செவ்வாய், 11 செப்டம்பர், 2018

அசாம் எழில்

எழில்தானும் கொஞ்சும்  இயற்கை   வளமார்
பொழிலென்று யாரும் புகலும்  ---- விழிஈர்
அசாமையே  கண்டார்  அதுவாமா  னந்தம்
திசாமுகம்  எங்குமே தேன்


.

அன்பு அனுப்பு அன் அண் பொருள் அறிதல்

அனுப்பு என்ற சுட்டடிச் சொல்

தமிழ் மொழியில் சுட்டுச் சொற்கள் எவை என்றால் அவை அகரம், இகரம் மற்றும் உகரம் முதலியவை. தமிழ் மொழியில் மிகப் பலவாகிய பதங்கள்
இவற்றைக் கொண்டு இயல்பான முறையில் உருவானவை ஆகும்.

அனுப்பு என்ற சொல்லுக்குச் சிலர் செலுத்து, வருத்து என்றவற்றை நிகர்ச்சொற்களாய் வலிந்து எழுதுவதுமுண்டு. அனுப்பு என்பதே இன்றமிழ்ச் சொல் ஆதாலால் பொருந்துமிடத்து அதையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

அ என்ற தலையெழுத்து அங்கு என்று பொருள் படுவது. இதனின்று அமைந்த அன்~ மற்றும் அண்~ என்பவை அணுகு, அடுத்துச்செல், பக்கத்தில் போ என்று பொருள்படுவது. அண் ( அணுகு ) என்பது அன் என்றும் வரும். அ என்பதே சுட்டு மூலம். அன் அண் என்பன அதனின்று வளர்ந்த மிகுதிகள்.

உ என்ற இரண்டாம் எழுந்து உங்கு அல்லது முன் என்று பொருள்தரும்.

பு என்பது ஒரு வினையாக்க விகுதி.

அன் + +பு என்பது முன் போகும்படி செய் என்பதே.

எல்லாரையும் அணைத்துச் செல் என்னும்போது அண் என்பதன் பொருளை அணை என்பதில் தெரிந்துகொள்ளுங்கள். அண் என்பது அங்கிருப்பதனை உட்படுத்திக்கொள்வது என்பதாகப் பொருள்தரும். அனைத்தும், அனைவரும் என்ற பதங்களில் இச்சொற்கள் எல்லோரையும் உட்படுத்தியே செல்கிறது. இது பொருளின்படி பார்த்தால் அணைவரும், அணைத்தும் என்றுகூட அமைந்திருக்கலாம். பொருளில் அழிவில்லை என்றாலும் சொல் அனைத்து, அனைவரும் என்றிருப்பதால் மரபின்படி அனை என்றுதான் நாம் சொற்றொடக்கம் செய்கின்றோம் என்பதறிக. ஆகவே அண் = அன்.

ஆதலின் அன்+ + பு என்பது முன் அடுத்துப் போம்படி செய் என்பது.

அன் என்பது மன நெருக்கத்தை குறிக்கவும் வரும் அடியாகும். அன்பில் இருவர் நெருக்கம் கொள்வது அறிக. அன் - அன்பு.  பு விகுதி.   அன் என்பதே அடி.   0னகரத்துக்குப் பிந்தியது ணகரம்.  இரு சுழிகள் இட்டபின்னரே மூன்றாவதை இடுகிறோம்.  தேகிகள் இருவர் நெருங்கிப் பழகுதலே பின்னர் அவர்களிடை மன இணைப்பு உண்டானதாக அறியப்படும்.

இன்னும் ஆழ்ந்து சிந்தியுங்கள். அன்பு என்பதற்கும் அனுப்பு என்பதற்கும் ஓர் உகரமே வேறுபாடு. ஒன்று அன்+பு. இன்னொன்று அன்+ +பு. அன்பில் மனத்தை அனுப்புகிறோம். அனுப்பு என்பதில் பொருளையோ மனிதரையோ அனுப்புகிறோம். எல்லாம் அடுத்து நெருங்குவதுதான். நெருங்கும் பொருளிலே வேறுபாடு. இப்படி அறியவே, அனுப்பு என்பதும் நல்ல தமிழ் என்பது வேறுவிளக்கம் வேண்டாமல் நன்`கு புரியும்.

மலையாளத்தில் அயிச்சு என்பர். அனுப்பினேன், அனுப்பினான் என்பவையும் ஏனைப் பொருளுருக்களும். அ இ அங்கு செலுத்து, இங்கிருந்து என்பதே சொல்.  அயிச்சு என்னாமல் இயச்சு என்று சொல் அமைந்திருக்கலாம்.  ஆனால் மொழியில் அப்படி அமையவில்லை. அமைந்தவற்றுக்கே இலக்கணம். அமையாதன உட்படாதனவே.  இதன் காரணம் இயங்கு என்று ஒரு சொல் இருப்பதே.  இ+அ+கு:  இயங்கு.  இப்படிச் சொற்களை ஆய்ந்து முரண்களையோ பிற வடிவங்களையோ கண்டு வாதிடாமல் மரபு போற்றவேண்டும்.  ஓர் எல்லைக்குப்பின் மரபு குறுக்கிட்டு வாதத்தை நிறுத்திவிடும்.  நாட்டு எல்லை போல்தான்.  சிங்கப்பூர் எல்லை ஜொகூர் நீரிணை வரைதான். மொழியும் அப்படியே. எல்லையே மரபு.

காரணங்களை அறிந்து மரபுடன் பொருத்தி அகமிக மகிழ்வீர்.

திருத்தம் பின்.

தைலம் தயிர்.

இன்று தைலம், தயிர் முதலிய சொற்களை நுணுகி ஆய்ந்து அறிந்து அகமிக மகிழ்வோமாக.

தடவு என்ற சொல்லை நோக்குங்கள்.  நம் கையானது சென்று இன்னொரு பொருளைப் பொருந்துதலையே தடவு என்பது குறிக்கிறது.  தடவு என்பதில் இறுதியில் நிற்கும்  ~வு என்ற இறுதி,  ஒரு வினையாக்க விகுதியாகும். இவ்விகுதி வினைகளை உருவாக்கவும் வரும்.  பெயர்ச்சொல்லாக்கத்திலும் வரும். எடுத்துக்காட்டு:   உறவு.  ( உறு+  வு :  இதில் று என்பது உகரத்தை இழந்து அகரமாகி வுகரமுடன் இணைந்து சொல்லமைகிறது காண்க.)

தடவு என்பதன் அடிச்சொல்:  தட என்பதுதான்.  தள்> தடு> தட.

தள் என்பது தய் என்றும் திரியும்.  தய் பின் தை என்றும் உருக்கொள்ளும்.

இதன் அடிப்படைச் சொல்லாக்கப் பொருளானது  பொருந்துதல் என்பது. நான் என் முகத்தைத் தடவும்போது,  என் விரல்கள் அல்லது உள்ளங்கை சென்று முகத்துடன் பொருந்துகிறது.  பொருந்தாவிடில் தடவுதல் என்ற வினை நிகழ்வதில்லை.

பாலின் உள்ளீடு தயிராகிறது.  எப்படி என்றால் பாலில் பொருந்தாமல் விரிந்து நின்ற கண்ணறியாத அணுத்திரள்கள்  ஒன்றுடன் ஒன்று பொருந்திவிடுகின்றன. ஆகவே இத்திரள்கள் பொருந்திவிடுகின்றன. கட்டியாகித் தயிர் உருவாகிறது.  உண்மையில் இச்சிறு திரள்கள் தைத்துக் கொள்கின்றன. தைத்தலாவது பொருந்துதல்.

தய் >  தயிர்.  ( இர் என்பது சொல்லாக்க விகுதி).
தய் > தை.   அதாவது தய் = தை. 
இதனைத் தை+இர்  என்று காட்டி, தய்+இர் என்று உருப்படுத்தி, தயிர் என்று முடித்தாலுமொன்றும் வேறுபடுதல் இல்லை.

பைம்மை > பசுமை.
பை+ இர் =  பையிர் > பயிர்.

ஐகாரத்துக்கு அகரம் நின்று நிகர்தரும்.  செய்யுளில் இது நிகழ்வதை அறிந்த தொல்காப்பிய முனி,   ஐகாரம் குறுகி ஒலிக்குமென்றார்.  இது சொல்லாக்கத்திலும் நிகழ்வது ஆகும்.

தைலம்  தேய்க்கும்போதும் கை தேய்க்குமிடத்துப் பொருந்துகிறது.   தேய்பெறும் எண்ணெய் போலும் பொருள் தைலம் ஆகிறது. 

தை= தய்.  தய்+ இல் + அம் =  தயிலம் > தைலம்.

தைவருதல்:  தேய்த்தல்.  "தைவரு மன்னே!"  -  ஔவையார்,  புறநானூறு.

தை:  பொருந்துதல்.  தையல்:  துணிகளைப் பொருந்த இணைப்பவனின் செயல்.

தையல் = பெண்.  பொருந்தும் மறுபாதி.

தை > தைமாதம் : எல்லாம் பொருந்திவரும் மாதம்.

தய் =  தை எனப்பட்டதேனும் மரபுப்படியே எழுதுதல் வேண்டும்.  தைலம் தைலமென்றே எழுதுக.   தயிர் அவ்வாறு எழுதுக.  தைர் என்று எழுத ஏதும் உரிமம் வழங்கப்படவில்லை என்பதை அறிக.


---------------------------------
அடிக்குறிப்புகள்:

தை+ இல் + அம் =  தய்+ இல் + அம்.
தை =  தேய்த்தல்.  தள் > தை > தய்.
இல் = இடம்.
மரம் :  மரத்தில் என்றால் மரமாகிய இடத்தின்`கண்
என்பது பொருள.
அதுபோல,  தை இல் என்றால் தேய்க்கும் இடத்தில்.
அம் என்பது அமைதல் குறிக்கும் ஒரு விகுதி.
பிற்காலத்தில் இது வெறும் விகுதியாகிவிட்டது இயல்பு தான்.
தை இல் அம் =  தேய்க்கும் இடத்து ஒட்டிக்கொள்வது.
அதுவே  தைலம்.  தேய்ப்பிடத்தில் பொருந்திக்கொள்ளும் இளகுபொருள்.

தை இல் அம்  >  தை + ல் + அம் = தைலம்.  இகரம் கெட்டது.
இதுவுமது:  தய் இல் அம் > தயிலம்.> தைலம்.  இகரம் கெட்டது.
தை என்பது தய் என்பதே ஆதலின் இகரம் தேவை இழந்தது.
.