திங்கள், 18 செப்டம்பர், 2023

பூசுரர்

 பூசுரன் என்ற சொல்லை இப்போது கவனிப்போம்.

சொற்கள் சில ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பிரித்தறியத் தக்க உள்ளுறைவு உடையனவாய்  உள. இவ்வாறான சொற்களை அங்ஙனமே பிரித்தறிதல் அறிவுடைமை.  ஒரு பொருளையே வலியுறுத்தல் அறிவுகோடுதல்  ஆகும்.

பூ + சுரன் என்றும் பிரிக்கக் கூடும்,  பூ -  மலர்.  சுரன் =  ஊற்றாகுபவன்.. நல்லோன்.  இதனை நற்குண நற்செய்கைகட்கு வெளிப்பாடாக இயல்பவன் என் க.

பூசு + உரு +  அன்  -  பூசுரன்,    ஓர் உகரம் கெட்டது;  இரண்டாம் உகரமும் கெட்டது;   இவ்வாறு:

பூச் + உ  ,  ர் + உ,  ன் ஆண்பால் விகுதி.

பூ + சு+  ர +   ன்

பூச்+ உர  + ன்

பூசையின்போது சந்தனம் அல்லது வேறு பூசைக்குரிய அரைப்புகள் சிலைக்கு பூசப்படும் அல்லது அப்பப் படும்,  அதுபின்  நீரினால் கழுவப்பட்டு,  பூச்சுகள் விலக்கப்படும்,  இதைச் செய்வதால்,   பூசி உருக்கொடுப்பவர் என்னும் பொருளில்  பூசுரர் என்னும் சொல் உருவானது,   பின் இது வேறுவகைகளிலும் விளக்கப்பட்டது,  பூசையின்போது பூசி உருக்கொடுப்பதே இச்சொல் எழக்காரணம்  ஆகும்,  உருக்கொடுத்தல் சொல்லாலும்  நடைபெறும்.

பூச்சால் உருக்கொடுத்தல்,  சொல்லால் அல்லது அருச்சனையால் உருக்கொடுத்தல் என உருக்கொடுத்தல் இருவகை.

தமிழென்பது வீட்டுமொழி.    சமஸ்கிருதம் என்பது பூசைக்குரிய மொழி.  பூசாரிகள் பயன்படுத்தியது.  இந்தோ ஐரோப்பியமென்பது பிற்காலத்தில் வெள்ளைக்காரர்கள் இயைத்துகொண்டது ஆகும்.  ஆரியர் என்று பெயரிய வெளி இனத்தவர் யாருமிலர்.  ஆரியர் என்பது ஆர் என்ற மரியாதை விகுதி ( பன்மை விகுதி) பெறுந்தகைமை உடைய மதிக்கப்பட்ட உள்ளூரார்.  பனியால் வெளுத்த தோலர்கள் அல்லர்.  பழைய நூல்களைப் பாதுகாத்து வைத்திருந்த இலக்கியவாதிகள். இந்தக் காப்பியக்குடியினர் இல்லாமற் போனதால் பல நூல்கள் இறந்தன.

பூச்சொரிதல் என்ற சொற்றொடரையும் கருத்தில் கொள்வோம்.  சொரி + அர் = சொரர் >  சுரர் என்றும் திரியும்.  இங்ஙனம் திரிந்த சொற்கள் பல.  பழைய இடுகைகளைப் படித்து ஒரு பக்கத்துக்கு ஒருவகைத் திரிபாகப் பட்டியலிட்டுக் கொள்க. இவற்றுள்  ஒலகம் '> உலகம் போன்ற பேச்சுத் திரிபுகளைபும் இட்டுக்கொள்ளுங்கள்.  கொடி - குடி என்ற சொற்களின் தொடர்பும் அறியற்பாலதே. நாளடைவில் திரிபுப் பட்டியல்களெல்லாம் விரைந்தினிது உங்கள்பால் தொழில்கேட்டு அடிமைகளாம். இப்போது நாம் பட்டியல்கள் பார்ப்பதில்லை. அவை காணாமற்போய்விட்டன.இவ்வளவு போதும்.  இவ்வாறு பூசுரர் என்பதற்கு வேறு திரிபுகளும்  பொருந்த நிற்பன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


சனி, 16 செப்டம்பர், 2023

நீசம், நீச்சம், நீக்கற் பொருள்

 இனி,  நீசம் ,  நீசன் என்ற சொற்களையும்  ஒப்பீடாக  நீச்சன் என்ற சொல்லையும் காண்போம்.

இதில் உள்ள நீ என்ற அடிச்சொல்,  "ஏற்புடைமையின் நீங்கிய" என்று பொருள்தருவதாகும்,  நீ என்ற முன்னிலை ஒருமையும்கூட, " பிறனின் நீங்கிய முன்னிற்பவன்" என்ற பொருளுடையதாய் இருக்கிறது.  இதைச் சொல் லமைப்புப் பொருளுடன் கூட்டுவித்து வரையறுத்து உரைப்பதாயின்,  " பிறனின் நீங்கியோய்!"  என்றுதான் சொல்லவேண்டும்.  இவ்வாறுகூறவே,  நீக்கப் பொருள் முற்போந்து நீ என்பதன் பொருள் தெளிவாய் வருமென்பதறிக.

ஆ என்பதிலிருந்து  ஆசு  என்ற தமிழ்ச்சொல் பிறந்தவாறே,  நீ என்பதிலிருந்து நீசு என்ற அடிச்சொல் தோன்றுகிறது. சு என்பதொரு விகுதி.  இவ்வாறு சு விகுதி அமைந்து வழக்கத்திலுள்ள ஒரு சொல் "பரிசு".  பரிந்து தருவது அல்லது பரிவுரையின்பேரில் தரப்படுவது.  நீசு என்ற அடிச்சொல் முழுச்சொல்லாய் வழக்குப் பெறவில்லை, (அல்லது அவ்வாறு வழக்குப்பெற்ற நூல்கள் இன்று எமக்குக் கிடைக்கவில்லை.  ) அதனை இன்று நீசன் என்ற அன் விகுதிபெற்ற சொல்லினின்றே  அறியமுடியும்.   ஆனால் காத்தற்குரியது என்று  அமைப்புப் பொருள் போதரும் காசு என்ற பணம் குறிக்கும் சொல்,  சு விகுதியுடன் தமிழில் நன்கு வழக்குப் பெற்றுவிட்டது.  இதற்கு நாம் நன்றி தெரிவிப்பது  பணநாதன் என்போனுக்கே  ஆகுதல் காண்க.

இவைபோலமைந்த இன்னொரு சொல்:  ஊசு.   ஊ என்பது முன்னிருப்பவற்றில் முதலில் களையப்படும் பொருள் என்ற அர்த்தமாகும். இங்கு சு என்பது வினையாக்க விகுதியாய் வருகிறது.  ஒருகூடை பழங்களில் ஊசுவதே முன்னர் களையப்படுவது.   அதனால்தான்  ஊகாரத்தில் இச்சொல் தொடங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.  இனி இதிலிருந்து ஊன் என்ற உடல் அல்லது தசை என்று பொருள்படும் சொல்லும்,  முன் களைதற்குரியது என்ற பொருளதே.  உயிர் எங்கு சென்றது என்பதை அறியாத நிலையில்,  ஊன்  -  அதாவது உடல் முன்னர் எரியூட்டப்படும் அல்லது புதைவுறும்.  இவற்றின் அடிப்படைப் பொருள் "முன் களை"  என்ற என்பதே.  காட்சிக்கும் முன்னது, களைதற்கும் முன்னது இவ்வுடலாம்.   தமிழ்ச்சொற்களின் பொருள் அறிந்து இன்புறுக.  நூல் செல்வதற்கு முன் ஆடைக்குள் சென்று நூலை நுழைப்பது - உ  > ஊசி   ஆகிறது.

பூசு என்ற வினையினின்று பூசணம்,  பூஞ்சனம் என்ற சொற்கள் வந்துள்ளன.  பூசி மெழுகியதுபோல் அல்லது  உள்ளிருந்து பூத்ததுபோல் தோற்றம். 

இங்கு சு என்று இறும்2  சில சொற்களைக் கவனித்தோம்.

நீசம் -  நீச்சம் என்றும் இச்சொல்லைப் பலுக்குவர்.

நீச்சாள் என்ற சொல்லுக்கு நீந்தும் தொழில் அல்லது பழக்கமுடையோன் என்

று  பொருள். ஏற்புடையோருள் நீங்கியோன் என்ற பொருளுடைமை  காணக்கிடைத்திலது.  நூல்களிற் கிடைப்பின் பின்னூட்டம் இடுக.

நீச்சன் நீந்துவோன் என்றும் பொருள்.  நீச்சு -  நீச்சல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்,

மேலும் அறிக:

நீசம்;

https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post_10.html

2.  இறும்  -  முடிபு கொள்ளும்,  முடியும்

புதன், 13 செப்டம்பர், 2023

மிலேச்சர் (வெளிவரவினர்) சொல்லமைபு --- மற்றும் கபாலம்

 இன்று மிலேச்சர் என்ற சொல்லையும் அதன் அமைப்பையும் தமிழின் வழியாக அறிந்தின்புறுவோம்.

