வெள்ளி, 25 டிசம்பர், 2020

நடிகை சித்திரா ( தமிழ்நாடு) மரணம்

எதிர்காலம் முற்றறிந்த இப்புவியோர் யாவருள்ளார்

எதிர்காலம் அறிவாரே ஆமாகில் கடவுளவர்

அதனாலே மணவாழ்விற் புகுமுன்னே கணித்தறிவார்

மதியுரையால் எதிர்வரவை முதலறிந்து மணம்புகுவீர்.


அறிமுன்னம் இல்வாழ்வின் நெறிபுகுந்தால் மரணமுதல்

வருதுன்பம்  அளவிறந்த பெருந்தொகையே அறிந்திடுக!

சிறுதிரையின் நடிமகளாம் சித்திரையின் நொடிமறைவை

அறிந்தபலர் இருந்துதிகழ் அணியுலகு இதில்வாழ்ந்தீர்.


கொலையென்பார் இலையென்பார் கொலைதனைத்தான் எனச்சொல்வார்

நிலைகாணின் தலைகடந்த அலைகள்பல எழுந்துளவே!

உளசொலவு நிலைத்திடவும் பிறசொலவு விலக்கிடுக;

நிலவுலகில் வருவனவே  அறியுறைவார் நிகருளரோ?



பொருளுரை:


எதிர்காலம் முற்றறிந்த இப்புவியோர் யாவருள்ளார் - இந்தப் 

நில உலகில் எதிர்காலம் முழுவதும் அறிந்த மனிதர்கள்  

யாருமில்லை;


எதிர்காலம் அறிவாரே ஆமாகில் கடவுளவர்  -  எதிர்காலம் 

அறிந்துவிட்டால் அவர் கடவுள் என்னலாம்;


அதனாலே மணவாழ்விற் புகுமுன்னே கணித்தறிவார் - இதன்

காரணமாகத்தான் திருமணத்துக்கு முன் சோதிடம் 

பார்க்கிறார்கள் (பொருத்தம் முதலியவை).


மதியுரையால் எதிர்வரவை முதலறிந்து மணம்புகுவீர்.-  சோதிடர்

அறிவுரையைப் பெற்று எதிர்கால வரவுகளை முதலில்

அறிந்துகொண்டு திருமணவாழ்வில் புகவேண்டும்; ( இதனால்

நீங்கள் இழப்பது சோதிடருக்குத் தரும் கூலி மட்டுமே; இது

பெரிய இழப்பு அன்று.)


அறிமுன்னம் இல்வாழ்வின் நெறிபுகுந்தால் மரணமுதல்-

இதனை அறிந்துகொள்ளும் முன்பே கல்யாணம் செய்துகொண்டு

குடும்ப வாழ்க்கை நடத்தினால் (துன்பம் ஏற்படக்கூடும்,  அதைத் 

தவிர்க்க )  மரணயோகம் இருக்கிறதா,  

என்பது தொடங்கி;


வருதுன்பம்  அளவிறந்த பெருந்தொகையே அறிந்திடுக!---

வாழ்க்கையில் காணப்போகும் இன்னல்கள் பற்பல, அவற்றை

அறிந்துகொள்ளாவிட்டால் எவ்வாறு, தெரிந்துகொள்ளுங்கள்.


சிறுதிரையின் நடிமகளாம் சித்திரையின் நொடிமறைவை -  

சின்னத்திரை நடிகை சித்திரா விரைந்து மரணம் எய்தியதை;


அறிந்தபலர் இருந்துதிகழ் அணியுலகு இதில்வாழ்ந்தீர். ---

தெரிந்துகொண்டு இவ்வழகிய உலகில் இருந்து நல்லபடி

வாழ்கின்றீர்கள். ( இந்த உயிரிழப்புக்கு உங்களால் செய்ய

முடிந்தது ஒன்றுமில்லையே!)  அதாவது சோதிடமாவது அதை

மற்றியிருக்குமே! ஒருவேளை அதைக் கண்டறிய முடிந்திருந்தால்.


