ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

கம்பி - சொல்லுக்கு எளிய விளக்கம்.

கம்பி என்ற சொல் மிக்க விரிவாக விளக்கப்பட்டுள்ளது,  முன்னர் நாம் கண்ட இடுகையில்.  அஃது:

கம்பி   https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_13.html

ஆனால் இதை இன்னும் எளிதாக உணர்ந்துகொள்ளலாம். இது ஒரு குறுக்கென்றே சொல்லவேண்டும்.:

கடு + பு + இ  >   கடும்பி.  இது இடைக்குறைந்து கம்பி   ஆகிவிடும்.

இது மெலித்தல் உத்தி ஆகும்.

[  இங்கு,  பி என்ற இறுதிக்கு  ஒரு விகுதியென்னும் தகுதியை வழங்கலாம்.  அவ்வாறாயின்  பு + இ என்று பிரித்து இடைநிலை + விகுதி என்று விவரிக்க வேண்டியதில்லை. விவரிப்பது  என்றால் விரித்து வரிப்படுத்துவது .  இந்தப் பயிலாக்கத்தில் அடிச்சொல்லைக் கண்டுபிடிப்பதே நோக்கம். விகுதி இடைநிலைகள் எல்லாம் ஆக்கிய சொல்லை வேறுபடுத்தும் ஒலிகளின் உருக்களே.   அவற்றில் பெரிதும் பொருண்மை இருப்பதில்லை .  இது சொல்லாக்கத் தத்துவம்.  உணராதோன் உண்மை அறிந்து மேலெழுவதில்லை ] 

பல சொற்களில் கடின இடையொலிகள் குறைந்துள்ளன.  இன்னோர் எடுத்துக்காட்டு:  கட  வினைச்சொல்.  : கடப்பல் >  கப்பல்.  கடந்துசெல்ல உதவும் மிதப்பூர்தி. மற்றொன்று:  அடங்கு + அம் = அடங்கம், இடைக்குறைந்து அங்கமானது. ( உடல்).

இதில் வந்த புணர்ச்சித் திரிபு:

கடு + கை >  கடுங்கை என்பதுபோலுமே இது.  கடுங்கை என்றால் கடுமையானது என்று பொருள். எமன் என்னும் உயிர்குடிப்போன்,  கடுங்கைக்கூற்றுவன் என்பதும்  காணலாம்.  இது  தேவாரத்தில்  (. 167, 1)  வந்துள்ளது.

கொடு + கோல் +  அன் என்பது கொடுங்கோலன் ஆகும்.  கொடு> கொடுமை,  மை விகுதி கெட்டுப்புணர்த்தல் என்பது இலக்கணியர் உரைப்பது.

இனி, கடு > கடும்பு > கடும்பி என்பது எளிதான விளக்கம்.

கடும்பு +இ  = கடும்பி >  கம்பி.

கடுமையானது என்பதே பொருள்.  பு, இ என்பன வெறும் விகுதிகளே.

இகர இறுதி இல்லாமல் கடும்பு என்று இடைக்குறையாமல் வருங்கால் அது  வேறுபொருள் கொள்ளும்

இதற்கு இன்னொரு காட்டு.   மை என்பது ஒரு கரிய கறைநீரைக் குறிக்கிறது. அது அப்பொருளை இழந்து, இர் என்ற விகுதி பெற்று மை இர் > மயிர் என்னும் போது  தலைமுடியைக் குறிக்கும், பிற மயிரும் குறிக்கும்.   மை + இல் என்று இல் இணையும்போது மை இல் > மயில் என்று மைதெளித்தது போலும் இறகுகளின் நிறமுள்ள ஒரு பறவையைக் குறிக்கும்  மை என்ற தனிச்சொல்லுக்குள்ள பொருள் மற்ற அமைப்புகளில் இல்லை.  ஆனால் ஒரு பொருள் தொடர்பு இருக்கிறது. அது கருமைநிறம் என்பது..  கடும்பு என்பது தனிச்சொல்லாய்,  கடும்புப் பால் குறிக்கும்.   அது இகர விகுதி பெறுகையில் அந்தப் பொருள் தொலைந்து,  கடுமைப்பொருள் மட்டுமே எஞ்சியபடி " கம்பி" ஆகி, கடும் இரும்புத் தடி  என்ற பொருள் பெறுகிறது. பல்வேறு விகுதிகளை ஏற்கையில் மூலப்பொருள் மட்டும் எஞ்சும்.

