சனி, 28 ஆகஸ்ட், 2021

பாரதி என்ற சொல் எங்கு எழுந்தது

 பழந்தமிழ் நாட்டிலும் பொதுவாக இந்திய மாநிலங்களிலும் சிற்றூர்களில் வாழ்ந்தோரும் பாட்டுக் கட்டினர்.  பாட்டைக் கட்டுவது என்றுதான் பெரும்பாலும் சொல்வது வழக்கு.  ஒரு நூறாண்டுக்கு முன்னர், பாட்டை எழுதுவது என்று சொல்லமாட்டார்கள். பாட்டைப் பாடுவது அல்லது கட்டுவது என்று சொல்வது இயல்பான உரையாடல்களின் வந்த சொற்றொடர் ஆகும்.  தமிழ் நாட்டில் கொஞ்ச காலம் வரை, பல பாடல்கள் வாய்மொழியாக வழங்கிவந்தன. பாடியும் வந்தனர். ஏற்றம் இரைக்கும்போது பாடுவதும் நாற்று நடும்போதும் பாடுவதும் பாரம் தூக்கும்போது பாடுவதும் பெருவரவு ஆகும்.  வாத்தியார்களும் பாட்டைப் பாடியே மாணவர்களுக்குக் கற்பிப்பர். இப்போது அந்த வழக்கம் ஒழிந்துவிட்டது போலும்.  வாத்தியார்கள் பாட வெட்கப் படுகின்றனர்.  பாடுவதே எமக்குப் பிடித்த பாணி.  பணத்துக்குப் பாடுவதில்லை. சொந்த மகிழ்ச்சிக்கும் பாடவேண்டும்.  நாமே கேட்டு நோய்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். மன அழுத்தத்தை ஒழிக்கவேண்டும்.

ஆலத்தி எடுக்கும்போது பாடுவர்.  லகர ரகரப் பரிமாற்றம் காரணமாக,  ஆலத்தி என்பது ஆரத்தி என்றும் திரியும்.  பின்னர் ஆரத்தி என்பதில் தகர ஒற்று (த்) குன்றி, சொல் ஆரதி என்றும் வரும்.   ஆர்  அர் என்பன ஒலி குறிப்பவை.  அர்ச்சனை என்ற அர் தொடக்கத்தில் அர் = ஒலி.   ஆரத்தி என்பதிலும் ஆர் - ஒலி ஆகும்.  அலைகடல் ஆர்த்து ஆர்த்து ஓங்குவதாக மாணிக்கவாசகர் கூறுகிறார். ஆர்த்தல் என்'ற சொல்பற்றி  வேறு சில குறிப்புகளையும் முன் இடுகைகளில் அளித்துள்ளோம்.  கண்டு மகிழ்க.

பா என்பது பாடலைக் குறிப்பது.

இந்த ஆரதிக்காக சொந்தப் பாடல்களைப் பெண்களும் பிள்ளைகளும் புனைந்துகொண்டனர்.  சிலர் நல்ல பாக்கள் எழுதினர்.  அவர்கள் அடிக்கடி எழுதி   பா ஆரதி ஆயினர்.  பாக்களை ஆர்த்து எழச் செய்தனர். பெண்கள் சொந்தமாகக் கட்டிக்கொண்ட பாடல்கள் ஒருபுற மிருக்க, பாக்கள் கட்டிக் கொடுத்தவர் பா ஆரதி ஆனார்.  இவர்கள் பின்னர் செல்வர்கள் முன்னும் அரசர்கள் முன்னும் பாக்கள் கட்டி அவற்றை ஒலித்தனர்.  இப்படிச் செய்தால் பணமோ பொன்னோ கிடைத்தது.  பெண்களிடம் அந்தக் குடும்ப நிகழ்வுக்குச் சுட்ட வடையும் பாலும்தான் கிடைத்திருக்கும், பாவம்.  மனித முயற்சியானது அவைகளுக்குள் கொண்டுபோய் நிறுத்தி இவர்களைப் பாடவைத்தது.

