செவ்வாய், 2 அக்டோபர், 2018

சனி தனி; தங்கு சங்கம்.

சிலர் சனி என்ற பெயரைச் சொல்லவும் அஞ்சுமளவிற்கு சனி மிகுவலிமை பெற்ற கோளாகும். இதன் நிறம் கருப்பு ஆகும். அதனால் தமிழில் இதற்குக் காரி என்றும் பெயருண்டு.  சில சோதிடப் பாடல்களில் காரி என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.

எந்தக் கோளுக்கும் ஈசுவரப் பட்டமில்லை. ஒரு விதிவிலக்காக சனிக்குமட்டும் ஈசுவரன் என்பர்.  சனீசுவரன். ஏழரை நாட்டான் என்றால் எல்லோருக்கும் அச்சம்தான்.

ஒரு தனிமதிப்பு உடைய கோளாதலின் தனி என்ற சொல்லே திரிந்து சனி என்று அமைந்தது.

அத்தன் என்ற அப்பனைக் குறிக்கும் சொல், அச்சன் என்று திரிந்து தகரம் சகரம் ஆயினது காண்க.  இனி தசை > சதை என்பதும் காண்க. இதன்படியே தனி என்பதும் சனி என்று திரிந்தது. வியத்தற்கு ஒன்றுமில்லாத் திரிபு இதுவாகும்.

இதேபோல் பல புலவர்களும் வந்து தங்கி  அரசன் இட்ட உணவினையும் உண்டு பின் அவனைக் கண்டு கவிபாடிப் பரிசில் பெற்றுச் சென்ற இடம், சங்கம் ஆனது.  தங்கு > சங்கு > சங்கம்.

ஒரு நத்தைபோலும் உயிரி, தங்கிவாழும் கூட்டுக்குச் சங்கு என்ற பெயர் மிக்கப் பொருத்தமன்றோ. பின்னர் வெறும் சங்கை எடுத்து ஊதி  அவ்வொலியையும் சங்கொலி என்றனர்.  நாவு, சங்கு வாய் என எல்லாம் இணைந்து எழுப்பிய ஒலி, சங்கொலி, சங்க நாதம் எனப்பட்டது.

சிறிய சங்குகளைக் கோத்து மாலைபோல் கழுத்தில் அணிந்தனர். பிற்காலத்தில் போதுமான சங்கு கிட்டாததாலோ அல்லது வேறு காரணத்தாலோ சங்கு இல்லாத மாலைகள் அணிந்தனர். அது சங்கு இல்லாதது ஆகையினால் சங்கிலி  சங்கு இலி  ஆனது.  சங்கும் அம் விகுதி பெற்றுச் சங்கமானது. அப்போது ஒலி என்றும் கழகம்  என்றும் பொருள்பெறும்.

சங்கிலிக் கறுப்பனுக்கும் சங்கிலிக்கும் வந்த தொடர்பென்ன?

தாம் சேருமிடத்தில் இருப்பதைத் தங்குதல் என்றனர்.  தம்+கு.    தன் என்பது ஒருமை; தம் என்பது பன்மை ஆகும்.  கு என்பது சேர்விடம் குறிக்கும் உருபு.

தான் தான் என்று இரு தான் கள் சேர்ந்து தாம் ஆகி,  தாம் சேர்விடம் தம்+கு  என உருவாகும்;  இது தங்கு ஆனது.  தங்கு> சங்கு > சங்கம். தான்-கள் பல தங்கிய இடம் சங்கம். இதில் என்ன அயல்மொழி? ஒன்றுமில்லை. இது இனிய சொல்லாதலின் பலரும் பயன்படுத்திக் கொண்டமை தமிழின் உயர்வையும் வழங்கலையும் உலகுக்கு உணர்த்தும்.



அழிவிற் பட்டோர்க்கு அஞ்சலி

பிறப்ப தனைத்தும் இறப்ப துளமையே
பின் என் மனமேன் தன் நிலை கலங்குதல்.
முதுநூல் பலப்பல இதனுண் மைசெலச்
சொல்லியும் பக்குவம் வெல்லத் தவறிய
பற்றாக் குறையோ முற்றாச்  சிந்தையோ?
வற்றா வளத்தின் வண்தமிழ் அறிந்தார்
உற்றார் அல்லர் இத்தகு துயரே
நிலநடுக் கத்தினில் நேரந்த அழிவொடு
பலகடு நிலையும் பட்டழி வுற்றவர்
யாவ ராயினும் கண்ணீர்
மேவத் துளக்குறும் நோவறி நெஞ்சே.

திங்கள், 1 அக்டோபர், 2018

பாஸ்கரன் என்ற சொல்.

இன்று "பாஸ்கரன்" என்ற சொல்லை அறிந்து இன்புறுவோம்.

இச்சொல் பெருவழக்குடைய பெயராகத் தோன்றுகின்றது.  நாம் அடிக்கடி செல்லும் கோயிலில் ஒரு நல்ல  "பொடியன்" பாஸ்கரன் என்ற இயற்பெயர் உடையவராய் இருக்கிறார்.  ஆனால் தம் பெயர் தமிழன்று நினைத்து அப்பா அம்மாவுக்கு எழுதும் கடிதத்தில் பாற்கரன் என்று எழுதுகிறார்.