இவற்றுள் பெரும் வேறுபாடுகள் எவையும் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



சனி, 7 ஆகஸ்ட், 2021

மருவற்குரிய மருத நிலமும் சில மருவற் சொற்களும்.

பண்டைக் காலத்திலும் சரி, இன்றும் சரி.  மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் முன்மை வகிக்கும் பொருளென்றால்  அது உயிர்களுக்கு உணவே அன்றிப் பிறிதில்லை என்பது மிக ஆழ்ந்து சிந்திக்காமலே யாவரும் ஒப்புக்கொள்ளக்  கூடிய கருத்தாகும். மனிதற்கும் மன்னுயிர்க்கும் உணவளிப்பதே ஒரு பேரறம் என்பர் அறிந்தோர்.

எனவே, உலகனைத்தும் மருவிச் செல்லற்குரிய நிலப்பகுதி என்றால் அது மருத நிலமாகும். இவ்வுலகில் எங்கெங்கு நெல்லும் பிற கூலங்களும் விளைகின்றனவோ அவற்றை யெல்லாம் மருதம் என்றே சொல்லவேண்டும். மருதமானது உலகின் முதன்மை.

மருதம் என்ற சொல் மருவுதல் என்ற சொல்லுடன் மிகுந்த  தொடர்புடைய சொல்.

இதன் அடிச்சொல் மரு என்பது.

மரு >  மருவு >  மருவுதல்  ( வினைச்சொல்).  தல் - தொழிற்பெயர் விகுதி.

மரு >  மருது:    உலகம் மருவுதற்குரிய ஒன்று,  அல்லது மருதமகன்.

மரு > மருது >  மருதம்   ( அதாவது மரு + து + அம் = மருதம் ).   மருதநிலம் .  பயிர்செய்யும் நிலம்.  உலகத்துயிர்கள் உணவுக்காக மருவி -  தழுவிச் செல்லும் நிலம்.  மற்ற நிலங்கள் இதனையே  மருவி நிற்கும் பெருமையுடைய நிலம்.

பிறர் தொழுதுண்டு செல்லும் பெருமையுடைய நிலம்.

மரு என்னும் சொல் மார் என்று திரியும்.

கரு என்ற சொல் கார் என்று திரிவது போலுமே இது.

மரு > மார் > மார்+ அன் > மாரன்.  காதலியரால் தழுவப்படும் ஈர்ப்பு உடையவன்.

குறு என்ற சிறுமை குறிக்கும் சொல் தன் இறுதி எழுத்தை இழந்து கு என்று நிற்கும்.  அப்போது அது குறுக்கம் குறிக்கும். 

கு+  மரு + அன் >  குமரன்.  இளமை உடையோன்,  அகவை ஆகாதவன்.

கு + மரு >  கு + மார் >   குமார்.  இளையவர்.

இவ்வாறு சொற்கள் பல வுளவாதலின்,  அவற்றைப் பின்பு நோக்குவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

  

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

நிதியும் நிலையும்.

 நிதி என்பது இப்போது பெரிதும் மக்கள் அறிந்துள்ளதாக உணரும் ஒரு சொல். ஒவ்வோர் அரசிலும் ஒரு நிதி அமைச்சர் இருப்பார். ஆண்டுக்கு ஒருமுறையாவது நாட்டிலுள்ள மக்களெல்லாம் அவரது கையையோ அல்லuது அதன் வழங்கு திறனையோ எதிர்பார்த்திருப்பர். நிதி என்பது எந்தமொழிச் சொல் என்று ஒரு சிலராவது தங்கள் உள்ளங்களில் எண்ணிக்கொண்டிருப்பர்.

நிதி என்பது நிலையான வைப்புத் தொகை என்று சிலர் பொருள் கூறுவர். சிலர் பெயரிலும் நிதி என்ற சொல் ஒரு பகுதியாய் இருக்கும்.

