வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021

 இருபதிரு பத்தொன்றே வருக நீயே

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்

இன்னுயிர்கள்  எல்லாமும் வளர்ந்து நன்மை

பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

அறிவாழ்வில் மக்கள்தாம்  பிறங்க  நன்றே.



 

செவ்வாய், 29 டிசம்பர், 2020

இன்று செவ்வாயா வெள்ளியா?

 செவ்வாயெது  வெள்ளியெது  தெரிய வில்லை

சேவைகளை  வீட்டினின்று  புரிவ தாலோ?

ஓளவைசொலும் இடும்பைகூர் வயிறுண் டேனும்

அதற்காவிச் சூட்டுணவு அகத்துள் கிட்ட,

எவ்வகையில் நோக்கிடினும் இடரொன் றில்லை!

இன்றுநேற்று  நாளையெலாம் கையின் பேசி

செவ்வையாகச் சொல்லுவதால் குழப்பம் இல்லை!

செந்தமிழால் என்றுமினி இணைய வாரீர்.


அரும்பொருள்:

செவ்வாய் எது -  எது செவ்வாய்க் கிழமை?

வெள்ளி எது -  எது வெள்ளிக்கிழமை?

தெரியவில்லை -  தான் தெரிந்துகொள்ள முடியவில்லை

சேவைகளை  வீட்டினின்று  புரிவ தாலோ? -  கோவிட் என்னும்

மகுடமுகி நோயின் காரணமாக நாம் இப்போது வீட்டிலிருந்து

அலுவலக வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோமே,

அதனால் தானோ? 

ஓளவைசொலும் இடும்பைகூர் வயிறுண் டேனும் =  நமக்கு ஒளவைப்பாட்டி உணர்த்திய  பசி என்னும் துன்பத்தை ஏற்படுத்துகின்ற ஊணடை பை இருந்தபோதிலும்

அதற்காவிச் சூட்டுணவு அகத்துள் கிட்ட  - அந்த வயிற்றுக்கு  ஆவி பரியும் சூடான உணவு வீட்டினுள்ளே கிடைப்பதால்;

எவ்வகையில் நோக்கிடினும் இடரொன் றில்லை! -  எப்படி ஆய்ந்தாலும் நமக்குத் துன்பம் ஒன்றுமில்லை;

இன்றுநேற்று  நாளையெலாம் -  இன்று என்ன கிழமை , நேற்று  என்ன கிழமை, நாளை என்ன கிழமை,  மற்றும் தேதி மாதம் என்பவெல்லாம்;

 கையின் பேசி  -  நமது கையின் அகலாத கருவியாய் உள்ள கைப்பேசி,

[கைக்குள் நிரந்தர இடம் பிடித்துவிட்டது என்பது தோன்ற கையின் பேசி என விரிக்கப்பட்டது;]

செவ்வையாகச் சொல்லுவதால் -  தவறாமலும் தடுமாறாமலும் சொல்லுவதனால்,

குழப்பம் இல்லை! -(  அதிலிணையும் வரை குழப்பமே அன்றி)  அப்புறம் ஒரு குழப்பமும் இருத்தலில்லை;

செந்தமிழால் என்றுமினி இணைய வாரீர். -  என்றுமே நல்ல தமிழில் இணைந்திருங்கள்,  ஆங்கிலத்திலோ பிறமொழியிலோ சொல்லாமல் தமிழாலே நாட்களைச் சொல்லுங்கள். -  வீட்டிலிருக்கையில்.

இன்று செவ்வாய் Tuesday   அப்புறம் இரண்டு நாள் செல்ல வெள்ளி Friday என்று கைப்பேசியே மொழி ஆசிரியர் ஆகிவிடுகிறது.

கிழமை எது என்று தெரியாவிட்டாலும் கிழமை என்ன என்று தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கைப்பேசி. தினக்குழப்பம் மொழிக்குழப்பம் எல்லாம் தீர்த்துவைக்கும்.

என்றவாறு.


 











திங்கள், 28 டிசம்பர், 2020

ஊரார்வீட்டு நெய்யும் பெண்டாட்டி கையும். அது கருணை.

