திங்கள், 13 செப்டம்பர், 2021

நாயைச் சிறைத்த வேலையற்றவர்.

அறுசீர் விருத்தம் 

வேலை இல்லை என்றால்

விழைந்தன செய்தல் கூடும்;

காலை மாலை நன்றே

செயவோ தடையே தையா!

சோலை அகத்துச் சென்று

நாயைச் சிறைத்தல் நன்றோ?

வாலாம்  சிறுவன் போல

வந்ததைச் செய்தல் வேண்டா.



உரை:  விழைந்தன செய்தல் -- தனக்கு விரும்பியதைச்  (எதையும்)  செய்வது  ,  கூடும் - இயலுவதே;    காலை மாலை நன்றே செய்யவோ தடை ஏதையா --  காலையாயினும் மாலையாயினும்  விரும்பிய நல்லதையே செய்வதற்குத்  தடைகள் இல்லையாம்; ஐயா - விளி;  சோலை அகத்துச் சென்று நாயைச் சிறைத்தல் நன்றோ -  மரம் செடி கொடிகள் வளர்ந்து உலவ ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நாய்க்கு முடிவெட்டுதல் நன்றோ?  நல்லதன்று;  வாலாம் -- அடங்காத , சிறுவன் போல,  வந்ததை -  நினைப்பில் தோன்றுவதையெல்லாம்,  செய்தல் வேண்டா(ம்),  என்றவாறு.


Man shaves dog at S’pore walkway, gets called out for ‘irresponsible behaviour’

Pl click for news::-

https://theindependent.sg/man-shaves-dog-at-spore-walkway-gets-called-out-for-irresponsible-behaviour/

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

மக்கள் தொண்டு, கிருமித் தொல்லை

 இங்கு யாம் தருவன  இரண்டு  சிறு கவித் துளிகள்.  வாசித்து மகிழ்வீர்.  வாசித்தல் என்ற சொல்லே மிக்க அழகான சொல்.  இது மலையாள மொழியில் "வாயித்தல்" என்றே வழங்குகிறது.  வாய் என்பது சினைப்பெயர்  அல்லது ஓர் உறுப்பின் பெயர்.  இ~த்தல் என்னும் வினையாக்கத்தை இணைக்க வாயித்தல் ஆகிறது.  யகர சகரப் போலியில் வாயித்தல் > வாசித்தல் ஆகிவிடுகிறது. நீங்கள் வாயித்து மகிழுங்கள்,  இல்லாவிட்டால் வாசித்து மகிழுங்கள்.  ஆனால் வாசித்தல் என்பதற்கு மணம் வீசுதல் என்ற பொருளும் இருக்கிறது . அது வாய் என்னும் நீட்சிக் கருத்தினடிப்படையில் எழுகிறது.  இதன் ஆக்கத்தினை "கால்வாய்",  "வாய்க்கால்" என்னும் சொற்களில் கண்டு மகிழலாம்.

இப்போது கவிதைகள்:


மக்கள் தொண்டு


மக்களுக்குத் தொண்டுசெயும்

தக்கஉன்ன  தத்தொழிலே

எக்கணமும் வருமிடரே

பக்கமிலை ஓர்துணையே

நக்கசார  ணர்கள்வந்து

நலமிலவை தாம்செயினும்

ஒக்குமொரு  நிலையறிந்த

உயர்ந்தனவே  செயுமிவரே.


உன்னதத்தொழிலே  -  சிறப்புக்குரிய வேலையாகும்.

எக்கணமும்  -  எந்த நேரத்திலும்

இடரே  --- துன்பமே

பக்கமிலை  ---   அருகில் இல்லை

துணையே  -  ஆதரவு செய்வோரே,

நக்கசாரணர்  --  நகைக்கத் தக்க நிலையைச் சார்ந்தவர்கள்

நலமிலவை  -  நல்லன அல்லாதவற்றை;

ஒக்குமொரு - எல்லோருக்கும் ஒப்பமுடிந்த,

நிலை -   உள்ளுறைவு, சுற்றுச்சார்பு முதலியவை

அறிந்த -  தெரிந்துகொண்டு;

உயர்ந்தன - மேலானவற்றை

செயும் - செய்யும்.

( இது மருத்துவத்துறையில் மக்களுக்குத் தொண்டு செய்யும் நல்ல உள்ளங்கள்

அண்மையில் அடைந்த தாக்குதல் முதலிய துன்பங்களைக் கருத்தில் கொண்டு

பாடியது )



கிருமிகள் தொல்லை


காற்றினிலே கீதங்கள் வருதல் உளதே

காற்றினிலே நோய்நுண்மி வருதல் நிலவின்

ஏற்றனரோ,    ஏமாந்து விழலின் மக்கள்

தோற்றனரோ,  யாமாழ்ந்தோம் உழந்ததே துன்பம்.


