புதன், 18 நவம்பர், 2020

தருமம்--- சொல்லில் திரிபுகள்

 சொல்லாய்வு மேற்கொள்ளவோ அவ்வாய்வுகளை நன்கு அறிந்துகொள்ளவோ அதுபற்றிய எதிருரைகளை மேற்கொள்ளவோ எண்ணும் ஒருவர்,  பலவேறுவகைத் திரிபுகளை அறிந்து அவற்றை மனத்துள் ஆழப்பதிந்துகொள்ளுதல் இன்றியமையாதது ஆகும். இதைப்பற்றிய பதிவுகளை மனத்துள் அமைத்துக்கொள்ளாதவர்,  ஓர் ஆய்வினை ஏற்கவோ மறுக்கவோ இயலாதவராகிறார் என்பது சொல்லவேண்டாமலே புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். வேறுவகைப் படிப்பறிவு பெற்றிருந்தாலும் இது கற்காமல் புரியக்கூடியதன்று.

ஆகவே இங்கு கூறப்படுபவை கவனத்தில் கொள்ளத்தக்கவை,  கொள்ளவேண்டியவை என்பதறிக.

ஆழ்ந்துசெல்லும் நோக்கமற்றவர்,  அறிந்து இன்புற்றுப் பின் அதை மறந்துவிடலாம். 

இப்போது சில திரிபுகளைத் தெரிந்துகொள்வோம்.

தர்ம என்ற சங்கதச் சொல்லின் பொருள் சற்று விரிவானது ஆகும்,  ஆனால் தமிழ்ச்சொல் " தருமம்",  பிறருக்கு விலைக்கின்றித் தருதல் என்பதையே பொருளாய்க் கொண்டது. இவற்றின் பொருள்வேறுபாடுகளை அறிந்துகொள்க.

சங்கதத் தருமம்,   "  மனு தர்மம் " என்ற சொற்றொடரிற்போல,  விதிமுறைகள், வரையறவுகள், விளக்கங்கள், கட்டுப்பாடுகள்  என பலவற்றையும் குறிக்கக் கூடியது.

தமிழில் தருமம் என்பது ஈதலைக் குறிப்பது.  "தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம்" எனில் ஈதலை மறத்தலாகாது என்பதுதான்.  ஆனால் தருமம் என்பதற்குச் சமத்கிருதத்தில் உள்ள பொருளும் தமிழில் வருவிக்கப்பட்டு இதற்குப் பொருள்கூறுவர். இப்படிக் கூறின் இதன் பொருள் விரியும் என்றறிக.

தருதல் வினைச்சொல்

தரு+ ம் + அம் = தரும.  தருதலாகிய ஈதல்.

கொடுத்தல், தருதல், ஈதல் என்ற மூவேறு சொற்களின் பொருள் வேறுபாடு  இந்தச் சொல்லில்  பிற்காலத்திற் பின்பற்றப்படவில்லை 

தமிழில் தோன்றிய தருமம் என்ற என்ற சொல், பின் வழக்கு விரிந்து அயலில் பயன்பாடு கண்டு பொருண்மை விரிந்தது. தருமம் என்பதன் சொல்லமைப்புப் பொருள் அச்சொல்லில் சிறிதே இப்போது உள்ளது.  தருமத்துக்குக் கொடுப்பது என்றால், பேச்சு வழக்கில் விலையின்றிக் கொடுப்பது என்பதே பொருள்.

தருமம் என்பது நன்னெறிச் செல்கை என்பது,  பின்னர்ப் பொருள்விரி ஆகும்.

ஆயினும் கொடுத்தல் என்பது சிறப்புத் தருமென்பதால், இப்பொருள் நாளடைவில் ஏற்படுதல் இயல்பு.

நன்னெறிச் செல்லாமை, அதருமம் எனப்பட்டது.  இது அதர்மம் என்று எழுதப்பட்டது.  உகரம் கெட்ட சொல். அதர்மமாக நடப்பவன் அதர்மன்.  இது அதமன் என்று இடைக்குறைந்தது,  ரகர வீழ்ச்சி இடைக்குறை.  பிற சொற்கள் பலவற்றில் ரகர ஒற்று வீழும்.  எ-டு:

சேர்மி >  சேமி.> சேமிப்பு.

ரகர ஒற்றுக்குப் பதிலாக ஒரு 0னகர ஒற்றும் தோன்றுவதுண்டு:

அதர்மம் > அதன்மம்.

இன்னொரு திரிபு இது போல்வது:  கர்மம் > கன்மம். ர் -- 0ன்.

