சனி, 20 மார்ச், 2021

கொண்டிகளும் கொட்டிகளும். போர்க் கொள்வனை

போருக்கு முந்தின களிப்பாட்டம் 

அரசர்கள் காலத்தில் போர்கள் மிகுந்த முன்னேற்பாடுகளுடனும் பூசைபோடுதல் மாலையணிதல், கள்ளருந்துதல், உணவுகள் பரிமாறுதல், குளியல்கள், கோலாகலங்கள் ஆகியவற்றுடனும் நடைபெற்றன. போருக்குப் போய் மடியும் நிகழ்வுகளும் பல.  மீண்டுவருதல் மறுபிறவிதான்.   ஆகவே போர்மறவர்கள் எல்லா விதங்களிலும் நுகர்ந்து மகிழுமாறு அரச அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர். இவ்வாறில்லையாயின் படைக்கு ஆள்கிட்டுவதும் குதிரைக்கொம்பு  ஆகிவிடும்.  

இயலாமை அரசன்

போதுமான உணவு இருப்பு இல்லாத நிலையில் போர் தம்மீது சுமத்தப்பட்டுத் தவிக்கும் அரசனின் நிலை வேறு.  சவுக்கடி கொடுத்தாவது படையில் பலரையும் பணியவைத்துப் போருக்குத் துணியவைக்க வேண்டியும் அவ்வரசனின் நிலைமை கட்டாயம் ஆகிவிடும்.  இது தமிழ அரசன், சீன அரசன், யப்பானிய அரசன் , வெள்ளைக்கார அரசன் என்ற பாகுபாடின்றி யாவர்க்கும் பொதுப்பாடமாகுமன்றி ஒரு புதுப்பாடமன்று.  அவர்களை இப்போது போரில்லாக் காலத்தில் தாக்கி எழுதுவதில்  ஒரு பயனும் இல்லை.  வரலாறு மீண்டும் மீண்டும் அதே பாடத்தைப் புகட்டவல்லது என்பது ஓர் ஆங்கில அமுதமொழி. History repeats itself. (English ).

சமையல்,  ஆக்கிகள் > ஆச்சிகள்

படை நகரும்போது ஒரு சமையல்காரப் படையும் பின்னே நகரவேண்டும்.  போர் ஆயுதங்களைக் கொண்டுசெல்லும் வழிகள் எப்போதும் திறந்தே இருக்கவேண்டும்.

ஆக்கிப் போடுகிறவர்கள்  ஆக்கிகள்  அல்லது  ஆச்சிகள் எனப்பட்டனர்.  க - ச போலியாகும்.  ஆய்ச்சிகள் என்பது வேறுசொல் எனினும் அதுவும் திரிந்து ஆச்சி என்று குழப்பமுண்டாக்கலாம்.  சிறைபிடிக்கப்பட்ட கைதிகளைக் கொண்டு உணவு சமைத்துண்ணல் சற்று ஆபத்தானது.  உலகில் போர்கள் பல செய்த புகழின் உச்சியில் இன்றுமுள்ள ஒரு படைத்தலைவருக்கு நஞ்சிடப்பட்ட இறைச்சி தரப்பட்டு அவர் சின்னாட்களில் மறைந்தார். பெயர் யாதும் குறிப்பிடப் படாது.

வெற்றி பெற்ற மன்னன் பெண்டிரொடு நுகர்ச்சி:

போரில் வெற்றியடைந்த மன்னன் தோற்ற நாட்டிலிருந்து பெண்களைக் கொண்டுவந்து தக்க இடத்தில் சிறைவைப்பான். இந்தப் பெண்கள் மன்னனின் படையணிகட்குச் சமர்ப்பணம்  ஆகிவிடுவர்.  சிறந்த அழகியை அவன் வைத்துக்கொள்வான்.  இவ்வாறு அட்டிலா த ஹன் என்று வரலாறு கூறும் ஒரு ஹான் இனத்துப் போர்ப்புயலோன்  ஒரு கைதிப்பெண்ணை அணுகிய ஞான்று,  அவன் அவளால் கொல்லப்பட்டான்.  சீனாவிலிருந்து ஹங்கேரி வரை நெடுந்தொலைவு படைநடத்திய ஈடு இணையற்ற மறவன், இப்படியா மடியவேண்டும்?  இவ்வாறும் நிகழ்ந்ததுண்டு வரலாற்றில். வெற்றியடைந்த ஒவ்வொரு போரிலும் அவன்றன் நுகர்ச்சி நிறைவேற்றிய அழகிகள் அனந்தம்.


