செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

ழகர ளகர மயக்கம்.

 அடினும் ..... என்று ஒரு வாக்கியத்தைத் தொடங்கினால் முதல் வந்த சொல்லே புரியாததாய் உள்ளதே என்று சிலர் தன் மனநிறைவின்மையை அறிவிக்கக் கூடும். அடுதல் என்பதொரு வினைச்சொல். அதாவது செய்வதனைக் குறிக்கும் சொல். ஆனால் அடுத்தல் என்ற சொல் ஒருவேளை புரிந்துகொள்ளத் தக்கதாய் இருக்கும் என்று நாம் நினைக்கலாம்.

வினைச்சொற்களை ஆற்றலுடன் வாக்கியத்தில் வைத்துப் பேசுவதில் தமிழ்ப் பேசுவோர் கைவந்த திறனுடையவர்கள் என்று சொல்ல எனக்கு வரவில்லை. சீனர் மலாய்க்காரர் முதலானோர் அவர்கள் மொழியின் வினைச்சொற்களை மிக்க ஆற்றலுடன் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. நான் நினைப்பது தவறாக இருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். நீங்கள் வினைச்சொற்களைக் கையாள்வதில் திறனுடன் விளங்கவேண்டும் என்பதே எனது அவா ஆகும்.

அடினும் என்பதை விடுத்து அடுப்பு என்று சொன்னால் பலருக்கும் புரிந்துவிடும். தினமும் சாப்பாட்டுக்கு உதவுவதால் அது பலருமறிந்து பயன்படுத்தும் சொல்லாய் உள்ளது.  "அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது" என்பது நாம் இளமை நாட்களில் படித்த நூலில் உள்ள வாக்கியம்தான்.  அழகிய தமிழ் வாக்கியம்.  செய்யுள்.  வெற்றிவேற்கை என்னும் நூலின் உடமை அது. உங்களின் உடமையும் தான்.

அடினும் சுடினும் என்ற இரண்டும் ஒரு பொருளன.  வடிவ ஒற்றுமையுடன் வருகின்றன.  அடு என்ற வினைச்சொல்லில் பு என்னும் தொழிற்பெயர் விகுதி இணைந்து அடுப்பு என்ற சொல் வருகின்றது.  சுட்டு அடுக்கி உண்ணத் தருவர் அடையினை.  இதுவும்   அடு - அடுதல் -  அடு+ ஐ என்று விகுதி பெற்று, அடை என்று அமைந்தது. மாவினை மிக்க அடர்த்தியாய் அழுத்திச் செய்யப்பபெறுவது   -  என்று விளக்கினும் ஏற்கலாம்.  அடு>  அடர்;  அடு + ஐ = அடை என்று வருதலும் உடைத்து.

அடுக்களை என்ற சொல் சமையலறையைக் குறிப்பது.  களை என்பது வேலையைச் செய்யுமிடத்தைக் குறிக்கிறது.  களம் > களை.  அன்றிக் களை என்பது வேலைகளைச் செய்வதையும் அதனால் களைத்துப்போவதையும் குறிக்கும் சொல்.  பெண்டிர் அடுக்களையில் களைத்துப் போய் அமுது படைக்கின்றனர். களம் என்பது அம் விகுதியில் முடிந்த சொல். அதே அடிச்சொல் ஐ விகுதியில் முடிந்ததே (அடுக்)களை ஆகும்.  களம், களை என்பன அமைக்கப்பட்ட இடம் எனப்பொருள் படும்.  அடிச்சொல்: கள் > கள்+து > கட்டு( கட்டிய இடம்).  கள்> களை என்பது அதே சொல்லினின்று அமைதல் காண்க.

இனி, யாம் எடுத்துக்கொண்ட சொல்லுக்கு வருவோம்.  அது அட்டளித்தல் என்பது.  அட்டு -  சமைத்ததை,  அளித்தல் - உண்போருக்குத் தருதலாம். இச்சொல் நாளடைவில் அட்டழித்தல் என்று மாறிவிட்டது.  ஆனால் பொருள் மாறவில்லை.  ளகர ழகர மயக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகிவிட்டது.  இந்தச் சொல்லில் வரும் அழித்தலுக்கு அளித்தல் என்பதே பொருள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

நோய் வராது காத்துக்கொள்க. 



 அளைதல் என்பது சென்று  பொருந்துதல் என்று பொருள்தருவதால் சமைத்தற்குச் சென்று ஆவன செய்யும் அறை என்ற பொருளுக்கு அடுக்க்  


ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

சின்னநாய் அழகுக்கு ஒப்பில்லை


 நிலைப்பே   ழைக் கீழ்   ஒளிந்துகொண் டாலும்

கலைப்பாங்  கினில்தோய்  கவர்கண் களுடன்

எத்துணை அழகினைக்  காட்டி  விட்டாய்!

இத்தரை தன்னில் ஒப்பினி யுளதோ?

படம்:  உதவியவர்   திருமதி ரோஷினி பிரகாஷ்

பாடல்: சிவமாலா.

சனி, 6 பிப்ரவரி, 2021

பூமனைத் தொண்டு.

 இந்தக் கவிதை,  அங்குச் சுட்டப்பெற்ற பூமனைக் காட்சிகளை முன்வைத்துப் பாடப்பட்டது.   அக்காட்சிகளை நீங்கள் இவ்விடுகையில் கண்டு உவகை கொள்க.  சொடுக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2021/02/the-beauty-of-nature.html


பூமனைத் தொண்டு.


இயற்கை விளைத்த இன்பூக் கவின்தனை

செயற்கை மனைக்குள் செவ்வனே வைத்தல்

முயற்கொம் பன்றது முடிந்தது முற்றும்

அயற்கண் ஆனதை அழகினைக் காண்க.


வணமலர்க் காட்சி வருக காண்கென

உணத்தேன் உன்னும் ஈக்களை வரச்செய்

மணப்பூங் காவினை மனைக்குள் அமைத்தனர்.

கணம்கடன் மறவா இயற்கைக் காவலர்


கண்களை வருடி மனத்தினை மகிழ்த்தி

பண்பொடு மலர்போல் மணத்தொடு வாழ்கென

விண்கொடை ஒப்பதோர் விழுமிய செய்தி

தண்பெறத் தருவதிப் பூமனைத் தொண்டே.


அரும்பொருள்:


பூமனை - மலர்கள் வளர்க்கும் ஒரு கூடம்.

கவின் - அழகு.

முயற்கொம்பு - இயலாதது.

அயற்கண் - அடுத்த ஒரு தேயம். அல்லது நாடு

வணமலர் - வண்ணமலர் ( தொகுத்தல் விகாரம்)

உணத் தேன் - உண்ணுவதற்குத் தேன் தொகுத்தல் விகாரம்)


உன்னும் - நினைக்கும்

கடன் - கடமை

இயற்கைக் காவலர்

விண்கொடை - மழைபோலும் குளிர்ந்த கொடை

தண்பெற - குளிர்ச்சி பெற