செவ்வாய், 9 செப்டம்பர், 2025

சமரசம் - பல்நோக்குப் பொருண்மை

 சமரசம் என்ற சொல்லைத் தமிழிலிருந்து  ஆய்வு செய்வோம்.

சமரசம் என்பதற்குக் கூறப்படும் பொருள்களாவன:  1  ஒன்றிப்பு,  2 தொகையாக விருத்தல்  3  வேறுபடாமை  4  ஒற்றுமை 5 நடுநிலைமை  6 இணக்கப்போக்கு  என்று பலவாறு கூறலாம்.  இவற்றின்கண்  உள்ள சிறப்புப் பொருள் ஒவ்வொன்றும் இச்சொல்லைக் கையாள்கின்ற நுட்பமுறையால் வேறுபடக் கூடும்.

இதன் பகவுகள்  சமம் என்பதும்   இரசம் என்பதும்  என்றும்  சொல்வர்.  ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் சாறுதான்  ரசம் எனப்படுகிறது.  சுவை என்ற சொல்லைப் போலவே இரசம் என்னும் சொல்லும் திடப்பொருட் சுவை மட்டுமேயன்றி  மனம்சார் பண்பினால் ஏற்படும் சுவையையும்  காட்டற்கு அமையும் என்பதறிக.   

சமரசம் என்பதை  '' ஒத்த சாறுண்மை''  என்று  அல்லது  சாற்றொப்புமை என்று தனித்தமிழில் பெயர்த்துக் கூறலாம். இங்குத் திடப்பொருள்  சாராத மனப்பொருள் விளக்கத்திற்கு  சற்றொப்புமை என்பது பொருந்தவும் கூடும்.

இரசம் என்பது வடிகட்டி இறுத்து எடுக்கப்படும் நீர்ப்பொருள்  என்னலாம்.  இறுத்து அசைத்து எடுக்கப்படுவது என்பதே இதன் பொருள்.  இறு+ அசை+ அம்> இறசம் என்பதே  இரசம் என்றானது. இதனை அசைத்து இறுத்து என்று முறைமாற்றிக் கொள்க. றகரம் ரகரமாக மாற,  அசை என்பதிலுள்ள ஐகாரம் குறுகி  அகரமாகி,  சகர என்று நிற்க.  ச்+ அ > ச;  சொல்லானது  இற்+ அச் + அம் என்று புணர்ந்து,  இறசம்  ஆகி,  சொல்லாக்கத்தில் றகர வருக்கங்கள் ரகர வருக்கங்களாகி வருவன என்பதால்,  இரசம்  ஆனபின்  தலையிழந்து  ரசம் ஆயிற்று என்பதை  அறிந்துகொள்க.  இத்தலை இழப்பு,  அரங்கசாமி என்பது  ரங்கசாமி என்பதுபோல  ஆனதே ஆகும்.

சம இறசம்  என்பதே அன்றி  ,   சம அரசம் என்பதும்  இவ்வாறு கொள்ளத்தக்கது ஆகும்.  சமமான இரு அரசுகளின் ஒன்றுகூடுதலை  சமரசம் என்பதும் ஒக்குமென்க.  சம இரை, சம உரை என்பவற்றை எல்லாம்  இங்கனம்  பொருத்தலாம்.  இவற்றுக்கேற்ப விளக்கமும்  முன்வைக்கலாம்.

இரு அரசுகள் ஒத்த பலம் உடையவர்களாயின் இவ்விருவரிடையிலும் சண்டைகள் பெரும்பாலும் நிகழா என்பதை அறிக.  சண்டையிடுவது வெற்றிக்கு.  இல்லாமல் ஒழிவது திண்ணமாயின் அதற்குச் சண்டையிடாமல் ஒற்றுமை பேணுதலே சிறந்தது 

சமரசம் என்ற தமிழ்ச்சொல் பலநோக்குப் பொருண்மை உடைய சொல் என்பதை உணர்ந்து போற்றிக்கொள்க.

தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவில் தோன்றி வளர்ந்த மொழிகள்  என்பதால் இவற்றில் இதை எதுவென்றாலும் ஒக்குமென்று முடிக்க.

இவற்றை வேறுபடுத்தியுரைப்பாரும் உளர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை உடையது.


வெள்ளி, 5 செப்டம்பர், 2025

படனை > பஜனை

 இந்தச் சொல் பழங்காலத்தில்  படனம் என்று  இருந்தது.  பின்னர் இது படன அல்லது பஜன  ஆகிப் பஜனை என்று  எழுதப்பட்டு இன்றும் இவ்வாறே வழங்கி வருகிறது.

சாவு என்ற சொல்லுடன் தொடர்புடைய சவம் என்ற சொல் பிணத்தைக் குறிப்பது.

சா> சா+ அம் >  சவம் என்று  குறுகி விகுதி பெற்றுத் தொழிற்பெயராவது காண்க.

தாள் என்ற சொல்லிலிருந்து வருகிற சொல் அம் விகுதி பெற்றுத் தளம் என்று குறுகி  அமைகிறது.    வா என்ற சொல்லினின்று  வந்தான் வருகிறான் என்ற சொற்களும்  வகரமாகக் குறுகிவிட்டன.  இது தமிழ்மொழியில் இயல்பு  ஆகும்.

இதுபோலவே படனம் என்ற சொல்லும்.  பாடு+ அன்+ அம் >  பாடனம்> படனம் என்று குறுகும்.

படனம் > பஜன > பஜனை.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

பகிர்வுரிமை உள்ளது

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

ரவை என்ற சொல். ( துப்பாக்கியின் ரவை).

 இச்சொல்லினை இன்று  ஆய்வு செய்வோம்.

சுழல் துப்பாக்கிகளில் ரவைகளென்னும் தோட்டாக்களை வைப்பதற்குத் துவாரத்துடன் கூடிய சுழலி இருக்கும்.  சுழலியின் துவாரத்தில் வைப்பதற்குரிய தோட்டாக்காக்கள் ரவைகள் எனப்படும்.

இருக்கும்படியாக வைப்பதுதான் இரு + அ + வை > இரவை ஆகும்.   இச்சொல் பின்னாளில் தன் இகரத்தை இழந்து  ''ரவை' ' என்று மட்டும் வழங்கியது.

இரவை என்பதில்  இரு என்பது சொல்லின் பகுதி.  அகரம் இடைநிலை.  வை என்ற இறுதியே விகுதி ஆகும்.

தோட்டில் இருப்பது இரு அ வை > இரவை. ( ரவை).  தோடு > தோட்டா  ( தோடு+ ஆ)   எனவும் படும்.   ஆ என்பதும்  ஒரு விகுதி.    நில் > நிலா எனக்காண்க.  பல சுளைகள் உள்ள பழம் பலா  ( பல் + ஆ).    தோடு> தோட்டா.  இங்கு டகரம் இரட்டித்தது,  இவ்வாறு இரட்டித்தல் வினையிலும் பெயரிலும் நிகழும்.   பாடு> பாட்டு என்பது அறிக.  காடு> காட்டா என்ற சொற்புணர்ச்சியும் காண்க.  இது காடு+ ஆ என்பதுதான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை.