ஞாயிறு, 11 ஜனவரி, 2026

துவைத்தல் ஏசுதல் இரண்டையும் வைத்து ஒரு சொல் புனையமுடியுமா?

 சொல்புனை  பயிற்சி ஒன்றை இப்போது நடாத்தி, தமிழை மேலும் அறிந்துகொள்வோம்.

துவைத்தல் என்பதொரு சொல். இதைச் சொன்னவுடன் துணியைத்  துவைத்தலென்பதே நினைவுக்கு வருகிறது.  இந்தச் சொல் ஒலி எழுப்புதல் என்பதையும் குறிக்கும்.   ஒலி எழுப்புதலைக் குறிக்க மட்டும்  ஐம்பதுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவற்றுடன் துவைத்தல் என்பதும் சேர்ந்து தமிழ் வளம் காட்டுகின்றது. உலகில் மிகப் பழைய மொழி,  உலகின் மிக்கச் செழுமையான மொழி என்பதில் எந்த ஐயப்படுமில்லை.

ஒலித்தல் - அரற்றல், அரம்பல், அலறல், அழுங்கல், அர்த்தல், ஆலல், இசைத் தல், இடுத்தல், இமிர்தல், இமிழ்தல், இயம்பல், இரங்கல், இரட்டல், இரைத்தல், இணைத்தல், உறற்றல், உறைத்தல், உலம்பல், உழம்பல், உளைத்தல், ஏங்கல், கதித்தல், கரைதல், கலித்தல், கறங்கல், களைத்தல், குமுறல், குரைத்தல், குளிறல், சலித்தல், சிதைத்தல், சிம்பல், சிரத்துதல், சிலம்பல். சிலும்பல், சிலைத்தல், ஞெள்ளல், தழங்கல் , துவைத்தல், தெவிட்டல், தெழித்தல், தொளித்தல், நரலல், நரற்றல், பயிறல், பிளிறல், பிறங்கல், புலம்பல், முரவல், முரற்றல், முழங்கல், விம்மல்.

மொழியைப் பண்படுத்தி வளமாக்கி வைத்துக்கொள்வதற்கு வேண்டிய அரசியல் நிலைத்தன்மையும் ஆட்சி ஒழுங்கும் தமிழ்மக்களுக்கு இல்லாதிருந்தால் இந்த வளத்தை எட்டிப் பிடித்திருக்க இயலாது.

அரட்டுதல் என்ற சொல் ஒலிஎழுப்புதலுடன் அதை அதிகாரத்துடன் செய்தலையும் குறித்ததால்,  ஆட்சியாளனைக் குறிக்கும் அரசன் என்ற சொல் அதிலிருந்து வந்தது.  அரட்டன் என்பது அரசனுக்குத் தமிழில் பழைய பெயர். அதிலிருந்து உலகின் பல மொழிகளில் அரசனுக்கான பெயர்கள் அமைந்தன. ரெக்ஸ் என்ற இலத்தீன் சொல் இதிலிருந்து வந்தது.   ராணா,  ராணி என்பவையும் இதிலிருந்தே வந்தன.  ராவ் என்ற பட்டப்பெயருக்கும் இதுவே அடிப்படை. ராவ் என்பதும் ராய் என்பதும் இவற்றினின்று புறப்பட்டன.

சரியான தண்டனை போல ஒருவனைப் புடைத்து ஒன்றைத் தெளிவாக்கினால் வெளுத்துக் கட்டிவிட்டார் என்று சொல்வது வழக்கமாய் உள்ளது. துவைத்தல் என்பதும் இப்படி ஒருவனைத் தண்டிப்பது போல் அறிவுறுத்துவதைக் குறிக்கும்.  ஆனால் அத்துடன் அவனை ஏசவும் செய்தால், அதற்கு இன்ன்னொரு சொல் வருகிறது.  துவேசித்தல் என்பது அது.  ஏசித்தல் என்பதை ஏச்சினையும் சேர்ப்பித்துக்கொள்வதைக் குறிக்கும்.  துவை+ ஏசித்தல் > துவேசித்தல் என்ற சொல் இதற்கு வருகிறது..  இச்சொல் சமஸ்கிருத ஒலியமைப்பில் நன்கு ஒளிசெய்கின்றது என்பதைக் காணலாம்.

துவை + ஏசுதல் >  துவை+ ஏசித்தல் > துவேசித்தல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 9 ஜனவரி, 2026

அதிசயம் என்பது தமிழ்?

 அதிசயம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.

பொருள்கள் உலகில் தோற்றமளிப்பது மூலப்பொருள்கள்  அல்லது ஆக்குவதற்குரிய பொருள்கள் இசைந்து அல்லது இணந்து  சிறத்தலாலேதாம்.

தண்ணீரில் தீ எரிவது ஓர் அதிசயம்  ஆகலாம். அது நடைபெறுவதற்கு எவ்வெப் பொருள்கள் சேர்ந்தன அல்லது கலந்தன என்பதே கேள்வி ஆகும்.

அதி + இசை(வு) +  அம் >   அதி + இசை+ அம் >  அதிசயம்  ( திரிபுச்சொல்).

அதி +  சை + அம் >  அதிசயம்  ஆகும்.

அதி இசை என்பதில் உள்ள இகரம்  ஒழிந்தது.

சை என்பது ச என்றானது ஐகாரக் குறுக்கம்.

அதிகம் என்ற சொல்லும் தமிழ்தான்.   அது இகத்தல்  என்றால் அது மீறுதல் அல்லது  கூடுவது.   மிகுதியாவது.  அது இக >  அதிக.

