நாவு என்ற சொல் நாக்கு என்றபடி இன்று பேச்சிலும் எழுத்திலும் வழங்குகிறது. நாவு என்பது நா என்றும் வழங்கும். நாய் என்ற விலங்குக்கும் இச்சொல்லே அடிச்சொல் என்பது புலவர்கள் கருத்து. பரத்தல் என்ற வினையின் அடி பர என்பது. பர என்பது பார் என்று திரிந்து, உலகு என்ற பொருளில் உலவுகின்ற சொல். ஒரு குறிப்பிட்ட பொருளைப் பார்வையைக் குறுக்கிச் செலுத்திக் காட்சிகொள்ளாமல் விரிந்துச் செல்வதுதான் '' பார்த்தல் '' எனப்படும். கடவுள் என்பவர்க்கு இருப்பிடம் கைலாயம், வைகுண்டம் என்று சொற்கள் இருப்பினும் அவர் ஓரிடத்துக்கும் ஒடுங்காதவர். ஆகையால் இவர்க்கும் பரமன், பரப்பிரம்மம் (பரவி இருப்பவர்) என்றபடி பெயர்கள் அமைந்துள்ளன.
நா என்பதிலிருந்து நாய் என்ற சொல் அமைந்தது போலவே, பரவலுற விரிக்கப்படுவதற்குப் பார்> பாய் என்ற சொல் அமைந்தது. இது போலவே, பழத்திற்கு முந்தியது காக்கப்பட்டதனால் கா(த்தல்) > காய் ஆயிற்று. காய்கள் சில கசப்பு உடையவையாக இருப்பதானால் கச> கய> காய் என்ற சொல் வந்தது.
மனிதன் பிறக்கிறான், காலம் செல்ல, இறந்துவிடுகிறான். நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் என்பர். பழங்காலத்தில், கொலை என்பதை ஆங்கில மொழியில் மர்டர் என்று எப்படிப் பெயரிட்டனர்? மர்ட்ரம் என்பது கொன்றவனிடம் வசூலிக்கப்பட்ட ஒரு வரி. இதிலிருந்தே மர்டர் (கொலை) என்பதற்கான சொல் பெறப்பட்டது. அரசனின் கவனம் இதில் பெயரிடும் அளவுக்கு ஏன் சென்றது என்றால், இறந்தவன் அரசுக்குச் செலுத்திய வரி வராமல் கொலைஞன் கெடுத்துவிட்டான் என்பதனால்தான். சொல் அமைவதற்குக் காரணம் வரலாறு தொடர்புடையதாகவும் இருக்கலாம்..
பழங்காலத்தில் மக்கள்தம் பிறப்பு இறப்பு பற்றியவை கல்வெட்டில் பொறிக்கும் அளவுக்கு முன்மை ( முக்கியத்துவம்) பெறவில்லை. குடும்பத்தார் ஓலைகளில் எழுதி வைத்திருந்திருக்கலாம். இது எழுத்துக்கள் உண்டான பின்புதான் இயன்றிருக்க முடியும். பெயரிடும் வழக்கம் அதற்கும் முன்னரே உண்டானது என்பதற்கு நாமம் என்ற சொல் சான்றாகின்றது. பெயர்கள் நாவினால் அழைத்து உண்டானவை. நாவினால் பலமுறை அழைத்தபின்பு தான் அது நாமம் ஆகிறது. நா> நா அம் > நாமம். அம் என்ற இடைநிலையும் அம் என்ற இன்னொரு விகுதியும் பெற்ற சொல்லே நாமம் ஆகும்.
நா+ அம் + அம் . முதல் அம், அமைந்தது என்னும் பொருள். இரண்டாவது அம்: விகுதி. நாமம் ஆயிற்று. பேச்சு முறையில் பேரு என்ன அல்லது எப்படிக் கூப்பிடுவார்கள் என்று கேட்பர், நாதன் நாமம் நமச்சிவாயவே என்பதால், இறைவன் எப்போதும் நம் நாவிலும் மனத்திலும் உள்ளவர் என்ற பொருள் கிடைக்கிறது. யாம் கூறுவது சொல்லமைப்புப் பொருள். இறையியல் பொருளைக் கூறவில்லை.
சமஸ்கிருதம் என்பதும் உள்நாட்டு மொழிதான். ஐரோப்பியர்கள் அதனுடன் உறவு கொண்டாடி, அதிலிருந்து பல சொற்களை எடுத்துக்கொண்டனர். சீன மொழியை அவர்கள் கவனித்தனர் என்றாலும் அங்குள்ள சொற்களால் வசதியான உறவை அம்மொழியுடன் உண்டாக்கிக் கொள்ள முடியவில்லை. பெரிதும் ஓரசைச் சொற்களாய் இருந்ததும் ஒரு காரணம். இதைக் கூறும் இடுகைகள் அல்லது கட்டுரைகள் தொடக்கத்தில் இணையத்தில் இருந்தாலும் இப்போது அவை அங்கு இல்லை. நூல்களில் கிட்டலாம்.
வீட்டில் உம்மைப் பலகாலும் அழைக்கப் பயன் தருவதே நாமம். நா> நாமம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
பகிர்வுரிமை உடையது.