செவ்வாய், 28 ஜனவரி, 2025

தாராளம் சொற்பொருளோடு பிறப்பு

 தாராளம் என்னும் சொல்லின் பிறப்பும் பொருளும்  காண்போம் ,

இந்தச் சொல்லின் மூன்று பகவுகள் உள்ளன. தார், அடுத்து ஆள் அம் என்ற விகுதி,   ஆள் என்பதை இடைநிலையாகக் கொள்ளினும்   இழுக்காது,

.ஆளம் என்ற புணர்ப்பினை ஒரு விகுதியாகவும் கொள்ளலாம், ஏராளம், மலையாளம், கொலையாளி எனப் பல சொற்கள் உளவால், இதையும் சரி என்றே கொள்ளலாம்.   பொருளறிவதற்கு எது மிக்க வசதிதருவதாய் உள்ளது எனற்பாலதைப் பொறுத்தே இதை அமைவு செய்யவேண்டும்.  ஆளம்> ஆளி ( மனிதரைக் குறிப்பது)

மணவாளம் என்ற சொல் அமையவில்லை.  தன்மை குறிக்கும் இதற்குத் தேவை ஏற்படாமையினால் இல்லை என்று அறிகிறோம்,  மணவாட்டி என்ற சொல்வடிவம் உள்ளது,

ஆளம் என்ற சொல்லில் ஒரு குழப்பமும் இல்லை.  ஆனால் தார் என்ற சொல்லுக்கும் தாறு என்ற சொல்லுக்கும் தொடர்பு உண்டு என்று அறிஞர்கள் எண்ணினர். இதைப்போல மாறும் அல்லது திரிபுறும் இன்னொரு சொல் மார் என்பதே. . மாறு என்னும் பதத்திற்கும் மார் - மர்( அடி ) - மரு - மருவு என்னும் சொல்வடிவங்களுக்கும் பிறப்பியல் தொடர்பு உள்ளது. இத்தன்மையை முன்னிருந்த ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர்.

மேற்கூறிய கருத்து யாதெனில் யாம் இங்கு புதியது ஒன்றும் கூறவில்லை என்பதுதான். படிகொள்வோர் செயல் மறுத்தற்கு இங்கு நூல்கள் எவற்றையும் குறிக்கவில்லை.

தார் என்பது ஓர் ஆயுதம்.  மாட்டுக்குத் தார்போடுதல், தாறுப் போடுதல் என்று இருவழியிலும் இது வரும். முடிவில் இரும்பு முள் உள்ள ஆயுதம் போர்க்கருவி யாகவும் பயன்பட்டது,  ஆதலின் தார் ஆள் என்பது இத்தகைய கருவி உடையோனைக் குறித்தது என்பது ஒருபொருள்.  படைமறவர்கள் எங்கும் அதிகமாகவே கொடுப்பதும் எடுப்பதும் உடையவர்கள். ஆதலில் எல்லை வைத்துக்கொள்ளாத தன்மையைத் தாராளம் என்பது குறித்தது.

இச்சொல்லை ( தாராளம்)  தரும்தன்மை உடைய ஆள் என்றும் கொள்ளுதல் இன்னொன்று ஆகும். தருதல் குறிக்கும் தரு என்ற அடியும் தார் என்று திரியும். தருவான் என்பது தாருமே என்று முன்னிலை வடிவம் கொள்ளும்.   ஆதலால்,  தார்+ ஆளம் என்பது கொடைசெய்வோனைப் போல என்றும் பொருள்தருதல் காண்க.

தார் > தா என்பது இலத்தீனில் do  என்று திரியும். donation என்ற ஆங்கிலச்சொல்லில் இந்த டோ இருக்கிறது.

தா என்பது தமிழ்ச்சொல்.  தமிழ் முச்சங்க மரபு உடைய மொழி.

இதன்மூலம் தாராளம் என்ற சொல்லின் பொருளை உணர்ந்தீர்.

தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச்சங்கத்து நூல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்..








.  



சனி, 25 ஜனவரி, 2025

மிராசுதார் என்பது

ராசன் என்ற சொல் ராசு என்றும் உகர இறுதியாகத் திரியும். ராஜன் இராஜன் என்பவெலாம் நீங்கள் அறிந்தனவே.  அரசன் என்ற சொல் முன்னர் எம்மால் இங்கு விளக்கம் பெற்றுள்ளது.  அல்லாமலும் ஏனைத் தமிழாசிரியர்களும் அரசன் என்ற சொல்லே முன்னரே ஆய்ந்தறிந்துள்ளனர். ரெக்ஸ் என்ற சொல்லும் பெண்பாலாகிய ரெஜீனா என்பதும் தமிழ்ச்சொல்லினின்று திரிந்தனவே.  தமிழர்கள் கடல்வணிகம் செய்தவர்கள் ஆதலினால் இச்சொல் உலக முழுவதும் பரவியுள்ளது,

ராசு என்பது மிராசு என்பதில் பின் ஒட்டியுள்ளபடியால் இச்சொல் லே  மிராசு என்பதில் ஒட்டியுள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்..  மீ என்பது மீது, மேல் என்பவற்றோடு தொடர்பு உடையதாகும்.

