்தாள் என்று  ஆள் என்னும் விகுதி கொடுத்துச் சொல்லப்பட்டாள்.  பிற்காலத்தில் ஆண்மகன் செயல்களை முடித்த காலக்கட்டத்தில்  ஆள் விகுதியே ஆன் விகுதியாய் மாறியமைந்தது. அவனது செயல்முடிப்புத் திறனைக் காட்டிற்று.

ளகர ஒற்று ணகர ஒற்றாகவும் மாறும். அவ்வாறு மாறியபின், பொருண்மையிலும் சற்று மாற்றமுற்று தொடர்புடைய (அணிமைப்) பொருளுக்கு மாறிவிடும்.  இதற்கு  ( உதாரணம் : உது ஆர் அணம் அல்லது ) எடுத்துக்காட்டு:

உள் ( உட்பக்கம்)

உள் >  உண்  ( தின்பொருளை வயிற்றினுள் வாய்வழிச் செல்லவைப்பது)

எழுத்தும் மாறிப் பொருளும் தொடர்புடைய வேறு கருத்துக்கு மாறியது.

இதுபோலவே  ஆள் என்ற சொல்லினின்று ஆண் என்ற சொல் தோன்றியது.


முல் என்பது முன்னிருப்பைக் குறித்ததென்பது மேற்கூறியவற்றால் அறியப்படும். கவனிக்க:

முல் - முலை ( முன்னிருக்கும் பால்தரும் உடற்பகுதி )

முல் > மூல் > மூலை : சுவரின் முன்பகுதிகள் இணைப்பில் ஏற்படும் இடம்

முல் > மூல் > மூலம் :  காலத்தால் முற்பட்டு பின்வருவனதொடர நிற்பது.

முல்> மூல் என்பது முதனிலைத் திரிபு. ( நீட்சித் திரிபு)

முல் > மூல் > மூலிகை:  முன்னாளிலிருந்து நோய்நீங்க இயைந்த  மருந்து.

   இயை > இகை.   கை விகுதி என்றும் விளக்கலாம். 

தனமென்பது தன் செல்வம்   தன் - தனம். 

மூலதனம் எனின், முன் ஒருவன் இடும் தனம்.   முதல் எனினும் அதுவாகும்.


இவற்றை நேரம் கிட்டினால் விரித்து அறிந்துகொள்வோம்.



இப்போது இவற்றை அறிந்து மகிழ்க

இடையில் வந்து கண்டோர் பொருட்டு இருமுறை நிறுத்தவேண்டியதாயிற்று.



தட்டச்சுப் பிறழ்வு பின் கவனிக்கப்படும்.


இவற்றையும் வாசித்து அறிக:


தனம் :  https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post_23.html

முகமாவு பூசிக் கவின்பட்ட சொற்கள்: 

 https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_6.html

விபசாரி  https://sivamaalaa.blogspot.com/2017/01/how-formed.html

மூலம் https://sivamaalaa.blogspot.com/2009/05/etymology-by-mala-ref-page9-extract.html

சொல்லாய்வுகள் https://sivamaalaa.blogspot.com/2017/02/postings-on-etymology-retrieved.html

வற்சிறம் https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_20.html

காமுகம் https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_3.html

காமி  https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_32.html