வெள்ளி, 31 மார்ச், 2023

பேரப்பிள்ளைகள் அருகில் வேண்டும் [updated]

வெண்பா

 யாரேதாம்  நீரென்ற  போதிலுமே  உந்தம்நற்

பேரப்பிள்  ளைகளை  நீங்கியே  ---- ஓரிடத்தும்

நிற்பீரோ  கண்மூடி  நித்திரை  கொள்வீரோ

கற்பீரோ  பாடம்  புதிது.



பொருள்:

எத்தனை அகவை ஆகிவிட்ட யாராக இருந்தாலும்,  உம்  பேரப்பிள்ளைகளை நீங்கி,  இன்னோரிடத்திற் சென்று தங்கி,  உம்மால் நித்திரை அல்லது உறக்கம் கொள்வதும்  கடினமே.  அவர்கள் அருகிலிருக்கவேண்டும்.  அது  உம் உடற்பயிற்சிக்காகத் தங்குவதானாலுமே.  இதுவே இக்கவிதை சொல்வது.

கலித்தாழிசை.

வீட்டுக்குப் போக  விரும்பிய  பாட்டிதனை

நாட்டுக்கு நல்ல மருத்துவர் விட்டிடாமல்

காட்டுக்குப் போவென்றோ கழறினார் பாவமரக்

கூட்டுக்குள் போவென்ற கொள்கை நலமாமே.









paatti maraNam










திங்கள், 27 மார்ச், 2023

நமஸ்காரம் என்பது.

 காரம்  இல்லை என்று உணவு கொள்ளுங்காலை ஒருவர் சொன்னால், அதற்கு  உறைப்பு  அல்லது மிளகாய் போதவில்லை என்பது பொருள் என்று எடுத்துக்கொள்ளலாம்.   நமஸ்காரம் என்ற சொல்லுவோமானால் அதில் வரும் காரம் என்ற சொல்லுக்கு  யாரும் மிளகாச்சுவை என்று கொள்வதில்லை.  காரம் என்பது  இங்கு தமிழால் பொருள்சொல்லும் போது,  நிறைவு என்று பொருள்கொள்ளவேண்டும்..  தமிழ் என்ற சொல்லுக்கு  கிருபானந்த வாரியார் சாமி நூறு அர்த்தங்கள் சொன்னதுபோல,  காரம் என்பதற்குப்   ஆசிரியர் பலர் பல்வேறு பொருண்மைப் பொதிவுகளை வெளிக்கொணர்ந்திருந்தாலும்  இதற்கு யாம் கூறுவது  இஃது பொருள்:

காரம் என்பது  உண்மையில் கு+ ஆரம் என்ற இருசொற் புணர்வினிடையிற் பிரித்தகாலை வெளிப்போந்த சொல்:  ( metanalysis)..

இது எப்படிப்பட்ட சொல்லமைவு என்றால்,  குருவிக்காரன் என்ற சொல்லில் வரும் காரன் என்பது போல்,  சொல்லிணைப்பில் தோன்றுவது:

குருவிக்கு அவர்   .  அவர் என்பதும் அர் என்பதும்  ஒருபொருளன.  ஆர் என்ற நெடின்முதல்  வடிவமும்  அதுவே.

குருவிக்கு  ஆர் >   குருவிக்கார் >  குருவிக்கார்.

ஆர் கொஞ்சகாலம் அப்படி வழங்கிவிட்டால், அது சொல்லமைப்பில் இணைந்துவிட்டபடியால்,   உயர்திணைப்பலர்பால் வடிவம் என்பதை மனம் மறந்துவிடும்.  அதன்பால் அன் என்ற  ஆண்பால் ஒருமை வடிவினைக் கொண்டுசேர்த்து,  

குருவிக்காரன்  என்ற சொல்லைப் படைக்கும்.

இது எண்மயக்கத்தால்  (  உயர்திணை,  பலர்பாலில் ஒருமை கலந்து மயங்கிய சொல்).   வழுவமைதி எனக்கோடற்பாலது.  

