ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

அமெரிக்காவைப் பார்த்து வடகொரியா......!

உலகளந்த நாடுஅ   மெரிக்காவைப் பார்த்துச்
சிறிதாம் வடகொரியா சீரழிப்போம் என்றால்
பலபோரும் வென்ற வலம்சேர் பழமையைப்
பார்க்காக் குருடர்- தென் கீழ்த்திசைப் பக்கம்
உளவாய மக்கட்கோ உள்ளத்தில் அச்சம்;
வட கொரியன் நம்தலைக்கு வைத்தான்  வெடியே !
தளவாடம் ஆக்கும்  தலைதெரித்த போதையோன்;
தாரணி ஓரணியில் நிற்க அமைதிக்கே.

குறிப்பு:


1.மூதலடி: "உலகளந்த நாட மெரிக்காவைப் பார்த்து "
என்று வெண்டளையாகும்.
2. குருடர்தென் என்று சேர்த்திசைக்க. (புளிமாங்காய்ச் சீர்)

3. தென்கீழ்த் திசை: தென் கிழக்காசியா.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

தத்து என்ற சொல் அமைந்தது எங்ஙனம்?



இப்போது தத்து என்ற சொல்லைப் பற்றிச் சிந்தித்து அறிவோம்.

 பிறர் பிள்ளை ஒன்றினைத் தன் பிள்ளையாக்கிக் கொண்டு வளர்த்தலையே தத்து என்று சொல்லுவர்.  இப்போது ஆங்கில மொழி மிகப் பரவி விட்டதால் “அடோப்ட்” என்ற சொல்லையே கேட்க முடிகிறது.  ஆங்கிலம் படித்திராவர்களும் அம்மொழிச் சொற்களை நன்கு  பயன்படுத்துகின்றனர்.
தத்து என்பது இரண்டு சிறு துண்டுகளை உடையது.   தன்,  து என்பவை அவை.

தன் என்ற சொல்லில் இரண்டே எழுத்துக்கள் உள்ளனவாகையால்,  தன் என்பது த-  என்று குறையும்போது,  அதை கடைக்குறை என்று இலக்கணத்தில் சொல்வர்.  மேல் என்ற சொல் மே என்று குறைந்து, பின் கறி என்ற சொல்லுடன் இணையும்போது, மேங்கறி என்று வழங்குவதுபோல்,  தன் என்ற சொல், " த " என்று குறைந்து, பின்  "து " என்பதனுடன் இணைகிறது.

து என்பது இப்போது ஒரு விகுதியாகவே பயன்படுகிறது.  விழுது என்ற சொல்லில் அது வருகிறது.  இப்படி இவ்விகுதி வருஞ்சொற்கள் பல.  மேலும் அஃறிணை விகுதியாகவும் வரும்.

உடையது என்பதையும் “து”  குறிக்கும். 

எனவே “த+ து”  என்ற சொல் “தன்னுடையது” என்று பொருள்படும்.
தத்து எடுப்பது எனின் தன்னுடையதாக்கி எடுத்துக்கொள்வது என்பதாகும்.   இனி “எடுப்பு”    “வளர்ப்பு” என்ற வழக்குகளும் உள்ளன என்பது நீங்கள் அறிவீர்கள்.

பிற சார்பு இல்லாமல் தன் சொந்த வலிமையால்  நிற்கும் ஒரு கருத்து “தத்துவம்” எனப்பட்டது என்பதை நீங்கள் இதிலிருந்து சிந்தித்தறியலாம். இங்கு  த+து+அம் என்பன (3 துண்டுகள்)  புனையப்பட்டுள்ளன.  து, அம் விகுதிகள்.
தத்துவம் என்பதில்  வ் வருவது சொல்லிணைப்பின் பொருட்டு. இதைத்தான்
வகர உடம்படு மெய் என்று இலக்கணம் சொல்கிறது.

தத்துவம் என்பது மேற்கண்டவாறே வரையறை செய்யப்பட்டு உணர்ந்து
கொள்ளற்குரித்தான சொல்.

இது 05072020 மெய்ப்பு செய்யப்பட்டது.




வியாழன், 3 ஆகஸ்ட், 2017

“கலா”



இன்று “கலா”  என்ற சொல்லை அணுகுவோம்.

கலா என்பது  தமிழன்று என்று கருதியவர்கள் உண்டு.  இதற்குக் காரணம் இந்தச்  சொல் “தேசிய சேவை” செய்துகொண்டிருப்பதுதான். இச்சொல் பலராலும் விரும்பப்படும் சொல்லாய் இருப்பதும் பிற மொழிகளில் காணப்படுவதும்  நமக்குப் பெருமைக்குரியதாகும்.

கலா என்பதுபோன்ற (அதாவது எதுகைச் ) சொற்கள் பல உள்ளன.  எடுத்துக்காட்டாக  -  பலா, நிலா, உலா, தலா, விலா, துலா என்பவை.  இன்னும் பெயர்ச் சொற்கள் அல்லாதவைகளும் உள:  அலா,   இலா, செலா  முதலிய காண்க.   எனவே ஒலி முறையில் அது தமிழ் ஒலியுடைய சொல்லே.
கல்+தல் =  கற்றல்.  இங்கு கல் என்பதே பகுதி. இனிக் கல்+வி = கல்வி;  கல்+ ஐ = கலை;  கல்+பு = கற்பு;   கல் +பு + அன் + ஐ =  கற்பனை;  இவை போலவே கல் + ஆ = கலா  ஆனது. பல் சுளைகள் உள்ள பழம்  பல்+ ஆ = பலா ஆனது போலவும்  வானில் நிற்பதும் ஒளிவீசுவதாகவும் கருதப்பட்டது நில்+ஆ=  நிலா என்று ஆனது போலவும் ஆகும். 1

கலாதேவி, கலா நிலையம் முதலியவும் தமிழின்று கிளம்பிப் பரவிய சொற்களே.

தேவி > தீ  (தேய் );  நிலையம் > நில்.  எம் முன் இடுகைகள் காணவும்.


_____________________________
அடிக்குறிப்பு 

1  இது தமிழ்ச் சொல் என்பது பேராசிரியர் அனவ்ரத வினாயகம் பிள்ளை 
அவர்களால் சொல்லப்பட்டது. (1935)  இவர் கழகத் தமிழ்க்  கையகராதித் தொகுப்பாளர் .