புதன், 11 செப்டம்பர், 2024

வைரம் என்ற சொல் தமிழ்

இனி வைரம் என்ற சொல்லை ஆய்வோம்.

 வைக்கப்பட்ட இடத்தில்  அது இறுகி, தீட்டியவுடன் ஒளிதரும் அழகுடன் மிளிரும் கல்லே வைரம்.  வைரம் என்பது என்ன சொல்?

வை  -  வைக்கப்பட்ட இடத்தில்.

இறு -  இறுக்கம் அடைந்து

அம் -  அமைந்த ஒளிக்கல்.

வைக்கப்பட்ட என்றால் இருந்த என்று பொருள்.  மனிதனால் வைக்கப்பட்ட என்று பொருளன்று. இயற்கையினால் வைக்கப்பட்ட அல்லது கடவுளால் வைப்புற்ற. தற்சூழல்களால் வைக்கப்பட்ட.


ஒரு காலத்தில் ரகரமும் றகரமும் வேறுபாடின்றி வழங்கின. ஆகவே இற்றை நிலைக்கு ரு-று மாற்றம் செய்துகொண்டாலே சரியாகும். இது ஓர் ஒலிநூல் படியான மாற்றம். இதைப்  பழைய இடுகையொன்றில் விளக்கியுள்ளோம். உம் பேராசிரியருக்குத் தெரிந்தால் கேட்டுத் தெரிந்துகொள்க.

இறுக்கம் என்பதே ஆக்கமூலமானாலும் சொல்லமைந்த வுடன்  று திரிந்து ரு- ர என்றாகிவிடும்.   று என்பது வல்லினம்.  இது சொல்லுக்குள் தேவை இல்லை. கல்லுக்குள்ளும் பயன் ஒன்றும் இல்லை. இதே போல் வல்லினம் வந்து திரிந்த சொற்கள் பல.

வையிறு அம் >  வையிரம்  >  வயிரம்.

இதேபோல் திரிந்த சங்கச் சொற்களும் உண்டு.  எடு:

வை >  வை+ இன் >  வயின்.  இடம்.

பொருள்வயின் பிரிதல் -  சம்பாதிப்பதற்காகக் காதலன் பிரிந்து போதல்.

வை >   இறுக்கம் என்பதற்கு இன்னொரு சொல்: காழ், காழ்ப்பு.

காழ்த்துவிட்டது என்பதை (கால்விரலில் )   "காச்சுப்போச்சு"
 என்பர்.

வை> வையகம்

வை >  வைகுந்தம்.  (  தான் குந்தியிருக்க தேவன் வைத்துக்கொண்ட இடம்).

வை> வைகுதல்:  வசித்தல், வாழ்தல்.  ( கு வினைச்சொல்லாக்க விகுதி)

வைகு+ உண்ட:  வைகுண்ட.   ( வைத்ததனால் உள்ளதானது).  

வெட்டுண்ட, கட்டுண்ட என்ற வழக்குகளைக் காண்க.

வைகுண்டம் :  தேவன் வைகுவதற்கு உண்டான இடம்.

இச்சொல்லை வய  (via)  என்று இலத்தீன் மொழியில் மேற்கொண்டனர்.  

via > way.  English.  viaduct.

மூலம்:  வாய் என்ற சொல்.  வாய் -  இடம்.

வைரம் தமிழென்று கண்டீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வைராக்கியம் என்னும் சொல்

 இதன் அடிச்சொல் வைத்தல் என்பதுதான்,

வை+ இறு + ஆக்கு+ இ + அம்

வைத்த இடத்தில் ( மனத்தில்)  ஓர் எண்ணம் இருகி ( இறுகி) (முன் வித்தியாசம் இல்லாமல் வழங்கியது) வெறோர் ஆக்கத்தை விளைவிக்குமானால் அதுவே வைராக்கியம்.  நீர் புரிந்துகொள்ளும் பொருட்டு இவ்வாறு வாக்கியப்படுத்தி உள்ளோம்.  இந்த வாக்கியத்தை மேலே குறித்த பகவுகளின் பொருளுடன் இணைத்துப் படித்து அறிந்துகொள்க. பின் உமக்கு வேண்டிய படி மாற்றி அமைத்துக்கொள்க.

படிப்பவர்க்கு உடனே பொருள் விளங்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறோம்.