சிறு மையம் என்பது சின்மயம் ஆனதோ.  பின்னொரு நாள் பேசுவோம்.  று>ன்

பாலி மொழியில் தர்ம  என்பது டம்மா (தம்மா)  என்று திரிந்தது.

டம்மா (தம்மா) என்பது இப்போது ஆசியா எங்கும் வழங்குகிறது.

Derma (atau sumbangan ) என்று மலாய் மொழியில் வழங்கும்.   நரகம் என்பது neraka என்று வழங்குவது போலத்தான்.

முகக் கவசம் அணிந்து பிறருக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு காப்புத் தொலைவு கடைப்பிடியுங்கள். நன்றி.  

மெய்ப்பு - பின்பு.

திங்கள், 16 நவம்பர், 2020

சேனை (பலர்சேர் படை)

ஆட்சேபம் என்ற சொல் நல்ல தமிழ்ச்சொல் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம் .இராணுவத்துக்கு ஆளெடுப்பதை ஒட்டி எழுந்த சொல்லே "ஆட்சேபம்"  ஆகும். ஆட்சேர் + பு+ அம் =  ஆட்சே(ர்)பம்.  படைக்கு ஆள்சேர்க்குங்கால் வேண்டாம் வேண்டாம் மாட்டேன் மாட்டேன் என்று கதறுவார்கள், பண்டைக்காலத்தில்.  அதுவும் ஒரே மகன் வைத்திருப்பவர்கள் படும்பாடு கேட்கவே வேண்டாம். கால்கை நொண்டியானால் விட்டுவிடுவார்கள். நொண்டி வேண்டாம் என்பதும் ஓர் ஆட்சேபமே  ஆகும்.  சேப்புதல் என்றால் தங்குதல்.  நொண்டி தங்கிவிடுவான். நொண்டியை எடுப்பதில் மறுப்பினால் ஆட்சேப்பு+ அம் = ஆட்சேப்பம் > ஆட்சேபம் எனக் காண்க. இடைக்குறைச் சொற்கள் இவை எனல் உன்னுக.

பொருள்முரண் இடைக்குறைச் சொற்களிலும் பிறவற்றிலும் ஏற்படும்.

இவற்றையும் வாசித்துக்கொள்ளுங்கள்:

ஆட்சேபம்  https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_4.html

ஆட்சேபித்தல் என்னும் வினைச்சொல் ஒரு பின்னமைப்புச் சொல்.

இராணுவம் என்பதோ அரணுவம் என்பதன் திரிபு:  அகரமாகிய தலைபோய், பின்னிருந்த தலைநீண்டு, அப்புறம் இலக்கணம் போற்ற, ஓர் இகரம் பெற்று அமைந்த சொல்லாம். அரணன் > ராணா; அரணி > ராணி.  இவர்கள் அரண்வாழ் ஆட்சிமேலோர்.

இங்குக் காண்க.

இராணுவம் :  https://sivamaalaa.blogspot.com/2020/10/blog-post_19.html

அரசாட்சி முறை தென்பகுதியிலிருந்தே வடக்கில் சென்றது.  வடக்கில் இலடாக்கு, திபேத்து முதலிய இடங்களில் அரசுமுறைகள் பண்டைநாட்களில் சரியாக இயங்கவில்லை என்னலாம்.

சேர் சேர்தல் என்பது இராணுவத்தில் சேர்தலையும் குறிக்கும்.  சேர்வை எனின் சேனை என்றும் பொருள்.  சேர்> சேர்ந்நை > சேனை ஆகும்.  அன்றி, 0னை விகுதியும் உள்ளது.  பா> பானை ( அகன்றவாயுள்ள பாத்திரம்.)   பர > பார்> பா. ஒ.நோ:  வரு> வார் > வா. (வருக, வாரீர், வாங்க).  பா என்பது அகன்றிருத்தல் குறிக்க, 0னை விகுதி பெற்று பானை ஆதல்போல்,  சேர் > சே> சேனை ஆகும்.

( ந்நை ) >னை.

சேர் > சேர்நர் > சேர்ந்நை > சேர்னை > சேனை என்று ஒலியமைப்பினைக் கண்டுகொள்க.

ஓட்டு > ஓட்டுநர் போல. ( சேர்நர்).


குறிப்பு:  

சேனை https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_20.html -  இங்குக் காண்புறாத விரிவரைவு சில இந்த முன்போந்த இடுகைக்கண் தரப்பட்டுள்ளது. சேர் அல்லது அதனுடன் அணுக்க உறவுப் பதம் எதிலிருந்த வந்ததாக இச்சொல்லைக் காட்டினும் அஃது நிலையொக்கும் என்றுணர்க.