இவர் அரனுக்கு (சிவனுக்குப்) பால் கொண்டுவந்து பூசாரிகளிடத்துக் கொடுக்கிற படியால் இவர் பெயர் ஒருவகையில் நன் கு பொருந்தியுள்ளது.
அங்குள்ள சிவன் பால் குடிப்பவர் என்பது பொருளாகிறது .  பால்+ கு+ அரன் = பாலுக்குச் சிவன் என்று விரித்து,  பாலைச் சிறப்பாக ஏற்றுக்கொள்பவர் சிவபெருமான் என்ற பொருளைத் தருகிறது.  அங்கிருக்கும் மற்ற தெயவங்களும் பாலை வேண்டாமென்று சொல்வதில்லை என்பதால் இப்பொருள் முற்றப்பொருந்தும் பொருளன்று என்று வாதிடலாம். எனினும் முழுதும் ஒழிதலின்றிப் பொருந்தும் பெயர்கள் உலகில்  சிலவே ஆதலின் அதை ஒரு பெரிய தடையாகக் கொள்ளாமலும் செயல்படலாம்.

இப்போது பாஸ்கரன் அல்லது அன் விகுதி இன்றிப் பாஸ்கர் என்ற பெயரில் அயலாகத் தெரிவது ஸகர ஒற்றே ஆகும்.  கஷ்டம் இஷ்டம் முதலிய சொற்கள் ஷ் என்ற எழுத்தை  அணிந்துகொண்டிருந்தாலும் அவை கடு, இடு என்ற தமிழ் மூலங்களை உடைய சொற்களே என்பது இதுபோழ்தில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஈண்டுள்ள  முன் இடுகைகளைக் காண்க.

சொடுக்குக:





சமஸ்கிருத மொழியில் மூன்றிலொரு பங்கு, தமிழ்த் திரிபுகள் என்பதை டாக்டர் லகோவரி என்ற மொழியாய்வறிஞர் குழுவினர் கண்டுரைத்துள்ளார்கள்.ஆனால் இவர் இப்படி முடிபு கொண்டது,   ஆரியப் புலப்பெயர்வுத் தெரிவியலாலலும் சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்ற தெரிவியலாலும் வரலாற்று ஆசிரியர்கள் கவரப்பட்டுக் கிடந்த காலத்திலாகும். இத்தகு தெரிவியல்களுக்கு இப்போது ஆதாரங்கள் இல என்பது உணரப்பட்டுள்ளது. 

 இனிப் பாஸ்கரனைப் பார்ப்போம்.  பகலில்தான் சூரியன் என்னும் சூடியனைக் காணவியலும். இரவில் எங்கிருக்கிறதென்பதை பண்டையர் அறிந்திருக்கவில்லை.   ஆகவே பகலுடன்  திரிபிலாத் தொடர்பு உள்ளது சூடியனாம் சூரியன்.  பகல் என்ற சூரியன் காயும் நாள் என்னும் வெளிச்சப் பாதி, பால் என்று திரியும்.

பகலுக்கு அவர் என்ற சொற்றொடர்,  பால்+கு+அர் என்று சுருங்கும்.  பகல்>பால்;  கு சேர்விடம் குறிக்கும் பழஞ்சொல்;  இற்றை உருபும் ஆகும். அர் = அவர்.   பலர் பால் விகுதியும்  ஆகுமிது.  பணிவுப் பன்மையில் ஒருமை உணர்த்தும்.  (  மரியாதைப் பன்மை).

இது பாற்கர் என்று வரும்.  கவினுறுத்து முகத்தான் பாஸ்கர் என்று அமைக்கப்பட்டது.  இதை விரித்தால்:  பால் > பகல்;  கு ( பகலுக்)கு.;   அர் > அவர்.உண்மையில் பகலவன் என்ற சொல்லின் ஒருவிதச் சுருக்கமே பாற்கர்  என்னும் பாஸ்கர் ஆகும்.

"பன்மையொருமையில்" மிளிரும் பாற்கர்,   அர் என்பது அவர் என்றாகும்  தன் பொருளை இழந்து,  மக்கள் மறந்துவிட்ட நிலையில் மீண்டும்  ஓர் ஆண்பால் ஒருமையாகிய  அன் பெற்று  பாஸ்கரன் என்று வந்தது வழுவாகும்; அது பெரிதும் வழக்கிலுள்ளபடியால் அதை வழுவென்று கூறி அடைவது யாதுமில்லையாதலின்,  வழுவமைதி என்றே ஏற்றல் அறிவுடைமையாகும்.

பாஸ்கரன் = பகலவன்.

பகற்கரசன் > பாற்கரசன் > பாற்கரன் (சகரம் கெட்ட இடைக்குறை)  எனினும் ஏற்புடைத்தே . பகல் என்பது பாலென்று திரிந்தும் அரசன் என்பது அரன் என்று இடைக்குறைந்தும், பாற்கரன் என்றாகி  ஒரு ஸ்கர ஒற்றிட்டுக் கவினுறுத்தப் பட்டு, பாஸ்கரன் என்று திரிந்ததெனும் முன்வைப்பும்  நன்றே ஆம்.  இப்படிக்கூற, பகலவன் என்பதன் படியாகவின்றி பகற்கரசன் என்ற அணிபெறுதல் காண்க. இவ்வாறு இருபொருள் மற்றும் அவற்றுக்கு மேலும் தரும் சொற்களும் புனைவுகளும் பல.

இதுவே பாஸ்கரனின் வரலாறு ஆகும்.

மறுபார்வை பின்பு.

--------------------
குறிப்புகள்

சில மொழிபெயர்ப்புகள்

‘சென்சஸ்’  ‘குடிமதிப்பு’ 
பேனா-தூவல்,
பவுண்டன் பேனா-ஊற்றுத்தூவல்,
ஸ்டூல்-மொட்டான்,
சிமெண்ட்-சுதைமா,  
ஏர்கண்டிஷன்-செந்தணப்பு, 
ஏஜெண்ட்-முகவர், 
(பாவாணர்)