பணம் என்பதும் நிதி என்பதும் ஒருபொருட் சொற்கள் என்று சிலர் கருதினாலும் "பணநிதி"  என்ற சொல்லும் வழக்கில் உள்ளது. ( " அனைத்துலகப் பணநிதி நிறுவனம்" ).  இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால்,  நிதி என்பது பலவகைப்படும்.  எல்லாம் பொன்னாகவோ வெள்ளியாகவோ மான் குட்டிகளாகவோ தொகுத்து வைத்துக்கொண்டிருந்தால் அவையும் " நிதி "  என்றே கொள்ளவேண்டும்.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்  காகவாவது நிற்புடைமை இருக்கவேண்டும். என்றுமே இருக்கவேண்டிய ஒழுங்குமுறை அதற்கு வேண்டியதில்லை.   ஆகவே பணநிதி என்பது பணமாக மட்டுமே நிற்புத் தொகுதியாய் இருப்பது.  இவற்றையெல்லாம் கருதுகின்ற காலை, நிதி என்னும் சொல் நில் என்பதிலிருந்து வந்ததாக இருக்கவேண்டும் என்று முடிபுகொண்டதில் ஏற்கத்தக்க உள்ளுறைவுகள் இருக்கின்றன என்றே நாம் எண்ணவேண்டும்.

நிதி என்ற சொல்லை உண்டாக்கியவர்கள், யாமறியக் குறிப்புகள் எவற்றையும் தந்து செல்லவில்லை.  ஆதலால் எதையும் முற்றும் ஏற்கத்தகாதது என்று முடித்தல், எனது என்னும் ஆணவத்தின்பாற் படலாம்.  அப்படிக் கொள்வதற்காக இது எழுதப்படவில்லை.

நில் > நி > நிதி.  நிற்பு உடைய தொகுதி அல்லது சேமிப்பு.

நில் > நி  ( கடைக்குறை)

தி  - தொழிற்பெயர் விகுதி.

இன்னொரு வகையில்:  நில் + தி > நிற்றி > நித்தி > நிதி ( இடைக்குறை).


நாம் இங்குக் காட்டவிருப்பது  இவ்வாறு:

நேடுதல் - சம்பாதித்தல். வினைச்சொல்.

நேடு > நே ( கடைக்குறை ) >  நேதி >  நிதி.

    இகரம் எகரமாகத் திரியும்.   இழு  வினைச்சொல்  --     இழுது > எழுது.  

    எகரம் - ஏகாரம் தமக்குள் திரியும்.    ஏழு நிலை மாடம் >   எழுநிலை மாடம்.

    எழுபிறவி :  ஏழு பிறவி.  இது உண்மையில் குறில் நெடில் மாற்றீடு.  அதிகம் உள.

ஆகவே நிதி என்பது சம்பாதித்துச் சேர்த்துவைத்த மதிப்புள்ளவை.

நேடு > (தி விகுதி சேர ) நேடுதி >  நேதி > நீதி.

இடைநிற்கும் டகரங்கள் அதன் வருக்கங்கள்  மறைதல் பெருவாரி. நாம் எப்போதும் காட்டுவது 

பீடு > பீடுமன் > பீமன்.  ( பெருமிதத்துக்குரிய மன்னன் ).

பிறவும் உள:

கடப்பு :  கடப்பல் > கப்பல்  ( கடலைக் கடக்க உதவும் மிதப்பூர்தி ).  டு இடைக்குறை.

அடங்குதல்:    அடங்கம் > அங்கம்.  ( உள்ளுறுப்புகள் அடங்கிய வெளிப்போர்வையான உடல் ).

இதிலும் பலவுள. இவற்றைப் பழைய இடுகைகளைப் படித்துப் பட்டியலிடுக.

எனவே நேடுதல் என்ற வினையினின்றும் நிதி என்ற சொல் ஏற்படுமாதலின், இது ஒரு பல்பிறப்பிச் சொல் என்று முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.

{இடையீடுகளிடையே பல முறை நிறுத்தி எழுதவேண்டியதாயிற்று. ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.}