வியாழன், 15 ஜனவரி, 2026

அகஸ்துமாத்து, அல்லது அகஸ்மாத்து

 காரணம் இல்லாமல்  என்பதை அகஸ்துமாத்தாக அல்லது அகஸ்மாத்தாக  என்பர்.

ஒரு காரணம் என்பது  எப்போதும் மனத்தில் இருப்பது.  அந்தக் காரணத்தை,  காரியத்தைச் செய்பவன் அல்லது காரியத்தினால் பாதிப்புற்றவன் வெளியில் சொன்னால்தான் பிறரும் அதை அறிந்துகொள்ளவேண்டிவரும்.  நடப்பிலிருந்து ஊகித்துக் கொள்வதாய் இருந்தாலும் ஊகித்தவன் வெளியிட்டாலன்றி பிறர் அறிதல் கடினம்தான்.

இந்தச் சொல்லில் மாற்று என்பது  மாத்து என்று வந்தது,  மக்கள் பயன்படுத்தும் முறையில் சொல்லமைந்ததைக் காட்டுகிறது. காரணம் இருக்கும் என்னும் மனத்தினருக்கு அதற்கு மாறாக சம்பவம் நடந்ததையே இது காட்டுகிறது.

அகத்து -  உள்ளமைந்த காரணம் உண்டென்று எதிர்பார்ப்பவருக்கு,  மாத்து =  மாற்றமாக  ( நடந்தது  என்பது_.

அகத்து என்பதே அகஸ்து என்று வந்துள்ளது. பேச்சுத் திரிபு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

துவைத்தல் ஏசுதல் இரண்டையும் வைத்து ஒரு சொல் புனையமுடியுமா?

 சொல்புனை  பயிற்சி ஒன்றை இப்போது நடாத்தி, தமிழை மேலும் அறிந்துகொள்வோம்.

துவைத்தல் என்பதொரு சொல். இதைச் சொன்னவுடன் துணியைத்  துவைத்தலென்பதே நினைவுக்கு வருகிறது.  இந்தச் சொல் ஒலி எழுப்புதல் என்பதையும் குறிக்கும்.   ஒலி எழுப்புதலைக் குறிக்க மட்டும்  ஐம்பதுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவற்றுடன் துவைத்தல் என்பதும் சேர்ந்து தமிழ் வளம் காட்டுகின்றது. உலகில் மிகப் பழைய மொழி,  உலகின் மிக்கச் செழுமையான மொழி என்பதில் எந்த ஐயப்படுமில்லை.

ஒலித்தல் - அரற்றல், அரம்பல், அலறல், அழுங்கல், அர்த்தல், ஆலல், இசைத் தல், இடுத்தல், இமிர்தல், இமிழ்தல், இயம்பல், இரங்கல், இரட்டல், இரைத்தல், இணைத்தல், உறற்றல், உறைத்தல், உலம்பல், உழம்பல், உளைத்தல், ஏங்கல், கதித்தல், கரைதல், கலித்தல், கறங்கல், களைத்தல், குமுறல், குரைத்தல், குளிறல், சலித்தல், சிதைத்தல், சிம்பல், சிரத்துதல், சிலம்பல். சிலும்பல், சிலைத்தல், ஞெள்ளல், தழங்கல் , துவைத்தல், தெவிட்டல், தெழித்தல், தொளித்தல், நரலல், நரற்றல், பயிறல், பிளிறல், பிறங்கல், புலம்பல், முரவல், முரற்றல், முழங்கல், விம்மல்.

மொழியைப் பண்படுத்தி வளமாக்கி வைத்துக்கொள்வதற்கு வேண்டிய அரசியல் நிலைத்தன்மையும் ஆட்சி ஒழுங்கும் தமிழ்மக்களுக்கு இல்லாதிருந்தால் இந்த வளத்தை எட்டிப் பிடித்திருக்க இயலாது.

அரட்டுதல் என்ற சொல் ஒலிஎழுப்புதலுடன் அதை அதிகாரத்துடன் செய்தலையும் குறித்ததால்,  ஆட்சியாளனைக் குறிக்கும் அரசன் என்ற சொல் அதிலிருந்து வந்தது.  அரட்டன் என்பது அரசனுக்குத் தமிழில் பழைய பெயர். அதிலிருந்து உலகின் பல மொழிகளில் அரசனுக்கான பெயர்கள் அமைந்தன. ரெக்ஸ் என்ற இலத்தீன் சொல் இதிலிருந்து வந்தது.   ராணா,  ராணி என்பவையும் இதிலிருந்தே வந்தன.  ராவ் என்ற பட்டப்பெயருக்கும் இதுவே அடிப்படை. ராவ் என்பதும் ராய் என்பதும் இவற்றினின்று புறப்பட்டன.

சரியான தண்டனை போல ஒருவனைப் புடைத்து ஒன்றைத் தெளிவாக்கினால் வெளுத்துக் கட்டிவிட்டார் என்று சொல்வது வழக்கமாய் உள்ளது. துவைத்தல் என்பதும் இப்படி ஒருவனைத் தண்டிப்பது போல் அறிவுறுத்துவதைக் குறிக்கும்.  ஆனால் அத்துடன் அவனை ஏசவும் செய்தால், அதற்கு இன்ன்னொரு சொல் வருகிறது.  துவேசித்தல் என்பது அது.  ஏசித்தல் என்பதை ஏச்சினையும் சேர்ப்பித்துக்கொள்வதைக் குறிக்கும்.  துவை+ ஏசித்தல் > துவேசித்தல் என்ற சொல் இதற்கு வருகிறது..  இச்சொல் சமஸ்கிருத ஒலியமைப்பில் நன்கு ஒளிசெய்கின்றது என்பதைக் காணலாம்.

துவை + ஏசுதல் >  துவை+ ஏசித்தல் > துவேசித்தல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 9 ஜனவரி, 2026

அதிசயம் என்பது தமிழ்?

 அதிசயம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.

பொருள்கள் உலகில் தோற்றமளிப்பது மூலப்பொருள்கள்  அல்லது ஆக்குவதற்குரிய பொருள்கள் இசைந்து அல்லது இணந்து  சிறத்தலாலேதாம்.

தண்ணீரில் தீ எரிவது ஓர் அதிசயம்  ஆகலாம். அது நடைபெறுவதற்கு எவ்வெப் பொருள்கள் சேர்ந்தன அல்லது கலந்தன என்பதே கேள்வி ஆகும்.

அதி + இசை(வு) +  அம் >   அதி + இசை+ அம் >  அதிசயம்  ( திரிபுச்சொல்).

அதி +  சை + அம் >  அதிசயம்  ஆகும்.

அதி இசை என்பதில் உள்ள இகரம்  ஒழிந்தது.

சை என்பது ச என்றானது ஐகாரக் குறுக்கம்.

அதிகம் என்ற சொல்லும் தமிழ்தான்.   அது இகத்தல்  என்றால் அது மீறுதல் அல்லது  கூடுவது.   மிகுதியாவது.  அது இக >  அதிக.

இது குறைச்சொல்லாய்  அதி என்று முன்னொட்டாகும்.   சொற்களிலும் வரும்.

தமிழ் இயன் மொழி.  மிக்கத் திரிசொற்களை  சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிடுவது இயன்மொழிக்கு உயர்வு தரும் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது.  ஆனாலும் தொல்காப்பியர் காலத்திலே திரிசொற்கள் புகுந்துவிட்டன. 

இயற்சொற்கள் மட்டுமே கொண்டு மொழி நடைபெறுமானால் அஃது நல்லதுதான்.  தனித்தமிழ்   இனிமை மேலோங்கும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.