புதன், 22 ஆகஸ்ட், 2018

இல்லாதது அல்லாதது: சொற்பம் அற்பம், தீவகம் அல் பு அம்!!

அல்லாதது  இல்லாதது என்பவற்றுள் பொருள் வேற்றுமை சிறிது உளதென்பதை நீங்கள் அறிவீர்.    ஒன்றை இல்லை என்றால் அப்பொருள் இவ்வுலகின்கண் காணமுடியாதது என்று கொள்ளுதல் வேண்டும்.   அல்லாமையோ  அதுவன்று, பிற என்று சொல்வதாகும்.

மிக்கப் பழங்காலத்திலே  அல் என்ற சொல்லைப் பயன்படுத்தித் தமிழர் சொற்களைப் புனைந்துள்ளனர்.   உயர்திணை,   அஃறிணை என்னும் பகுப்பில் அஃறிணை என்ற சொல்லிலிருந்து அது  " திணை அல்லாதது "  என்று பொருள்தருதலை நன் `கு உணர்ந்துகொள்ளலாம்.  உயர்திணைக்கு உயர்  என்னும் மேன்மைக் குறிப்பு பயன்படுத்தப்படுவதால்,  அதன் மாற்றுக்கு "தாழ்திணை"   என்று பெயரிடப்படவில்லை என்பதையும் உன்னுக.   தாழ்வு என்று வகைப்படுத்தாமல் அஃறிணைப் பொருள்களைத் திணைப்பகுப்பில் உட்படுத்தாமல் திணை அல்லாதவை என்று மட்டுமே பகுத்துள்ளனர் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.  இது எங்ஙனமாயினும்  "அல்" என்னும் சொல் ஈண்டு பயன் கண்டுள்ளமைமட்டும் குறித்துக்கொள்ளுங்கள்.

தீபகற்பம் என்ற சொல்லை ஓர் இடுகையில் விளக்கியிருந்தோம்.   இதன்பொருள் "தீவு அல்லாதது"   என்பதுமட்டுமே எனற்பாலதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  ஒரு பெருநிலத்துடன் அறவே தொடர்பு தீர்ந்தது தீவு ஆகும்,    தீர் > தீர்வு > தீவு.   இங்கு ரகர ஒற்று மறைந்துள்ளமை காணலாம்.  இதற்கோர் எடுத்துக்காட்டு:  பேத்தி என்ற சொல்.   பேர்> பேர்த்தி > பேத்தி ஆதல் காண்க.  வினைச்சொல் ஆக்கத்திலும் :  சேர் > சேர்மி > சேமி > சேமித்தல் என்று சொல்லமைதலைக் காணலாம்.  தீபகற்பம் என்பது :   தீவகம் அல்லாதது என்று பொருள் தருமாறு புனையப்பட்டுள்ளது,   தீவக(ம்) + அல் + பு+ அம்.  அதாவது தீவு அன்று என்பதுதான்.  வியக்கத்தக்க பொருண்மையை உள்ளடக்கி இஃது புனையப்படவில்லை எனினும் எளிமையான புனைவு என்று இதனை நாம் புகழலாம். இதனை முக்கரைத்தொடர் என்பதும் ஏற்புடைத்து என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

பு  அம் என்பன இருவிகுதிகள்.   துடைப்பம் முதலிய சொற்களில் வந்துள்ளமை அறிந்தின்புறுக.   துடைத்தல்:   துடை+பு+அம்.

இனி நாமெடுத்துக்கொண்ட அல்பம் என்ற சொல்லுக்கு வருவோம். கணக்கில் கொள்வதற்குத் தரம் அல்லாத பொருளே  அல்பம் ஆகும்.   அல்+பு+அம் = அல்பம்.  இது புணர்த்தப்படின் அற்பம் என்றாகும். தமிழிலிது புணர்த்தப்பட்டே வழங்குவது ஆகும்.   இச்சொல் பேச்சு வழக்கில் அல்ப்பம் என்று வழங்கும்.   லகர ஒற்றும் பகர ஒற்றும்  அடுத்தடுத்து நிற்றல் செந்தமிழ் முறையன்று ஆதலின் தமிழியல்பு பற்றி அது அற்பம் என்றே வரவேண்டும்.

