சனி, 14 ஜூன், 2025

கோரோசனை - புதுச்சிந்தனை.

 கோரோசனை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல்லில் கோ என்பது மாடு என்றோ பசு என்றோ பொருள்படும். பசு என்பது தமிழன்று எனப்படினும், இச்சொல்லில் பசு என்பது பசுமை என்னும் சொல்லுடன் எண்ணத்தக்கதாய் இருப்பதால்,  மாந்தர்தம் வாழ்வைப் பசுமையாக்கும் ( வளமாக்கும்)  விலங்கு என்ற பொருளில் பசு என்பது தமிழ்ச்சொல்தான்.  இச்சொல் சிற்றூர்களில் மிக்க வழக்கு அல்லது பயன்பாடு பெற்ற சொல்லாகும். ஆ என்னும் சொல்லும் அறியப்பட்ட சொல்தான் என்றாலும் இலக்கியப் பயன்பாடு உடைய சொல்.

பசுமை எய்தச் செய்யும் விலங்கு  - பசு.

ஆக்கம் உருப்பெறச் செய்யும் விலங்கு  - ஆ.  ஆன் என்றுமாகும்.

இவ்வாறு காணின், இரண்டு சொற்களும்  ஒரே மூலக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை.  ஆகு என்ற வினைச்சொல்லில் கு என்பது ஒரு வினையாக்க விகுதி.  ஆதல் ஆகுதல் என்ற இருவிதமாகவும் வந்து, ஆ என்பதே மூல வினைச்சொல் என்பதை இது மெய்ப்பிக்கின்றது.  இது ஆன் என்றும் வரும்.ஆன என்ற எச்சவினையில் னகரம் வருவதுபோல்  இங்கும் சொல் அமைந்துள்ளமை  பொருத்தமே.

ஆனால் கோ என்ற சொல் வேறு காரணங்கள் கொண்டு ஆக்கப்பட்ட அல்லது அமைந்த சொல்.  மாடுகள் மேயும்போது கோலி நின்று மேய்பவை.  கோலுதலாவது  ஒரு வட்டத்தில் சுற்றி நிற்றல். இன்னும் மனிதனைச் சூழ நின்று வாழ்ந்து அவனுக்குப்  பசுமையையும் ஆக்கத்தையும் உண்டாக்குபவை. மந்தையாகக் கூடி நிற்பவை ஆதலால்  கூ> கோ என்ற திரிபு இயல்பானதாகிறது.

கூடு>  கோடு> கோலு.  கோடுதல் வளைதலாகும்.

மடி > மறி > மரு(வு)>மரி>.மாள்>

மாள்கிறான்  மரிக்கிறான்  இதில் மாண்டான் என்று இறந்தாலத்தில் வருவதையும் கவனிக்கவேண்டும். 

ஈரலைச் சுற்றி வளரும் ஒரு கல் வகை.

ஒசிதல் > வளைதல்,  ஒடிதல்.

கோலு > கோரு> கோரு+ ஒசி+ அன் + ஐ >  கோரோசனை.

இது கோசனை என்றும் வரும்.

கூடி நின்று மேயும் வழக்கத்தினால்,  கோ என்ற சொல் ஏற்பட்டுள்ளது.

கோ என்பது பசு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்பட்டுள்ளது



புதன், 11 ஜூன், 2025

பரவுதல் -- தொழுதல் கருத்தியல்

 பரவுதல் என்பது பல்பொருளொரு சொல் என்பர். ஒரு திசையிலும் பல்திசைகளிலும் சென்றேறும் ஒன்றைப் பரவுகிறது என்போம்.  இதற்கு இன்னொரு பொருள்: தொழுதல் என்பதுமாகும்.  கடவுட் கொள்கையும்  அதைப் பின்பற்றிய மனிதச் செயல்களும் தொழுகைக் கருத்தியல்களும்  ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்குப் பரவக் கூடியவை,  பரவிய மாத்திரத்தில் அந்த இன்னொருவன் கடைப்பிடிப்புடன்  அதன் பல்வேறு அமைப்புச்செயல்களையும் தன் நடவடிக்கைகளில் கொணர்ந்துவிடுவான்.  ஆகவே காற்று எங்கும் ஊர்ந்து செல்லுதல்போல இது பரவத் தொடங்கிவிடுகிறது.   என்வே தொழுதலுக்குப் பரவுதல் என்பது இன்னொரு சொல்லாகிவிட்டது. 

'' தொண்டர் பரவும் மிடற்றாய் போற்றி,

தொழினோக்கி ஆளும் சுடரே போற்றி''

பின்பற்றும் போது கும்பிடும் முறைகளை நன் கு அறிந்து கடைப்பிடிப்பது  பற்றர்களுக்கு வழக்கம்.  ஆனால் சிலர் தவறாகக் கடைப்பிடிப்பதும் உண்டு.  அப்போது இறைப்பணி பிழைப்பதை ( தவறு படுவதை ) ப்  பிறர் திருத்தினர்.  திருத்துங்கால் சரிவராவிட்டால் சிலர் அடியும் கொடுத்துத் திருத்துவதுண்டு.

