வெள்ளி, 26 டிசம்பர், 2025

சூடு இயல்விக்கும் விண்கருவி சூரியன் ஆன தமிழ்மொழிப்பண்பு

 அடு மற்றும் அரு என்ற இருசொற்களையும் முதலில் எடுத்துக்கொள்வோம். அடுத்தல் என்றால் அருகிற் செல்லுதல்.  அருகுவைத்தல் என்றால் சூடு ஏற்றும்  ஒரு சட்டியையோ மற்ற வெப்பமேற்றியையோ அடுத்து வைத்தல் என்று பொருள்.  குழந்தைக்கு இசிவு வரும்போது இது செய்யப்படுகிறது. இதுபோழ்து இதற்கு மின்னாற்றலால் இயங்கும் கருவிகள் ஏற்பட்டுவிட்டன. அருகுவைத்தல் என்பது இப்போது யாருக்கும் நினைவிலிருக்கும் என்று யாம் நினைக்கவில்லை. அதற்கான ஆங்கில மருத்துவச்சொல் வழங்கிக்கொண்டிருக்கும். சூரியன் எத்துணைக்கல் தொலைவி லிருந்தாலும். அருகிலிருப்பவன் போல் நமக்கு வெப்பமளிப்பதால்,  அவனுக்கு ''அருக்கர்''  என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது.  அருகு+ அர்>  அருக்கர் என்ற பெயர் உள்ளது.. சிலம்பு+ அதிகாரம் >  சில்ப்பதிகாரம் என்று பெயர் ஏற்பட்டதுபோல் இது ஒரு வலித்தல் விகாரம். மிகு+ ஆர்+ அம் > விகாரம் என்றாகும்.  மிஞ்சு> விஞ்சு என்று திரிதல்போல் விகாரம் இது.. 

உடு - உரு என்ற இணையும் இத்தகு பொருளணுக்கத்தை முன்நிறுத்தும்.  சொற்கள் வெவ்வேறு விகுதிகளைப் பெற்றுச் சொல்லமைந்தாலும்,  பகுதிகளையே ஒப்புநோக்கி இதை உணர்ந்துகொள்க. உடு > உடல்,  உரு- உருவம் என்பன காண்க. பொருள் சற்று வேறுபடுதல்,  ஒப்புமை எவ்வாறு எழுமென்பதைத் தெளிவாக்குகிறது. மனிதன் உருவிற்கு உடை அணிவிக்கப்படுகிறது.  உரு என்பது உடலின் புறக்காட்சி;  உடை என்பதும் புறக்காட்சிக்கு உதவுவதே  ஆகும்.  தமிழ்மொழிக்கு ஒரு சொல்லாக்கப் பண்பு மேவுவது  இதன்மூலம் தெளிவுபடுத்தப் படுகிறது.

மடி - மரி என்பன டகர ரகர திரிபியலுக்கு எடுத்துக்காட்டப் பெறும் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.  இவை பொருத்தமான விகுதிகளைப் பெறும்,  மடிதல், மரித்தல் என்பவற்றில் ஒன்றில் வலிமிகாதும் இன்னொன்றில் வலிமிக்கும் வரும்.  மரிதல் என்ற சொல் அமையவில்லை போலும்.  அதற்குப் பதிலாக, மருவுதல் என்ற வினைச்சொல் அமைந்துள்ளது. மடிதல், மரித்தல் இன்னும் மருவுதல் ஆகிய எல்லாம் மாறுதல் கருத்துக்கள் என்ற அளவில் ஒருமைப்பாடு உடையவை. இங்கு நாம் இத்துணை சொல்லமைப்புப் பண்புகளை எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இவற்றுக்குள் செல்லாமலே,  ஒரு சொல் திரிபைக் காட்டிவிட்டு,  சூடியன் - சூரியன் என்பதைக் காட்டலாம்.  அது போதுமானதாகவே இருக்கும் என்றாலும்,  சிறிது அதிகச் சர்க்கரையை இங்கு தந்துள்ளோம்.

