சனி, 27 ஜனவரி, 2018

ஒற்றுமை தொடங்குமிடம்.




அடுத்த நாட்டுடன் சண்டையென்றால்
அப்போது  கிடைப்பதே உள்ளொற்றுமை;
எடுத்ததற் கெல்லாம் ஒற்றுமை ஒற்றுமை
என்பதிற் கிடைப்பதோ என்னசொல்வீர்.
படுத்திருப் பவர்க்கே உறக்கமையா
பசித்திருப் பவர்க்கே உணவென்பதே.




காசு   மீரம் கிட்டிவிட்டால்
காசில் லாதவர் எங்கிருப்பார்??
தேச ஒருமைக்கு வேண்டுவதே
காசு மீரம் பெறுவதொன்றோ

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை அன்றோ?
 



அருணன் அருணாசலம் அருணோதயம்

அர் என்ற அடிச்சொல் நாம் அறிந்தின்புறத்
தக்க தமிழ் அடி ஆகும்.

இவ்வடியினின்று எழுந்த பழஞ்சொற்களை
முன்னர்க் காண்போம்.

அர் >  அரக்கு. இது கு விகுதி பெற்ற சொல்.
அதை நீக்கிவிட்டால் அர் எஞ்சி நிற்கும். 
அரக்கு செம்மையாதலின் அர் என்பதும்
செம்மைப் பொருளினது ஆகும்,

அர் > அரத்தை:  இது இஞ்சி போன்ற
வடிவினது.    அர் + அ+தைஅல்லது அர்+ அத்து + ஐ 
என்ற துண்டுகள் இணைந்த சொல்.  இதுவும்
செம்மை நிறத்தினை உடையது.  இதனாலும் 
அர் என்ற அடி செம்மை குறிப்பதே
என்பது தெளிவாகிறது.

அர்+அத்து+ அம்= அரத்தம்.  இது குருதி
என்னும் பொருளது. தன் தலையெழுத்தை இழந்து
ரத்தம் என்று வழங்குவது. தமிழில் ரகரத்தில் சொல்
தொடங்காது என்று இலக்கணமிருப்பதால், திறம்
மிகப்படைத்த நம் தமிழரால் இரத்தம் என்று இகரம்
சேர்த்து எழுதப்படுவதுமாகும்.  இதுவும் சிவப்பு
என்று நிறம்குறிக்க எழுந்த நல்ல தமிழ் ஆகும்.
தலையெழுத்தை இழந்து தலைதடுமாறச் செய்விக்கும்
சொற்கள் மிகப்பல. முண்டமாக வரும் சொல்லை
எந்தமொழி என்றறியாது அலமருவது கண்டு
நீங்கள் ஆனந்தமடையலாம்.

அர் :> அரத்தி : செவ்வல்லியைக் குறிப்பது.

அர் > அர+ இன் +தம் =  அரவிந்தம்  : சிவந்த இனிய
தாகிய  தாமரை.  தம் என்பது து+ அம். இன் உடமைப்
பொருளெனினும் வெற்று இடைநிலை எனினும்
பெரிய வேறுபாடில்லை.

அர் > அரப்பொடி:  சிவப்பாகத் தோன்றும் இரும்புத்
தூள்.  துருப்பிடித்தது சற்று செம்மை தோன்றும்.

அர் >   அரன்:  இது சிவனைக் குறிக்கும்
சொல் ஆகும்.  சிவ என்பது சிவப்பு நிறம்
குறித்தல்போலவே  அர் என்பது, அந்நிறமே குறித்தது.
சிவ> சிவன்;  ஒற்றுமை உணர்க.  அரி+அன் என்று
புணர்ந்து அரனாகி பாழ்வினைகளை அரித்தெடுப்போன்
என்றும் கொளலாகும்.

அர் >  அருணன்:   இது சூரியனைக் குறிக்கும்.
அர்+ உண்+ அன் என்று பிரிக்க. உண் என்பதற்கு
 "உளதாகிய"  என்று பொருள்கூறவேண்டும்.  உண்
என்பது துணைவினையாகவும் வழங்கும். 
எடுத்துக்காட்டு: வெட்டுண்ட.  கட்டுண்ட என்பவை.
உள் > உண்.  நாம் உண்பதும்  உள்ளிடுதலே ஆகும்.
விள் > விண் என்பதுபோல.  விள்> வெள் > வெளி.  
சூரியன் செம்மை யாதலின்  அர் என்பதில் அமைந்தது. 
செங்கதிர் என்பது காண்க. (ஆனால் சூரியன் என்னும்
 சொல் செம்மைப்பொருள் உள்ளதன்று. வெம்மை
குறிக்கும் சூடு என்னும் சொல்லினின்று வருவது.  சூடு> சூர்.
சூடியன் > சூரியன்; அதாவது: மடி> மரி என்பது போல.
மடிதலே மரித்தல்.  மடி என்பது ம(த்)தி என்று மலாய்
மொழியில் வரும். இவற்றைப் பின் ஆய்வோம்)

அர் > அரிணி.  செந்நிறத்ததான மான்.

அர் > அரிதம் : பொன் நிறம்.

