ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கதம்பம்

கலத்தல் என்பது, வேறுவேறான பொருட்களை
ஒன்றுசேர்த்துவைத்தல் என்பது உங்களுக்குத் தெரியும். கலத்தல் என்பது இரண்டுவகை என்று உணரலாம். நாம் கலந்து வைப்பதும் அது தானே கலத்தலும் என இரண்டு.  சாக்கடை நீரில் (சாய்க்கடை> சாக்கடை , அதாவது சாய்வாகக் கடைசிப் பகுதிக்குச் செல்லும்படி அமைக்கப்படுவது) குடிநீர் கலத்தல் என்பது தானே கலத்தல் எனலாம்.
(யாரும் போய்க் கலக்கவில்ல.)

கலத்தல் என்பது சண்டையிடுதல் என்றும் பொருள்படும். இந்தப் பொருளில் இருவேறு கோட்டியினர் (இப்போது கோஷ்டி) ஒருசாராரை இன்னொரு சாரார் அணுகி அடித்துக்கொள்ளுதல். கலகம், காலாய்த்தல், கலவரம் (கல+ அர்+ அம் அல்லது கல+ அரம்) என இதில் விளைந்த‌ சொற்களும்  உள.

கலத்தலில், பூக்களைக் கலத்தலும் ஒரு திறமைதான்.  இங்கு
கல > கல + பு + அம் > கலம்பம்  என்று முகிழ்த்து, கதம்பம் என்று
திரிந்துவிடுகிறது. கதம்பம் எனினும் கலப்பு ஆகும்.

கல> கல+ ஆவு + அம் > கலாவம் > கலாபம் எனவரும்,
மயிலிறகில் நிறங்கள் கலத்தல். அது ஒரு தனிவகைக் கலப்பு.

மண் கலத்தலும் இன்னொரு கலத்தல். கல+ அ +  அம் என்பது
யகர உடம்படு மெய் பெற்று, கல+ ய் + அ + அம் = கலயம்
ஆகிக் கலசம் ஆனது. ய ‍ >ச இயல்பான திரிபு.

இதை முன் எழுதியதுண்டு.

அறிஞர் பிறரும் சிலவற்றை விளக்கியுள்ளனர்.

சனி, 28 ஜனவரி, 2017

பரிதிமால் கலைஞரும் நூல் அரங்கேற்றமும்

வடகரை என்ற ஊரில் ஒரு நிலக்கிழார்
\(ஜமீந்தார்) இருந்தார். இவர்
பெயர் இராமச்சந்திர நாயுடு என்பது. 
தனித்தமிழ்ப் புலவரான பரிதிமால் கலைஞர்
 என்னும் சூர்யநாராயண சாஸ்திரியார், குளந்தை வடிவேலன்
பிள்ளைத்தமிழ் என்னும் நூலை அரங்கேற்றும் பொருட்டு இந் நிலக்கிழாரைக் காணப் பெரியகுளம் என்னும் ஊருக்குச் சென்றார். பரிதிமால் கலைஞர் தம் வேலை முடிந்ததும் உடனே திரும்ப எண்ணினாலும், நிலக்கிழார் அன்பின் காரணமாகவும் தமிழ்ச்சுவை மேலும் பருக விழைந்ததனாலும்  விடைகொடுக்கவில்லை.  சிலகாலம் தம்முடன் தங்கி இருக்கும்படி வற்புறுத்த, வேறுவழியின்றிப்     பரிதிமால் கலைஞரும் அங்கேயே சிறிது நாட்கள் தங்கிவிட்டார்.

போன பரிதிமாலர் காலம் தாழ்த்தியதைக்
 கண்ட அவர்தம் மாணாக்கர்
சலசலோசனர் ஒரு பாவின் மூலம்
 தம் ஆசிரியருக்கு விரைவில்
திரும்பவேண்டியதன் தேவையை உணர்த்தினார்.
அப்பாடல் வருமாறு:

செல்வமலி குளந்தைச் சேயின் தமிழ்விரிப்பச்
செல்வலெனச் சென்றாய்; தேசிகவான் ‍‍‍=== கல்வி வயின்
போந்தவன் தாழ்ப்பப் புலம்புகொண்டு இல்கணுறை
ஏந்திழையை நேர்குவல்யான், எண்.

