வெள்ளி, 20 நவம்பர், 2020

சூழ்தருதனம் அல்லது செல்வச்சூழல்.- சுதர்சனம்

 பண்டமாற்றுப் பொருளியல் தேய்ந்து பணப்புழக்கம்  நாட்டில் ஏற்பட்ட பின்பு மக்கள் தாங்கள் தேட்டினை உலவும் பணத்தாள்களாக மாற்றிவைக்க முனைந்துவிடவில்லை. நகைபகை1*யெல்லாம் ஒரு குடத்துக்குளிட்டுப் புதைத்து வைத்துக்கொள்ளவே தலைப்பட்டனர். கல்யாணம் காட்சி என்று வரும்போது தோண்டி எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள இவ்வழக்கம் உதவியது.

ஓருவனின் செல்வம் குடத்துள் இட்டுப் புதைப்புறாமல்,  அவனிடத்துச் சூழப் பலராலும் காணப்படுமாயின், அத்தனத்தைச் சூழ்தரு தனம் என்று சொல்வதே சரி.  புதையல் அன்று என்பது யாரும் அறிவார்.  தனம் என்பது தன் சொந்தச் சேமிப்பில் தான் வைத்திருப்பது.  தன் + அம் = தனம்..  இதைத் தனம் என்க.  த என்பதை எடுத்தொலிக்கவேண்டாம். இது பெர்சனால்டி என்பதுபோலும் சொல்.

இனித் திரிபு காண்போம்.

சூழ் >  சூ > சு. (கடைக்குறையும் முதனிலைக் குறுக்கமும்).

தரு -  தர். உகரம் கெட்டது.

தனம் > சனம்.    முன் இடுகைகளில் த ச திரிபு கண்டுகொள்க.

சு + தர் + சனம் = சுதர்சனம்.( பாக்கியவான்.)

சுதர்சனம் > சுதனம்


குறிப்புகள்:

1*நகை என்பது பெரும்பாலும் பொன்னாலான அணிகலன்கள் அல்லது ஆபரணங்கள்.  பகை என்பது எதிரிகள் அல்லர்.  ஒருவர் வைத்திருக்கும் முழு நகைத்தொகுதியிலும் ஒரு பகுதி.    பகு > பகு+ ஐ > பகை. --  எனில் பகுதி.  பகை என்ற பகுதி  எதிரியைக் குறிக்கக் காரணம் அவன் நம்மிலிருந்து பகுந்து வேறுபட்டு நிற்பதுதான்.  இப்பொருளும் சொற்பொருண்மையுடன் தொடர்புபட்டதே ஆகும்.

எழுத்துப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

உந்தன், உன்றன் எந்தன் என்றன் எது சரி

 இந்த இடுகைக்கு நல்ல தலைப்பு எது என்று சற்று சிந்தித்தேம். "ஓருமை பன்மை மயக்கம்" என்பது சரியான தலைப்பு என்றாலும், இதில் வரும் "மயக்கம்" என்பது புரியாமல் போய்விடும் என்னும் தடை எண்ணம் வந்தது. இலக்கணம் அறிந்தாரும் சிலவேளைகளில் தெரிந்தே அதை மீறவேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக:

"கண்ணல்ல தூங்கம்மா - நீ என்

கண்ணல்ல தூங்கம்மா"

என்ற மக்களுக்குப் புரியும் பாட்டில்,  கண் அன்றோ தூங்கம்மா என்றிருக்கவேண்டும் என்று மாறுபடலாகும். இதற்குக் காரணம்,  கண் ஒருமை; அல்ல என்று முடித்தல் ஆகாது என்னலாம்.   ஆனால் அப்படிச் சொல்வதும் சரியில்லை.   இதன் முழு வாக்கியம், " நீ என் கண் அல்லளோ"  என்பது. ஆகவே, அல்லளோ என்று முற்றுறுவதே சரி என்னலாம்.  ஆனால் அதுவுமே  ஏற்கத் தக்கதன்று;  "நீ  என் கண் அல்லையோ"  என்பதே மிக்கச் சரியானது என்று எதிர்த்தெழலாம்.

தமிழ்ச்சான்றோர்  எவ்வாறு எழுதினரோ - பேசினரோ அவ்வாறு எழுதுவதே சரியான இலக்கணம் (மரபு).  என்று ஒரு விதியை முன்வைத்துப் போற்றுதல் வேண்டுமென்பது சரியான கொள்கையே. அதன்படி,

நீ அல்லை;

நீர் அல்லர்.

யான் அல்லேன்

யாம் அல்லேம்

யாங்கள் அல்லோம்

நீம்  அல்லீம்

நீர் அல்லீர்

நீவிர் அல்லீர்

நீங்கள் அல்லீர்கள்

என்பவும் இன்ன பிறவுமே போற்றி எழுதுதலே சரி  என்று சொல்லவேண்டும்., இவையெல்லாம் சரியே என்றாலும் இவற்றில் பாதிக்குமேல் மொழியிலிருந்து ஒழிந்துவிட்ட வடிவங்கள். "விளங்காததை யாரும் படிக்கமாட்டார்கள்" என்பதே சரி. மொழி என்பது ஒரு கருத்தறிவிப்புக் கலையே ஆதலின், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த மொழிநிலையை மீட்டெடுத்து அதன்படி எழுதினால் எவனுக்கும் புரியப்போவதில்லை என்பது உண்மை.  ஆ.எல். ஸ்டீவன்சன் கூறியபடி, நாம் எழுதுவது அடுத்தவனுக்குப் புரியவில்லை என்றால் குற்றம் நமதே  ஆகும்.  அவன் என்ன செய்வான் பாவம். அந்தச் சுமை, அறிவிக்க முயல்வோனுடையது ஆம்.

விளக்கிச் சொல்லிப் புரியவைக்கலாம். ஆனால் சில வேளைகளில் அது முடியாதது ஆகிவிடுகிறது.  செய்தியறிக்கை வாசிப்பவர்  கடினச் சொற்களைப் போட்டு வாசித்தால்,  கேட்பவன் அகரவரிசையைக் கையில் வைத்துக்கொண்டு கேட்கவேண்டும்.  சொல்லைத் தேடிக் கண்டுபிடித்து அறிவதன்முன், செய்தியறிக்கை முடிந்துவிடும்.

ஆனால் எழுதும்போது நிலைமையைச் சற்று சரிப்படுத்திக்கொள்ள வசதி இருக்கிறது என்றாலும் அதற்கும் ஓர் எல்லை உள்ளது.

புறநானூறு முதலியவற்றில் எத்துணை அழகிய கவிதைகள் உள்ளன. அதனில் ஒரு பாட்டு:

இரவலர் புரவலை நீயும் அல்லை

என்று தொடங்குகிறது.  கேட்பதை வழங்கி அறம் செய்வோன் என்று எண்ணி அவன்பால் நண்ணி   இரந்து நிற்பவனுக்கு  அப்பொருளை வழங்கி அவனைக் காப்பவன்  நீ  'அல்ல' என்பதே இதன் பொருள்.

இதைப் பாடிய தமிழ்ப் புலவன் நாலே சொற்களில் அதைச் சொல்லிவிட்டான்.

"நீயும்" என்பதில் வரும் உம்,  ஈதல் செய்யார் பட்டியலில்  உன்னையும் சேர்க்கவேண்டும் என்று இடித்துரைக்கிறது.

இதை இங்கே எழுதக் காரணம்,  "அல்லை" என்ற சொல்தான்.  இதுபோல் சொல் வடிவங்கட்கு அகரவரிசையில் பொருளறிதல் கடினமே.  நீ அல்லை என்பதே சரி. நீ அல்(?/?) என்ற பிறவடிவங்கள் வழுவாம்,  பழைய இலக்கணப்படி.

"எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்

இன்பமே ஓடிவா"  

என்பது ஒரு பாட்டு வரி.  இதைப் படிக்க நேர்ந்த ஒரு தமிழ்ப்புலவர்,  எந்தன் என்ற சொல் தவறு என்றார்..  உண்மைதான். எந்தன் என்பது எம்+தன்.  எம் என்பது பன்மை.  தன் என்பது ஒருமை.  இதுதான் ஒருமை paன்மை மயக்கம் என்பர். இது ஒரு வழூஉச்சொல் ஆனாலும் இக்காலத்து அது ஏற்கப்படுமாயின் வழுவமைதி ஆகிவிடும்.  ஒருமையில் என்றன்  என்றும் பன்மையில் எந்தம் என்றும் இருக்கவேண்டும்.

"அவர்தானே என் ஆருயிர் வாழுந்தெய்வம்,

அடியாள் என்னை ஆட்கொண்ட காதல் தெய்வம்".

அவர் - ஒருவரைக் குறிப்பின் பணிவுப் பன்மை.  தானே என்பது ஒருமை. இங்கு அவர் என்பது வடிவில் பன்மையாய் இருப்பினும் பொருளில் ஒருமையே ஆதலின் தானே என்ற ஒருமை பொருந்திற்று என்னலாம். என்றாலும் அவர் என்பது பன்மை ஆதலின், வழுவமைதி என்று முடிப்பதே நன்று எனலாம். இங்குப் பணிவின் பொருட்டு அவர் என்று வந்தமை சுட்டிக்காட்டுவர்.

எனவே:

என்+தன் = என்றன்  ( சரி)

உன் +தன் =  உன்றன் (சரி).

எந்தன் உந்தன் என்பவை தவறான சொல்வடிவங்கள் எனினும்,  வழுவமைதிகளாகக் கொள்ளலாம்.

ஒருமை பன்மை இல்லாத மொழிகள் உலகில் உள்ளன. அவற்றுக்கு இந்தத் தொல்லை எழவில்லை. இலக்கணம் அதிகமிருந்த மொழிகள் சில இறந்துபட்டன. கன்னித்தமிழ் இன்னும் மாறாத மாண்பின் ஆட்சியைச் செலுத்திக்கொண்டுள்ளது. மாறிவிட்டவை சில.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.