இந்த மாதிரியெல்லாம் விளக்குவதைக் குறைத்துக்கொண்டு, அது சமத்கிருதம் என்றோ,  உருது கலந்தது என்றோ கூறி வாயை அடைப்பது  நல்ல உத்தியாகும்.

இதை வாக்கியமாகக் கூறின்,   "குருவிக்கு வணிகர் அவர்/ அவன்"    என்பதாம். முன்பின் அறியாதவனை,  அவர் என்றாலும் அவன் என்றாலும் வேறுபாடில்லை.

இவைபோலும் சொற்களில்,  சுட்டுச்சொற்கள் (  அர், ஆர், அவர்,  அவன், இன்னும்பலவும் )  தத்தம் சிறப்புப் பொருளிழந்து இணைந்தன  என்று சொல்வது  இனி இலக்கணமாதல்  சிறப்பாகும்.

'நலத்தின் நன்னிறைவு'  என்பதே  நம்ஸ்காரம் என்பது  உணர்ந்துகொள்க.

நலத்தினால் ஆர்தல்( நிறைதல்) >  நலக்கார்தல்  ( நலத்துக்கு  ஆர்தல் ) 

நலம்>  நலமோ >  நமோ.  ( நமோநம)  இடைக்குறைச்சொல்.  இடைக்குறை மீமிசை.

நலமதற்காரம்  >  நமற்காரம் >  நமஸ்காரம்.

வடவெழுத்தை ஒருவிவிட்டால் அது முன்னிருந்த தமிழாகிவிடும்  என்றார் தொல்காப்பியனார்.  (  வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ).  சொல்லதிகாரம்.

இவைபற்றிய முற்கூற்றுகளையும் படித்து மகிழ்க.

https://sivamaalaa.blogspot.com/2021/10/blog-post_16.html   நம், நமோ முதலியவை.

https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_9.html

நமோஸ்துதே   ( நலம் ஓதுகிறோம் எனபது.)

நலம் ஓதுதே > நமோதுதே  ( லகரம் குறந்தது) > நமோஸ்துதே.

வட ஒலியை ஒருவினால் ( எடுத்துவிட்டால்)  மீண்டும் ஓத்துதே -  ஓதுதே வந்துவிடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.



 

திங்கள், 20 மார்ச், 2023

இரும்பிலும் உண்ண நினைக்கும் எறும்பு

 இந்தக் கவிதை,  இன்று உருப்பெற்றதுதான்.  ஓர் வெள்ளுருக்குக் கரண்டியில் ( stainless steel spoon )   ஓடிக்கொண்டிருந்த எறும்பைக் கண்டு கவிதை எழுந்தது.  அதன் நிலைக்கு இரங்கியதே காரணம்.  கவிதை கடினமற்ற பதங்களில் அமைந்த படியால்,  விளக்கம் விரிக்கவேண்டாம் என்று நினைக்கின்றோம்.


வடையின் மணமிருக்கு ---  ஆனால்

வடையைக் காணவில்லை;

தடயம்  அறிஎறும்பு  ----  கரண்டியில்

தள்ளாடி அலைகிறதே!


வடையின் துணுக்கொன்றையே ---எறும்பும்

அடையக் கொடுத்திடுவாய்.

கடைக்கு வடைவாங்கவே ----  பாவம்

கட்டெறும்  பேறிடுமோ?


எல்லா உயிருடனும் ----  தம்பி 

இயலும்  நண்புகொள்வாய்,

இல்லை  எனா உலகில் ---  எறும்பும்

ஏற்றம் காணட்டுமே.


எவ்வுயிர்  என்றாலுமே  ----  துன்பம்

ஏறி   வருந்துகையில்,

இவ்வுயிர் எனதுமட்டும் ---- மகிழ்ந்தே

இருந்திடல்  பொருந்துவதோ..


------  சிவமாலா. 


கொடுத்த சிறு  துகளை  இழுத்துக்கொண்டு அந்த எறும்பு

நகர்ந்து நகர்ந்து காணாமற்  போய்விட்டது  ஆனந்தமே.


ஆனந்தம் :  ஆக நன்று >   ஆ நன் து அம் >  ஆனந்தம்.

நன்று =  நன் + து.