சொல் அமைந்த காலமும்  அதன் பயன்பாடு குன்றிவிட்ட பிற்காலமும் ஒன்றுக்கொன்று தொலைவு உடையதாய்  ஆகிவிடுவது,  கால ஓட்டத்தில் அடிக்கடி நிகழ்வதாகும். பயன்படுத்துவோர் கூட்டமும் அவர்களுக்கான சுற்றுச்சார்புகளும் சில வேளைகளில் வெகு விரைவாக மாறக்கூடியவை ஆகும். இது வெளிநாட்டினர் வருகைகளில் ஏற்படும் மாற்றங்களாலும் உள்நாட்டினர் வெளிநாட்டில் தங்கித் திரும்புதல்  அடையும் வேறுபாடுகளாலும் நிகழ்தல் இயல்பு  ஆகும்.

மிலேச்சர் என்ற சொல் பண்டை நூல்கள் சிலவற்றிலும்  சோதிட நூல்கள் சிலவற்றிலும் வருவதுண்டு.  பிறப்பாய்வுக்குரியவன்  (ஜா/)சாதகத்துக் குரியோன் ) ஒரு மிலேச்சப்பெண்ணைத் திருமணம் செய்வான் என்று கணியர்கள் கூறுவது அடிக்கடி கேட்கக்கூடியதே.

தம்மைப் போல் தோற்றமுடையரல்லாதாரையும்  தூய்மையிலும் கடைப்பிடிகளிலும் வேறுபடுவோரையும் சிலர் மென்மையாகக் கடிந்துகொண்டு,  விலகுதல் உண்டு.  இந்த மென்கடிதலிலிருந்தே இந்த மிலேச்சர் என்ற சொல் வருகிறது.  அடிப்படை  அமைப்புப் பொருள்,  மெல்லிய ஏச்சுக்குரியவர்கள் என்பதாகும்.

மிலேச்சரைத் தலையில் நெய்பெய்து அடக்கியதும் உண்டு,  அவர்கள் தமிழரசர்களை எதிர்த்து வந்த காலை,  இது இலக்கியத்திற் காணப்படுவது. ஒரு தீமையும் விளைக்காத போது,  இப்பபடித் தண்டிப்பதற்கு முயலாதவர்கள் தமிழர்.  அன்பின் வழியது உயிர்நிலை என்பதை அறிந்தோர் தமிழர்.

மேல் ஏச்சு  அர்  என்பது சொல்லாகி  நாளடைவில்   மிலேச்சர் என்று திரிந்தது. மே  -  மீ என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய திரிபுகள்.   மேலாயிற்று -  மிகுந்தது என்பவற்றுள் உள்ள தொடர்பினை அறிந்துகொள்க.  மே -  மீ.  ஒருவர்மேல் ஏச்சுரை செய்தல்.  ஒருவர் மீது என்றும் கூறலாம்.  இவ்விரண்டனுள் மேல் என்பது பேச்சு வழக்கில் மிகுவரவிற்று ஆகும்.  மேசை -  மிசை >  மீசை என்பனவும் ஆய்வுக்குரிய சொற்கள்.

தம்பால் ஏச்சுரை பெறும் தொகுதியின  ரென்பதே தமிழ்ப்பொருள்  ஆகும்.

மெல் என்பது மென்மையான என்ற பொருளைத் தருதல் கூடும். இது மென்மையான ஏச்சுரை என்பதைத் தருவது ஆகும்.

மேலும் அறிய:

சொல்:  கபாலம்.


உறுப்புகளிற் கடிய தன்மை உடையது எனின் அது  கபாலம் அல்லது தலையே  ஆகும்..  கடு + பால்  +  அம் = :  இது  கபாலம் என்று புனையப்பட்டது.  டுகரம் மறைக்கப்பட்டது.

இன்னொரு வழியில்:  https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_3.html

இரு வழிகளில் தமிழ் மூலமே காணப்படுகிறது.

சமஸ்கிருதம் என்பது வீட்டுக்கு வெளியில் -   பிற்காலத்தில் கோயில்களில்-- வளர்ந்த வழிபாட்டு மொழி.   இதிலிருந்து பல சொற்கள் எடுக்கப்பட்டு  இந்தோ ஐரோப்பிய மொழிகள் வளம்பெற்றன.  கோகினூர்  வைரமும் இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்டதே ஆகும்.  நன்னூல் இலக்கணத்தையும் மொழிபெயர்த்து அறிந்துகொண்டனர் ஐரோப்பியர்.  இவற்றை யெல்லாம் அவர்கள் மேற்கொண்டது தம்மை நீண்ட மொழிமரபும் வரலாறும் உடையர் என்று காட்டிக்கொள்ளவே  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்