உளதே -   இருக்கிறதே,

நிலவின்  -  நடைபெறுமானால்

ஏற்றனரோ -  அவ்வாறு வருமென்று ஒத்துக்கொண்டனரோ;

ஏமாந்து -  அவ்வாறு வராது என்று எண்ணி,

விழலின் -  வாழ்க்கையை முறையற்று நடாத்தி,

மக்கள் தோற்றனரோ  -  மக்கள் நோயினை வெற்றிகொள்ளவில்லையோ,

யாமாழ்ந்தோம் உழந்ததே துன்பம். --  நாம் துன்பம் அனுபவித்து

உள்ளிறங்கிவிட்டோம்.


கவிதையில் ஓர்துன்பம் என்று வரும். உரைநடையில் ஒரு துன்பம்

என்றே வரும்.  இவ்விலக்கணம் மாறி எங்காவது இவ்வலைப்பூவில்

அமைந்திருந்தால் அதனைத் திருத்தி வாசித்துக்கொள்ளுங்கள்.  

திருவுள்ளம் இருக்குமாயின் பின்னூட்டமிட்டு உதவி செய்யுங்கள்.



மகிழ்க.

மறுபார்வை செய்வோம்.  இப்போது தட்டச்சுப் பிழைகள்

உளவாகத் தெரியவில்லை.









பரிந்து மள்குவது பரிமளம் [ தாமரை]

 ஒரு பெண்ணிற்குப் பரிமளா என்று பெயர் வைத்திருந்தால் அது அருமையான பெயர் என்பது உங்களுக்குத் தெரியுமே!  பரிமாளம் என்றால் தாமரை என்று பொருளாவதால் இது பொருளிலும் அழைப்பதற்கும் நல்லது ஆகும்.  இது எப்படித் தாமரையைக் குறிக்க எழுந்தது என்பதை இப்போது பார்த்துவிடுவோம்.

வடுப்பரியும் நாணுடையான் என்று குறளில் வருகிறது.  இங்கு அஞ்சுதல் என்பது பொருள். பையிலிருந்து காற்றுப் பரிகிறது என்பது காற்று வெளிப்படுகிறது என்று பொருளாகும். இன்னும் பலவாதலின் இது பல்பொருளொரு சொல்.

பரவுதற் கருத்தின் அடிச்சொல்லாகிய பர என்பதினின்று  பர> பரி என்று இச்சொல் அமைந்தது தெளிவாகும்.  பரவுதல் ஓரிடத்திருந்து இன்னோரிடம் சென்று வைகுதல் அல்லது இல்லாததாதல் என்று பொருளாம் என்பதால், பரி என்பதிலும் அப்பொருள் உள்ளது. அஞ்சுபவன்  தன் திடநிலையிலிருந்து மாறியே அச்சநிலையை அடைவதால் அங்கும் மாறுதற் கருத்து உள்ளது.

தாமரை இதழ்கள்  மூடியிருந்த மொட்டு நிலையிலிருந்து விரிநிலை எய்துவதால் இதுவும் இடமாற்றமே காட்டுகிறது.  ஆகவே பரிதல் என்பது ஈண்டும் பொருந்துவதாகும்.  ஆகவே பரிமளம் என்பதில் பரி என்பது பொருந்திவிட்டது.

இனி மளம் என்பது.  மள்குதல் என்ற வினைச்சொல் குறைதல் என்று பொருள் படும்.  பின் தாமரை இதழ் தன் விரிவு குறைந்து மூடிக்கொள்வதால்  மள் >  மளம் ஆகிறது.  மள்குதல் என்ற வினைச்சொல்லில் மள் என்பதே அடிச்சொல். கு என்பது வினையாக்க விகுதி. மள் என்பது மட்டம், மட்டுறல் என்பவற்றிலும் அடிச்சொல் என்பது காண்க.

விரிதலும் (பரிதலும் ) குறைதலும் உடையது அவ்விதழ்கள். ஆதலின் பரிமளம் என்பது தமரைக்குப் பொருத்தமான பெயராகிவிட்டது.

இவ்வாறு தாமரைக்கு மொழியில் ஏற்பட்ட இன்னொரு பெயர்,  அதனின்று பரியும் மணத்தைக் குறித்து,  பின்னர் பொதுவான மணமென்னும் பொருளில் வழங்கிவருகிறது.  தாமரையைக் குறிப்பது சொல்லாய்வில் போந்த தெளிவு ஆகும். எல்லாவகை மணங்களும் முதலில் விரிந்து பரவி பின்னர்ச் சுருங்கி ஒழிதலுண்மையின்,  அது மணத்திற்குப் பெயராகிவிட்டது. இதழ் விரித்தலும் சுருங்குதலும் மணம் விரித்தலும் சுருங்குதலும் ஒப்புமை உடைமையினால் இது நிகழ்ந்தது.

வேறு வகைகளில் விளக்கம் தருவதாயின் பின்னூட்டம் செய்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.