திங்கள், 31 மே, 2021

சூலும் வசூலும்

 வசூல் என்ற சொல்லைச் சில முறைகள் கவனித்துள்ளோம்.  இதைத் தமிழிலே சில வழிகளில் அணுகலாம்.  அதிலொன்று அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது. இதை நன்கு அறிந்துகொள்ள நாம் ஒரு 150 ஆண்டுகளாவது பின்னோக்கிச் சென்று அன்றிருந்த சூழ்நிலைகளில் உட்புகுந்து சிந்தனையில் மூழ்கித் தெரிந்துகொள்ளவேண்டும்.

வந்தான்.  வர்ரான்( பேச்சுமொழி) என்பவற்றிலெல்லாம் வ என்பது வருவதைக் குறிக்கும்.  அதுபோலவே வசூல் என்பதிலும் வ ~  என்ற முதலெழுத்து வருவதையே குறிக்கும்.  இது மிக்கப் பொருத்தமுடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். வரும் தண்டல் அல்லது கொடுபொருள்தான் வசூல்.  இது பெரும்பாலும் பணமாக இருக்கும்.  பிறபொருளாகவும் இருக்கும்.   வரி என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் வரப்பெறும் தொகை.  அதுபோலவே இதுவும். வரு>வரி.

சூல் என்பது கருக்கொள்தலையும்** குறிப்பது.  ஒரு மாதின் உடலில் உள்வந்தது தான் சூல். அது எப்போதும் உள்ளிருக்கும் நிரந்தர உறுப்பன்று.  வந்து கொஞ்ச நாளில் வளர்ந்து வெளிப்போந்து பிறந்துவிடும்.  ஆகவே வரும் தொகையைச் சூல் என்று குறிப்பிடுவது மாதின் சூல் போல் உள்வந்தது என்று அணிவகையாகக் குறிப்பிட்டு, அதற்கு ஒப்புமையாக "வசூல்" என்ற சொல்லை விளக்கலாம்.  அவ்வாறு விளக்குவதில் தவறு ஏதும் இல்லை.  அதுவும் ஒரு விளக்கம்தான்.

ஆயின், தமிழில் சூலுதல் என்பது ஒரு வினைச்சொல். அதற்குத் தோண்டி எடுத்தல் என்றும் பொருள். இன்னொரு பொருள் கர்ப்பம் கொள்ளுதல்.  பெரும்பாலும் பணத்தினைத் தவலையில் போட்டு  புதைத்து வைத்திருந்து பின் தோண்டியெடுப்பது ஒரு நூறு ஆண்டுகள் முன்வரை இருந்த வழக்கம். அப்போது வங்கி என்னும் பணவகங்கள் இல்லை ( சிற்றூர்கள் அதற்கடுத்த வட்டாரங்கள்).  நேற்றுவரை  வங்கியில் பணம்போட்டு வைத்தல் ஒரு வழக்கமாய் இருக்கவில்லை.  தவலைக்குள் போட்டுப் புதைத்து வைத்து எடுத்தலே வழக்கம் .(" புதையலெடுத்த தனம்" ).  அரசினர் அதை வரி வாங்கும்போது தோண்டி எடுத்துக்கொண்டு போவதே நடந்த நிகழ்வுகள்.  இப்படி எடுத்தவை " வசூல்"  -  வருசூல் என்பதை உணர்க.  உண்மையில் ருகரம் தேவையில்லை.  வரு > வந்தான் என்ற வினைமுற்றிலே வருதற்  குறிக்க ரு இல்லையே.  தமிழின் இயல்பு.  புரிந்துகொள்ளாமை தமிழின் குற்றமன்று.

இப்போது தோண்டி எடுக்கவில்லைதான்.  அதற்காக, பழைய சொற்களில் திருத்தம் செய்யவேண்டுமென்றால்,  மொழியையே  ( எல்லா மொழியையும்) மாற்றி அமைக்கவேண்டும். எல்லா மொழிகளிலும் பழைய சொற்களைப் புதிய சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்தும் நிலை உள்ளது என்று ஆய்வில் தெரிகிறது.  ஒரு வண்டியின் குதிரைவேகம் (ஹோர்ஸ்பவர்) என்று கணக்கிடக் குதிரைகளைக் கட்டி இழுக்கவேண்டாமே! நாலடித் தொலைவு என்றால் அது உங்கள் காலடியைக் கணக்கிடுவதன்று.

