வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மோகன் வரையாது வழங்கினவர்.

Click here for Mohan Swami's photo:  http://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_85.html


மோகன்  நினைப்பினிலே முன்வந்து நிற்பதெல்லாம்
ஆகும் பொழுதெல்லாம் அன்புடனே --- தாகம்
பசியின்றிப்  பாரோர் மகிழப்பா    டிக்கை
மிசைக்காசு தந்துவத்த லாம்.

இதன் பொருள்:   மோகன்  நினைப்பினிலே -  மோகன் அவர்களுடைய எண்ணங்களில்;   முன் வந்து நிற்பதெல்லாம் -  முதலாக மேம்பட்டுத் தோன்றுவதெல்லாம்;   ஆகும் பொழுதெல்லாம் -  தேர்வு செய்யப்படும் நல்ல நேரத்திலே;  அன்புடனே -  நேயமான நெஞ்சமுடன்;  பாரோர் -  இன மத வேறுபாடின்றி எம்மனிதரும்;  தாகம் பசி இன்றி மகிழ - நீர் வேட்கையும் உணவை வேண்டுதலும் ஆகியவற்றுக்காகத் துன்பமடையாமல்,  பாடி - நல்ல இசையின் அரவணப்புடன்;  கை மிசை -  கைகளில்;  காசு தந்து -  அவர்களுக்குச் செலவுக்குப் பணம் தந்து;  உவத்தல் ஆம் - தம்  மனம் மகிழ்வு கொள்ளுதல் ஆகும். 

இவர் முதியோர் இல்லங்கள் பலவற்றுக்கு வரையாது வழங்கியவர்.
இவர் படம் முன் இடுகையில் உள்ளது.

இறைவன் இவருக்கும் இவர் மனையாளுக்கும் செல்வங்களை வாரி
வழங்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.

ஊருணி நீர்நிறைந்  தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
என்றார் வள்ளுவனார்.

ஊரில் உள்ள மக்களெல்லாரும் குடிப்பதற்கு நீர் எடுக்கும் குளம் அல்லது ஏரி ஊருணி  எனப்படும்.  ஊர் உண்ணும் குளம் ஊர்+ உண்+ இ;  அக்குளத்தில் நீர் நிறைந்திருந்தால் எப்படி இருக்கும்?  ஊரார் மகிழ்வுடன் நீரருந்தித் தாகம் தவிக்காமல் இருப்பர், மகிழ்வர் அல்லரோ?   அறிவாளி  ஒருவருக்குப் பணம் கிடைப்பது அது போன்றதே.  அதனால் பலருடைய துன்பங்களும் தீரும். ஒரு தற்குறியிடத்தில் பணம் இருந்தால் அது நன்மக்களுக்கும் முதியோருக்கும் சிறாருக்கும் கல்வி உணவு உடை உறையுள் முதலியவற்றுக்குப் பயன்படாது. மோகன் உலகு அவாம் பேரறிவுடையார்:  இப்பாரிலுள்ளோர் விரும்பும் சிறந்த அறிவு மிக்கவர் என்று பொருள். திரு வென்பது செல்வம். 

ஒரு சமயம் கோவில் அன்னதானத்துக்கு ஓர் ஆயிரம் பற்றாக்குறை ஏற்பட்டது,  கேள்விப்பட்டவுடன் அந்தக் காசைக் கொடுத்து உதவினார்.

வண்டி வசதி இல்லாத அன்பர்களுக்கு தம் உந்து வண்டியில் பூசை பாட்டு நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வார்.

இன்று சமைக்கவில்லை என்று மட்டும் சொல்லக்கூடாது, இவரிடம். உடனே சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும்.

இத்தகைய பரந்த உள்ளம் பாரிக்கு இருந்தது.  பாரி என்ற சொல்லே பரந்த என்ற சொல்லுடன் தொடர்புடையது.  பர > பார். முதனிலை நீண்டு பெயரானது.  இவரும் அத்தகைய அன்னதானப் பிரபு ஆவார்.