கொண்டிகள்  - கொட்டிகள்

 இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் " கொண்டிமகளிர்" எனறு தமிழில் கூறப்பட்டனர். இவர்களை ஆடவைத்து அரசியல் அதிகாரிகள் களிப்பதுண்டு. இவர்கள் ஆட்டத்துக்கு மேளம் கொட்டியவர்கள் " கொட்டிகள்"   எனப்பட்டனர். போர்முடிந்த நிலையில் புகுந்த இவர்களும் ஆங்காங்கு ஏனை மக்களுடன் வாழ்ந்தனர். இவர்கள் அந்நாளையச் சிறையதிகாரிகளின் அரவணைப்பில் தனிப்படுத்தப் பட்டுக் குடிகளிடைக்  குடியமர்ந்தனர். 

அயல் நாட்டுப் பெண்கள் உள்நாட்டு மக்களிடைக் கலப்பாவதற்குப் போர்களே பெரிதும் உதவின. அழகிய  நிறப் பெண்டிரை நிரவி வாழ்விக்கப் போர்கள் சிறந்த வழிமுறைகளைத் தந்தன.  தனித்தனியாகப் போய் அயல் அழகிகளைப் பெண்கேட்டால் கிட்டுமா என்ன?

அறிக மகிழ்க.


குறிப்புகள்

கொண்டவிடு ரெட்டிகள் --புவனகிரி வேளமாக்கள் என்போர் போல  இடையிடையே விஜயநகரப் பேரரசுக்கு  (கிருஷ்ணதேவராயர்) எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள். .

கொள் + தி:  கொண்டி.  ( கொள்ளப்பட்டோர் -  கைது செய்யப்பட்டவர்கள்.) கொண்டவிடு:  கைது செய்து பின் விடுவிக்கப்பட்டவர்கள்.


மெய்ப்பு பின்னர்.

முகக் கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடிக்க.


வெள்ளி, 19 மார்ச், 2021

இம்மா என்ற தொடர்

 இம்மா என்பது  இ + மா என்ற இருசொற்கள் கொண்ட தொடர்.

இ = இங்கு , இது சுட்டுச்சொல்.   (ஓரெழுத்துச்சொல்).

மா என்பது அளவு என்று பொருள்தரும் ஓரெழுத்துச்சொல். ஒரு மா நிலம் என்பதில் மா என்பது ஒரு நில அளவையைக் குறிக்கிறது.  இப்போது மா என்னும் கணக்கில் நிலம் அளக்கிறார்களா என்று தெரியவில்லை.  ஏக்கர் (acre) என்ற ஆங்கிலச் சொல் புழங்கப்படுகிறது.  மா என்பது பெரிது என்றும் பொருள்தருவது.  மாமனிதர் என்ற தொடரில் இப்பொருள் வெளிப்படுகிறது.  மா என்பது மகா ( மஹா ) என்ற பொருளில் வருவதும் ஆகும்.

இம்மாஞ்  சோறு சாப்பிட்டாள் -  வாக்கியம்.  இம்மா : இந்த அளவு (கைகளால் அளவைக் காட்டுவார்கள்).  இப்படிப் பேசுவோர்  மூத்தோர் சிலர். இப்போது இத்தகு தொடர் வழக்கில் மிகக் குறைந்துவிட்டது.

பேச்சு வழக்கில் vவரும் இது  இவ்வளவு தெளிவாகப் பொருள் தரினும்  இ ( இந்த )  மா( அளவு) என்பவை உண்மையில் இலக்கியங்களில் மிக்க வழக்குடையவையே  ஆகும்.

மாதிரி என்பது  அளவாகச் செய்யப்பட்டது என்ற பொருளில் வரும் கூட்டுச் சொல்.   திரித்தல் -  மாற்றமாகச் செய்தல்.  பெரிதைச் சிறிதாக்குவதும் சிறிதைப் பெரிதாக்குவதுமான மாற்றான ஆக்கங்கள்.  மாதிரி உருவம், மாதிரிப் பொம்மை எனக் காண்க.

மற்ற தொடர்புடைய இடுகைகள்:

மகம் :  https://sivamaalaa.blogspot.com/2014/02/makam-star-name-derivation.html

மகம்  மாகம்  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_97.html 

இவற்றையும் வாசித்தறிக.


---------------------------------------------------------------------------------------------------

நோயிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.

நம் நேயர்களில் மூத்தோர் அதிகம்.  யாவரும் நலமுடன் இருக்க

இறைவனை இறைஞ்சுகிறோம்.

மெய்ப்பு  பின்னர்.


மற்றவை:

ட > ஷ :  https://sivamaalaa.blogspot.com/2019/01/blog-post_63.html

கத்திரிக்கோல்:  https://sivamaalaa.blogspot.com/2015/05/blog-post_16.html


பிறகடனம் புறகடனம் ப்ரகடனம்.