கொலையென்பார் இலையென்பார் கொலைதனைத்தான் 

எனச்சொல்வார்---அது கொலை என்றும்,  இல்லை என்றும்,  

தற்கொலை என்றும் (பலவாறு ) சொல்வர்;


நிலைகாணின் தலைகடந்த அலைகள்பல எழுந்துளவே! --

நிலவரத்தைப் பார்த்தால் தலைக்குமேல் அலைகள் தோன்றியுள்ளன;


உளசொலவு நிலைத்திடவும் பிறசொலவு விலக்கிடுக;  -  உண்மை

சொல்லுதலை நிலைநிறுத்துங்கள்;  பிறவற்றைச் சொல்வதை

விலக்குவதே நன்று;


நிலவுலகில் வருவனவே  அறியுறைவார் நிகருளரோ? - இந்தப்

புவியில் வருவதை அறிந்து வாழ்பவர்கட்கு நிகரானவர் யார்

உள்ளனர், யாருமில்லையே.





உருவணிமை: அப்புதல் மற்றும் apply

 அவ்வப்போது சில ஆங்கிலச் சொற்களும் ஒலிப்பிலும் பொருளிலும் அண்மித்து நிற்றலை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  உள்ளார்ந்த தொடர்பொன்றும் இல்லாமலே சொற்கள் ஒருமைகொண்டு நிற்றலும் உண்டு. மனிதர்களைப் போலத்தான்: வேறு வேறு கண்டங்களில் பிறந்திருந்தாலும் சிலவேளைகளில் உருவொற்றுமை யுடன் ஒருவருக்குப் பதில் இன்னொருவர் நடிப்பது முதலானவற்றைச் செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இவ்வாறின்றி  இருவேறு மொழிகளில் உண்மைத் தொடர்பு இருந்து அதனால் சொற்களில் உருவணிமை உள்ளதாதலும் நிகழ்தலுண்டு. ஒருமொழியிலும் இன்னொருமொழியிலும் தொடர்பு கற்பிக்கவும் உடனிகழ்வின்மையை உறுதிசெய்யவும் குறைந்தது நானூறு சொற்களாவது கிட்டுதல் வேண்டும் என்று ஆசிரியர் சிலர் வேண்டுவதுண்டு. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் தொடர்பு காட்ட அத்தகைய ஓர் இடுகை முப்பது ஆண்டுகளின் முன் கிட்டிற்று,  ஆனால் இப்போது அது இல்லை என்பர். இவற்றை நீங்காது வைத்திருத்தலுக்கும் செலவு உண்டாதலின் சில நீக்கப்படுதல் உண்டு. இருக்கும்போது அறிந்து வைத்திருக்காமல் அஃது போனபிறகு கவலை காட்டுவதில் தமிழர்கள் முன்னணி கொள்வதுபோல் தெரிகிறதென்பது உண்மைதான்.

ஒரு மருந்தை புண் முதலிய பட்ட இடத்தில் அப்புவதென்பது யாண்டும் நிகழ்வதே.  அப்புதல் அத்துதல் என்பன போலிச்சொற்கள். இவ்விரண்டிலும் அப்புதல் என்பது அப்பிளை என்பதுடன் உருவணிமை கொண்டது. அப்பிளை - ஆங்கிலச்சொல்: apply,  as in " Apply some powder (or snow) to your face."

ஐரோப்பிய  மொழிகளில்  "அப்ளை"  என்ற சொல்லுக்கு பழைய அர்த்தம் அப்புவது, ஒட்டுவது, தடவிச்சேர்ப்பது என்பதுதான்.  ஆங்கிலத்தில் 1400 -ஆம் ஆண்டுமுதல் இது  பயன்பாட்டில் இருந்துவருகிறது. வேலைக்கு மனுப்போடுவது என்ற பொருளும் இச்சொல்லுக்கு உள்ளது.  ஆனால் அது 1850 "வாக்கி"லிருந்து மக்களால் புழங்கப்பட்டு வருகிறதென்று தெரிகிறது. இவற்றை ஆங்கிலச் சொற்றொகுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இப்பொருளில் இச்சொல் வழங்குவது பிற்காலத்தது என்று தெரிகிறது.