நான் இந்த உடல் அன்று என்ற வேதக் கருத்தை மிகவும் போற்றுவார் இவர்.

இவருடைய துணைவியார் ரஜினி அம்மையார் இவர் போன்ற தங்கமான குணத்தவர்.

இவர்கள் எல்லா நலமும் பெற்று மகிழ வாழ்த்துவோம்.

இறைப்பற்றில் முடியிறக்கிய மோகன்.

நம் இறைப்பற்றாளர் திரு மோகன் இப்போது இந்தியாவில் திருவாச்சி என்னும் இடம் சென்று சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.  முடியிறக்கிய பின் இங்குக் காட்சி தருகிறார். அதற்குமுன் உள்ள அவர் தோற்றத்தையும் கீழே வெளியிடுகிறோம். அடியில் உள்ள படத்தில் பூசை நடைபெறுகிறது.

வீசுதலும் விசிறியும்.

விசிறி என்ற சொல்லைச் சிந்திப்போம். 

முதலில் நாமறியத்தக்கது இச்சொல்லில் விகுதி உள்ளதா என்பதே. இதில் விகுதி உள்ளது என்றே முடிவு செய்தல் தகும்.

இதன் வினைச்சொல் விசிறுதல் என்பதாகும்.  காற்று வீசச்செய்யும் ஒரு வீச்சுமட்டையைக் கையில் பிடித்துக்கொண்டு அசைத்து இயக்குதலே விசிறுதல் ஆகும்.

வீசு > விசு > விசிறு > விசிறுதல் என்று சொல் வருகிறது.

இங்கு வீ என்ற நெடில் வி என்று குறிலாகிறது.  று என்னும் வினையாக்க விகுதி  சேர்ந்து விசிறு என்பது அமைகிறது.   று என்பதும் பல சொற்களில் உள்ள வினையாக்க விகுதியே ஆகும்.   அறு, இடறு, உளறு,  கூறு என்று பலவாய்ச் சொற்களில் இது வந்துள்ளது. வீசு என்ற சொல்லும் வி என்று குறில்தொடக்கமாகிறது.  இது சொல்லியல்புகளுடன் பொருந்தியதே ஆகும்.

வினையிலும் பெயரிலும் தொடக்க ஒலி குறுகுதல் உண்டு.  எ-டு:  தோண்டு> தொண்டை.  நாக்கு > நக்கு.  அல்லது நக்கு> நாக்கு எனினுமாம். இவை இருபுறமும் அமைவன.  நா> நாவு > நவிலுதல் என்ற அமைப்பையும் அறிக. இவற்றை உணர்ந்தோர் சிலரே.

வீசு என்பது விரிந்து அசைதல் குறிக்கும் சொல். இதனுடன் உறவுடைய சொற்கள் பல.   விசும்பு என்ற சொல்லும் உறவுடையதே.

விசுவநாதன் என்ற பெயரைக் காண்க. இதில் வரும் விசு என்பது விசும்பு என்பதனுடன் நெருங்கிய சொல்லே.  விசுவம் என்னும் உலகப் பொருட்சொல்லும் விசு என்பதனுடன்      நாம் தொடர்பு
காண்பதே  யாகும். விசுவநாதன் விசும்பில் உள்ளவனாய் உணரப்பட்டவன். ஆகவே விசு > விசுவம் பொருத்தமே.  விசு என்பது இச்சொற்கு அடி. நாவினால் போற்றப்படுவோன் நாதன்.

விர்> விரி >  விசி.
விர் > விரு > விசு.
விர் >  விய் > வியன்  (வியனுலகு).
விர் > விய் > வியா  (வியாபாரம் ).
விர் > விய் > வியை > விசை. ( இயக்கம்).

இவற்றின் மூலம் விசி > விசிறு > விசிறியை அறிந்து மகிழ்க.

எல்லாம் சொல்லவும் அவற்றைப் படிக்கும் நாம் இருவரும் நேரம் உடையோமல்லோம்.