செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

புவி தோன்றியது( என்னும் பொருள் )

இன்று "புவி" என்னும் சொல்லை மிக்கச் சுருக்கமாகவே பார்த்துவிடுவோம்.

இதற்கு முன்பே பூமி என்ற சொல்லை நாம் ஆய்ந்து ஓரளவு புரிந்துகொண்டிருக்கிறோம் அல்லோமோ? ( அல்லவா?)

இந்நில வுலகைக் குறிக்கும் சில சொற்களை முன்பு ஆய்ந்தது உங்களுக்காக இங்கு  உள்ளது.  சொடுக்கி அதையும் வாசித்துவிடுவது ஆய்வுக்கு கொஞ்சம் ஒளி தருவதாகுமே!

பூமி :   https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_6.html

பூமி சுற்றுவதைப் போல நாம் ஒரு சுற்று வருமுன்பு சில ஆண்டுகள் கழிந்தன. இருந்தாலும் வந்துவிட்டோம்.

முன் கூறியபடி,  இன்று நாம் எடுத்துக்கொண்டது புவி என்பதாகும்.

இச்சொல்லில் உள்ள தமிழை நாம் இவ்வாறு காணலாம்:

பூத்தல் என்றால் தோன்றுதல்.  பூமி தோன்றிய ஒன்று என்பது மனிதர்களின் பொதுவாக ஏற்புடையதாகத் தோன்றும் கருத்தாக உள்ளது.  மனிதன் எதை நடந்திருக்கும் என்று நம்புவானோ, அதன்படியே சொல்லையும் சொற்றொடரையும் அமைத்துக்கொள்வான். இது அன்றும் இன்றும் என்றுமே உண்மையாகும்.


சொல்லாக்கச் சிந்தனை அடிப்படை:

பாலால் ஆன கடல் இருக்கிறதென்று நினைத்தான். பாற்கடல் என்ற ஒரு சொற்றொடரைப் படைத்தான். பாற்கடலில் திருமால் பள்ளிகொண்டார் என்று எண்ணினான்:  " பாற்கடலில் பள்ளி கொண்ட பஞ்சவர்க்குத் தூதனே:" என்று ஒரு ( நாட்டுப்) பாடலைக் கட்டிக்கொண்டான்.   மரம் ஓர் உயிரற்ற பொருள்  அல்லது மரத்துப் போன பொருள் என்று எண்ணினான்.  அதன்படியே அதற்கு  "  மர் + அம் " மரம் என்று பெயரிட்டு அழைத்தான்.  மரத்தல் >  மர + அம்= மரம் என்று பெயர் வைத்தான்.   மரி + அம் = மரம் என்று விளக்குதலும் ஆகும். அவ்வாறானால் செத்த பொருள் என்பது பொருளாக ஏற்படும்.  ஒப்பு நோக்க,  Tree என்ற ஆங்கிலச் சொல்லோ "டெரு" என்ற கெட்டிப்பொருள் என்னும் பொருள்தரும் இந்தோ ஐரோப்பியச் சொல்லிலிருந்து வந்ததென்பர்.  

இயற்கையை மீறிய ஆற்றல் அல்லது அமைப்பு இருப்பதாக எண்ணிச் சொல் புனைவதோ, அல்லது பொருளின் தன்மை மட்டும் கருதிச் சொல் ஆக்குவதோ, மொழியிற் காணப்படும் ஓர் இயல்பே ஆகும். மொழிக்குமொழி, இவ்வெண்ணம் கூடியும் குறைந்தும் காணப்படும்.

மர் என்ற தமிழடிச் சொல்லும் கெட்டிப் பொருள் தரக்கூடும்.  இறந்த பொருள் இறுகிக் கெட்டியாகி, பின்னர் அழியுங்கால் மென்மை பெற்று உதிரும்.  (அல்லது மட்கிவிடும்). மரம் என்பது புனைவு என்று கருதத்தகும் எண்ணம் எதுவும் கலவாத ஒரு சொல் என்ற நிலையை நெருங்கி நிற்கும் ஒரு சொல்லாய் அமைந்துள்ளது.