வசூலிலே :   இன்னும் உள்ளது. இன்னொரு நாள் சந்தித்து அளவளாவுவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

அடிக்குறிப்பு:

மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.com/2017/03/vasool.html

சூலுதல் (  வினை அடி: சூல் ) பொருள்:

குடைதல், தோண்டுதல், அறுத்தல், கருவுறுதல்.

இன்னுமிரு சுவைதரு  ஆய்வு இங்குக் காண்க:

சூதும் வாதும்:  https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_21.html

சூது:   https://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_25.html

இதுவும் சமர்ப்பணம்:

https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_76.html

**  கருக்கொள்தல் இதில் கொள்தல் -  கோடல் என்று சந்தியில் வரும். அம்முறை இங்குப் பின்பற்றப்படவில்லை.  புரிந்துகொள்ளுதல் கடினமாகுமென்பதால்.

மெய்ப்பில் சில திருத்தங்களும் மாற்றங்களும்

செய்யப்பட்டன.  01062021 0438


நோய்க்கு இடங்கொடேல் என்பது நம் பாட்டியின் வாக்கு. முகக் கவசம் அணிந்து

மனித இடைத்தொலைவு கடைப்பிடித்து நலமடைவோம்.  யாவரும் நலம்பெற

எங்கள் வேண்டுதல். உலகம் உய்க.

 


ஞாயிறு, 30 மே, 2021

தயாளம்

 தயாளம் என்ற சொல்லைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

இதில் இரண்டு துண்டுகள் உள்ளன.  தயை  என்பதொன்று.  ஆளம் என்பது இன்னொன்று.  ஆளம் என்பது ஆளின்  தன்மை என்று பொருள்படும்.  

தயை என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2019/06/blog-post_7.html

தயை என்பதை ஆளம் என்ற ஈற்றுடன் புணர்க்குங்காலை,  தயை என்பதன் இறுதி ஐ விகுதி கெடும் ( அதாவது அவ்விகுதி களைந்துவிடுதல் வேண்டும்). ஆகவே  தய + ஆளம் என்பவை சேரும்.

வன்மை பொருந்திய செயல்களைத் தவிர்த்து இரக்கம் காட்டுவதே தயாளம்.

தயாளம் என்று புணர்ந்து விளைதலின்,  இதுபோன்ற சந்திகள் தமிழில் உளவா என்று அறிதல் வேண்டும்.  உள்ளது, அதற்கு எடுத்துக்காட்டு:

மர + அடி =  மராடி என்பது காண்க. இஃது வகர உடம்படுமெய் இல்லாத புணர்ச்சி ஆகும். உடம்படு மெய் வரின்,  மர+ அடி > மரவடி என்று வரும். அல்லது அத்துச் சாரியை பெற்று,  மரம் + அத்து + அடி =  மரத்தடி எனவாகும்.

அத்து என்னும் சாரியை உண்மையில் அது என்னும் சுட்டுப்பெயரில் தோன்றிய இரட்டிப்புச் சொல் தான்.  அது >  அத்து. ( தகர இரட்டிப்பு).   த் + த் + உ >  த்து  ஆகும்.  "அது"   இதற்கு மூலம் என்பதைக் கூறுவதில்லை. 

மெய்ப்பு பின்னர்.



வெள்ளி, 28 மே, 2021

மளிகைப் பொருள்கள் மற்றும் கடை.

 மளிகைப் பொருள்பற்றிய இச்சிறு எழுத்துப்படைப்பை, மள்ளர் என்னும் சொல்லிலிருந்து தொடங்குதல்,  விடயத்தை விளக்குவதற்கு எளிமைதரும் என்பது எம் நினைப்பாதலின்  அவ்வாறே இவண் செய்வோம். 