 "ப்ரகடனம்" என்ற சொல்லினை அறிவோம். இதற்கு வேறு விளக்கங்களும் இருக்கலாம் என்றாலும் நாம் வெறுமனே அந்த மொழி, இந்த மொழி என்று தடுமாறாமல் மூலச்சொற்களை  ஆராய்ந்தறிவோம்.  அதுவே சொல்லமைந்த  கருமூலத்தைச் சுட்டவல்லது ஆகையினால்.

ஒன்றை நாம் வெளியிடுவதானால் அது அக்கருத்துத்  தோன்றிய இடத்தினின்று புறப்பட்டுச் சில எல்லைகளைக் கடந்து அப்பால் செல்லுகிறது என்று அறிதல் உண்மைகாண்டற்கு வழிசெய்யுமென் றறிக.   எல்லை,  வகுக்கப்படாத எல்லையும் ஆகலாம்.   (காண்டல் = காணுதல்)

எனவே நாம் முதலில் "கட " என்ற சொல்லின்பால் கவனத்தைச் செலுத்தவேண்டும்.  இது கட+ அன் + அம் > கடனம் ஆகிறது.  ஒரு சொல்லாக்கத்தில் வரும் இடைநிலையானது வெறும் சொல்லமைவுக்கு வழிசெய்யும் இடைச்சொல் ஆகலாம்,  அல்லது அதற்கு ஒரு பொருளும் இருக்கலாம்.  இருந்தால் அதுவும் நன்றே எனலாம். 

அன் என்ற பகுதிச்சொல் அனைத்து என்ற சொல்லில் இருப்பதனால்,  இடைநின்ற -   யாவருமறிந்திடக் கடந்து சென்ற ஒரு செய்தி என்றபடி வைத்துக்கொள்ளலாம்.  அம் என்ற இறுதிநிலை,  அமைவு குறிக்கும் விகுதி ஆகும்.

பிரகடனம் என்ற சொல்லில் ."கடனம்: என்ற சொல்பகுதி  தெளிவாகவே பொருண்மையுடன் மிளிர்கின்றது.  ஒருவன் கடன்வாங்கினால் அதைத் திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டியது அவனின் கடமை என்ற பொருளில் "கடன்" என்ற சொல் வழங்கிவருவது நாம் அறிந்தது.  அந்தக் "கடன்" எனற்பால சொல்லுடன் இந்தக் கடனம் என்ற சொற்பகுதியும் தொடர்புடையதாய் நிற்றல் நம் தேடுகையை எளிதாக்குகிறது என்பதும் குறிப்பிடத் தக்கதாம்.

இனிப் ப்ர, பிர என்ற முன்னியைந்த சொல்லுக்கு வருவோம்.   இது பிற, புற என்ற இரண்டுக்கும் பொருந்தி வருகிறது.  வீட்டின் அல்லது செய்தி தோன்றிய இடனுக்கும் புறத்தே செல்வது,  பிறரிடம் செல்வது  அதாவது பிறரறியச் சொல்லப்படுவது என்று இருவகையிலும் இது பொருந்துவதாகிறது.  ப்ர என்பது ஒரு முன்னொட்டு என்று முன்னர் முடிபு பெற்றிருப்பினும், அத்தகு முடிபினால் நம் ஆய்வுச்செலவு பாதிக்கப்படாது நின்றமை காண்க.

இவ்வாய்விடுகையை முடித்து நிறுத்தும் உத்தி கருதி,  யாம் இங்கு "புற" என்பதைத் தேர்வு செய்வாம்.  ஆயினும் பிற எனற்பாலதும் பொருந்துவதே. இதை வாசிப்போர் இவற்றுள் எதையும் முற்பகுதியாய்க் கொள்க.  அதனால் பங்கமொன்றும் இல்லையாதல் உணரற் பாலது.

புற பிற என்பன நீங்கப் பிர என்று வந்தது வழக்கில் மெலித்தல் என்பதே உண்மை.  இடையினப் படுத்தி ஒலி மெலித்தலாம்.

எந்தச்  செய்தியும் அல்லது நிகழ்வும் பிறரையும் கடந்து புறத்தே செல்லவேண்டும்.  அப்போதுதான் அது பரவும், இச்சொல்லமைவு அதனைத் தெளிவுபடுத்துகிறது.  பிற புறம் என்ற இரண்டும் ஈண்டு குலவுகின்றன. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


Cursor jumps to unknown spots whilst editing.

Will review.

Any error pl inform us. Thank you.

மெய்ப்பு: 20032021