இதன் பொருள் வருமாறு:

செல்வமலி : செல்வச்செழிப்பு மிக்க;
குளந்தைச் சேயின் : குளந்தை வடிவேலனின்
தமிழ் விரிப்ப : பிள்ளைத்தமிழ் நூலை அரங்கேற்ற;
செல்வல் என : போகின்றேன் என்று சொல்லி;   
சென்றாய் : போனீர்கள்
 தேசிக வான் கல்வி வயின் போந்தவன் : இத்தகைய‌ உயர்ந்த கல்விச்சேவை மேற்கொண்டு சென்ற நீங்கள்;
தாழ்ப்ப :வருவதற்கு காலம் தாழ்த்திக்கொண்டிருப்பதால்
புலம்பு கொண்டு:துன்பம் மிகுந்து;
இல்கண் உறை : வீட்டில் இருக்கின்ற;
 ஏந்திழையை : (உங்கள் ) மனைவியை
நேர்குவல் யான் : யான் குறிப்பிட விரும்புகிறேன்;

எண் : நினைத்துப் பாருங்கள் என்றபடி.

குளந்தை :  இது  பெரியகுளம் என்ற ஊரைக் குறிக்கிறது..

தேசிகம் - ஒளி, பொன், அழகு.


"பல்லினைத் தேசிகம்"  (சீவக.சிந்தா. 1480)


ஆசிரியருக்கும் மாணாக்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது;  ஆசிரியர் குடும்பம் பற்றிய அக்கறையும் மாணாக்கருக்கு இருந்தது.  பரிதிமாற்  கலைஞர் சென்றது  தம் ஆசிரியரின் ( (மதுரைச் சபாபதி  முதலியார் ) நூலை அரங்கேற்றுவதற்கு என்பதையும் நாம் மறக்கலாகாது.  பரிதிமாலருக்கு  தமிழ்க் கவலை.

பரிதிமால் கலைஞரும்  நூல் அரங்கேற்றமும்  \\

This post has some formatting errors which cannot be rectified.

We shall try some time later.
  




வெள்ளி, 27 ஜனவரி, 2017

சீனப் புத்தாண்டு; greetings


(இணைக குறள்  ஆசிரியப்பா )

சீனப் புத்தாண்டு;
ஞானப் பேரொளி புத்தரோ அரசனோ
எலியும் எருதும்
புலியும் முயலும்
கடல்நா கத்தொடு கட்செவி தானும்
குதிரையும் கோதில் ஆடும்
குரங்கொடு சேவலும்
நாயும் பன்றியும் எனப்
பன்னிரு உயிரிகள் பக்கலில் விளித்து
முன்னுறு பந்தயம் நிகழ்த்தி,
ஒன்றும் நான்கும் ஐந்தும் இன்மையும்
கால்விரல் தொகையே மேல்கொள,
தெரிந்துடன் எடுத்து வரிசையின் வைத்து,
யிங்கும் யாங்கும் என்பன கணித்து,
மக்கள் விழவே தக்க வாறுற‌
அமைத்தனர் என்றே அறிந்தோர் உரைப்ப;
அத்தகு சிறப்பின் அரும்பெரும் நாளை
இத்தரை வியக்க இனிதுகொண் டாடுவர்.
இந்த ஆண்டினில் இதுகொண் டாடும்
உந்து சிறப்பின் உயர்நண் பர்கள்
தந்தம் அகத்தினில் தணியாத்  தகையுடன்
பெருமகிழ் வனைவரும் எய்தி
நறுமண மலர்போல் பெறுகநல் வாழ்வே.