இதே முறையை மேற்கொண்டு  சொல்பம் என்ற சொல்லும் பயனுக்கு வந்துள்ளது.  சொல்பமாவது  சொல்லத்தகுந்த எண்ணிக்கையிலானது என்பதுதான்,  இது சொல்லுதல் என்னும் வினையடித்தோன்றிய சொல்.  அற்பம் என்ற சொல் போலவே இதுவும் புணர்த்தியே சொல்லாய் அமையும்.   சொல்பம் என்னாமல் சொற்பம் ஆகும்.   அதுவே செந்தமிழியற்கை.

அயல் என்ற சுட்டடிச் சொல்லிலே  அல் வந்துள்ளமை சுட்டிக்காட்டியுள்ளோம்.
அயல் என்றால் அங்கு அல்லது அவ்விடத்தினது அல்லாதது என்பதுதான்.  அ+அல் என்று எளிமையாகவே சொல் அமைந்தது,  அன்னியன் என்ற சொல்லும் நல்லபடியாகப் புனைந்ததே.   நீயும் நானுமல்லாத பிறன் என்பது பொருள்.  இதை அல்+ நீ + அன் =  அன்னியன் ஆனது.   இதில் நீ என்பது நி என்று குறுகிற்று.  பழம்+நீ என்பது பழநி என்று குறுகினமைபோலுமே இதுவாம். நானும் நீயுமலாதான் அன்னியன் என்பது மிகநன்றாய புனைவு ஆகும்,  இது அந்நியன் என்றும் எழுதப்படும்.  நீ என்பதே நி என்று குறுகினமையால் அந்நியன்  என்று  எழுதுவது பொருத்தமாகத் தோன்றக்கூடுமெனினும்,  அல்+நி என்பது அன்னி என்று புணருமாதலின் அன்னியன் என்பதே நலமாம்.

அல் என்பது கடைக்குறைந்து அ என்று வந்து ஒரு முன்னொட்டாகப் பிறமொழிகளையும் வளப்படுத்தியுள்ளது.   எடுத்துக்காட்டு:  நீதி -  அநீதி எனக் காண்க.




செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

பிரச்சினை.

இன்று பிரச்சினை என்ற சொல்லினையும் அறிந்து இன்புறுவோம்.

சினை என்பது தமிழில் உறுப்பு அல்லது உள்ளடங்கிய பகுதி என்று பொருள்தரக்கூடிய சொல். ஒரு மீனில் அதன் குஞ்சுகளைப் பிறப்பிக்கும் சிறுசிறு முட்டைகள் உள்ளன. இதனை உயிரியல் வகுப்பிலோ அல்லது மீன் வெட்டி எடுக்கும் இடங்களிலோ கண்டிருப்பீர்கள். இது மீனில் உள்ளிருக்கும் ஒரு பகுதி.  மீன் குஞ்சுகளைப் பொரித்தவுடன் இது மாறிவிடும். அப்புறம் மீன் மீண்டும் சினைப்பட்டாலே இவ்வுறுப்பு அங்கு உண்டாகியிருக்கும்.


சினை என்பது அது மட்டுமன்று; நம் கைகால்களும் உறுப்புகளே ஆதலால், இலக்கணத்தில் இவையும் சினைப்பெயர் என்றே குறிக்கப்பெறும்.  அதாவது கை கால் என்பன உறுப்பின் பெயர்கள்.

ஒரு நிகழ்வில் பிற சினை உண்டாவதென்றால்,  முன்னில்லாத புதிய ஒரு பகுதியோ உறுப்போ முளைத்துவிட்டது அல்லது தோன்றிவிட்டது என்று பொருள்.  இப்படித் தோன்றிய புத்துருவினால், நன்மையும் இருக்கலாம்; தீமையும் இருக்கலாம்; பெரும்பாலும் தீமை ஏற்பட்டாலே பிற சினை தோன்றிவிட்டது என்று கூறுவோம்.