மள்ளர் -  சொற்பொருள்

மள்ளர் என்னும் சொல் பலவிதத் தொழிலரையும் அல்லது மக்களையும் குறிக்குமென்று நம் நூல்களின்வழி அறிகின்றோம்.   இவர்களாவர்:  உழவர், குறவர், படைவீரர்,  மறவர்,  இளைஞர்,  குறிஞ்சி நிலத்து வாழ்நராகிய பொதுமக்கள் ஆகியோர் எனலாம். இவர்கள் அனைவரையும் அல்லது இவர்களில் எவரையும் இச்சொல் குறித்தற்குக் காரணம்,  இவர்கள் எல்லோரும் உடலால் வலிமை பொருந்தியவர்களாக இருத்தல்தான். (அதாவது உடலுழைப்பால்-- உடல்வலிமையால் பிழைப்போர்).  பண்டைத் தமிழர் உடல்வலிய மக்களை இச்சொல்லால் சுட்டினர் என்று தெரிகிறது.  பள்ளர் என்ற சொல்லும் மள்ளர் என்று திரிதலால் ஆய்வில் சில குழப்படிகள் தோன்றுதல் இயல்பு.  எனினும் இவ்வாய்வுக்குப் பள்ளர் என்னும் சொல்லை நாம் தவிர்த்துவிடுதல் நலம். *

மள்ளல் என்ற சொல் வலிமை குறித்தலால் அதனின்று தோன்றிய மள்ளர் என்ற பலர்பால் சொல்லும் உடல்வலியோர் என்ற பொதுப்பொருள் பெறுமென்பது எளிதின் உணரப்படுவதாகும்.

அடிச்சொல் நோக்கு

இச்சொல்லின் அடிச்சொல் மள் என்பதே.  இகுதல் என்பது இறங்கி வருதல் என்ற பொருளுடைய  சொல்.   மள் + இகு + ஐ  = மளிகை.   மள்ளர் என்ற முன் சொன்ன மக்களிடமிருந்து இறங்கும் அல்லது உண்டாகி விற்பனைக்கு வரும் பொருள் என்று அர்த்தம்  வருகிறது.  இகுதல் என்ற சொல்,  அணியியல் முறையில் இச்சொல்லில் கையாளப்பட்டுள்ளது  என்று முடிக்கவேண்டும்.  நீர் இறங்குதல் போலும் கீழ்வருதல் என்ற ஒப்புமை.

மள் + இ + கு + ஐ  :  மள்ளரிடமிருந்து இங்கு (வந்து) சேர்ந்த பொருள் எனினும் ஆம்.  இ - சுட்டுச்சொல், இங்கு.  கு - சேர்விடம் குறிக்கும் சொல்.   ஐ -   விகுதி.  

மள்ளர் எனற்பால சொல்,  மள் என்று குறுகி நின்றமை,  "பள்ளருடைய சேரி" என்ற சொல்தொடர் பச்சேரி என்று வந்ததுபோலுமே  ஆகும். இவ்வாறு இடையில் நின்ற சொற்கள் மற்றும் எழுத்துகள் மறைந்த சொற்கள் பலவாதலின், இக்குறைவுகள் பற்றி ஒன்று விரித்தற்கில்லை.

தோற்றப்பொருண்மை மறைவு

மள்ளர் விளைத்த பொருட்களை விற்கும் கடை மளிகைக்கடை. ஆனால் இன்று இப்பொருள் தொல்காப்பியர் கூறியதுபோல் விழிப்பத் தோன்றாததாகிவிட்டது எனலாம். இன்று யார் விளைத்த பொருளாயினும் விற்கும் கடை,  ஆயின் பெரிதும் சமைக்காத உண்பொருள்கள்,  தானியங்கள் மசாலா இன்னும் பல விற்பனை செய்வோரைக் குறிக்கும். 1

"மள்" சொற்பொருண்மை அறிதல். 