''போதுவித்தாய்  நின் பணி  பிழைக்கிற புளியம் வளாரால்

மோதுவிப்பாய் உகப்பாய்  முனிவாய்  கச்சி ஏகம்பனே''

என்று பாடல் வருவதால்,  புளியம்  வளார் கொண்டு அடிக்கப்பட்டும் ஆத்திரத்துடன் அதட்டபட்டும் இறைப்பற்றினை அறிந்துகொண்டவர்களும் உண்டு என்று அறிந்துகொள்க.

வளார் -  மரக்கிளை அல்லது தடி.

எழுத்துக் கற்ற மாணவன் முதல் இறைப்பற்று  அறிவிக்கப்பட்ட மாணவன் வரை உதைவாங்கிப் பாடம் புகட்டப்பட்டோர் இருந்தனர் என்று அறிந்துகொள்கிறோம்.

கற்பிக்கப்படுவது எல்லோருக்கும் சரிவரப் பதிந்துவிடுவதில்லை.

'' கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

உணர்வுடை மாந்தர்க் கல்லது  தெரியின்

நன்னயப் பொருள்கோள் எண்ணருங்குரைத்தே''

என்று தொல்காப்பியனார் கூறுவதால்   (தொல். மெய்ப்பாட்டியல். உஎ)  

சொல்ல்லிக்கொடுப்பதை உடன் உணர்ந்துகொள்வோர் சிலரே ஆவர்.

இவ்வாறு பரவியது பலவகையாகும்.  அதனால் ''பரவுதல்'' என்பதன் பொருளை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்பட்டுள்ளது.

திங்கள், 9 ஜூன், 2025

வினோதம் என்ற சொல்.

 வினோதம் என்ற சொல்லின் அமைப்பைக் கண்டு அதன் வினோதம் உணர்வோம்.


வியன் என்ற சொல் நீங்கள் அறிந்ததொன்றாகவே இருக்கும், குறளில் விரி நீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி  என்ற வள்ளுவனின் தொடர் சிறந்த நயம்பொருந்தியது.

வியன் எனின் பெரிது.விரிவானது

முன் பூனையையே கண்டு வளர்ந்தவனுக்கு யானை வினோதமானது. தினமும் காண்பவனுக்கு அது வினோதமாகாது.  வினோதமெனும் மனவுணர்ச்சி மறைந்துவிடும்.

ஆதலால் வியன் என்னும் சொல்லினின்று வினோதம் என்பது அமைந்துள்ளது.  எப்படி எனின் கூறுதும்.

வியன் + ஓது +  அம் = வியனோதம்.

இப்போது யகரத்தை விட்டிடுவோம்.

வினோதம் ஆகிவிட்டது.  ஒரே எழுத்தின் விடுபாட்டில் ஒரு புதிய‌
சொல் கிடைத்துவிட்டது.

வினோதமெனின் பெரிதாக மக்களால் பேசப்படுவது.  அவ்வளவுதான் .  ஓது என்பது  பேச்சைக் குறிக்கிறது.  மந்திரம் ஓதுவதைப் பிற்காலத்தில் குறித்தது.  தொடக்கத்தில்  ஓஓஓஓஓ என்று ஒலி  எழுப்புதலையே குறித்தது.  ஓலமிடுதல் என்ற சொல்லும்  அதே.  ஓஓஓஓ  என்பதுதான். ஒப்புதல் என்ற சொல்லும்  ஓ ஓ என்று சரி கொள்வதையே குறிக்கிறது.   இப்படி ஒலிக்குறிப்புகளைக் கொண்டு அமைந்த சொற்கள் பல்வேறு மொழிகளிலும்  ஏராளம்.  ஈண்டு விரித்தலாகது.  அம்  விகுதி/

புதிதாக உள்ளதைத்தான் பேசுவார்கள் . பழங்  குப்பைகள் பேச்கிக்குரியனவல்ல .

மகிழ்ந்து கொண்டாடலாம்.

ஆதி மனிதன் குகைகளில் வாழ்ந்து கரடி புலிகளுடன் போராடி உணவு தேடித் துன்புற்றான்.  அவனிடம் அகராதியுமில்லை  முகராதியுமில்லை. நாலைந்து சொற்களுக்கே அவன் சொந்தக்காரனாயிருந்தான். பல சொற்களைப் படைத்து மொழியை உருவாக்க வேண்டின், இதுபோன்ற தந்திரங்களைக் கையாள வேண்டுமல்லவா. இந்தப் பதங்களெல்லாம் ஒன்று தங்கத்தட்டில் வைத்து கடவுள் நீட்டினார் என்று எண்ணுகிறவன், மொழிவரலாறும் மனித வரலாறும் அறியாதவன். மனிதனின் கள்ளம் அவன் மொழியிலும் பளிச்சிடவேண்டுமே.

வி + நோ தம்  என்று பிரித்து  அதிலிருந்து  நூதனம் என்பதைப் பிறப்பித்தால் இன்னும் புலமை. பண்டையரைப் பாராட்டுவோம் .

வினோதம் என்ற சொல் பிறவழிகளிலும் விளக்கத்தக்கது ஆகும்.  இது ஒரு பல்பிறப்பி  ஆகும்.

சிவமாலா   23.2.2016