 எள்நெய் என்ற சொல்லைத்தான் மக்கள் திரித்து உளைத்து ( = உச்சரித்து) எண்ணை என்று மாற்றிக்கொண்டனர்.  கொஞ்ச நாள் கடைக்காரர்களும் எண்ணை என்றே அச்சடித்துத் தம் புட்டிகளில் ஒட்டினார்கள்.  அது சரியன்று  என்று தமிழ்வாத்திமார் எதிர்த்ததனால் இப்போது மீண்டும் நல்லெண்ணெய் என்று எழுதத் தொடங்கினர். இதில் நமக்கொன்றும் உளைத்தல் ( வெறுப்பு )  இல்லை. நாம் இங்குக்  கண்டுகொள்ள விழைவது என்னவென்றால், நெய் என்பது ணை என்று மாறிவிடத் தக்கது என்பதுதான்.

ஓர் ஊரில் ஒரு மனைவி, அவள் கணவன் சாம்பாரும் சாதமும் சாப்பிடும் போதெல்லாம் அவன் நெய் கேட்டுத் தொந்தரவு செய்வானாம். அவனுக்குத் தினமும் வேண்டுமென்பதற்காக மனைவியானவள் கொஞ்சம்தான் சோற்றில் போடுவாளாம்.  மீண்டும் கேட்டால் அவளுக்குக் காது கேட்காது!  அடுக்களைக்குள் போய்விடுவாள்.

ஒருநாள் நெய் முற்றும் தீர்ந்துவிட்டது.  அடுத்தவீட்டில் போய் நெய் கேட்கவே, அந்த வீட்டுக்காரர்கள் நெய்யைப் புட்டியுடன் கொடுத்துவிட்டனர். நிறையவே இருந்ததாம்.  மனைவியானவள் அதைக் கொண்டுவந்து, அன்று தன் கணவனுக்குப் "போதும் போதும்" என்று சொல்லுமளவுக்கு நெய்யை உருக்கி ஊற்றினாளாம். அதே நெய்யில் வறுத்த முருங்கை இலைகளை வேறு அன்புடன் பரிமாற, அவற்றையும் சோற்றில் பிசைந்தபடி அன்றைத் தினம் நன்றாகச் சாப்பிட்டானாம்.

அப்போது அவ்வீட்டுக்கு அடிக்கடி வரும் ஒரு மூதாட்டியும் அங்கு வந்து சேர்ந்தாள்.  ' எப்படிச் சாப்பாடு?"  என்று அவள் வினவ,  "ஊரார் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே" என்று சொல்லிக்கொண்டு, கணவன் எழுந்து கைகழுவ மகிழ்ச்சியுடன் சென்றானாம்.

தன் சொந்த நெய்யாய் இருந்தால் அது பாராட்டுக்குரிய நெய் என்னலாம். இது அடுத்தவீட்டு நெய்யாயிற்றே.  அது கருப்பு நெய் என்றுதான் சொல்லவேண்டும். பொறுப்பில்லாத மனைவி கருப்பு உள்ளத்துடன் கணவனுக்கு இட்ட கருநெய்.    இது  எள்நெய் எண்ணை ஆனதுபோல் கருநெய் கருணை ஆகி,  சாம்பார் சோற்றில் அதிகமாகவே கலந்துவிட்டது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? கணவனுக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லாமல் போய்விட்டது.

கணவன்பால் மனைவிக்கு வந்த கருணைதான் என்னே!

கை என்ற சொல்லும் கர் என்று திரியும். இந்த இடுகையை வாசித்துக் கொள்ளுங்கள்.  கர்+ அம் = கரம். 

https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_12.html

அந்தப்பெண்டாட்டி தன் கரத்தால் பரிமாறிய நெய் ஆதாலால் அது  கைநெய் என்று பொருள்படும் கர்நெய் தான். கர்நெய் அப்புறம் கர்ணை,  கருணை  என்று மாறியிருக்கும்.  இந்த நிகழ்ச்சி மிகப் பழங்காலத்தில் நடந்ததனால் இதை உங்கள் ஆய்வுக்கே விட்டுவிடுகிறோம்.


தொடர்புடைய வேறு இடுகைகள்:

தனிமையில் கிடந்து இறந்தவர்கள் 

https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_85.html

வீரியம்  https://sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_24.html

கைகேயி  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_15.html


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்