புதன், 30 மே, 2018

மாநாடு - மகாநாடு. அமைப்பும் பொருளும்.

மகாநாடு,  மாநாடு  என்ற சொல்வடிவங்கள் இப்போது
பலரும் தாளிகைகளில் கண்டு நினைவுறுத்திக்
கொள்ளுவன ஆகும்.

தமிழில் மா என்றால் பெரிய என்று பொருள். இந்த மா
என்னும் சொல்லுக்கு வேறு பொருள்களும்
உள்ளனவென்றாலும் அவை நம் இன்றைய
உரையாடலுக்குத் தொடர்புடையனவல்ல.

நாடு என்பது பல்பொருளோருசொல்.  அதாவது பல
பொருள்களையுடைய ஒருபதம்.  நாடு என்பதன்
பொருளாவன:

இடம்
உலகம்
ஊர்
பக்கம்
பூமி
தேசம்
நாட்டுப்புறம்
இடப்பரப்பு
மருதநிலம்

இவற்றுள் எதுவும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கவில்லை
. ஆனால் நாம் மாநாடு என்று  அல்லது மகாநாடு என்று
கூறினால் மக்களின் கூட்டத்தையே குறிக்கின்றோம்.

எனவே இடம். உலகம், தேசம், பூமி என்பவற்றில்  எதுவாயினும்,  ஆகுபெயராய் நின்று ஆங்குக் கூடும் மக்களைக் குறிக்கவே,   மா என்பதும் பெரிய என்று பொருள்தர,  இறுதிப்பொருளாய் வருவது:  பெரிய மக்கள் கூட்டம் என்பதே ஆகும்.

"ஊரே சொன்னது, நாமிருவரும்தாம் பொருத்தமான மணமக்கள் என்று "  என்பதாக வரும் உரையாடலில்,  ஊர் என்பது ஊர்மக்களைக் குறித்தது.  உயிருள்ளனவும் இல்லாதனவாகிய பிறவற்றையோ கட்டிடங்களையோ குறிக்கவில்லை.  வணிக வளாகம் விலையை ஏற்றியிருக்கிறது என்றால் அங்குள்ள கட்டிடம் விலையை ஏற்றவில்லை;  அதை நடத்தும் முதலாளியோ  குழும்பின் ஆட்சிக்குழுவினரோ ஏற்றிவிட்டனர் என்று பொருள்.  பெட்ரோல் ( கல்லெண்ணெய்)  விலை ஏறிவிட்டதென்றால் தானே எப்படி ஏறும்?   இது ஒரு பேச்சு வழுவமைதியாகும்.

இப்போதைக்கு இவ்வாறு புரிந்துகொள்வோம்.  மகா, மா என்பன எப்படி வந்தன, பெரிய என்ற பொருள் எப்படி ஏற்பட்டது,  மா என்ற மரத்தினாலா?
அதை இன்னோரெழுத்தில் அறிந்தின்புறுவோம். 

பிழைத்திருத்தம் பின்னர்.

திங்கள், 28 மே, 2018

தீபகற்பம்: தீவகம் அல்லாதது (முக்கரைத்தொடர்)

தமிழ்மொழிக்குரிய நிலப்பகுதி இந்தியாவின் தென்பகுதி என்று நாமறிவோம், அதிலும் ஒரு பகுதியே இப்போது தமிழ் வழங்கும் நாடு,  இதைத் தீபகற்ப இந்தியா என்று நாம் சொல்லலாம்,  இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டுமாகில், தீபகற்பத்தின் ஒரு பகுதி எனலாம்.

தீபகற்பம் என்ற சொல்லையும் ஆய்வோம்.

தீபகற்பம் என்ற சொல் தமிழ் அகரவரிசைகளில் இல்லை என்று தெரிகிறது.  யாம் வைத்திருக்கும் சில அகரவரிசைகளில் இல்லை. ஆனால் எம்  சமஸ்கிருத அகராதியில் அது உள்ளது.

தீபகல்பம் என்பது சமஸ்கிருதத்தில் தீவையும் குறிக்கும். முப்புறம் கடல் சூழ்ந்த தீவு அல்லாத பகுதியையும் குறிக்கும்.

ஆனால் பிராமணர் என்போர் கடல்தாண்டிப் போகக்கூடாது என்று சாத்திரங்கள் சொல்கின்றன.  இப்போது யாரும் இதைக் கடைப்பிடிக்கவில்லை என்றாலும்  தீவுக்கும் தீபகற்பங்களுக்கும் பெயரிட்ட மிகப் பழங்காலத்தில் அவர்கள் அங்கெல்லாம் சென்றிருக்கமாட்டார்கள் என்பது தெளிவு.  தீவுபக்கம் போனால் அன்றோ அதைத் தீவு என்று பெயரிடுவார்கள்.  முப்புறம் கடல் சூழ்ந்த குமரிக்கண்டத்தினன் தமிழன் ஆதலாலும் உலகின் பல பகுதிகட்கும்  சென்றுவந்தவன் அவன் ஆதலினாலும் அவன் அதற்குப் பெயர்களை இட்டிருப்பான் என்று நாம் நன்றாக நம்பலாம்.

தீவு தீபகற்பம் முதலிய சொற்களைத் தமிழர்கள் படைத்திருந்தாலும் அவர்கள் இவற்றைப் பதிந்த நூல்கள் இல்லாதொழிந்தமையால், நாம் இவற்றைச் சங்கத நூல்களின் துணைகொண்டு கண்டுகொள்கிறோம்.