 மிராசு என்றால் அவனுக்கு மேல் ஓர் காவலன் இருந்தான் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்,   இதுவே உண்மையும் ஆகும்,   இவனே அரசன் என்று கூறலாம் என்றாலும் அதற்கு விளக்கம் தேவைப்படும், மிராசு என்பதற்கு அரசன் என்ற பொருள் இல்லை.  இது ஒரு பிற்காலத்துச் சொல்.

அரசர் முதலியோருடன் அதிகாரத்தால் மிடைந்தவர்களே மிராசு என்போர்.  மிடைதல் என்ற சொல்லின் மி என்ற எழுத்தும்  அரசு என்பதும் சேர்ந்து இச்சொல்லைப் பிறப்பித்தது என்றும் கூறுதற்குரியது இச்சொல்.

மிராசு என்பது தமிழ் மூலங்கள் உடைய சொல்.

அறிக மகிழ்க.





வெள்ளி, 24 ஜனவரி, 2025

ரோகிணி என்ற சொல்லமைப்பு

 ஓங்கு என்ற தமிழ்ச்சொல்  ஒரு மெய்யெழுத்துக் குன்றி,  ஓகு என்று வரும். ஓங்கு என்பதன் பொருள்  "கூடுதல்" ஆவதுதான்.  நடப்பவன் ஓடும்போது அவன் இடத்தை அடையும் நேரம் குறைகிறது.  குறைந்த நேரத்தில் கூடுதலான இடப்பெயர்ச்சியை அடைகிறான். ஆகவேதான்  டு என்னும் வினையாக்க விகுதி பெற்று  ஓ+டு என்பது ஒரு சொல்லாகிறது. இடம் அடைதல் குறிக்கும் கு விகுதி பெற்று ஓ+கு >  ஓங்கு ஙகர மெய்பெற்று மென்மை அடைந்த சொல்லாகும். வேண்டியாங்கு இந்த இடைத்தோன்றிய ஒற்று நீங்கு  இடைக்குறையாவதும் ஒலிநூல் பொருத்தமுடைய  அமைப்பே ஆகும்,

ரோகிணி நட்சத்திரத்தின் பெயரில்  இடையிலிருக்கும் சொல்தான் ஓங்கு> ஓகு என்பது.

தன்வினை பிறவினை என்று வினைகளைப் பாகுபடுத்துவர். வீழ்தல் என்பது தன்வினை. வீழ்த்தல் என்பது பிறவினை.  புதிய வீரனை பழைய படைவீரன் வீழ்த்தினான் என்பது, தானே வீழாமல் இன்னொருவனை விழச்செய்தல் என்பது தெளிவாகக் காட்டப்பெறுகிறது.  ஓங்கு என்ற சொல் இவ்வாறே ஓக்கு என்று பிறவினைப்படுத்தப்படும். ஓக்கு என்ற வினைச்சொல் தொல்காப்பியத்திலும் இலக்கியங்களிலும் கிடைக்கிறது.  இன்றைக் கவிதைகளில் இச்சொல் வருவதில்லை.

ஆகவே இடைக்குறையானால் ஓங்கு ஓக்கு என்ற இரண்டுமே  ஓகு என்று வருவதால்  தன்வினை பிறவினைப் பேதத்தை இவற்றுள் பொருளை ஆராய்ந்துதான் கண்டுபிடிக்கவேண்டும்.

ஓகு என்பது அம் விகுதியை மேற்கொண்டு ஓகம் என்றாகி  நீர் ஓங்குதலைக் குறிக்கும்:  அதாவது வெள்ளப்பெருக்கு.  நீர்கூடுதலாவது என்று முன்சொன்னசொல்லைப் பயன்படுத்தி  விளக்கலாம், கம்பநாடன் இதைப் படைப்பெருக்குக்குப் பயன்படுத்தியுள்ளான்.

உருவில் அழகாக இருக்கும் நட்சத்திரம் அல்லது விண்மீன்  தான்  இது.  உரு+ ஓகு+ இணி > உரோகிணி  ஆகிறது.  இன் என்ற சொல்லும் இண் என்ற சொல்லும் எதுவந்தாலும் இப்பெயர் அமைந்துவிடும்.  இண் என்பது இணைப்புக் குறிக்கும் அடிச்சொல்.  இன் என்பதும் இணைப்பையே குறிக்கவல்லது,   கண்ணின் கருமணி என்னும்போது இன் என்ற உருபு வந்து இணைப்பைக் காட்டுவதை அறிந்துகொள்ளுங்கள்.

இலக்கிய மேற்கொள்களை விலக்கி எழுதியுள்ளோம்.  இவை வேண்டுமானால் எழுதுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்