 


புதன், 18 நவம்பர், 2020

தருமம்--- சொல்லில் திரிபுகள்

 சொல்லாய்வு மேற்கொள்ளவோ அவ்வாய்வுகளை நன்கு அறிந்துகொள்ளவோ அதுபற்றிய எதிருரைகளை மேற்கொள்ளவோ எண்ணும் ஒருவர்,  பலவேறுவகைத் திரிபுகளை அறிந்து அவற்றை மனத்துள் ஆழப்பதிந்துகொள்ளுதல் இன்றியமையாதது ஆகும். இதைப்பற்றிய பதிவுகளை மனத்துள் அமைத்துக்கொள்ளாதவர்,  ஓர் ஆய்வினை ஏற்கவோ மறுக்கவோ இயலாதவராகிறார் என்பது சொல்லவேண்டாமலே புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். வேறுவகைப் படிப்பறிவு பெற்றிருந்தாலும் இது கற்காமல் புரியக்கூடியதன்று.

ஆகவே இங்கு கூறப்படுபவை கவனத்தில் கொள்ளத்தக்கவை,  கொள்ளவேண்டியவை என்பதறிக.

ஆழ்ந்துசெல்லும் நோக்கமற்றவர்,  அறிந்து இன்புற்றுப் பின் அதை மறந்துவிடலாம். 

இப்போது சில திரிபுகளைத் தெரிந்துகொள்வோம்.

தர்ம என்ற சங்கதச் சொல்லின் பொருள் சற்று விரிவானது ஆகும்,  ஆனால் தமிழ்ச்சொல் " தருமம்",  பிறருக்கு விலைக்கின்றித் தருதல் என்பதையே பொருளாய்க் கொண்டது. இவற்றின் பொருள்வேறுபாடுகளை அறிந்துகொள்க.

சங்கதத் தருமம்,   "  மனு தர்மம் " என்ற சொற்றொடரிற்போல,  விதிமுறைகள், வரையறவுகள், விளக்கங்கள், கட்டுப்பாடுகள்  என பலவற்றையும் குறிக்கக் கூடியது.

தமிழில் தருமம் என்பது ஈதலைக் குறிப்பது.  "தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம்" எனில் ஈதலை மறத்தலாகாது என்பதுதான்.  ஆனால் தருமம் என்பதற்குச் சமத்கிருதத்தில் உள்ள பொருளும் தமிழில் வருவிக்கப்பட்டு இதற்குப் பொருள்கூறுவர். இப்படிக் கூறின் இதன் பொருள் விரியும் என்றறிக.

தருதல் வினைச்சொல்

தரு+ ம் + அம் = தரும.  தருதலாகிய ஈதல்.

கொடுத்தல், தருதல், ஈதல் என்ற மூவேறு சொற்களின் பொருள் வேறுபாடு  இந்தச் சொல்லில்  பிற்காலத்திற் பின்பற்றப்படவில்லை 

தமிழில் தோன்றிய தருமம் என்ற என்ற சொல், பின் வழக்கு விரிந்து அயலில் பயன்பாடு கண்டு பொருண்மை விரிந்தது. தருமம் என்பதன் சொல்லமைப்புப் பொருள் அச்சொல்லில் சிறிதே இப்போது உள்ளது.  தருமத்துக்குக் கொடுப்பது என்றால், பேச்சு வழக்கில் விலையின்றிக் கொடுப்பது என்பதே பொருள்.

தருமம் என்பது நன்னெறிச் செல்கை என்பது,  பின்னர்ப் பொருள்விரி ஆகும்.

ஆயினும் கொடுத்தல் என்பது சிறப்புத் தருமென்பதால், இப்பொருள் நாளடைவில் ஏற்படுதல் இயல்பு.

நன்னெறிச் செல்லாமை, அதருமம் எனப்பட்டது.  இது அதர்மம் என்று எழுதப்பட்டது.  உகரம் கெட்ட சொல். அதர்மமாக நடப்பவன் அதர்மன்.  இது அதமன் என்று இடைக்குறைந்தது,  ரகர வீழ்ச்சி இடைக்குறை.  பிற சொற்கள் பலவற்றில் ரகர ஒற்று வீழும்.  எ-டு:

சேர்மி >  சேமி.> சேமிப்பு.

ரகர ஒற்றுக்குப் பதிலாக ஒரு 0னகர ஒற்றும் தோன்றுவதுண்டு:

அதர்மம் > அதன்மம்.

இன்னொரு திரிபு இது போல்வது:  கர்மம் > கன்மம். ர் -- 0ன்.

சிறு மையம் என்பது சின்மயம் ஆனதோ.  பின்னொரு நாள் பேசுவோம்.  று>ன்

பாலி மொழியில் தர்ம  என்பது டம்மா (தம்மா)  என்று திரிந்தது.

டம்மா (தம்மா) என்பது இப்போது ஆசியா எங்கும் வழங்குகிறது.

Derma (atau sumbangan ) என்று மலாய் மொழியில் வழங்கும்.   நரகம் என்பது neraka என்று வழங்குவது போலத்தான்.

முகக் கவசம் அணிந்து பிறருக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு காப்புத் தொலைவு கடைப்பிடியுங்கள். நன்றி.  

மெய்ப்பு - பின்பு.