பா  ஆரதிக்குப் பாடியவர்கள்   நாளடைவில் பாரதி ஆயினர்.  பாரதி மிக்க அழகுடன் அமைந்த தமிழ்ச்சொல். பா ஆரதி என்பது  பா கட்டியவரைக் குறித்தது.

இவ்வாறு குடும்ப நிகழ்வுகளிலிருந்து அரசவைக்குச் சென்ற பா ஆரதிக் காரர்கள்   ,  பாரதி ஆகிப் பாரதக் கதைகளோடும் தொடர்பு கிட்டி  மகிழ்ந்தனர்.

பா ஆரதிக் (காரர்)   -   பாட்டுக்கட்டும் ஆரதிக் காரர். என்பது பொருள்.

பாரதி.

பாரதியார்.

ஆரதிக்குரிய பாவைக் குறிக்காமல் அதை எழுதியவரைக் குறித்தல்.

----------------------------------------------------------------

ஆசிரியர் குறிப்புகள்.

திருவாசகம் :   3.151

லாலி பாடுதல்:  :மணமாலை குலாவிடும் மாப்பிள்ளை பொண்ணுக்கு லாலி லாலி லாலி லாலி  -  உடுமலை நாராயணக்கவி.

அறிக மகிழ்க


மெய்ப்பு பின்னர்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

குமரன் பிள்ளை - பிறந்தநாள் வாழ்த்து

 

தி இன்டிபெண்டன்ட்  ஆசிரியரும் சமுக சேவகருமான 

திரு குமரன் பிள்ளை.  அவருக்குப் பிறந்தநாள்  வாழ்த்துக்கள்.

உரியவாகுக.


கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


பிறந்தநாள் கொண்டாடும்  குமரன் பிள்ளை

பெற்றுமகிழ்ந்  தார் பலவே வாழ்த்துச்   செய்தி,

சிறந்தனவாய்ப் பலதொண்டும் நாட்டுக் காற்றிச்

சிங்கையில்பல் லாண்டுகளே வாழ்க வாழி!.

சுரந்துவரும் நல்லன்பு  நெஞ்சம் கொண்டார்

சோர்வின்றி உழைத்தற்கோ அஞ்சா  நெஞ்சர்

பறந்துவரும் பல்செய்தி மக்கள் பான்மைப்

பகிர்வில்மெய்  அதிர்வேற்றிப்  பதித்த சீலர்.


 

சுவாரசியம் - பொருள்.

 இன்று சுவாரசியம்  அல்லது சுவாரஸ்யம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

சுவை எனற்பாலது தமிழ்ச்சொல்லே.  சுவாரஸ்யம் என்பதில் சுவா என்பது சுவை என்பதன் திரிபு. இதிற் பெருந்திரிபு ஒன்றுமில்லை.  சுவை (ஐ) இறுதியை  (ஆ) என்று மாற்றியுள்ளனர்.  ஐ என்பதும் ஆ என்பதும் தமிழில் உள்ள விகுதிகள்தாம்.  மலை என்பதில் ஐ இறுதி வந்துள்ளது.   உலா என்பதில் ஆ இறுதி வந்துள்ளது. ஆகவே தமிழ் விகுதியையே பயன்படுத்தி,  ஐ ( சுவை ) என்பது  ஆ ( சுவா) என்று மாற்றியுள்ளனர்.

யார் மாற்றினர் எனின் மக்கள் நாளடைவில் வேண்டியவாறு ஒலித்து மாற்றினர்.  இன்னோர் எ-டு:  உயர்த்தி/ உயர்ச்சி > ஒஸ்தி.