விரிவரைவு:

விரி > வி.

வரை -  வர்

அம் - அமைவு குறிக்கும் விகுதி.

வி + வர்+ அம் = விவரம்.  

இப்படி எழுதினால் அது தமிழென்பது உடன் காண்தரும் அறிக.

அறிக.






 

ஞாயிறு, 15 நவம்பர், 2020

அடிச்சொற்கள் கு>கூ . மொழியில் அமைந்த விதம்

 ஒரு காலத்தின் மொழியில் எல்லாம் குறுகிய அல்லது சிறிய சொற்களாய் இருந்தன. இத்தகைய குட்டைச் சொற்களைத் தாம் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். ஒரு குகையிலோ ஒரு மரத்திலோ வாழ்ந்துவந்த அந்த மனிதர்களுக்கு நீண்ட சொற்கள் தெரிந்திருக்கவில்லை என்பதைவிட அவை இன்னும் அமைவு பெற்றிருக்கவில்லை என்பதே சரி.  நான், நீ, போ, வா,  இர் ( இரு),  ஓ (ஓடு) என்று பேசிக்கொள்வது போதுமானதாக இருந்தது. எங்காவது தண்ணீர் இருக்கும் குட்டைக்குள் இறங்கிவிட்டால் உடலின் நாற்றம் குறைந்துவிடுதலை உணர்ந்து உடல் தூய்மை அடைவதை அறிந்துகொண்டவன்,  தூய்  தூய்  (தூய்மை) என்றோ,   குள் குள் என்றோ சொல்லிக்கொண்டிருந்தான்.    குள்> குளி!.

கு = அவ்விடத்துக்குப் போய்.    (கு என்பது சேர்விடம் குறிக்கும் சொல்).
உள் =  தண்ணீருக்குள் இறங்கு என்பது.
இ  =  இங்கேதான் அருகில் அந்தக் குட்டையும் நீரும்!

இவ்வாறு  கு+ உள் + இ என்று  அழகான குளி   என்ற சொல்லையும் படைத்துக்கொண்டான்.  அதுவே அப்போதைய மொழியில் பெரிய கண்டுபிடிப்பு.

கு உள் என்பதை குள் என்று சுருக்கக்கூட கண்டுபிடித்ததே பெரிய அறிவுதான்.

இந்தக் காலத்தில் இப்படிச் சுருக்க "நம்மள் பசங்களுக்கு" எங்கே தெரிகிறது.

சேர்ப்பதற்கும் சேர்வதற்கும் அவன் கண்டுகொண்ட முதன்மைவாய்ந்த சொல், கு > கூ என்பதுதான்.

அந்த அமைவுக் காலத்தில் மதுரை இல்லை. இருந்திருந்தால் மதுரைக் கு  என்று சொல்லியிருப்பான்.  பெயர் இல்லாத  அ கு  ( அங்கு),  இ கு ( இங்கு) -- இவைதாம் இருந்தன. இவை சுட்டடிச் சொல் வளர்ச்சிகள் ஆயின.

சேர்வது என்ற கு-வில் இருந்து:

கு இ  -  குவி.   (இங்கே சேர்த்துவை)

கு  >  கூ.

கு > குடு.

கு > கூ > கூடு  (கூடுவது).

குவை  :  குவியல்  (குவித்து வை).

வீடு கட்ட அறிந்த பின் சிறு வீடுகளின் கூட்டத்தைக் குப்பம் என்றான்.

கு: குப்பு > குப்பம்.

சேர்த்துவைத்த வேண்டாததற்கும் கு-விலிருந்துதான் சொல் அமைந்தான்.

கு > குப்பு > குப்பை. ( பு  : தோன்றற் கருத்துடைய விகுதி, இங்கு இடைநிலை, ஐ இறுதிநிலை )

அம்மா அப்பா பிள்ளைகள் சேர்ந்த  அணுக்க நிலைக்கும் கு-விலிருந்தே பெயர் கொடுத்தான்:

கு > குடு > குடு+பு > குடும்பு > குடும்பம்..

டு, பு, அம் எல்லாம் சொல்லாக்க நீட்சிகள்.  விகுதி - மிகுதி (சொல் மிகுதி).

ஒப்பு:  மிஞ்சு = விஞ்சு.  மி> வி > வீ > வீ + கு > வீங்கு.

( வீங்கு இள வேனில் என்று சைவத் திருமுறைப் பாடலில் வரும்.)

பல உள்ளன. இது போதும் . எமக்கும் வேறு செய்யவேண்டியவை உள்ளன.

அறிக மகிழ்க

தட்டச்சுப் பிறழ்வு - பின் நோக்குவோம்.