வெள்ளி, 2 ஏப்ரல், 2021

நரி - பெயர் அமைவு. அடிச்சொல்: நரு இன்னும்...

 நரி என்னும் சொல் நாய் போலும் ஒரு விலங்கைக் குறிப்பது. இது காட்டுவிலங்காகும்.  இதை விலங்கு காட்சி சாலைகளிலும் வைத்திருக்கிறார்கள். அன்றி வீடுகளில் யாராலும் வளர்க்கப்படுவதில்லை என்று தெரிகிறது.

நரிகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. இதற்குத் தமிழில் ஏற்பட்ட பெயரும் இதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. இது தந்திரமுள்ள விலங்கு என்பர். கதைகள் பலவற்றில் நரி தவறாமல் வந்து சிறு பிள்ளைகளை மகிழ்விக்கிறது.

நரி என்ற சொல்லின் அடிச்சொல் நரு என்பது.   நெருங்கு என்ற சொல்லில் உள்ள நெரு என்ற அடிச்சொல்லும் நரு என்பதும் தொடர்புள்ளவை.

நரு >< நெரு.

நருள்  -  மக்கள்நெருக்கம் .  " நருள் பெருத்த ஊர்".

நரு >  நரி :  அதுபோலும் விலங்குடன் நெருக்கமாக (கூட்டமாக) வாழும் விலங்கு.

நரு >  நரன்:  மனிதன்.  ( மனிதனும் தன் போலும் பிறருடன் நெருங்கி வாழ்பவன் தான். அதனால்தான் நரன் என்னும் இப்பெயரைப் பெற்றான்)

gregarious  என்னும் ஆங்கிலச் சொல் இதை விளக்கவல்லது.

Man is a gregarious animal. 

நரு + இ =  நாரி.  ( பெண் மனிதர்).  முதனிலை (முதலெழுத்து நீண்டு அமைந்த சொல்..  இவ்வாறு நீண்ட சொற்களைப் பழைய இடுகைகளில் காண்க).இங்கு நரு என்னும் அடிச்சொல் மாற்றுப்பாலானுடன் நெருங்கி வாழ்தலைக் குறிக்கும்.  

பரு + இய > பாரிய  என்ற சொல்லிலும் இங்ஙனம் சொல் நீண்டது.

பரு > பார் ( உலகம் )  இதுவும் நீண்டமைந்த சொல்லே.  பர > பார் எனினுமாம்.

பரு > பருவதம் > பார்வதி  -  நல்ல எடுத்துக்காட்டு.

---  என்று சில காண்க.

ஒன்றை நெருங்கி இன்னொன்று நிற்றல் " நிர >  நிரை" எனப்படும்.

நிர >  நிரை:  ( நிரையசை -  யாப்பிலக்கணம்).

நிர >  நீர்  ( இதன் அடிப்படைப்பொருள் இடையில் விலகல் எதுவுமின்றி ஒன்றாகி நிற்கும் பொருள் என்பதுதான். அதனாலேதான் இப்பெயர் இதற்கு.

இக்குறளை நினைவிலிருந்து சொல்கிறேன். சரியாகச் சொல்கிறேனா என்று நீங்கள்

பார்த்தறிக.  

நிரைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின் நீர பேதையார் நட்பு.

இது இணையத்தில் கிடைத்த மணக்குடவர் உரை:

பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு; மதியின் பின்னீர்மை போல ஒருநாளைக்கொருநாள் தேயும், பேதையார் கொண்ட நட்பு என்றவாறு.

இஃது அறிவுடையார் நட்பு வளரும் என்றும் அறிவில்லாதார் நட்புத் தேயும் என்றும் கூறிற்று.

நான் எழுதிய குறள் சரி என்று பார்த்துக்கொண்டேன். நன்றி.

அழகான குறள். பொருளும் மலைபோல் சிறந்தது.

நிரத்தல் என்ற வினையின் பொருளும் அறிந்துகொள்ளுக.

உணவை நிரந்து பரிமாறு,  நிகழ்ச்சி நிரல் என்ற வழக்குகளை நோக்குக.

நுல் அடிச்சொல்.  நுல் > நில்.  இடம் நீங்காமை குறிக்கும்.  நுல் > நூல். ( நீங்காமல் செறிவுமாறு திரிக்கப்பட்டது ).

நுல் > நுர் > நுரை:  நீங்காமல் (ஓட்டி)  காற்றுப்புகுந்து அடைவுடன் தோன்றி நெருங்கி நிற்பது.

நரு > நரல்: இது வினைச்சொல்லாக "நரலுதல் "  என்று வரும்,  இது ஒலித்தல் என்று பொருள்பட்டாலும்,  பல ஒலிகளின் கலப்பையே சிறப்பாகக் குறிப்பது. இதற்கு எடுத்துக்காட்டு  தேனீக்கள் என்பர். நரிகள் ஒன்றாகக் கூட்டமாகச் செல்பவை என்றாலும் ஒலியும் ஒன்றாகச் சேர்ந்து எழுப்புவனவே ஆகும். இக்காரணமும் இதற்குப் பெயர் உண்டாகப் பொருந்தும் காரணமே ஆகும்.

நரல்வு என்ற சொல்லும் உள்ளோசை எழுதல் குறிக்கும். ( இசைக்கருவி) 

மனிதனும் ஒலிசெய்யும் திறனுள்ளோனே யானாலும், கூடிவாழ்வோன் என்ற பொருள்கூட்டுதலே சிறப்பு என்று கருதலாம். ஆயினும் இங்கு தரப்பட்ட சொற்பொருள் ஆய்ந்து நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். எனக்கு இரண்டும் ஏற்கத்தக்கனவாகவே தோன்றுகிறது.  எதை ஏற்றாலும் இனிமையே.