நாம் அறியாத தோற்றம்:

கல் தோன்றி மண் தோன்றா.....  என்று தமிழிலக்கியம் கோட்பாடு வைப்பதால், பூமி தோன்றியது என்றே தமிழனும் நினைத்தான்.   ஆகவேதான் பூத்தல் என்ற தோன்றுதற் கருத்தின் அடிப்படையில் சொல்லை உருவாக்கினான்.

ஆனால் தோன்றியதை எந்த மனிதனும் பார்த்தவனல்லன். ஒருவகையில் இதுவும் ஒரு புனைவை அடிப்படையாகக் கொண்டுள்ளதாய்த் தோன்றுகிறது. பூத்தலென்பது பூமியின் தோற்றத்தை, மரஞ்செடி கொடி முதலியவற்றினோடு ஒப்புமையாக வைத்து இயற்றிய சொல் என்பதையும் முற்றிலும் மறுத்துவிடுதல் இயலாதது ஆகும்.  தோன்றுதல் என்பது புவிக்கும் பூவிற்கும் ஒப்ப இயலும் தன்மை என்பது மறைவதன் கால அளவில் மட்டும் வேறுபடுவ தொன்றாகி விடும்.

புவி என்பது அதுவே

புவி என்பதும் அத்தோன்றுதல் கருத்தையே உட்கொண்டு ஆக்கப்பட்ட சொல்.

பூத்தல் - வினைச்சொல்.

பூ + வி  ( இங்கு வி என்பது விகுதி ). >  புவி.  இங்கு பூவி எனற்பாலது புவி என்று குறுகி அமைந்தது.  இதுபோலும் அமைந்த பிறசொற்கள்:

காண் ( காணுதல் ) >  கண். 

சா > சா+ அம் >  சவம் ( இங்கு வகர உடம்படு மெய் வந்தது).  முதனிலை குறுகிற்று.  சாவு என்ற தொழிற்பெயர் பின்னும் அம் விகுதி பெற்று சவம் என்று குறுகிற்று என்பது இன்னொரு  விளக்கம்.

தொடுதல்:  ( பொருள் தோண்டுதல்).

தொடு = தோண்டு.

" தொட்டனைத்  தூறும் மணற்கேணி"  ( குறள் ).

தோண்டு> தோண்டு+ ஐ >  தொண்டை.

( தோண்டப்பட்டது போன்ற அல்லது தோடு உடையதுபோன்ற  உணவுக்குழல்).

இன்னும் பல உள்ளன.

ஆகவே புவி என்பது பூவி என்பதன் குறுக்கம்.  தோன்றியது என்று பொருள்படும் நல்ல தமிழாகும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

சில கருத்துகள் இணைக்கப்பட்டன: 01092021 0708





 


அருள்மிகு துர்க்கை அம்மன் பூசை


துர்க்கை அம்மன்



 

சனி, 28 ஆகஸ்ட், 2021

பாரதி என்ற சொல் எங்கு எழுந்தது

 பழந்தமிழ் நாட்டிலும் பொதுவாக இந்திய மாநிலங்களிலும் சிற்றூர்களில் வாழ்ந்தோரும் பாட்டுக் கட்டினர்.  பாட்டைக் கட்டுவது என்றுதான் பெரும்பாலும் சொல்வது வழக்கு.  ஒரு நூறாண்டுக்கு முன்னர், பாட்டை எழுதுவது என்று சொல்லமாட்டார்கள். பாட்டைப் பாடுவது அல்லது கட்டுவது என்று சொல்வது இயல்பான உரையாடல்களின் வந்த சொற்றொடர் ஆகும்.  தமிழ் நாட்டில் கொஞ்ச காலம் வரை, பல பாடல்கள் வாய்மொழியாக வழங்கிவந்தன. பாடியும் வந்தனர். ஏற்றம் இரைக்கும்போது பாடுவதும் நாற்று நடும்போதும் பாடுவதும் பாரம் தூக்கும்போது பாடுவதும் பெருவரவு ஆகும்.  வாத்தியார்களும் பாட்டைப் பாடியே மாணவர்களுக்குக் கற்பிப்பர். இப்போது அந்த வழக்கம் ஒழிந்துவிட்டது போலும்.  வாத்தியார்கள் பாட வெட்கப் படுகின்றனர்.  பாடுவதே எமக்குப் பிடித்த பாணி.  பணத்துக்குப் பாடுவதில்லை. சொந்த மகிழ்ச்சிக்கும் பாடவேண்டும்.  நாமே கேட்டு நோய்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். மன அழுத்தத்தை ஒழிக்கவேண்டும்.