இது குறைச்சொல்லாய்  அதி என்று முன்னொட்டாகும்.   சொற்களிலும் வரும்.

தமிழ் இயன் மொழி.  மிக்கத் திரிசொற்களை  சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிடுவது இயன்மொழிக்கு உயர்வு தரும் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது.  ஆனாலும் தொல்காப்பியர் காலத்திலே திரிசொற்கள் புகுந்துவிட்டன. 

இயற்சொற்கள் மட்டுமே கொண்டு மொழி நடைபெறுமானால் அஃது நல்லதுதான்.  தனித்தமிழ்   இனிமை மேலோங்கும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.


செவ்வாய், 6 ஜனவரி, 2026

குஞ்சு, கிராமம், சமஸ்கிருதத் தொடர்புகள்.

 தலைப்பில் கண்ட ''குஞ்சு''  என்ற சொல்.

ஓரெழுத்து ஒருசொல் என்று யாம் இங்குக் குறிக்க விரும்பும் சொற்கள் பெரும்பாலும் நெடில்  ஆனவை.   வா,  தா , போ முதலிய ஓரெழுத்துச் சொற்கள் இவற்றுள் அடங்கும்.  நாம் குறித்தவை.  நீ என்ற சொல்லும் இத்தகு சொல்லே எனினும், இது வினையன்று.  பதிற்பெயர் ( pronoun )  ஆகும்.  முன்னிலைப் பதிற்பெயர் என்றும் கூறுதற் குரியது இச்சொல். நான் என்பது ஒரு பதிற்பெயர் என்றாலும் இரண்டு எழுத்துக்கள் உண்மையால், அதைத் தனியாகச் சொன்னோம். நான் என்பது இப்போது பேச்சில் மூக்கொலியாக வந்து, ஓரெழுத்துச் சொல் போலவே ஒலிக்கும்.

சங்கதத்தில் பதில் என்பது  தன் இறுதி மெய்யை இழந்து,  பதி என்றாகி,  முதலெழுத்தாகிய ''ப''  என்பது  ''ப்ர''  என்றாகும்.  இறுதியில் ''ப்ரதி''  என்றாகும்.  இதைத் தமிழாக்க விழைந்தால் பிரதி என்னலாம். படி என்பதுதான் ப்ரதி என்றானது என்றும் சொல்வதுண்டு. எனவே ப்ரதி என்ற சங்கதம், சமவொலிச்சொல்.

சங்கதம் அல்லது சமஸ்கிருதம் என்பது சமவொலிச்சொல் என்றால்,  அது ஒரு தனிமொழிச் சொல்  என்பது பொய்மையே. ஆகவே பண்டிருந்தவர்கள், இதை ஒரு வேற்றினத்தவரின் பேச்சு என்று கருதவில்லை. ஒரே இனத்தாரின் வெவ்வேறு வகையான ஒலிப்பு முறை என்று கருதினர் என்பது தெளிவு. ஆகவே சமஸ்கிருதம் எனபது வெளியாரின் மொழி அன்று. அது வெளியாரின் மொழி என்பது வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்துவிட்ட புளுகல். இதை நம்பியே மறைமலையடிகள்,  தேவனேயப் பாவாணர் முதலானோர் தங்கள் வரலாற்று ஓட்டத்து உரைகளை அமைத்திருந்தனர். அப்போது அவர்கள் இருந்த நிலையில் வெள்ளைக்காரன் புளுகிலிருந்து மேலெழுந்து  உரைபகர அவர்களாலும் இயல்வில்லை.  அவர்கள் நிலையில் நாமிருந்திருந்தால் நாமும் அந்தக் கதையில் தான் ஆழ்ந்திருந்திருப்போம்.

ஓரெழுத்து ஒருசொல்,  பல நெடிலானவை.  தனிக்குறில்களும் ஓரெழுத்தாகவே நின்று,  தனிப்பொருள் தரும்.  எடுத்துக்காட்டாக இங்கு கு எனற்பாலதைக் காண்போம்.  கு என்பது குறுக்கம் என்று பொருள்படும்.  கு என்பது சமஒலிச் சொல்லாக ( சங்கதம் அல்லது சமஸ்கிருதம்)  குறுக்கம் என்று கூறினோம் அல்லோமோ?  குக்கிராமம் என்ற சொல்லின் கு என்பது  ஒரு முன்னொட்டாக நின்று '' மிக்கச்சிறிய'' சிற்றூர்  என்று பொருள்படும்.  கிராமம் என்பது பழந்தமிழில் கமம் என்று வரும். கமம் என்பது பல்பொருளொரு சொல். தற்போது கமம் என்பது வேறுசில மொழிகளில் எவ்வாறு வருகிறது என்பதைப் பிற்பாடு கூறுகிறோம்.  கமம் ஒன்றிருந்தால் விளைநிலங்கள் நடந்து சென்றடையும் தொலைவில் அருகிலே இருக்கும். மலாய்மொழியில் கம்-போங் என்ற சொல்லில் கம் - கமம் உள்ளது. கம் என்ற ஆங்கில முன்னொட்டில் கமத்தின் தாக்கம் உள்ளதா?

குன்று என்ற சொல்லிலும் இந்தக் குறுக்கம் உள்ளது.   குன்> குனி என்பதிலும் இந்தக் குறுக்கம் உள்ளது  (குனிதல்).

குன்> குன்+சு >  குஞ்சு  வயதுக் குறுக்கம். உடற்குறுக்கம்.

விரிந்து நில்லாமல் கூடி நின்றாலும் இதுவும் ஒரு குறுக்கம்தான்.  கும் > கும்மி.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.