ரஸ்யம் என்பது ரசியம் என்பதுதான்.  அதாவது ஒன்றை ரசித்தல். தமிழில் ரகர முதலாகச் சொற்கள் வருவதில்லை  ஆனாலும்,  பல தமிழ்ச்சொற்கள் தம் தலை இழந்தபின் ரகர வருக்கத் தொடக்கமாகத் தோன்றியுள்ளன.  எடுத்துக்காட்டு:  அரங்கன் > ரங்கன்.  அரங்கு என்பது மேடை.   நாம் சாய்ந்து கும்பிடும் சாமிகளெல்லாம் மேடைகளில் வைத்தே போற்றப்படுபவை. ( சாய்+ ம் + இ >  சாய்மி > சாமி> ஸ்வாமி  ) மேடை - மேடு+ ஐ:  மேடான இடம்.    அதில் வைத்து அல்லது அரங்குபோன்ற உயர்விடத்தில் வைத்துப் போற்றப்படுவோன். எனவே ரசி என்பது தலையிழந்த சொல்லா என்பதை அறியவேண்டும்.  ரசம் என்பது வேகவைத்த சாறு என்று பொருள்படும்.  ரசம் என்பதும் ரகரத் தொடக்கமுள்ள சொல் ஆதலின், அதற்குத் தலை எங்கேயும் உண்டா என்று அறிவது நம் கடனாகிறது.

முற்காலத்தில்,  ரகர. டகரம்  முதலிய எழுத்துத் தொடக்கமாகச் சொற்கள் இருக்கக்கூடாது என்று தொல்காப்பிய முனி  ( என்ற பிராமணர்!)  சூத்திரம் செய்தார்.  ஏன் இருக்கக்கூடாது,  காரணம் மொழியியலில் எதுவும் இல்லை. That was his own idiosyncrasy.  ரகரம் லகரம் முதலியவை எழுதும்போது ஓலைகள் அதிகம் கிழிந்துபோயினவா, தெரியவில்லை.  ஒரு செய்ம்முறைப்பயிற்சி மேற்கொண்டு இதை நிறுவ முயற்சி  செய்யலாம்.

பண்டைக் காலத்தில் பல மருந்துச் சரக்குகளை ஏற்றவாறு வைத்து அரைத்து அதிலிருந்து சாறு  எடுத்தனர்.  எடுத்ததை கொதிக்கவைத்ததன்பின் குடித்தனர். அவ்வாறின்றி கொதிக்கவைக்காமலும்  சாறு வரச்செய்து குடித்தனர்.

அரைத்தல் - வினைச்சொல்  (.  அர : ஒலி.  அரை:  பொடித்துச் சிறிதாக்கல் )

அரை>  அரைசு >  அரைசம் > ரசம் ஆனது. ( இது அரசு என்ற சொல்லின் அமைப்புச் சுவடுகளோடு ஒன்றித்துச் செல்வது .  இதனினும்:  )

அரை > அரையம் > அரயம் > அரசம் > ரசம் ( எனினுமாம்.)

இகர வினையாக்க விகுதி இணைத்து.  ரசம்  என்பதும் ரசித்தல் ஆனது  ரசி என்பதில் அம் சேர்த்தால் ரசியம் > ரஸ்யம் ஆகிவிடும்.

சுவாரஸ்யம் என்பது சுவைத்து மகிழும் ரசம் என்ற அமைப்பைக் குறித்தது. நாளடைவில் எதையும் அரைத்தாலும் அரைக்காவிட்டாலும் சுவையான கொதிக்கவைத்து ஆக்கியதைக் குறித்தது.