அர் > அரிணம் : பொன். *( செம்மையுடன் உறவுடைய
நிறத்தது )


அருண+ ஆசலம் = அருணாசலம்; 
அருண+ உதயம் = அருணோதயம்.
செங்கதிரோன் தோன்றும் மலை அருணாசலம்.
 இது அருணகிரி அண்ணாமலை எனவும் படும்.

அரக்கு என்பது சிவப்பு என்று பொருள்படுவதால்,
அரக்கர் செம்மை நிறத்தினர் ஆதல் வேண்டுமே, 
இதை நீங்கள் ஆய்ந்து எனக்கு அறிவியுங்கள்.







வியாழன், 25 ஜனவரி, 2018

சொல்: தத்துவம்.


 
தத்துவம் : தன் த தற் தத்

தத்துவங்கள் பற்றிப் பேசுமுன் தத்துவம் என்ற சொல்லை ஆய்ந்து அதன் பொருளைத் தெரிந்துகொள்வோம்.

 இப்படிச் சொல்லினை ஆய்வு செய்து அதிலிருந்து  தொட்டு1 எடுத்து நாமறிகின்ற பொருளோ  நாம் அகரவரிசைகளிலும்  பேரகராதிகளிலும் காணும் பொருளினின்று வேறுபடும்.

வரையறவு: (Definition)

தத்துவம் என்பது பிற கருத்துகளைச் சார்ந்திராமல் தானே நிலைநாட்டப்படும் அளவிற்குத் தனித்தன்மை பெற்ற ஓர் அடைவுக் கருத்து ஆகும்.  இதனை மெய்ப்பிக்கப்பட்ட உண்மை என்றும் கூறுவதுண்டு. An established truth. 

இது தன் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து அமைக்கப்பட்டது.  தன் கடைக்குறைந்து த~  ஆகிறது.  அடுத்தது து.  து என்பது உடையது என்று பொருள்படும் ஒரு சொல். அது  ஒரு அஃறிணை விகுதியாகவும் வரும்.  நரி ஓடுகிறது என்பது இறுதியில் து இருக்கிறது.    திருக்குறளின் முதல் பாவைப் பாருங்கள். அதில் முதற்றே உலகு என்ற தொடர் வரும்.  முதல்+து = முதற்று.  இதன் பொருள் முதலாக உடையது என்பது.  

ஆகவே து என்பது உடையது என்னும் பொருளினது ஆகும்.  

இறுதியில் இருப்பது விகுதி. இது அம்.   ஆகவே த(ன்)+து+ அம் = தத்துவம்.    தன் என்பதின் ~ன்  இறுதியை எடுத்துவிட்டால் பெருந்தொல்லையோ?

செந்தமிழும் கொடுந்தமிழும்:

செந்தமிழ் முறைப்படி அமைந்தால்:  தன்+து + அம் =தன்றுவம் என்று வந்திருக்கும். தற்கொலை என்ற சொல்லில் தற்-  என்று வருகிறது. இது செந்தமிழில் சொற்புணர்வால் அன்றி வருவதில்லை. க ச ட த ப ற என்ற வல்லெழுத்துக்கள் வந்தாலே தன் என்பது  தற் என்று வரும். இல்லாவிட்டால் தற் என்பதற்கு தனிவாழ்வு தமிழில் இல்லை. அது வேறுமொழிக்குச் சென்றால் அதைத்  தத் என்று எழுதலாம். ஏதும் தடையில்லை.  ஏனென்றால் அங்கு இந்த இலக்கணம் இல்லை. இந்தக் கணவனிடம் இருந்து இன்னொருவன் பின்னால் ஓடி அங்கு  சுதந்திரம் (சொம்+தம்+திறம்) பெற்று பிள்ளைகள் பெற்று வாழ்வதில் ஏதும் தடையிருப்பதாக அவள் உணராதது போன்றதே இதுவாம். 

பரிமாணங்கள்:

 பிறழ்பிரிப்பில் தற் என்றாகி, அயல்வாழ்வில் தத் என்று மாறி தனிநிலையாளுமை பெற்றுவிட்டபடியால் அது ஆங்கு, தனிச்சொல். இங்கு அதற்கு அந்த வலிவு இல்லை.

எனவே தன் செந்தமிழ்.  த என்பது னகரம் வீழ்ந்த  கடைக்குறை எனினும் செந்தமிழ். தற் என்பது புணர்விளை.  தத்  என்பது அயல்தோற்றம்.   

செந்தமிழ் அல்லாதவை கொடுந்தமிழ்.  கொடு என்றால் வளைவானது என்று பெருள். கொடுந்தமிழின் பரிமாணங்கள்  ( பரிந்து மாண்புற்றவை ) இன்று பலப்பல. தன் முதல் தற் வரை உள்ளவற்றைத் தமிழாசிரியன் காவல்துறைபோல காத்துக்கொள்ளலாம். ஏனையவற்றைத் தடுக்க அவன் வலிவற்றவன் ஆவான்.  தனித்தமிழ் என்பது ஒரு Rule of Exclusion.
பிற பின்.

அடிக்குறிப்புகள்:

1  தொட்டு = தோண்டி (...எடுத்து)



மறுபார்வையும் திருத்தமும்:  பின்.