சனி, 25 ஆகஸ்ட், 2018

சாமி படங்களும் பதிமைகளும்



படங்கள் எனினும் பதிமை எனினும்
திடமாய் மனத்தைநிற் பிக்க---உடன்நிற்கும்;
ஒவ்வோர் சிலையும் ஒருகடவுள் என்னாதீர்
இவ்வுலகத் தொன்றுகட வுள்.


பொருள்:
பதிமை - சிலை.
நிற்பிக்க -  நிலைப்படுத்த;
உடன் நிற்கும் - துணையாகுபவை.
ஒவ்வோர் - ஒவ்வொரு. கவிதையில் இவ்வாறு வரலாம்.






வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

கவியை வாழ்த்தாத புவி

தாழிசைகள்:


அழுத்துகின்ற ஆசையினால் அலர்கள் தோறும்
அலுப்பென்று காட்டாமல்  தாவும்  வண்டு;
எழுத்தனைத்தும் இன்பமென்றே அயர்ச்சி இன்றி
எழில்கூட்டும் கைவினையை மேவும் பெண்டு;

தேனடைபோல் யானடைந்த தித்திப்  பெல்லாம்
தேயத்தார்   ஞாலத்தார் தெவிட்ட லின்றிக்
காணட்டும் என் கின்ற கரவா உள்ளம்
கவியாகிக் குவிகின்ற நவைதீர் வெள்ளம்.

குண்டைத்தான் வீசிடினும் குலைதல் இல்லாக்
கூடிவரும் நாடோறும் கோலத் திண்மை;
வண்டைப்போல் வாழ்நாளைக் கழிக்கும் தன்மை
வாழ்த்திசைகள் யாதுமின்றி ஓடும் உண்மை.

அரும்பொருள்:

அலர்கள் -   மலர்கள்;
எழில் -  அழகு;
தேனடை - தேன்`கூட்டின் அடை;
கரவா :  ஒளிவு மறைவு இல்லாத;
நவைதீர் -  குற்றமற்ற;
கோலம் - அழகு;
திண்மை - திடம்;
வாழ்த்திசைகள் - பல்வேறு வகை வாழ்த்துப் பாடல்கள்
யாதும் இன்றி - ( அவற்றில் ) ஒன்றும் இல்லாமல்.

எஜமான்

எஜமான் என்ற சொல் எப்படி அமைந்தது என்று உங்களுக்குத் தெரிந்தால்
இங்கு பின்னூட்டமிடலாம்.பின் நாம் உரையாடுவோம்.