சனி, 27 நவம்பர், 2021

பஞ்சமி என்றால் சாதிக்குறிப்பா?

 






பஞ்சமி என்ற சொல்லை இன்று தெரிந்துகொள்வோம்.

பஞ்சம் என்பது சங்கதத்தில் ஐந்து என்று பொருள்படும்.   ஐந்து என்ற தமிழ்ச்சொல்,  அஞ்சு என்று "ஊரிய" வழக்கில் திரியும்.  இது பின் ஒரு பகர ஒற்று முன்வந்து நிற்க,  அஞ்சு > பஞ்சு > பஞ்சம் என்று ஆனது.  பகர ஒற்று முன் நிற்பதாவது:  ப் + அ > ப;  ஆகவே [ப்]+ [அ]ஞ்சு - பஞ்சு ஆகும்.

பகர ஒற்று ஏன்  முன்வந்து நிற்கவேண்டும்?

"நிலந்தீ  நீர்வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"

என்று தொல்காப்பியனார் விளக்குகிறார்.  தமிழரிடமிருந்து கிரேக்கரும் உரோமானியரும் இதைத் தெரிந்துகொண்டு,  அவ்வாறே  ஐம்பூதங்களைக் கொண்டனர்.

ஆதியில் இறைவன் மட்டுமே இருந்தான்.  அவன் உலகைத் தோற்றுவிக்கப் புதியனவாக ஐந்து படைத்தான். அந்த ஐந்தும் மேலே கூறப்பட்டன.  அவன்றன் ஆணைப்படி தோன்றிய புதுமை ஐந்து.   புதியன பிறந்தனவாதலினாலும் முன்னில்லாதவை ஆதலினாலும்,  பிறப்பஞ்சு  என்றும்,  புது + அம் =  பூதம் என்றும் அவை பெயர்பெற்றன. பூதம் என்பதில் பு என்ற எழுத்து நீண்டு சொல் அமைந்தது. இஃது முதனிலை ( முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்று அமைந்த சொல்.

பிறப்பு அஞ்சும் கலந்ததே உலகம் ஆதலின் பிறப்பஞ்சம் > பிரபஞ்சம் ஆயிற்று. எல்லா மொழிகட்கும் வேண்டியாங்குச் சொற்களைத் தமிழ் வழங்கியுள்ளது.  அதிலும் பிரபஞ்சம் என்பது எளிதில் அறியக்கூடியதே.  பிறப்பஞ்சம் என்பதில் ஒரு பகர ஒற்றுக் குன்றி இடைக்குறையானது.  பின்பு, அறிந்தோ, அறியாமலோ, றகரம் ரகரமாகத் திரிபு அடைந்தது.  சொல்வரலாறு அறியாமல் திருத்துகிறவர்களும் உலகில் பலர். எழுத்தாணிக்கு, ரகரம் எளிது; றகரம் சற்று கடினம் எனலாம். கல்லில் செதுக்குவதற்கும் ரகரம் நன்று.  ஆகவே யாரையும் குறை சொல்வதற்கில்லை.  

நாளடைவில் பிறப்பஞ்சம் என்பது முதற்குறைந்து, ( இங்கு முதல் என்றது முதலசையை)  பஞ்சம் ஆயிற்று.  பஞ்சம் என்பதும் ஐந்து என்ற பொருளில் வழங்கியது.

செல்வச் சுருக்கத்தையும் செழிப்பின் தளர்வையும் குறிக்கும் பஞ்சம் ( பணமின்மை, உணவின்மை முதலியவை ) வேறு ).

இறைவன் அரு.  உருவில்லாத  செம்மையை உடையவன்.  அவனுக்குப் "பான்மை"  ( ஆண்பால் பெண்பால் ) என்பதும் இல்லை.  படைக்கப்பட்ட ஐந்தையும் கண்டுதான் அவ் அருவாகிய இறை உள்ளதை நாம் உணர்ந்துகொள்கிறோம்.  அது ஆதிப்பர சக்தி  ஆகும். இவ்வுணர்வுத் தொடரே திரிந்து "ஆதிபராசக்தி" என்றும் உணரப்பட்டது.  உடல் ஏதும் இல்லாதது ஆதிபராசக்தி யானாலும்,  ஐந்தினாலும் நாம் உணர்ந்ததனால்,  அது "பஞ்சமி" என்று உணரப்பட்டது.

ஜகத் ஜனனி, பஞ்சமி, பரமேஸ்வரி.

பரம அஞ்சு அம்  இ. > பரஞ்சமி > பஞ்சமி என்றுமாகும்.  சம் என்பது ஒன்றாதலும் குறிக்கும்.   தம்> சம்.  தம்மில் தம் வெளிப்பாடு.   இவ்வாறும் மீட்டுருவாக்கம் செய்தல் தகும். 