தீவு என்ற சொல் முன்னர் இங்கு விளக்கப்பட்டது.  அதனைக் காண
அன்புகூர்ந்து சொடுக்கவும்:

http://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_47.html

 அதைப் படித்துவிட்டீர்கள். இப்போது தீபகற்பம் என்ற சொல்லைப் பார்ப்போம்:

தீவு என்ற சொல் தீவகம் என்றும் வரும்.  தீபகற்பம் என்பது முழுதும் நீரால் சூழப்படாமல் உள்ள நிலம்.  தீவு அல்லாதது.  தீவகம் அல்லாதது.

தீவகம்+ அல் +( பு+  அம்).
அல் என்பது அல்லாதது. ( பு,  அம் விகுதிகள். )
தீவ(க + அல்) + பு + அம். :    ஓர் அம் கெட்டது,   அம் என்பது நிலைமொழியின் ஈறு,
தீவ(கல்)+பு+ அம்.  (மீண்டும் ஓர் அ  கெட்டது.)
தீவகற்பம்.
வகரம் பகரமாய்த் திரியும்.
எனவே  தீபகற்பம்.

உண்மையில் இது தீவகற்பம் என்றே இருப்பது தக்கது.

தீவக அல் பு அம் =  தீவகற்பம்  : பொருள் தீவகம் அல்லாதது,  தீவு அல்லாதது,

தீவு என்பது தீர்வு என்பதன் திரிபு அன்றோ?  ஆதலால்  "தீவக அல்லாதது" "என்றால் தீர்வாகச் சூழப்படாதது என்று பொருள் சரியாக வருகிறது.

தீவகற்பத்துக்கு இன்னும் கற்பம் ஏற்படவில்லை,  காரணம் எல்லாம் தமிழ்ச் சொற் பகுதிகளாகவும் விகுதிகளாகவும் இருப்பதால்.

தீவகற்பமென்பது உண்மையில் முக்கரை நிலத்தொடர்  ஆகும்.  தீபகற்பம் என்ற சொல் பிடிக்காதபோது இதை "முக்கரைத்தொடர்"  என்று குறிப்பிடுதல் ஏற்புடைத்தாகும்.
 

மகர வகர ஒலியுறவும் திரிபுகளும். சிறு கண்ணோட்டம்

மகரமும் வகரமும் ஒலியுறவு உடைய எழுத்துக்கள். நாம் கவிதை எழுதும்போது  முதலடியை மகரத்தில் தொடங்கி அடுத்த அடி தொடங்குவதற்கு  மகரத் தொடக்கமான இன்னொரு சொல்லைத் தேடுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மகரத்தில் கிட்டவில்லையானால் வகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லுடன் இரண்டாவது அடியைத் தொடங்கலாம். மோனை வந்ததுபோலவே கேட்போருக்குத் தோன்றுமளவுக்கு இவ்வெழுத்துக்களுக்கு ஒலியுறவு இருக்கின்றது.

இம்முறை சொல்லமைப்பிலும் வந்துள்ளது.

வினவுதல்  -     மினவுதல்.   (பொருள் ஒன்றுதான்.)
விஞ்சுதல்   -     மிஞ்சுதல்.

இதன் தொடர்பில் விரட்டுதல் -  மிரட்டுதல் என்பது கவனிக்கத்தக்கது.

மிரட்டுதல் என்பது அச்சுறுத்துதல் என்ற பொருளிலே மக்களிடை அறியப்பட்டுள்ளது.   விரட்டுதல் என்பது ஓடும்படி செய்தலைக் குறிக்குமென்று நாமறிவோம்.  எனினும் இச்சொல்லுக்கு அச்சுறுத்துதல் என்ற பொருளும் உள்ளது.   ஆகவே  அந்நிலையில்  மிரட்டுதல் என்பது விரட்டுதலுக்கு ஒப்பாகிறது.

எனவே:

விரட்டுதல் -  மிரட்டுதல்.

இதற்குக் காரணம் விலங்குகளை அச்சுறுத்தியே ஓடச்செய்ய இயலும் என்பதாக
 இருத்தல் தெளிவு.

மிகுதியே  பின் விகுதி என்று திரிந்தது என்பது நாம்  முன் இடுகைகளில்
கூறியதாகும்..மி -  வி.  மிகுதி > விகுதி,


அடிக்குறிப்பு:

-------------------------------------------------

1.மால்வரை ஒழுகிய  வாழை வாழை   (   மா -  வா  )  மோனை.
சிறுபாணாற்றுப்படை.   21.

2.  -நாவொலியிலும்  வானம் என்பது மானம் என்றே வரும்.
மானம் மழை வந்தால்தானே இங்கே பயிர் விளையும் என்பர்.

மானாமாரி >  வானாமாரி என்பதும் காண்க.

3  வல் -  தமிழ்ச்சொல்.  பொருள்:  வலிமை.   மல்   வலிமை.
வல் = மல் .   வல்லன் -  மல்லன்.   வல்  + அன்  = வல்லன்  > வலன் .
வகர மகர மோனைத் திரிபு.

வல்  என்பது பல் என்றும் திரியும்.   வலம் > பலம் , (வலிமை ).