"பிலிக்காரே" என்ற இலத்தீனிலிருந்து  அவர்கட்கு இச்சொல் கிட்டியுள்ளது.  இதன் முன்னைப்பொருள் " மடக்கு " என்பது என அறிந்துரைக்கின்றனர். ஒட்டும்போதும் சேர்க்கும்போது மடக்கி ஒட்டுதல் நிகழும் செயல் என்ற அளவில்  அஃது தொடர்புடைமை காண்பதே. அதனால் அப்புதல் இச்சொல்லுக்கு அடியாய் இருத்தல் கூடுமெனினும், இன்னும் ஆய்வுக்குரியதாகவே இதைக் கிடத்தவேண்டும்.  முடிவாய்க் கூறுமளவு ஒற்றுமை காண இயல்வில்லை.

ஆயினும் இற்றை அளவில் ஓரளவு ஒலியணுக்கமும் உருவணிமையும்  கொண்டசொற்கள் இவையாகின்றன.

அறிக மகிழ்க.

பெய்ப்பு - பின்னர்.



புதன், 23 டிசம்பர், 2020

அன் அடியில் இரு சொற்கள் அமைத்த திறம்

 அன் என்ற அடிச்சொல் இருவேறு சொற்களின் அமைப்புக்கு நிலைக்களனாய் மிக்க அழகாகப் படைக்கப்பட்டுள்ள தன்மையைக் கண்டு தமிழன் மகிழாமல் இருக்கமுடியாது. இதை அறிந்தபின் இதே புனைவுத் தந்திரத்தை இன்னொரு சொல்லமைப்பின்போது கையாண்டு திறனைப் பெருக்கிக்கொள்ளலாகாதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளத் தோன்றுமே.

சுட்டடிச் சொல் வளர்ச்சியில் அன் இன்றியமையாத சொல். அ, இ, உ என்பவற்றில் அ என்பது அங்குள்ள பொருளை அல்லது மனிதனைக் குறிக்கவருகின்றது. அங்கிருத்தலாவது இலக்கணத்திற் படர்க்கை என்று சொல்லப்படுவதாகும். மிகு எளிய சொல்லாகிய அவன் என்பதில் இக்கருத்து இலங்குகிறது. அவன் என்பது அ+ அன் என்று பொருந்தி,  இடையில் ஒரு வகர உடம்படுமெய் (வ்) இடைப்புகுந்து, அ+ வ் + அன் = அவன் ஆயிற்று.  அ என்ற சுட்டுமட்டும் இருமுறை வருகின்றது.   அ, அன் என்ற இரண்டு.  அ என்பது இடம்; அன் என்பது இங்கு மனிதனைக் குறித்தது. இதை வாக்கியமாக்க வேண்டின், அவ்விடத்து அம்மனிதன் என்று கூறி முடிக்கலாம்.

இப்போது உள்ள காலம் இன்று என்று அமைத்தனர்.  அ அன் அவன் என்று இனிதாய் அமைத்த தன்மைபோலவே,  இந்நாளைக் குறிக்க,  இ என்ற சுட்டிலிருந்து  இன்+ து > இன்று என்று அமைத்தனர்.  பேச்சு வழக்கில் இன்று என்பதில் அமைந்த தகர ஒற்றை நீக்கிவிட்டு, இன்+ உ > இன்னு என்றனர். இதை வாக்கியப்படுத்தினால் இந்த நாள்,  ( இன் ) நம் முன் உள்ளது ( உ ) என்றவாறு  அழகாக வருகிறது.