சூடு தருவதே சூரியனின் வேலை.  இது ஒரு நாட்டுப்புற வழக்கி லிருந்து வந்த ஒரு சொல்.  வெப்பி என்று பெயரைக் கூட வைத்திருக்கலாம்.  வழக்குப் பெற்றுவிடுமாயில் மொழியில் இடம்பெற்றுவிடும். சூடு கொளுத்தினும்  கொளுத்தி என்றும் அமையவில்லை. கொளுக்கி என்ற பெயர் கொளுவிக்கு அமைந்தது.   கொளுக்கி என்பது இடைக்குறையாய் கொக்கி என்று வந்தது.  இவை வேறு பொருட்களுக்கு அமைந்தன.

சூரியனுக்கு அமைந்த பெயர்கள் பல.  அவை நீங்கள் அறிந்தவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை














சிப்பந்தி

 பலர் உண்ணும்  அமர்வூட்டு முறையை,  பந்தி என்று சொல்கிறோம்.  இந்தப்  பந்தி என்ற சொல்லினை,  நம் பவணந்தியாரின் முறையைக் கையாண்டு பிரித்துப் பார்த்தால்,  எளிதிற் பொருள்கண்டு மகிழ்வினை எய்தலாம்.  சொல்லினை ஆய்வுசெய்கையில் மகிழ்வு அடைந்துகொள்வது,  மனப்பதிவு ஆய்வு முறைக்கு வித்திடும் என்று எதிர்க்கலாகாது.. எதைச் செய்தாலும் செய்வதில் மகிழ்வு கொள்ளுதல் என்பது ஒரு பங்காற்று முறையாகும்.  

பன்மை+ தி >  பன்+தி >  பந்தி என்று எளிதாக அமைத்துக் காண்க.  மைவிகுதி இணைத்து விலக்கிப் புணர்த்துவது பவணந்தியார் பண்புப்பெயர்கள் அமைவதற்குச் சொன்ன முறை.  இங்கு எளிதிலுணர்தல் என்ற பெறுதல்முறைக்காக இதைப் பரிந்துரை செய்கிறோம்.

பல வேலைத் தலங்களில் ஊழியர் பலர் இந்நாளில் வேலையிலிருப்பர்.  இவர்கள் பெரும்பாலும் பலராயிருக்கும் சிறிய வேலைக்காரர்கள் தாம். சிறு வேலைக்காரர்கள் என்பது தோன்றும் வண்ணம் சிறு என்பதை முன்னில் இட்டு,  சிறுப்பந்தி என்று இணைத்தால் சிறுவேலைப் பலர் என்று பொருந்தும். சிறுப்பந்தி என்பதற்கு  சிற்பந்தி என்று போட்டு,  இன்னும் எளிமையாக்கி, சிப்பந்தி என்று ஆக்கிவிட்டால் என்ன?  வேலை எளிதில் முடிந்து ஒரு புதுச்சொல்லும் கிட்டிவிட்டது.

இயற்றமிழின் இனிமை கண்ட புலவர்-- இதனை ---பகுதிச் சொல்லை மிக்கக் கடிய முறையில் வெட்டி எடுத்துச் சொல்லை இயற்றுவதை,-------  இயற்றமிழ்ப் புலவர்கள் விரும்பார். அவர்களுக்கும் எரிச்சலின்றிச் சொல்லாக்குதல் கடனாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை












செவ்வாய், 23 டிசம்பர், 2025

தனயன் என்பதும் மற்றும் சமஸ்கிருத மொழிப்பண்பும்

 ஐகாரம் இடையில் வந்த சொற்கள் சில,  அந்த ஐகாரம் அகரமாக மாறிவரும். இது ஒரு குறுக்கம்.   சொல்லாக்கத்தில் மட்டுமன்று,  கவிதையிலும் இத்தகு குறுக்கங்கள் வரும்.  இன்னும் பேச்சு வழக்கிலும் ஐகாரம் இடையில் நிற்கும் சொற்கள் அந்த ஐகாரம் அகரமாகத் திரியும்.  வடையில் எண்ணெய் அதிகம் என்பது வடயில் எண்ணெய் என்பதுபோல் ஒலிக்கும்.  டை என்பது ட ஆயினும்  கெடுதல் இல்லாமல் தோன்றும்.

தனையன் என்ற சொல்  தன் ஐயன் என்ற இருசொற்கள் புணர்ந்து ஏற்பட்டிருந்தாலும்  தனயன் என்பதுபோல் ஒலித்து.  சம ஒலியாகத் திகழும். தனையன் என்ற சொல்லும் தனயன் என்று திரித்து எழுதப்பெறுவதும் நடைபெறும்.