இது பழந்தமிழ் வழக்கு.  இந்த பிற சினை என்பது பிற்காலத்தில் ஒரு சொல்லாகி "பிறச்சினை"  என்ற புதிய சொல் உருவானது.   பிற சினை என்ற இரு  சொற்களும் ஒரு வாக்கியத்தில் இரு சொற்களாக இருக்குமானால் அங்கு சகர ஒற்று (ச்) தோன்றாது.  அது ஒரு சொன்னீர்மைப்பட்டு புதுக்கிளவி ஆனபடியால் ச் என்ற ஒற்று உள் நுழைந்து "பிறச்சினை"  என்று ஒலிக்கப்பட்டது.  அப்புறம் தெரியாதவர்கள் இதனை பிரச்சினை என்று எழுதி றகரத்துக்கு ரகரம் மாற்றீடு ஆனது.  அவ்வாறு ஆனவுடன் அதன் பிறப்பு புலவராலும் கூட மறக்கப்படுவதாயிற்று.

பிற சினை > பிறச்சினை > பிரச்சினை > பிரச்னை!

இனிப் பிரஸ்னம் என்றும் ஒலிக்கப்பட்டு அயற்பூச்சு மேற்கொண்டது.

இந்தச் சொல் வரலாறு அறிய மகிழ்வு தருமே.

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

சொல்லாக்கமும் வட\ திசைச் சொற்களும்

நாம் தமிழ் வாத்தியாரிடம் போய்த் தமிழ்ப் படிக்க அமர்ந்தவுடன் அவர் நமக்கு அறிவு கொளுத்தும் பொருட்டும் மொழியினை அறிவிக்கும் பொருட்டும் பல சொற்களைச் சொல்லிக்கொடுப்பார்.  அவர் பெரும்பாலும் நல்லவராகவே இருப்பார்.  அவருக்கு நாம் அதிகம் தொல்லை கொடுப்பதில்லை அல்லவா.....

நான்`கு வகைச் சொற்களையும் சொல்லுவார்.  இயற்சொல்,  திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பார்.

திசைகள் நான்`கு எண்ணங்கள் உள்ளன.  இன்னும் எட்டு பதினாறு என்று சொல்லிக்கொடுக்கும் வேறு வாத்தியார்களும் உள்ளனர். திசைகள்  என்பன  வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு  என்று பொதுவாக நாலுதாம்.

நாலு என்று சொல்லக்கூடாது; நான்`கு என்றுதான் சொல்லவேண்டும் என்று சில வாத்தியார்கள் சொல்வர்.  சரியானது என்று அவர்கள் கருதிய சொல்வடிவத்தினை நம் மூளைக்குள் ஏற்றும்பொருட்டு அவர்களிற் பலர் படாத பாடு பட்டுள்ளனர். பாவம்.

நால் >  நாலு   இது உகரச் சாரியை பெற்றது. இப்படிச் சாரியை பெற்றதில் தவறேதும் இல்லை.  இந்த உகரச் சாரியை பல மொழிகளில் பல சொற்களில் வருகிறது.   ராஜு என்பதைத் தெலுங்கில் ராஜுலு, ரகு என்பதைத் தெலுங்கில் ரகுலு என்று உகரத்தில் முடித்துச் சொன்னாலும் அங்கும் உகரச் சாரியை வந்துவிடுகிறது.  பெங்களூர் என்பதைப் பெங்களூரு என்று சொன்னாலும் உகரத்தில் முடிந்து சாரியை வருகிறதே! இதைப் பிற்பாடு தான் கண்டு நாம் மகிழ்வு கொண்டோம்.

நால்  >  நாலு.
நால்+கு = நான்`கு.