இப்போது உள்ள காலம் இன்று ஆதலால் அப்போது உள்ள காலம் அன்று ஆகவேண்டுமே.   அங்குள்ள என்பதற்கு  அன் என்றும் து விகுதியை இறுதியில் வைத்தும் அன் + து >  அன்று என்ற சொல்லை உருவாக்கினர்.  பேச்சுவழக்கில் இன்னு என வந்தமை போலவே  அன்று என்பது அன் + உ > அன்னு என்று வந்தது.  எழுத்து மொழி "திருந்திய மொழி" என்று கருதிக்கொண்டு அக்கால மனிதர்களால் அமைக்கப்பட்டது. ஒலிகளால் அமைந்த மொழி எம்மொழியாயினும் திருத்தம் பெற்ற மொழி என்பது ஒரு கருத்தமைவு அல்லது  அபிப்பிராயமே ஆகும். இயற்கையாய்க் கருதுவதானால்,  திருந்தியது என்று ஒன்றுமில்லை.  இன்னு என்பது இன்று ஆகினால் ----அப்போது உள்ளவர்கள் "இன்று" எனச் சொன்னால்----- கேட்க நன்றாக உள்ளது என்று எண்ணினர்.  அவ்வளவுதான். மரபின் காரணமாக நாமும் அதைத் திருத்தமான சொல். என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். சொல்லில் திருத்தம் என்று ஒன்று இல்லை. கருத்தமைவில் ஏற்புடையதாய்ப் பெறப்பட்டது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். Many a time, it is an opinion; there is nothing factual about it.

சென்ற நாளைக் குறிக்க " அன்று " என்னும் அழகிய சொல்லைப் புனைந்த மனிதன்,  அது ஒரு நீண்ட கால ஓட்டத்தில் முடிந்துவிட்ட காலத்தைக் குறித்தது என்று உணர்ந்திருந்தான்.  ஆயின் இன்று உள்ள நேர நிலையின் விளிம்பு என்பதைக் குறிக்க ஒரு சொல் தேவைப்பட்டதை உணர்ந்தான். மீண்டும் அன் என்ற சொல்லை எடுத்தான்.  து என்ற விகுதியை மீண்டும் எடுத்து அன் + து என்று பூட்டினான். ஆனால் அது மீண்டும் அன்று என்று முடிந்த நாளையே குறிந்த்தது.  அந்தக் குறையைப் போக்க,  இன்றைய நாள் என்று வருவித்துக்கொள்ள,  இ என்ற சுட்டினை இணைத்துக்கொண்டான்.  அது அன்+ து + இ =  அந்தி ஆகிவிட்டது. மீண்டுமோர் அழகிய சொல் கிடைத்தது.

ஒரு நாள் முடியும் நேரத்துக்கு,  முடிதல்தான் அந்தி. இந்தப் பொருள் ஊட்டப்பட்ட பொருண்மையாகும்.  ஊட்டப்பட்டதால் அது அருத்தம் ( அருந்து + அம் = அருந்தம்  அருத்தம்  அர்த்தம்)..  சொல்லின் உள்ளுறு பகுப்பில் அந்தப் பொருள் இல்லை. நாளின் முற்றுநிலையைக் கருதிக்கொண்டு சொல்லை அமைத்தபடியால் அது அந்த நாள்முடிவைக் குறிக்கலாயிற்று.  காரணக் காலப் பெயராய் அது மலர்ந்தது.  அன் + து + தல் >  அன்றுதல் என்பது முடிதலைக் குறிக்க வழக்குப் பெற்றது. தாள் முதலியவற்றைக் கடித்து அதைக் கெடுக்கும் பூச்சிக்கு " அந்து" என்ற பெயரும் வந்தது. அன்றுதல் என்ற முடிதல் குறிக்கும் "திருந்திய" சொல் அமைந்துவிட்டதால், " அந்துதல்" என்ற பேச்சுமொழி இணை ஏற்படவில்லை. ஆனால் அந்து + அம் = அந்தம் என்ற சொல் அமைந்து ஒருவாறு சமநிலையைக் காத்தது.  அன்+ து + அம் =  என்பது இன்னொரு வகைப் புணர்ச்சி விதிப்படி அமைந்து சொற்பெருக்கத்தினை விளைத்தது.

அந்தி என்பதும் அழகிய தமிழ்ச்சொல் ஆயிற்று.

"அந்தி சாயுற சேரம், வந்தாரைத் தேடி ஓரம் "  --  என்றான் ஒரு கவி.

"ஏடி ஒளி முகத்தாளே அந்தி "  என்றான் இன்னொரு கவி.

"அந்திப் பெண்ணாள்" என்றான் இன்னொருவன்.

அன்+ து = அன்று.

அன் + து = அந்து.

அடியும் விகுதியும் ஒன்றுதான்.  இருவேறு வடிவங்கள் வந்து மொழியின் வளம் ஆர்ந்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.