ஆலத்தி எடுக்கும்போது பாடுவர்.  லகர ரகரப் பரிமாற்றம் காரணமாக,  ஆலத்தி என்பது ஆரத்தி என்றும் திரியும்.  பின்னர் ஆரத்தி என்பதில் தகர ஒற்று (த்) குன்றி, சொல் ஆரதி என்றும் வரும்.   ஆர்  அர் என்பன ஒலி குறிப்பவை.  அர்ச்சனை என்ற அர் தொடக்கத்தில் அர் = ஒலி.   ஆரத்தி என்பதிலும் ஆர் - ஒலி ஆகும்.  அலைகடல் ஆர்த்து ஆர்த்து ஓங்குவதாக மாணிக்கவாசகர் கூறுகிறார். ஆர்த்தல் என்'ற சொல்பற்றி  வேறு சில குறிப்புகளையும் முன் இடுகைகளில் அளித்துள்ளோம்.  கண்டு மகிழ்க.

பா என்பது பாடலைக் குறிப்பது.

இந்த ஆரதிக்காக சொந்தப் பாடல்களைப் பெண்களும் பிள்ளைகளும் புனைந்துகொண்டனர்.  சிலர் நல்ல பாக்கள் எழுதினர்.  அவர்கள் அடிக்கடி எழுதி   பா ஆரதி ஆயினர்.  பாக்களை ஆர்த்து எழச் செய்தனர். பெண்கள் சொந்தமாகக் கட்டிக்கொண்ட பாடல்கள் ஒருபுற மிருக்க, பாக்கள் கட்டிக் கொடுத்தவர் பா ஆரதி ஆனார்.  இவர்கள் பின்னர் செல்வர்கள் முன்னும் அரசர்கள் முன்னும் பாக்கள் கட்டி அவற்றை ஒலித்தனர்.  இப்படிச் செய்தால் பணமோ பொன்னோ கிடைத்தது.  பெண்களிடம் அந்தக் குடும்ப நிகழ்வுக்குச் சுட்ட வடையும் பாலும்தான் கிடைத்திருக்கும், பாவம்.  மனித முயற்சியானது அவைகளுக்குள் கொண்டுபோய் நிறுத்தி இவர்களைப் பாடவைத்தது.

பா  ஆரதிக்குப் பாடியவர்கள்   நாளடைவில் பாரதி ஆயினர்.  பாரதி மிக்க அழகுடன் அமைந்த தமிழ்ச்சொல். பா ஆரதி என்பது  பா கட்டியவரைக் குறித்தது.

இவ்வாறு குடும்ப நிகழ்வுகளிலிருந்து அரசவைக்குச் சென்ற பா ஆரதிக் காரர்கள்   ,  பாரதி ஆகிப் பாரதக் கதைகளோடும் தொடர்பு கிட்டி  மகிழ்ந்தனர்.

பா ஆரதிக் (காரர்)   -   பாட்டுக்கட்டும் ஆரதிக் காரர். என்பது பொருள்.

பாரதி.

பாரதியார்.

ஆரதிக்குரிய பாவைக் குறிக்காமல் அதை எழுதியவரைக் குறித்தல்.

----------------------------------------------------------------

ஆசிரியர் குறிப்புகள்.

திருவாசகம் :   3.151

லாலி பாடுதல்:  :மணமாலை குலாவிடும் மாப்பிள்ளை பொண்ணுக்கு லாலி லாலி லாலி லாலி  -  உடுமலை நாராயணக்கவி.

அறிக மகிழ்க


மெய்ப்பு பின்னர்