பரம்  -  கடவுள். தெய்வம்.

சம் -  இணைதல்.  இது தம் என்பதன் திரிபு.

இ -  இயற்றுதல் குறிக்கும் விகுதி அல்லது பெண்பால்  விகுதி.

இன்னோர் எ-டு:  இலக்குமி.  பத்தினி :  பத்தி + இன் + இ.  (பற்று> பத்து).

பஞ்சமி என்பது தெய்வப் பெயராய் இயங்குகையில் ஐந்தாம் சாதி அன்று.  மனிதன் தான் தொழில் செய்து அதனால் சாதிக்குள் இருப்பவன்.  கடவுளுக்கும் ஐந்தொழில் உண்டென்று கூறப்படினும் இந்தத் தொழிலென்ற சொல்லுக்குத் சாப்பாட்டுக்கு வேலை செய்வதாகிய தொழில் என்ற பொருள் இல்லை.    "தன்மை" அல்லது இயங்குநலம் என்பதே பொருள். அறிக.  சாப்பாடு சம்பளம் எல்லாம் கடவுளுக்கு இல்லை.  வைரஸ் என்னும் நோய்நுண்மி இப்போது அதை மெய்ப்பித்துவருகிறது. எப்படி என்பதை இங்குக் கூறவில்லை.

பிறப்பஞ்சமி >பஞ்சமி.  ஐந்து பூதங்களும் அவளுக்குள் அடக்கம் என்று உணர்ந்து நாம் அடங்கவேண்டும். முதற்குறை அதாவது முதலசைக் குறை என்று விரித்துரைக்கலாம்.

தெய்வத்துக்கு உணவு வைப்பதென்பது, நம் தற்குறித் தன்மையைத் தணித்துக்கொள்ளும் ஒரு பக்தியோகம் ஆகும்.

கவனமாய்ப் இடுகைகளைப் படித்து வந்தால் சொல்லாய்வுத் திறன் உங்களிடம் குடிகொண்டுவிடும்.

பஞ்சமி என்ற சொற்குப் பிற பொருளும் உள.  எதுபோல என்றால், மாரி என்பதற்கு மழை என்ற பொருளும் இருப்பது போல.

பிறருக்கும் விளக்குக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

 

வெள்ளி, 26 நவம்பர், 2021

இரட்டித்துப் பெயரமைதல்.

 வினையினின்று பெயர்ச்சொல் அமைதல் இவ்வாறும் நிகழும்.

எழுது என்பது எழுத்து என்று இரட்டித்து, ஒரு பெயராகிறது.

எழுது -----  எழுத்து.

பொருது -  பொருதுதல்.   இது பொருத்து என்று அமையும்.

எலும்பின் பொருத்தில் வலி ஏற்படுகின்றது என்பர்.


வியாழன், 25 நவம்பர், 2021

முதல், இலாபம், வட்டி, பொலிசை

 முதல் வட்டி என்ற சொற்கள்,  தமிழில் பொருத்தமாக அமைந்து, தம் உட்கருத்தை நன்கு தெரிவிக்கும் சொற்கள் என்று யாம் வகைப்படுத்துவோம். இவை அவ்வாறு ஒன்றையும் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் எண்ணினால் அதற்காகவும் யாம் மகிழ்வெய்துவோம். காரணம், எமக்குக் கிடைக்கும் எந்த வருமானத்திலும் அதனால் எந்தக் குறைவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதுடன்,  அது உங்கள் கருத்துவன்மையையும் காட்டவல்லதாய் இருக்கிறது. சிந்திக்காமல் பின்பற்றுத லென்ப  தொரு மடமையாதலின்.

வட்டி என்பது வட்டம் என்ற சொல்லுடன் தொடர்பு உடையது.  முதலென்பதை வட்டியானது வட்டமாகச் சூழ்ந்து நிற்கின்றது,  நிலவு "கோட்டை" கட்டி வானத்துக் காய்தல் போலுமாம்.   வட்டி என்பது  முதலின் சூழ்வு என்பதானது ஓர் அணியியல் முறையில்  ---  முற்றாகவோ பகுதிப் பற்றாகவோ - -  நிற்பதுதான். These terms initially arise in a metaphoric sense. and are of figurative usage. Some of their such inclinations might have been lost over time.

