திங்கள், 20 மார்ச், 2023

இரும்பிலும் உண்ண நினைக்கும் எறும்பு

 இந்தக் கவிதை,  இன்று உருப்பெற்றதுதான்.  ஓர் வெள்ளுருக்குக் கரண்டியில் ( stainless steel spoon )   ஓடிக்கொண்டிருந்த எறும்பைக் கண்டு கவிதை எழுந்தது.  அதன் நிலைக்கு இரங்கியதே காரணம்.  கவிதை கடினமற்ற பதங்களில் அமைந்த படியால்,  விளக்கம் விரிக்கவேண்டாம் என்று நினைக்கின்றோம்.


வடையின் மணமிருக்கு ---  ஆனால்

வடையைக் காணவில்லை;

தடயம்  அறிஎறும்பு  ----  கரண்டியில்

தள்ளாடி அலைகிறதே!


வடையின் துணுக்கொன்றையே ---எறும்பும்

அடையக் கொடுத்திடுவாய்.

கடைக்கு வடைவாங்கவே ----  பாவம்

கட்டெறும்  பேறிடுமோ?


எல்லா உயிருடனும் ----  தம்பி 

இயலும்  நண்புகொள்வாய்,

இல்லை  எனா உலகில் ---  எறும்பும்

ஏற்றம் காணட்டுமே.


எவ்வுயிர்  என்றாலுமே  ----  துன்பம்

ஏறி   வருந்துகையில்,

இவ்வுயிர் எனதுமட்டும் ---- மகிழ்ந்தே

இருந்திடல்  பொருந்துவதோ..


------  சிவமாலா. 


கொடுத்த சிறு  துகளை  இழுத்துக்கொண்டு அந்த எறும்பு

நகர்ந்து நகர்ந்து காணாமற்  போய்விட்டது  ஆனந்தமே.


ஆனந்தம் :  ஆக நன்று >   ஆ நன் து அம் >  ஆனந்தம்.

நன்று =  நன் + து.



கருத்துகள் இல்லை: