வெள்ளி, 26 ஏப்ரல், 2019

அரிமா சிங்கம் குறைந்துவருதல் பொருண்மை

அரிமா சிங்கம் என்ற இரு சொற்களையும் இன்று நுணுக்கமாக நோக்குவோம்.

அரிமா என்ற சொல்லின்  பொருள் அரிதல் - அரித்தல் ( தன்வினை - பிறவினை ) என்ற வினையடிப்படையில் தோன்றிய தென்று அறிஞர் கூறியதுண்டு.  சிற்றுயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இல்லாதனவாக்கும் கொடிய வலிமை பொருந்திய விலங்கு என்பது இதன் பொருள் என்பர்.

இஃது சரியான சொல்லாய்வு என்று ஒப்புவோம்.  நீருள் பாசியைச் சிறிது சிறிதாக அரித்தெடுத்தல் போல உயிர்களை அது  ஒழித்துவிடுகிறது  என்பது அருமையான கருத்தே.

அரி என்ற வினைக்கும் அப்பால் சென்று அதனடியைக் காணின்,  அது அரு என்ற வடிவமே என்பது புலப்படும்.

அரு >  அருமை.
அரு >  அருகு >  அருகுதல்.   எண்ணிக்கையில் குறைவாதல் இதன் பொருள்.
அரு > அரி  ( அரியது;  குறைந்த எண்ணிக்கையே உடையது )

ஓர் இடத்திற்கும், இன்னோர் இடத்திற்கும் உள்ள இடைத் தொலைவு சுருங்குதலும் அருகுதலே ஆதலின்,   " அருகில் ( உள்ளது)" என்ற வழக்கு உண்டாயிற்று.

காணற்கு அரியனவான இவ்விலங்குகளை அரிமாக்கள் என்று பெயரிட்டது
அற்றை நிலையுடன் மிகப் பொருந்தியதாகும்.  இன்று அருகிவரும் விலங்குகளைக் காப்பதற்குப் பல நடவடிக்கைகளை  ஐக்கிய நாடுகள் நிறுவனமும் பல அரசுகளும் எடுத்துள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.  அரிமாக்கள் என்னும் சிங்கங்கள் அருகிவிட்டன என்று தமிழன் அன்றே கவலைப் பட்டிருக்கின்றான். 

சிங்குதல் என்பதும் அழிதல், தேய்தல் , மீந்துபோதல் என்பன போலும் பல பொருளுடைய சொல்லே.  சிங்கம் பல நாடுகளில் இல்லை. ஆகவே அழிந்துவரும் ஓர் விலங்கினம் அது.  மனிதனால் பாதுகாக்கப்படவேண்டிய இரங்கத்தக்க நிலையில் இருக்கின்றது.  அதன் எண்ணிக்கை தேய்ந்துகொண்டு உள்ளது.  

அருகிவரும் விலங்கு. அழிந்துவிடுமோ என்ற அஞ்சத் தக்க விலங்கு. சிங்கிக் கொண்டு வரும்  விலங்கு சிங்கம்.

அரு+ இ = அரி > அரிமா.
சிங்கு + அம் =  சிங்கம்.

விலங்குகளின் அரசனுக்கு இந்தக் கதியா? 

சிங்கம் என்பது அன்றாட வழக்கிலுள்ள சொல்.  சிங்கு என்ற வினையின் அடியாகத் தோன்றிய பெயர்.  மேலும் எங்கும் பரவித் தமிழுக்கும் பெருமை சேர்த்த சொல்.

சிங்கிப்போன சிங்கத்தையும் அருகிப்போன அரிமாவையும் கண்டு சொல்லுக்கு இன்புற்றோம், கருத்தடிப்படை கண்டு கவலைகொண்டோம், பொருளடிப்படை ஒன்றுதான்.


பழமொழி:  பன்றி பத்துக்குட்டி சிங்கம் ஒற்றைக் குட்டி. குறைவுக்கு இதுவும் காரணமாகுமோ?

வியாழன், 25 ஏப்ரல், 2019

பிராந்தியம்

இன்று பிராந்தியம் என்ற சொல்லை ஆய்வோம்.

இந்தத் திரிசொல் தமிழ்ச் சொல் போல் தெரிகிறதா என்றால் இல்லை. செந்தமிழ் ஒலிமரபை இச்சொல் வெளிப்படுத்தவில்லை.

ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது அவனுடைய  நாடு எனப்படும். அவனுடைய நாட்டைச் சுற்றியுள்ளனவும் பதிலரையர்களை  ஆட்சியர்களாகக் கொண்டவையுமான மற்ற நிலப்பகுதிகள் "பிராந்தியங்கள்" எனப்பட்டன.

இந்தச் சுற்றுவட்ட நிலப்பகுதிகளை இந்த மன்னன் கைப்பற்றி அவற்றினின்று நீங்கியவனாய் அந்த ஆட்சியர்களிடமிருந்து இவன் பொருளைப் பெற்றுக்கொண்டபடியால் அவையும் இவனின் நேரல்லாத ஆளுகைக்கு உட்பட்டவையே ஆயின.

இந்த மன்னனின் மக்கள் அந்தச் சுற்றுவட்டங்களை " பிறவாம் தேயம்" என்றுதான் சொல்லமுடிந்தது.  பிரிட்டீஷ் மக்கள் இந்தியா முதலிய நாடுகளைக் "காலனி"கள்  ( குடியேற்றங்கள் )  என்று கூறியது போலவே யாம்.

பிறவாம்தேயம் >  பிறாந்தீயம் >  பிராந்தியம்.

பிறவாம் :   பிராந்   ( ற  - ர;   வா: கெட்டது;   அல்லது விலகிற்று.    ம் >ந்  புணர்ச்சித் திரிபு. )
தேயம் :  தீயம் > தியம். >  த்யம்   ஏகார ஈகார மாற்றம்.

எலாம் திரிபுமயமே.

சங்க காலத்தில் தேயம் என்ற சொல் தேம் என்று இருந்தது.

தேம் >  தேயம் ( ய என்பது எழுத்துப்பேறு )  >  தேசம்  ( ய ச போலி ) > தேஷ்.

பிற என்பது சொல்லில் பிரா என்று மாறுவது:  எடுத்துக்காட்டுகள்:

பிற அணி >  பிறாணி > பிராணி. ( மனிதரல்லாத மற்ற அணி உயிர்கள் ).
பிராணியின் உள்ளிருப்பது:  பிராணன்  > பிராணா.

பிறகு ஆர் அம் =  பிரகாரம்.
பின்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில்  சுற்றியுள்ள இடம்.  ஆர்தல்: சுற்றியிருத்தல். மூலத்தானத்தின் பின்னர் சுற்றுவட்டம் முதன்மையான இடம்.
ஒரு பூசாரி கோவிலின் மூலத்தானத்திலிருந்து வெளிப்பட்டுப் பின் பிரகாரத்துக்கு வந்து அப்புறம் வெளியிற் செல்லுகின்றனன்.

புறக்கட்டு:    புற + கு + ஆர் + அம் = புறகாரம் > பிரகாரம் எனினுமாம்.

புறம் : புற (எச்சச்சொல்.)

இவ்வளவுதான். மீண்டும் கண்டுரையாடுவோம்.







செவ்வாய், 23 ஏப்ரல், 2019

மா உனம் மௌனம்

சில இடுகைகளை வாசிக்குமுன் முன்வந்த இடுகைகளயும் வாசித்தல் நலமாகும். அப்போது சற்று விரிவாக அறிந்துகொள்ளுதல் இயலும், இங்கு எழுதப்பட்டவை ஒரு நூல்போல இல்லாமல் தனித்தனிச் சுளைத்தன்மை உடையனவாய் இருத்தலால் முன்னிடுகை வாசிப்பு நலம்பயக்கும்.

முன் இடுகை இது:-

https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_47.html



(முனிவரும் மௌனமும்)


முன்னுதல் என்ற வினைச்சொல்லே முனிவர் என்பதன் அடியாகும்.

அடி என்பது அடுத்து முன்னிற்பது:   அடு > அடி ( அடு+ இ ).

உன்னுதல் என்பதும் முன்னுதல் என்பதும்  ஒன்றுக்கொன்று பிறப்புத் தொடர்பினவாம்.   ஆகையால்  உன்னுதல் என்பதினின்று சொல்லமைப்பைக் காட்டினும் வேறுபாடு ஒன்றுமில்லை.

இப்போது மௌனம் எனற்பாலதை உன்னுதல் என்னும் சொல்லினடிப்படையில் அறிவோம்.

மா = பெரிய, நீண்ட

உன்னு(தல்) >  உன்னு > உன்னம் > உனம்.     ஆழ்ந்து சிந்தித்தல். முன்வைத்து எண்ணுதல்.

மா+ உனம் >  மாவுனம் > மவுனம் > மௌனம்.

ஒன்றைத் தீர எண்ணுகின்றகாலை,  பேச்சுக்கு வேலை இல்லையாகின்றது. பேசாமை மௌனமென்று பொருள் எழுவதாகுதல் காண்க.

இவ்வாறு உரைப்பினும் இழுக்காதென்ப தறிக.

சிவனாகிய ஆதிப்பரம்பொருள் எப்போதும் பேசுதல் இல்லை, எப்போதாவது மொழிந்ததாகச் சொல்லப்படுதல் உண்டு.

இலக்கணம்:

மா உ என்பது மௌ என்றும் மவு என்றும் திரிந்தது.  இது நெடிற் குறுக்கம்.

தலை எழுத்துக்கள் நீளுதலும் குறுகுதலும் நீரோடைபோலும் மிக்க இயல்பான நிகழ்வாகும்.

தோண்டு >  தொண்டை  ( ஐ விகுதி ).
மா உ  > மவு (குறுக்கம் )  >  மௌ ( திரிபு).
முனி+ அம் = மோனம் ( திரிபு - முதனிலை திரிதலும் மு> மூ என்று  தன்னீட்சியாக இன்றி  மு> மூ >  மோ என்று இனமாகத் திரிதலுமாம்.

பண்டு ( பழமை ) என்ற குறில் தொடக்கக் குடிப்பெயரில் பகரம் பாகாரமானது தன்னீட்சி ஆடும்.

பண்டு > பாண்டு> பாண்டியன்.  மூவேந்தருள்ளும் பண்டு தோன்றியோன்.

காலம் செல்லச் செல்லவே எதுவும் பண் அடைகிறது,

பண் > பண்டு > பாண்டு > பாண்டியன் -  பண்பட்டவன் என்று பொருள் கூறினும் ஏற்கலாம்.

சொற்கள் தோன்றித் திரிவுறுகையில் நாம் பார்த்துக்கொண்டோ கேட்டுக்கொண்டோ இருக்கவில்லை. நாம் பிறந்தது இந்நூற்றாண்டில்.    ஆய்வு நெறிகளால் அதில் கிட்டிய அளவைகள் சிலவற்றால்தான் நாம் இதைக் கூறலானோம். ஈரளவைகளும் பொருந்துங்கால் சொல்லை இருபிறப்பி என்று ஏற்றல் அறிவுடைமை என்று முடிக்க. ஒன்றைச் சரி என்று தொங்கிக்கொண்டிருக்கலாகாது.