தமிழ்மூலங்களை எடுத்து இவ்வாறு புதிய புனைவுகளை விடுத்தலென்பது நீண்டகாலம் நடந்த ஒரு முயற்சி ஆகும்.  இது திடீரென்று நடைபெற்ற முயற்சி என்று கூற ஆதாரமில்லை. சங்ககாலம் உட்படப் பல காலங்களிலும் நடைபெற்றிருக்கலாம் எனினும் எப்போது இது கூரிய செயலாய் நடைபெற்றது என்று அறிதலில் சில இடர்ப்பாடுகள் உள்ளன. ஆரியர்கள் என்பது ஒரு புனைவு ஆதலின், அதை அவர்கள் செய்தார்கள் என்பதும் புனைவுதான். எல்லா நாடுகளிலும் நடைபெறுவதுபோல, வெளிநாட்டவர்கள் குடியேற்றம் நடைபெற்றது என்பதை நம்பலாம் எனினும் அவர்களுக்கு ஆரியர் என்ற பெயரை ஏன் கொடுத்தல் வேண்டும் என்பதற்குக் காரணம் எதுவும் இல்லை.  ஆரியர் என்பது ஆர் விகுதி பெற்ற பெயருடைய அறிவாளிகள், புலவர்கள் இவர்களைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டு:  மருதனிளநாகனார்,  சீத்தலைச் சாத்தனார், முடமோசியார் , இவர்கள் சங்கப் புலவர்கள். இவர்கள்  ஆர் உயர்வு பெற்ற அறிவாளிகள் ஆதலின், இவர்கள் தாம் ஆரியர்கள், அவர்கள் பெயர்கள் யாவும் புலமையினாலும் கல்வியினாலும் ஏற்பட்ட  உயர்வினைக் குறிக்கிறது.  ஆர் விகுதி பெற்றுள்ளன.  நண்ணிலக் கிழக்கு (  மத்தியக் கிழக்கு), ஐரோப்பா என்ற இடங்களிலிருந்து வந்தவர்கள்தாம் ஆர் விகுதிக்குரிய அறிவாளிகள் என்றால், உள்நாட்டின் உள்ள உயர்ந்தோரெல்லாம் மடையர்களா? பிழைப்பைத் தேடி வந்த வெளிநாட்டான் என்ன ஆரியன்?  இப்படிப்பட்ட முட்டாள்தனமான தெரிவியல்களை (theories)  குப்பையிலிட வேண்டும்.  மேலும் இனவாரியாக அவர்கள் எல்லாம் ஓரினத்தவர் அல்லர்.  சங்கப் புலவர் போன்றோரே ஆர் விகுதி பெற்ற ஆரியர்.  அவர்கள்தாம் வேதங்கள் முதலியவற்றை இயற்றினர் என்பதும் புளுகுதான். எல்லா நாட்டிலும் பழங்கதைகள் உள்ளன. அவை யாராலும் தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஒன்றிரண்டு வெளிநாட்டினர் இருந்திருக்கலாம். எல்லிஸ் ஆர் டங்கன் தமிழ்ப்படம் தயாரித்ததுபோல.  மக்கள் அவற்றை ச் சுவைக்கவும் அதனால் ஒரு வணிகம் நடைபெறவும் இவை உதவியிருக்கலாம்.  இவற்றால் எல்லோரும் முட்டாள்களாகிவிட மாட்டார்கள். தெரிவியலே முட்டாள்தனமாக இருக்கிறதே!

சுவாரசியம் என்ற சொல் ஆர் விகுதிபெற்ற அறிவாளிகளால் உண்டான சொல்லாகத் தெரியவில்லை. இது மக்களிடைச் சிலர் திரித்து வழங்கியமையால் வந்த சொல்.  சீனி என்பதை  ஜீனி என்பதும் உயர்த்தி என்பதை ஒஸ்தி என்பதும் சிலர் அவ்வாறு ஒலித்தமையால் ஏற்பட்ட சொற்கள்.

வேகமாய் என்பதை பேகனே என்றும் வாராய் என்பதை பாரோ என்றும் சொல்லலாம்.  ஆறு மலை விரிந்த நிலவெளிகள் முதலிய தொலைவிருப்புகளால் விளைந்தவை இவை. இவற்றை ஒருமுகப்படுத்த அன்று வானொலியோ தொலைக்காட்சியோ இல்லை.  இவைதாம் காரணம். எல்லா நாட்டு மொழிகளிலும் இவ்வாறான வேறுபாடுகள் உள்ளன.  ஆரியன் எவனும் உண்டாக்க முடியாதவை இவை. சொந்தமாகச் சோறாக்கிச் சாப்பிடவே பெரிய முயற்சிகள் தேவையாயிருக்கும்போது எவன் போய் இந்த ஒலிப்புகளையெல்லாம் புகுத்திக்கொண்டிருந்திருப்பான். 


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

.