வெள்ளி, 18 மார்ச், 2016

இடக்கினிலே மாட்டி...................

விடக்குண்ணும் ஆசையினால் இடக்கினிலே மாட்டி
விட்டிடுதல் நன்றாமோ  வீணாய் நும் உயிரை?
தடைக்கற்கள் யாதுமிலை தகுசைவப் பாதை
தரணியிலே மேற்கொள்ள! தனுவிலுயிர் நிலவும்
இடைக்காலம் இன்பமுடன் எழில்பெறுகை  வேண்டும்!
இதற்கான பயிற்சிசெயல் இன்னாஊண் விலக்கல்
கடைக்காலம் தள்ளிவைத்தல் கண்டுணர்க  யாண்டும்
கசடிறவிப் பயம்நீங்கிக்  கனிந்தகவை  இலக்கே .

Hope with this help below you can decipher the poem.Also learn some new words.


விடக்கு :  ஊன்.  இறைச்சி.
இடக்கு :  துன்பம். இடர்.
தகு :  தகுந்த,
தனு:  தன் உடல்.  த = தன்; உ = உடல்.
இன்னா ஊண்  = துன்பம் தரும் உணவு வகைகள்.
கடைக்காலம் :  மரண காலம்.
யாண்டும் :  எக்காலத்தும்.

கசடிறவிப் பயம் :  மரணம் பயக்கும் கசடு. அல்லது மரண பயமாகிய கசடு, கசடு:  குற்றம். இறவி = மரணம்.

கனிந்தகவை :  கனிந்த அகவை. பழுத்த வயது.

இலக்கு : அடையவேண்டியது.

வியாழன், 17 மார்ச், 2016

தமிழும் சகரமும்

பிற்காலத்துத் தமிழில் பல சகர வருக்கத்துச் சொற்கள் திரிபுகளின் காரணமாக வளர்ச்சி பெற்று மொழியில் இடம்பிடித்தன.. இத்தகைய பல திரிபுகளை முன்னர் எடுத்துக்காட்டியதுண்டு, ஆனால் சிலர்க்கு அவை மனத்துள் பதிவுறாமலோ மறதியாகவோ இருத்தல் கூடும். ஆகையால் மீண்டும் எழுதுகிறோம்.இந்தச் சொற்கள் இலக்கணக் கதிரவனாகிய தொல்காப்பியரின் காலத்திலும்  இருந்து அவர் அவற்றை
ஏற்றுக்கொள்ளமுடியாத திரிபுகளாய் ஒதுக்கியிருக்கலாம். ஏன்?  சகர முதலாகச் சொற்கள் வரா என்று அவர் பாடியதாய்க் கருதப்படுதலால்.
அவர் பாடினாரா, பிற்காலத்து ஏடெழுதினவர்கள் குருட்டுத்தனமாகப் பகர்ப்புச் செய்துவிட்டனரா என்பதை ஆய்தல் வேண்டும். எழுத்துக்காரனும் தவறக்கூடும். இவர்கள் கடவுள்கள் அல்லர்.

நன்னூலாரும் மயிலை நாதரும் இலக்கணப் பெரும்புலிகள். இவர்கள் சகர முதலாய்ச் சொல் தொடங்காது என்ற கருத்தைச் சொல்லவில்லை.  அவர்கள் படித்த தொல்காப்பியச் சுவடியில் அத்தகைய விதி இல்லாமல் இருந்திருக்கலாம்.  இருந்து அதை ஒதுக்கியுமிருக்கலாம்,

இதன்  தொடர்பான தொல்காப்பிய நூற்பாவிலும் பாடவேறுபாடுகள்
உள்ளன. அதனாலும் சகரமுதலாகச் சொல் அமையாது என்ற கருத்து ஒதுக்கப்படவேண்டியதாகிறது. காரணங்கள் இன்னும் பல.

அடுதல் =  நெருப்பிலிடுதல்.

அடு+ இ =  அட்டி.
அட்டி > சட்டி.

அமணர் >  சமணர்.

அடுத்துச் சென்றாலே ஒருவனை அடிக்கலாம். அல்லாமல் அடித்தல்
இயலாது. ஆகவே அடுத்தற் கருத்தில் அடித்தல் கருத்து தோன்றியது.

அடு >  அடி.

அடு>  (சடு)*  >  சாடு.  சாடுதல்.  ( சொல்லடித்தல்). (மலையாளத்தில்  அடித்தல் ).

(சடு) > சடுகுடு. (அடுத்துச் சென்று பிடிக்கும் விளையாட்டு).

அடு >  அண்டு >  (சண்டு)*  >  சண்டை.
சண்டமாருதம் = வந்து மோதும் காற்று.
சண்டப்பிரசங்கம் =  இடிசொற்பொழிவு.  மோதல்பேச்சு

அண் >  சண் >  சண்ணுதல்  (தாக்குதல் , புணர்தல் )
அண் >  சண் >   சண்ணித்தல் ( ஒருவனை அல்லது ஒன்றைச் சார்பாககக் கொள்தல் )

*சில இடைத்தோற்றச் சொற்கள் (பிறைக்கோடுகளில் ) மொழியில் தாமே நிற்கும் வலுவிழந்து கூட்டுச் சொற்களுடனேயே வாழ்தல் மொழியியல்பு.

வெட்டவெளிச்சம்: இதில் வெட்டம் என்ற சொல் மலையாளத்தில் தனிவாழ்வும் தமிழில் கூட்டுச்சொல் வரவுடையதாயும் உள்ளது.

அடுத்தல் கருத்தில் சில கூறினோம்.  பிற பல.


இப்படி ஏராளமாக இருத்தலால்  பல  சகர முதல் சொற்கள் அகர முதலில் இருந்து திரிந்தவை என்பது மிக்கத் தெளிவாகிறது.

விரித்து எழுதினால் நீண்டுவிடும். மற்றவை இனி

தமிழும் சகரமும் 

க >ய திரிபு.

க >ய  திரிபு.

முன் ககரம் யகரமாகத் திரியும் என்பதை விளக்கினோம். மகன் என்பதை மயன் என்று திரித்துப் பேசுவதைச் சுட்டிக் காட்டினோம்.

கோலிகன் என்ற சொல் கோலியன் என்று திரிகிறது.

ககரம் யகரமாதற்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு.

நாகர் என்பதே  நாயர் ஆயிற்று என்ற கருத்தும் நீடிக்கிறது.  க -  ய ,

ஆகி என்ற எச்ச வினை ஆய்   என்பதற்கு ஈடாக நிற்றலும் கருதவேண்டியுள்ளது.

சீர்காழி  -   சிலர் சீயாழி  என்பதும் குறித்துக்கொள்ளத் தக்கதே.