தமிழ்க் கணக்காய்வாளர்,  பற்று,  பற்றுவரவு என்ற பதங்களையும் பயன்படுத்துவர்.  பற்றி நிற்கும் தொகை, பற்று ஆகும்.  அதில் வரவு கிட்டுமானால் அது பற்று வரவு எனப்படும். இதைச் செட்டியார்களின் கணக்கப் பிள்ளைகளிடன் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஆங்கிலத்தில் சிறப்பான பொருளியல் பட்டங்கள் பெற்ற  உறவினரும் நட்பினரும் உள்ளனரெனினும், அவர்கள் இப்பெயர்களின் விளக்கங்கள் (தமிழில்)  அவர்களுக்குப் பெரிதும் புரிதல் இல்லாதவை என்று கழறுகின்றனர்.

பொல் என்பதும்,  பொல்லுதல் என்ற வினையும் தொடர்புடையவை.  விரித்துரைத்தாலன்றி அவற்றின் தொடர்பு சற்று வெளிப்படையாக உணரப்படுத  லற்றவை.  ஒரு சிறு இடுகையில் ஒளிவிலிருந்து தெளிவு தோன்றாமற் போகலாம் எனினும், சிறிது முயல்வோம். பொல்லுதல் என்பது துளைத்தல் என்னும் பொருளும் ( உம் வருதலால் பிற உறைவுகளும் உளவென் றறிக).  உடைத்து.   இதிற் பிறந்த பொலிசை என்னும் சொல்லும் வட்டி என்ற பொருளில் வரும்.  முதலினின்று பகுதிபட்டு நிற்கும் இலாபம் என்றும் பொருள்படுவது.   வட்டி என்பது இலாபம் தான்.   ஆனால் அது முதலுக்குக் கிட்டும் இலாபம்.   பொருள் விலைபடுத்தப்பட்டுக் கிட்டும்  தொகை, இலாபம் என்று சொல்லப்படுகிறது.  முதல் என்பதன் பாங்கில் இல்லாத பயம் ( பயன்) இலாபம்.   இலா+ பயம் >  இலாபயம்> இலாபம்.  வலிமிகுதல் வேண்டுமென்பது வாக்கியச் சொற்புணர்ச்சியில்.  சொல்லாக்கத்தில் வலி மிகுதலால் பயன் ஒன்றும் இல்லாததுடன்,  நாத்தடை ஏற்படுத்துதலால் அது இடைக்குறையும் அல்லது தொகுப்புறும். 

சொல்லாக்கத்தில் இரு அல்லது மேற்பட்ட பாகங்கள்,  பாகப்படாமல் இணைதல் முதன்மையாகும்.  பாகங்கள் இணைகையில் பாகங்களாகவே இருத்தல் சொல்லமைப்புக்குச் சரிவருவதில்லை.  ஒருசொன்னீர்மை இன்றியமையாதது.  துரோணாச்சாரியார் வில்வித்தையில் உணர்வித்ததுபோல்  குருவியின் தலைமட்டுமே தெரியவேண்டும். இருபாகங்களில் இருபொருளும் தோன்றுமாயின் அதன் புதுப்பொருள் பெறப்படுவதில் ஊறு விளையும் என்பதறிக. 

பொலிசை என்னில், அது முதலை ஊடுருவிச் செல்வதாகிய வட்டி என்று வரையறை  செய்யலாம்.   பொலி + சை > பொலிசை.  வலிமிகாது. பொலிச்சை என்பதன்று,  பொலிசை என்பதே.  அது முதலைத் துளைத்து வருகிறது. அதாவது முதலின் எல்லாப் பாகங்களுக்கும்ம் வட்டி பெறப்படும் என்பது கருத்து. எனவே துளைத்தல், ஊடுருவுதல் யாவும் இங்குப் பொருள்தருபவை என்பது காண்க.

இதைப்  பொல்லுதல் அடியாக,  பொல்லி + இசைத்தல் என்று இட்டு,   பொல்லி இசை > பொல்லிசை > ( இடைக்குறைந்து அல்லது தொகுத்து) பொலிசை எனினும் அது.  பொலிதல்,  அழகுறுத்தல் என்று விவரித்து,  பொலிசை - முதலென்பதை அழகுபடுத்துவது என்று கூறினும் அதனால் நட்டமொன்றுமில்லை. வைத்துக்கொள்ளுங்கள்.

பாகம் என்பது பகம் என்றும் குறுகி அமையும்.   இலா + பகம் >  (முதலில் ) இல்லாத பாகம் எனினுமது. இலாபகம் > இலாபம்  ( இடைக்குறை). பயன் என்பது இதன் இரண்டாம் சொல் எனில்,  இலா பயன் =  முதலின் பகுதியல்லாத பயன்,  பயன் = பயம்,  ஆகையால்: இலா + பயம் > இலாப(ய)ம் > இலாபம். (  இடைக்குறை).   இவ்வாறு அமைதல் கண்டுகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர். 

குறிப்பு:

இலவசம்   ( ஒப்பீட்டு  ஆய்வுக்கு)

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_30.html