மனிதனைப் பலியிட்டுச் செய்யும் யாகம் முன் காலங்களில் நடைபெற்றன. இன்றும் சொந்தப் பிள்ளைகளை நரபலி கொடுத்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.  இது நரமேதம் எனப்படும்.

கடல் எப்போதும் அலைகளால் ஒலிசெய்வதால் அதற்கு " நரலை " என்ற பெயரும் உண்டு.

நரவரி என்பது நரசிங்கம் என்று பொருள்தரும்.   நர + அரி.  இதுபின் நரகரி என்று திரிந்தது.  வ> க திரிபு,

இவண் அதிகமிருப்பதால் தளர்ச்சி உண்டாக்காமல் இத்துடன் நிறுத்திப் பின்னொருநாள் தொடர்வோம். (பின்னூட்டம் மூலம் கேட்டுக்கொண்டாலன்றி,  ஒரே தொடர் சலிப்பை ஏற்படுத்தக்கூடுமாதலால் சில காலம் சென்றபின்பே அதை மீண்டும் மேற்கொள்வோம் ).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்



 






Devotion is very much alive as you see (Panguni Uthiram festival)


 

செவ்வாய், 30 மார்ச், 2021

குடைவு, குடம், குடை, குகை,

{இதைச் சுருக்கமாக எழுதவேண்டியிருந்ததால்,  சில புரியாமல் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். விளக்குவோம். நன்றி. }


 குடு > குடை > குடைவு என்ற சொல்லைப் பார்த்தபின் தான் தெளிவே பிறக்கும். குடு என்பது ஓர் அழகுமிக்க அடிச்சொல். ஒரு குடத்தின் எல்லைகள் சுற்றிவந்து தொடங்கிய இடத்திலே முடிந்து வளையமாய்ப் பொருந்துதலைக் காணலாம். அடிப்பகுதி வளையம் சிறுத்தும் இடை பெருத்தும் வாய்ப்பகுதி மீண்டும் சிறுத்த கண்ணறியாத இடைவெளியும் இல்லாத வளையங்கள் குடத்தில் உள்ளன. குடவாய் வழியாகக் கைவிட்டால் அது ஒரு குடைவமைப்பு என்று தெரிந்துகொள்கின்றோம்.  இதேபோலும் ஒரு குடைவு ஒரு கற்குன்றில் இருந்தால் அது குகை என்றாகிறது.    குடை > குகை.  இது ஓர் உயிர்மெய் எழுத்துத் திரிபின்மூலம் அமைந்த சொல். இதுபோலும் திரிபுகள் வெளிப்படையாகத் தெரியாதவை.  குடை என்று மழைக்கு நாம் பிடிக்கும் துணைப்பொருளும் கைபிடி மேலாகும்படி பிடித்தால் குடைவைக் கண்டுகொள்ளலாம். அதை நிமிர்த்திப் பிடிக்க அது கூரைபோல் மழைநீரிலிருந்து நம்மைக் காக்கின்றது. ( இருபுறமும் சாய்வாகவும் நடுவில் மேலெடுத்தும் கூராக அமைக்கப்படுவது கூரை. )

குடை > குகை என்பது  அகு>  அடு என்பதுபோலும் திரிபு.   கு என்பது சேர்விடக் குறிப்புச் சொல்.  தமிழில் வேற்றுமை உருபுமாகும். அடு என்ற சொல்லில் டுகரம் குகரம்போல் செயல்பட்டது.  இதை நேரம் கிட்டும்போது விளக்குவோம்.

குடு என்பதன் முந்து வடிவம் குள் என்பதுதான்.   குள் -  குடு.  இதுவேபோல் குள்> குகையாகும்.  பள் > பகு என்றாகும்:  பள்ளம் ( நிலப்பிளவு).  பள் > பகு  ( பிளவாக்குதல்.  ) பள் > படு > படுகை என்பதும் பள்ளமே  ஆகும். இத்தன்மைபோல் குள் > குடை;  குள் > குகையாகும்.  இரண்டிற்கும் அடி ஒன்றுதான்.

குள் > குளம் என்பதில் நீர் சென்று சேர்விடம் என்பதை அறிவிக்க,  கு முன்னரே வந்து நிற்கிறது. தொடங்கிடமும் சேர்விடமும் குளத்தைச் சுற்றிவர ஒன்றாகிவிடுகிறது. இருவகையிலும் பொருத்தமே. நீர் பெரும்பாலும் குளத்தின் உள்ளிருப்பதால்  கு + உள் =  குள் > குளம் என்று அறியமுடிகிறது. ஈருகரங்களில் ஒன்று வீழ்ந்தது சொல்லாக்க நெறியாகும். இவ்வாறு ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் ஒரு திரைக்காவியம்போல் கதையன்றோ சொல்கிறது.

"அந்தப் பெண் பேரழகி" என்னலாம்.  அழகையும் அழகின்மையையும் வரணித்துச் சொல் என்று குறுக்குசாவல் செய்தால் ஒரு சாட்சி எப்படிச் சொற்களால் உரைக்க இயலாதோ,  அப்படியே சொல்லமைவில் உள்ளீட்டுக் கவின்மையை கிளக்க - விளக்க முடிவதில்லை. இருப்பினும் அறிய முயல்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சில திருத்தங்கள் :  2141-31032021