மளிகை என்ற சொல்லில் வரும் "மள்" அடிச்சொல், இத்தரத்து மக்கள் அனைவருக்கும் பொதுப்பண்பாகிய வலிமை என்ற பொருண்மையை உடையது. இவ்வலிமைப் பொருளை  வல் > மல் > மள் என்ற திரிபுகளிற் கண்டுகொள்ளுக. இவற்றில் விளைந்த முழுச்சொற்களுக்கு எடுத்துக்காட்டு,  முறையே  1 வலிமை,  2 மல்லன்,  மல்லு வேட்டி (துணி),  மள்ளல் என்றவை. திரிபு செல்வழி:  மள் > மளி> மளிகை. மள்ளர் என்பது மக்களைக் குறித்தபடியாலும் மள் என்ற அடியில் அப்பொருள் இன்மையாலும் மள்ளர் என்ற சொல்லமைந்த பின்னரே அவர்கள் விளைபொருள் என்பதைக் குறிக்க மள்ளர் + இ + கை > மள் + இ + கை > மளிகை என்று மீண்டும் குறுகியது.  இது சொல்லாக்கத்துக் குறுக்கம்.  இப்படி அமைந்த இன்னொரு சொல் பச்சேரி  --மேலே காட்டப்பட்டது. மளிகை என்ற சொல்லமைப்பின்  பின்பு,  மள் என்ற அடிக்கு மள்ளர் என்ற கூடுதற்பொருளும் வந்துற்றது அறிக. இதைச் சுருக்கமாக விளக்க,  மள்ளர் > மள்ளரிகை > மளிகை எனின்,  ள் என்ற மெய் இடைக்குறைதலும், ரகர மெய் வீழ்தலும்,  இகரம் ளகர ஒற்றின்மேல் ஏறுதலும் ஆகிய எழுத்துமாற்றங்களை விளக்கவேண்டும். மளிகை, பச்சேரி முதலியவை பேச்சில் விளைந்த குறுக்கங்கள்.   மள்ளர் > மளி > மளிகை என்று காட்டுதல் எளிது.  மள்ளரிகை என்பது உணர்விக்க எழுந்த கற்பனைச் சொல்  அல்லது ஓர்ந்தமைவு.

திரிபுகள் 

மள்ளரிடமிருந்து விளைபொருள்களை வாங்கிக் காயவைத்து விற்றுவந்த செட்டியை மள்ளர்காய்ச் செட்டி > மள்ளிகாய்ச் செட்டி > மளிகைச் செட்டி என்று திரிபால் குறித்து, பின் அதிலிருந்து செட்டியை விட்டு,  மளிகை , மளிகைச் சாமான் என்று வரினும் மிகப்பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.  மள்ளர் என்ற சொல்லில் மாற்றமில்லை. சொல்லிறுதி ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளைத் தெரிவிப்பது தவிர அடிப்படைச் சொல்லின் அமைப்பில் உள்ளுறைவுகள் சிறுமாற்றங்கள் அடைவதால் அடிப்படைப் பேதங்கள் இல.

மள்ளி கையால் கொண்டுவந்து விற்ற உணவுப் பொருள் என்றும் விளக்கலாம்.

மள்ளி கை >  மளிகை ( இடைக்குறைந்தது ள் ).   அடிச்சொல் மள் என்பதே.

மள்ளர் பெண் : மள்ளி,  பள்ளன் > பள்ளி, கள்ளன் - கள்ளி, குள்ளன் > குள்ளி போன்ற அமைப்பு. மக்கள் பேச்சில் உருவாக்கிக் கொள்வன. பேச்சுமொழி மிக்க விரிவானது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


குறிப்புகள்

*..களம்புகு மள்ளர் (கலித்தொகை. 106). 3  படைத்தலைவன். (சூடாமணி நிகண்டு.) 4.  இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுருகாற்றுப்படை. 262). 5.  மருதநிலத்தில் வாழ்வோன். (திவாகரம்) மள்ளர் உழுபகடு  உரப்புவார் (கம்பராமாயணம். நாட். 18). 6.  குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன். (சூடாமணி.)

இதையும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2019/09/blog-post.html

1. உயிரற்ற பொருள்கள் , காய்ந்த பொருட்கள். 

அப்போதும் மள் > மளி என்பதே அடிச்சொல். ஆனால் விளக்கம் கொஞ்சம் வேறுபடும்.

( பச்சையாக இல்லாமல்)

மள்ளன் - மள்ளி. (பெண்பால்)

சில தவிர்க்கப்பட்ட விளக்கங்கள் சேர்க்கப்பட்டன. 29052021 0645. We could not resolve the error in spacing whilst editing.  There may be a bug. Repeated attempts managed to make the Notes herein appear in the post.