இரண்டும் ஒன்றுதான்.  உகரச் சாரியை தாழ்வுமில்லை; குகரம் இங்கு உயர்வுமில்லை.  உகரம் வந்து வாலாகினாலும் குகரம் வந்து வாலாகினாலும் பொருளில் எவ்வித வேறுபாடும் ஏற்படுவதில்லை.  மூழ் என்ற அடிச்சொல்லுடன் கு இணைய, வினைச்சொல் ஆக்கம் பெறுகிறது.  ஆனால் ஆழ் என்ற சொல் கு இல்லாமலே வினைப்பொருள் தருவதால் அங்கு நாம் கு என்பதைச் சேர்ப்பதில்லை.  தேங்கு  தாங்கு என்பவற்றில் கு வந்து வினைப்பொருள் விளைக்கின்றது. தே தா என்று மட்டும் சொன்னால் பொருள் மாறிவிடும்.  தே என்பது தேனையோ தேநீரையோ குறிக்கும். தேமதுரத் தமிழோசை என்ற தொடரில் தே என்பது இனிமைப் பொருளில் வருகிறது,

தா என்ற அடிச்சொல்லுடன் கு சேர்த்து வலித்தால் :   அதாவது வல்லெழுத்துக் கொண்டு  தா+கு =தாக்கு என்றால் வேறு பொருளும்  அதே கோவையில் மெலித்தால் தாங்கு என்று இன்னொரு பொருளும் கிட்டுகிறது.  இப்படி அருமையாக அமைத்திருக்கிறார்கள் சொற்களை.  ஆனால் அதே குகரம்தான்.

சொல்லமைப்பில் மிகுந்த கெட்டிக்காரர்கள் பழங்காலத்தில் இருந்தனர் என்று இதன் மூலம் அறிந்து மகிழ்கிறோம்.

திசை என்பது ஒரு திசையிலிருந்து தமிழுக்குள் வந்த சொல்; அல்லது தமிழிலும் திசையிலும் ஒரே காலத்தில் வழங்கும் சொல்.  தமிழிலும் வழங்குகின்றது; திசையிலும் வழங்குகின்றது.  திசையிலிருந்து இங்கு வந்தது என்பது நாம் அறியாதது.  அங்கிருந்து இங்கும் வந்திருக்கலாம்; இங்கிருந்து அங்கும் போயிருக்கலாம்.  எது எங்கு உண்டாகியது, எப்படி எங்கு வந்தது என்று நாம் பார்க்கவும் கேட்கவும் செய்யாவிட்டாலும்,  சிலர் அது அங்கும் வழங்குவதால் நாம் இங்கு வழங்கக் கூடாது என்று மறுப்புத் தெரிவித்திருப்பார்கள் போலிருக்கிறது.  அதனால் தொல்காப்பியனார்: அது அங்கு இருந்தால் பின் இங்கும் இருந்தால் அது திசைச்சொல் அதைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார் என்று நாம் அறிகிறோம்.  அங்கிருப்பவர் அது இங்கிருந்த சொல் என்று ஒதுக்க,  இங்கிருப்பவர் அது அங்கிருந்த சொல் என்று ஒதுக்க இவர்கள் சண்டையில் சொல் வழக்கொழிந்து போய்விடாமல் தொல்காப்பியனார் காப்பாற்றியுள்ளார்.  இது டோக்லாமிலுள்ள சொல்  என்று சீனர்கள் சொல்ல, இல்லை, இது சீனாவில் உள்ள சொல் என்று டோக்லாமியர் சொல்ல,  சரிசரி, ஏன் இந்தச் சண்டை, நாமே அதை மேற்கொண்டு பிறச்சினையை (பிரச்னையை) முடித்துவைத்துவிடுவோம் என்று சீனா நடவடிக்கை எடுத்தால், தொல்லை ஒழிந்துவிடும் அன்றோ? ஒரே நாடு உலகத்தை ஆண்டுவிட்டால் திசைச்சொற்களும் இருக்கமாட்டா, வடசொற்களும் இருக்கமாட்டா என்பது சரியாகுமா?  எமக்கு உலக அரசியல் தெரியவில்லை.

வடசொல் என்றால் மரத்தடியில் வழங்கிய சொல் என்று திரு வி.க சொன்னார்;  தமிழ் என்றால் தமில்; தமில் என்றால் தம் இல்லத்தில் வழங்கிய சொல் என்று கமில் சுவலபெல் கூறினார்.  இல்லத்துக்கு வெளியில் இருந்தது மரம்;  மரத்திற்கு அப்பால் இருந்தது இல்லம்.  சரி, இன்னொரு நாள் சந்தித்து நாம் உரையாடுவோமே!
பின் திருத்தம் பெறும்