செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கிருமியும் குறுமியும்.

கிருமி என்னும் சொல்லுக்கு  ஆங்கிலத்தில்  உள்ள "ஜெர்ம்ஸ்" என்ற சொல்லின் பொருள் அகரவரிசைகளில் காண்பதற்கில்லை. பூச்சி புழு  என்ற பொருள்தான் காணக்கிடைக்கும். வேறு வழக்குச் சொல் இன்மையால் மக்கள் கிருமி என்றும் சொல்வர். ( பாக்டீரியா, வைரஸ் என்பார் ஆங்கில அறிவுடையார்).

கிருமி என்பது உண்மையில் "கருப்பான து " என்னும் பொருளது ஆகும்.   எப்படி என்றால்  கரிய   பக்கம் என்று பொருள்படும் "கிருஷ்ண பட்சம்" என்ற அயல் திரிபினில் கரு எனற்பாலது  கிரு என்று வந்திருப்பதுதான்.  கிருட்ணனும் கரி‌யோனே ஆவான்.  வானும் கருமையே ஆகும்.

கிருமி என்ற சொல் பழைய சங்கத அகராதிகளிற் காணப்படவில்லை. புதியவெளியீடுகளை யாம் ஆய்வு செய்யவில்லை. நீங்கள் தேடிப்பாருங்கள்.

கிருமி என்பது கரும்புழு என்று பொருளறியக் கூடியதாய் இருப்பதால்,  கருமைக்குத் தீமை என்னும் பொருள் பெறப்படுதல் ஏற்புடைத்தாகும்.
{" He is the black sheep in the family "என்ற வாக்கியத்தை நோக்குக.  English  idiomatic phrase. )

ஆனால் நோயணுக்கள் அல்லது நோய்நுண்மங்கள்  மிக்கச் சிறியனவாதலின், இச்சிறுமைக்கருத்து இச்சொல்லினில் இல்லாமை வேறு ஏற்புடைய பதங்களை தேடுதற்கு உந்தக் கூடும்.  நோயணு என்பதும் நோய்நுண்மம் என்பதும் உதவக்கூடும்.

கிருமி என்பதினும்  "குறுமை"க் கருத்து வெளிவருமாறு குறுமி என்று கூறுதல் பொருத்தமாகும்.  இனிக் குறுமையிலும் குறுமை உடைய சிற்றுயிராதலின் அல்லது நுண்மம் ஆதலின்,   குறுக்குறுமி என்று விரித்தல் இன்னும் நன்று. (கு
றுங்குறுமி எனினுமது).  இனிக் குறுக்குறுமியைக் குறுக்குவோம்.  றுகரத்தைக் களைந்துவிடில் குக்குறுமி ஆகிவிடும்.    கிருமி அல்லது "ஜெர்ம்ஸ்" என்பதற்கு குக்குறுமி என்பது நன்றாகவுள்ளதா?

இதுபோன்று அமைந்த இன்னொரு சொல் "குக்கிராமம்" என்பது. இது:

" குறுக்கு+ இரு+ ஆகும்+ அம்"
=  குறுக்கிராமம்". இதில் று விலக்க,
= குக்கிராமம்.

ஆகிவிடுகிறது

குறுக்கமாக அமைந்து குடியிருப்பதற்கான இடம் என்பதுதான் குக்கிராமம் என்பதன் அமைப்புப்பொருள். அமைப்பைக் குறிக்க எழுங்கால் " அம்" விகுதி பொருத்தமானது.  அம் > அமை.

. மிக்கச் சிறிய ஊர் என்பது பொருள்.

குறுக்குதல் என்பது குறுகக் கட்டப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட  ( சிற்றூர்) என்பது.

இடையில் றுகரம் வீழ்தல் சில சொற்களில் நிகழ்ந்துள்ளது.

எ-டு:

சக்கரம் - இது சறுக்கரம் என்பதன் இடைக்குறை.  உருளும் சக்கரம் அமையுமுன் பெரும்பாலும் சறுக்கிச் சென்றவை ஊர்திகள். ஆகவே சறுக்கி இலக்கை அடைந்தன. அல்லது தூக்கிச் செல்லப்பட்டன.   ஆள் இல்லாவிட்டால் சறுக்கலில் விடுதலே சேரிடத்தை அடைய உதவும்.  இதற்கு நிலம் தாழ்ந்துசெல்லவேண்டும். (  இறக்கம்).

இரு அமுக்குருளைகட்கு இடையில் கரும்பை அல்லது வேறு இனிப்பு விளைபொருளை சறுக்கிச் செல்ல விட்டுச் சாறு பிழிந்து அதனைக் காய்ச்சிச் செய்வது  சறுக்கரை.  ( சறுக்கி அரைத்து எடுக்கப்பட்டது ).  சறுக்கரை > சக்கரை  < > சர்க்கரை. இதிலும் றுகர ருகரங்கள் கெடும்.