தனயன் என்பது சமஸ்கிருதமா என்றால்,  ஆம் என்று சொல்லலாம்.  ஏன் என்றால் இவ்விரண்டு வடிவங்களும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லாதவையாகவே  தோன்றுகின்றன.  பேச்சில் இவ்வாறு  திரிந்து ஒலித்தால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.  பேசுகிறவன் ஐகாரத்துக்கு உள்ளது ஒலிக்கும் நேரத்தில் குறுக்கம் விளைந்ததை அறியாமலேகூடப் பேசுகிறான்.  நெடுங்காலமாக் இப்படித் திரிந்து வழங்குவதால் தனயன் என்பதே சரி,  தனையன் அதன் திரிபு என்றுகூடத் துணிந்துவிடுகிறான்.

சங்கதம் என்பது சமஸ்கிருதத்துக்கு மற்றொரு பெயர்.   கதம் என்ற இரண்டாவது பகவு,  கத்து என்பதிலிருந்து வருகிறது.  கத்துதல்  என்றால் ஒலி செய்தல். கத்து என்ற பகுதி  கது என்று ஆனபின்,  அம் விகுதி பெற்றுக் கதம் ஆகிறது. சங்கதம் என்றால்  சமமான ஒலி என்று பொருள்.  இப்போது இந்தப் பொருள் மிகச் சரியானதாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்து இன்புறலாம். இம்மொழிக்குச் சரியாகவே பெயர் வைத்திருக்கிறார்கள். ''சமஸ்`¬ கிருதம்'' என்பதற்கும் அதுவே பொருள். ஆனால் வெள்ளைக்கர ஆய்வாளன் '' நன்றாகச் செய்யப்பட்டது'' என்று பொருள் கூறினான்.

தன் ஐயன் என்பதே தனயன் ஆகிவிட்டது. மகனை அப்பா என்று அழைக்கிறவர்களும் உள்ளனர். அப்பாகவே இல்லாத ஒருவனை '' அட என்னப்பா இது''  என்று குறித்துப் பேசுவதும் காணலாம். பல மலைகள் ஏறித் தவமிருந்து பெற்ற மகனை மிக்க அன்புடன்  ஐயன் என்று சொல்வோரும் உளர்.  அண்ணனை ஐயன் என்போரும் உள்ளனர். தனையன் என்பது அன்பினால் அமைந்த சொல் ஆகும்.  ஐயன் என்றால் தலைவன் என்பதே பொருள் ஆகும். ஐயா என்பது இன்று பெரியோரைக் குறித்த போதும்  அது ஐயன் என்ற சொல்லின் விளிவடிவம்தான்.

சமஸ்கிருதம் என்பது வெளிநாட்டிலிருந்து வந்த மொழியன்று.  உள்நாட்டில் தோன்றிச் செறிந்து வழங்கிய மொழிதான். ஆதலால் தனயன் என்பது தமிழ்தான்.  சமஸ்கிருதமும்  ஆகலாம். சம ஒலி மொழிச் சொல். நாளடைவில் சமஸ்கிருதம் என்ற பொருள் மறையும்படி  விரிந்து வளமடைந்தது.  பலசொற்கள் இன்று சம ஒலி  அல்லாதனவாய்த் தோன்றலாம்.  அஃது பிற்பாடு விளைந்த மாயை ஆகும். இந்தோ ஐரோப்பியம் என்பது வெள்ளைக்காரன் பிற்பாடு ஏற்படுத்திய இன்னொரு மாயை.  

தன் + ஐயன் >  தன்னையன் >  தனையன் > தனயன்> தநயன்.

இன்னொரு வகையில்:

தன் + நயம்>  தன் நயன்> தநயன்> தனயன்

அப்பன் பெரிதும் விரும்புவதால் மகன் நயமுடையவனாகிறான்.

தனக்கு நயம் சேர்ப்பவன் மகன்.

மகனை உயரியோனாய் அப்பன் போற்றுவான் என்பதும் காண்க.

துவட்டா ஈன்ற தனயன் ( திருவிளையாடற்புராணம். இந்திரன்பழி.8)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது