திங்கள், 5 ஆகஸ்ட், 2024

சிங்கப்பூர் தேசிய தின வாழ்த்துக்கள்

 சிங்கத்தின் பெயர்கொண்டு சீர்பலவும் பெற்று

சீர்மிக்க நடைபோடும் சிங்கப்பூர் நாடு

தங்கத்தின் ஒளிபெற்றுத் தகைமேலும்  உற்று

தணிவற்ற செழிப்புற்றுத் தாரணிமேல் ஓங்கி

எங்கணுமே யாவருமே  போற்றுநகர் ஆகி

இப்புவியில் எவ்வளமும் இயன்றோங்க வாழ்க.


ஒன்பதுடன் ஐம்பதுசேர் அகவைத்தே சிங்கை

ஒப்பில்லா உடல்நலமே உயர்மக்கள் பெற்றே

அன்பினிலே இணைந்தோராய் அகிலத்தார் ஏற்றி

ஆதரவால் பிணைப்போடும் ஆம்தனையும்  வாழப்

பண்புடனே பல்லாண்டு பகர்கின்றோம் செல்வப்

பயன்சிறந்த தேசியநாள் பார்புகழ வாழ்க.

பொருள் :

சீர்பலவும்.  காண்பொருள்,  காணாப்பொருள் ஆகிய பல்பொருள்.  இலாபம் என்பது வடிவம் இல்லாத பொருள். எண்ணிக்கையில் அறிவன. வீடுகள் வண்டிகள் என்பவை காண்பொருள்.

சீர்மிக்க நடை - இது அரசு இயக்கம், மக்கள் தொடர்பு என்பன போல் பிறவும்  இவை இயங்குதல்.

தணிவற்ற செழிப்பு -  பணவரவு, மற்ற பொருள் உணவுகள் வரவு.

ஆதரவு - பிறர் தரும் அரவணைப்பு

வளம் என்பது நன்மைகளின் மிகுதி

அகவை  நாட்டின் அகவை அல்லது வயது

செல்வப் பயன் -  செல்வம் வரவேண்டும்.  அது வீண்படாமல் பயனும் வரவேண்டும்.

மெய்ப்பு: 07082024 0637

அர் என்ற அடிச்சொல்லில் வந்த அருஞ்சொற்கள்

 அர் என்ற அடிச்சொல் நாம் அறிந்தின்புறத்

தக்க தமிழ் அடி ஆகும்.

இவ்வடியினின்று எழுந்த பழஞ்சொற்களை
முன்னர்க் காண்போம்.

அர் >  அரக்கு. இது கு விகுதி பெற்ற சொல்.அதை நீக்கிவிட்டால் அர் எஞ்சி நிற்கும். அரக்கு செம்மையாதலின் அர் என்பதும் செம்மைப் பொருளினது ஆகும்,

அர் > அரத்தை:  இது இஞ்சி போன்ற வடிவினது.    அர் + அ+தைஅல்லது அர்+ அத்து + ஐ என்ற துண்டுகள் இணைந்த சொல்.  இதுவும் செம்மை நிறத்தினை உடையது.  இதனாலும் அர் என்ற அடி செம்மை குறிப்பதே என்பது தெளிவாகிறது.

அர்+அத்து+ அம்= அரத்தம்.  இது குருதி என்னும் பொருளது. தன் தலையெழுத்தை இழந்து ரத்தம் என்று வழங்குவது. தமிழில் ரகரத்தில் சொல்
தொடங்காது என்று இலக்கணமிருப்பதால், திறம் மிகப்படைத்த நம் தமிழரால் இரத்தம் என்று இகரம் சேர்த்து எழுதப்படுவதுமாகும்.  இதுவும் சிவப்பு என்று நிறம்குறிக்க எழுந்த நல்ல தமிழ் ஆகும். தலையெழுத்தை இழந்து தலைதடுமாறச் செய்விக்கும் சொற்கள் மிகப்பல. முண்டமாக வரும் சொல்லை எந்தமொழி என்றறியாது அலமருவது கண்டு நீங்கள் ஆனந்தமடையலாம்.

அர் :> அரத்தி : செவ்வல்லியைக் குறிப்பது.

அர் > அர+ இன் +தம் =  அரவிந்தம்  : சிவந்த இனிய தாகிய  தாமரை.  தம் என்பது து+ அம். இன் உடமைப் பொருளெனினும் வெற்று இடைநிலை எனினும்
பெரிய வேறுபாடில்லை.

அர் > அரப்பொடி:  சிவப்பாகத் தோன்றும் இரும்புத் தூள்.  துருப்பிடித்தது சற்று செம்மை தோன்றும்.

அர் >   அரன்:  இது சிவனைக் குறிக்கும் சொல் ஆகும்.  சிவ என்பது சிவப்பு நிறம் குறித்தல்போலவே  அர் என்பது, அந்நிறமே குறித்தது. சிவ> சிவன்;  ஒற்றுமை உணர்க.  அரி+அன் என்று புணர்ந்து அரனாகி பாழ்வினைகளை அரித்தெடுப்போன் என்றும் கொளலாகும்.

அர் >  அருணன்:   இது சூரியனைக் குறிக்கும். அர்+ உண்+ அன் என்று பிரிக்க. உண் என்பதற்கு  "உளதாகிய"  என்று பொருள்கூறவேண்டும்.  உண் என்பது துணைவினையாகவும் வழங்கும். எடுத்துக்காட்டு: வெட்டுண்ட.  கட்டுண்ட என்பவை. உள் > உண்.  நாம் உண்பதும்  உள்ளிடுதலே ஆகும். விள் > விண் என்பதுபோல.  விள்> வெள் > வெளி.  சூரியன் செம்மை யாதலின்  அர் என்பதில் அமைந்தது. செங்கதிர் என்பது காண்க. (ஆனால் சூரியன் என்னும்  சொல் செம்மைப்பொருள் உள்ளதன்று. வெம்மை குறிக்கும் சூடு என்னும் சொல்லினின்று வருவது.  சூடு> சூர். சூடியன் > சூரியன்; அதாவது: மடி> மரி என்பது போல. மடிதலே மரித்தல்.  மடி என்பது ம(த்)தி என்று மலாய்
மொழியில் வரும். இவற்றைப் பின் ஆய்வோம்)

அர் > அரிணி.  செந்நிறத்ததான மான்.

அர் > அரிதம் : பொன் நிறம்.

அர் > அரிணம் : பொன். *( செம்மையுடன் உறவுடைய
நிறத்தது )


அருண+ ஆசலம் = அருணாசலம்; அருண+ உதயம் = அருணோதயம். செங்கதி ரோன் தோன்றும் மலை அருணாசலம். இது அருணகிரி அண்ணாமலை என வும் படும்.

அரக்கு என்பது சிவப்பு என்று பொருள்படுவதால், அரக்கர் செம்மை நிறத்தினர் ஆதல் வேண்டுமே, இதை நீங்கள் ஆய்ந்து எனக்கு அறிவியுங்கள்.

அறிக மகிழ்க
 
மெய்ப்பு பின்னர்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

பண்டைக்காலத் தொழிற்கல்வி - அகமணமுறை அமலாக்கம்

 பண்டைக் காலத்தில் தொழிற்கல்வியைக் கற்பிக்கும் கூடங்கள் எவையும் இல்லை.  எடுத்துக்காட்டாக, பானை சட்டி செய்வதற்குப் போதுமான தொழிலறிவு உள்ள ஆள் தேவை என்றால், இன்னொரு குயவர் வீட்டிலிருந்துதான் அந்த நபரைப் பெறவேண்டும். தாமே தேவையான ஆள்பலத்தைக் குயவர்களே உண்டாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அப்போதிருந்த முடியரசுக்கு இது வேலையன்று.  ஆகவே அரசு ஏன் ஆட்களைத் தயார்செய்து அளிக்கவில்லை என்று அரசரைக் கேட்க முடியாது. இந்தச் சிற்றூரில் உள்ள குயக் குடும்பம் அடுத்த ஊர்க் குயவர் குடும்பத்திலிருந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவந்தால், அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் குயவேலை தெரிந்திருக்கலாம். அப்படித் தெரியவில்லை என்றாலும் அவளுடைய அண்ணன் தம்பிகளுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அங்கிருந்த வேண்டிய ஆள்பலத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.  அதனால் சாதிக்குள் திருமணம் என்பது  தம் பிழைப்புக்குத் தேவையான ஒன்றாக இருந்தது.

அகமணம் புரியும் வழக்கம் இவ்வாறே ஒவ்வொரு சாதியாரிடையேயும் ஏற்பட்டது.  அதனால் அரசுகள் எந்தப் பயிற்சிக்கூடமும் யாருக்கும் கட்டிக்கொடுத்துப் பயிற்றுவிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டியதில்லை யாயிற்று. தங்களுக்குத் தேவையான தொழில் ஆள்பலத்தை மக்கள் தாமே உண்டாக்கிக் கொண்டனர். சாதியை விட்டுத் திருமணம் செய்யும் பழக்கம் இதனால் ஏற்படவில்லை.

அகமணம் அல்லது சாதிக்குள் திருமணம் என்பது இதனால் ஏற்பட்டு நாளடைவில் ஒரு விதியாக மாறிவிட்டது.  பூசாரி வருக்கத்தினர் யாரும் இதைச் செயல்படுத்தவில்லை. அவர்களுக்கு மற்ற சாதிகள் எவ்வாறு தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொண்டன  ரென்பது  அக்கறைக் குரியதன்று.

சாதிக்கு இன்றியமையாத அகமண முறை எந்த ஆரியனாலும் அல்லது பூசாரி வருக்கத்தினராலும் புகுத்தப்படவில்லை.

தங்கள் தொழிலில் அதிகம் சம்பாதித்தவர்கள் மேனிலை அடைந்ததனால்,  மதிப்புக் கூடியவர்கள் ஆயினர். அரசனின் படையில் வேலை செய்தவன் போருக்குப் பின் பல ஆதாயம் உள்ள பொருள்களைக் கொண்டுவந்த காரணத்தால் செல்வம் உடையனாய் பெருமதிப்பை அடைந்தான். செல்வமே பிழைப்புக்கு ஆதாரமானது,  அதுவே திருமகள் அவதாரம் என்று போற்றப்பட்டது.

பொருளியலால் விளைந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு  -  செல்வச் சேமிப்புக்கு மக்களிடையே இருந்த ஈட்டும் மதிப்பே காரணம் ஆகும். பூசாரிகள் பெரும்பாலும் தமக்குக் கிடைத்த தட்சிணைகளை வைத்தே பிழைத்தனர்.  தட்சிணை என்றால் தக்க இணை - தக்கிணை - தம் வேலைக்குத் தக்க ஊதியம். தக்கிணை என்பது: பக்கி என்பது பட்சி ஆனதுபோல ஒரு திரிபுச் சொல்தான்.   

அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் முன் நாட்களில் இல்லை.  அப்போது செய்திப் பரப்பலைப் பறையர் (பரையர்) களே செய்துகொண்டிருந்தனர். இதுபோலும் இவர்களாலும் இதைச் செய்திருக்க இயலாது. பூசாரி மணியடிப்பதை விட்டுவிட்டுச் சமுதாயக் கட்டமைப்புகளைச் செய்துகொண்டிருக்க வழியில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்