சறுக்குமரம், சறுக்குக்கட்டை முதலிய வழக்குச்சொற்களும் உள.


மலைகள் குன்றுகளில் சறுக்கி இறங்குதல் நிகழும். மேலேறுகையில் தூக்குவது கடினம். ஆகவே உருளுறுப்பு தேவையாயிற்று.  இதுபின் ஏற இறங்க உதவிற்று.

உருள்+ ஓடு + ஐ = உருளோடை > ரோடை > ரோடா என்பதும் காண்க..

உருள் >  ரு.
ஓடு > ஓடு
ஆ >  ஆ.

ரோடை > ரோதை.

எனவே கிருமிக்குக் குறுமி, குக்குறுமி என்பனவும் கருதத்தக்கவை ஆகும்.

அறிவீர் மகிழ்வீர்.

தட்டச்சுப்பிறழ்வுகள் பின் பார்வைக்கு.

சனி, 1 பிப்ரவரி, 2020

அறிவியல் வளர்ச்சியும் நோய்களும்

அறிவியல் முன்னேற நோய்கள் அனை த்தும்
முறிவுறும்  என்றே  முகில்மேல்  ---  பறலானேன்;
கண்டதோ நோயாற் கவிழ்வதாய்;  கார்மழையோ
அண்டுமோ நம்மை நலம் ?

முறிவுறும் -  தீர்ந்துவிடும்
முகில்மேல் -  மேகத்தில்
பறல் -  பறவை;  பற + அல் =  பறல். (அகரம் கெட்டது.)
(பறந்தேன்)
கார்மழையோ -  துன்பகாலமோ
நலம் அண்டுமோ  - நோய்கள் நீங்குமோ நலம் வருமோ என்றபடி.

வியாழன், 30 ஜனவரி, 2020

நித்தம் > நித்தல் > நிச்சம்.

நித்தம்நித்தம்  என் சிங்காரச் செல்வத்துக்கு
முத்தமொன்று தந்துமகிழ்வேன்---- உன்
அத்தை வருவாள் மெத்தையி லிருந்துனை
மெல்லவே அள்ளியணைப்பாள்


என்று ஒரு கவிதையன்று,   ஒரு கவிதைபோலும் வாக்கியத்தைப் படைப்போமானால் அதில் நித்தம் என்ற சொல் கேட்க நன்றாகவே இருக்கும். நித்தம் என்பது எப்படி அமைந்த சொல்?


மாற்றம் ஏதுமின்றி ஒவ்வொரு நாளும் இருக்குமானால் அதை நித்தம் உள்ளதெனலாம்.. அது ஓடிவிடவில்லை. என்றும் நின்று நிலவுகிறது. நிலவுதல் என்ற சொல்லிலும் நில் என்பதே அடி.  நிறுத்து என்பதிலும் அதுவே ஆகும் அடிச்சொல்.  நில்> நிறு > நிறுத்து.  நில்> நிலை (  நில் + ஐ = நிலை.)..நில்+ ஐ + அம் = நிலையம்.

நில் என்ற அடியிற் பிறந்த சொற்கள் பற்பல. வேறுவகையில் சொல்வதானால் அனந்தம்.  என்ன அனந்தம்?   அன் + அந்தம்:  அதாவது அந்தம் / முடிவு இல்லாதவை.  அல்> அன்.  முடிவு இருந்தாலும் கற்பனையிற் பறந்து முடிவற்றதாக மிகுத்துச் சொல்வதுண்டு.   நிற்க.

நில் + தல் - நிற்றல்.  நில் + தம் > நிற்றம்.   நித்தம்.  ற்று > த்து என்று பேச்சு மொழியில் மாறும்.         நில் > நிற்று > நித்து > நித்து + இ + அம் = நித்தியம். ( நிற்பது,  மாறாதது. ) இவ்வாறே நில் என்ற இயல்புவழக்குச் சொல் பல சொற்களுக்குத் தாயாக இருந்துள்ளது காணலாம்.

இவற்றை அறிஞர் பிறரும் முன் விளக்கி யதுண்டு.

நித்தம் > நித்தல் ( அம் விகுதிக்குப் பதிலாகவோ மாற்றமாகவோ அல் வந்துள்ளது. ) ;  நித்தம் > நிச்சம்  ( த > ச திரிபு).

இதேபோல் திரிந்த இன்னொரு சொல்:  அத்தன் >  (அப்பன்) > அச்சன் எனக்காண்க.  மாறாமை உடைய அல்லது பெயரில்லாத எந்தப் பொருளுக்கும் பெயர் வைக்கவேண்டுமானால்  நிப்பம் என்று பெயர் வைத்துவிடுங்கள்.

இத்துடன் நிறுத்தி இளைப்பாறுவோம்.  மகிழ்க.




தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிசெய்யப்படும்