இவ்வாறு தரவு செய்யவே இது தமிழ்ச்சொல் என்பது தெரியும்.

அறிக மகிழ்க.

 மெய்ப்பு பின்.






.----------------------------------------------------

வேறு சில குறிப்புகள்.  ஆசிரியர்க்கு.  நீங்கள் இதைத் தவிர்த்துவிடுக.

வை >  வயின். வை எனபது அடிச்சொல்லாக இருந்தால் அதிலிருந்து பிறக்கும் சொல் குறிலாகிவிடும்.  வை+ இன் >  வயின். இங்கு இன் என்பது விகுதி யானது.

வை+ அம் >  வையம்:   இது உலகம் என்று பொருள்படுவது. உலகம் என்பது கடவுளால், இயற்கையால் வைக்கப்பட்ட இடம் என்பது பொருள்.  வையகம் என்பது இதன் இன்னொரு வடிவம்.

வை+ கு+ அறை >  வைகறை:  சூரியன் அடிவானில் வைக்கப்பட்டது போல் பாதியும்  அறுத்து மீதமுள்ளதுபோல் வெளிப்பட்டுப்  பாதியும் தெரிய, விடியும் நிலை. 

அருணம் >  அறு+ உண் + அம் >  அறுணம்>   அருணம்,  இது வைகறை. சூரியன் அறுக்கப்பட்டதுபோல் பாதியும்  வெளிப்பாடு பாதியும் தெரிவது.  உண் என்பது   அறுதலுண்டது என்பதன் பொருட்டு. உள்> உண்.  அம் விகுதி.

உயரற்காலம் :  இது திரிந்து உயற்காலம் (  இடைக்குறை)  இது பின் திரிந்து உசற்காலம் ஆகி,  மெருகேறி உஷற்காலம் ஆயிற்று.

உதயம் :  உது + அ+ அம் : சூரியன் முன் அங்கு எழுந்தமைதல்.  உது = முன்.

றகரம் இன்னொரு சொல்லாக்கத்துக்குப் பயன்படுமாயின் ரகரமாக மாறும்



திங்கள், 9 செப்டம்பர், 2024

இந்திரியம் --சொல் புனையும் தந்திரங்கள்.

 இச்சொல் ஒன்றுபாட்டின்போது உடல்நிலை திரிந்து  வெளியேறும் திரவம்.

இச்சொல்லில் :

இன்  -  இது இன்பம் என்ற தமிழ்ச்சொல்லின் முன்பகவு.

திரி -  இது உடல்நிலையில் ஆண்மகற்கு உண்டாகும் மாற்றங்களைக் குறிக்கிறது.

அம்  -  விகுதி.  அமைதல் குறிக்கிறது.

இச்சொல் ஒரு புனைவு.  திரி என்று உள்ளிடாமல் தி என்று ஓரெழுத்துமட்டும் இட்டும் இது புனைவுபடுதல் உண்டு. அப்போது இது இந்தியம் என்று அமைதல் காண்க.

"கண்முதல் இந்தியங்களையும் பரார்த்தத்தில் சாதித்து

சயனா சனவானைப்  போலாகி  

கண்முதல் இந்தியத்துக்கும் பரனாய் சாதிக்கிற"

என்று மணிமேகலைக் காப்பியத்தில் வரும்,   இதைத் தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதையில் காண்க.

புனைவில் இந்திரியம் என்றே உண்டாகிப் பின் குறைப்பட்டிருப்பின்,  இடைக்குறை எனலாம். இன்பத்துக்கு இன் மட்டும் சொல்லுட் புகுந்திருப்பதால் திரிதல் என்பதற்கு தி மட்டும் இட்டுச் சொல்லாக்கி யிருக்கவும் கூடும்.  அவ்வாறாயின் இந்திரியம் என்பது இடைமிகை ஆகும்.

பரார்த்தம் என்றால் ஆன்மாவிற்குப் பயனாவது, சயன  ஆசனம் - படுத்தலும் அமர்ந்திருத்தலும்.  ஆசனவான் - ஆசனம்கொள்வான்.   பரனாய் -  பயன் கொள்வோனாய்.

கண்முதல் இந்தியம் என்றதால்  இது ஐம்பொறிகள் என்றும் உறுப்புகளைக் குறிக்கும் சொல். 

சொல்லாக்க உத்திகளை இச்சொல்லிலும் கண்டுகொள்ளலாம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்