ஞாயிறு, 26 நவம்பர், 2017

கருணை செய்யும் ஐயப்பன்.

இன்று காலைமுதல் மதியம் வரை எம் கணினி வேலை
செய்யவில்லை. தொடங்கி ஓடுவதற்கு முடியாமையால் அது பழுதுபார்க்கப்பட்ட நேரத்தில் ஓர் ஐயப்பன் பாட்டு 
மனத்துக்குள் வடிவெடுத்தது.

இதை நீங்கள் நினைக்கும் இராகத்திலோ மெட்டிலோ
 பாடிக்கொள்ளலாம். யாம் எழுதுகையில் மனத்தில்
 நின்ற மெட்டு, கீழே தரப்பட்டுள்ளது. இது யாம் 
 யூ டியூபில் கேட்ட மெட்டை ஒற்றி எழுந்த பாடல்.

சாமி ஐயப்பா
காக்கும் கையப்பா
கருணை செய்யப்பா.  (சாமி)

பூமி கண்ட வாழ்வினிலே
பூத்தசந்த கண்களிலே
சேமி உன் தன் சீர்வடிவே
சேரும் துணை யாய் உறவே  (சாமி).

காதில் வந்து மோதும் அன்பர்
நாம ஒலிகளே
வேதமாகக் கொண்டு நெஞ்சே
வேகமாகவே நெகிழ்ந்தே,,
மீது பொழி அருள்மழையே
யாதும் துன்பம் தீர்வுறவே   (சாமி )



இதை எழுதிகாலை நினைவில் நின்ற மெட்டு:

எம் எம் மாரியப்பா பாடிய: “ இந்த இன்பமே தந்த 
பைங்கிளி ஜீவன் அல்லவோ?”  (படம்: மருத நாட்டு 
இளவரசி, பழைய படம்).

இம்மெட்டில் கொஞ்சம் பேதமாக வரும்..


வெள்ளி, 24 நவம்பர், 2017

பொருளிலக்கணத்தில் அகப்புறம் என்பதென்ன ?



இன்று அகப்புறம் என்பதென்ன என்று அறிந்துகொள்வோம்.

அகமென்பதும் புறமென்பதும் மறுதலையான கருத்துகள் ஆகும்.

இங்கு அகம் என்பது மனத்தில் நிகழும் உணர்வின் அடிப்படையில் காதலரிடையே நடைபெறும் ஒழுக்கமாகும். புறமென்பது இவ்வாறு மனவுணர்ச்சியில் அடிப்படையில் எழாமல் உலகியலில் நடைபெறும் ஒழுக்கம் அல்லது நெறி. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:  போர்.

ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தினர் ஒருதலைக் காமம்,  (கைக்கிளை ) எல்லைமீறிய காமம் (பெருந்திணை)  ஆகியவற்றை  அகவொழுக்கத்தின் வழு அல்லது குற்றமானவை என்று ஒதுக்கி அவற்றுக்கும் இலக்கணம் கூறினார்கள் கடியத் தக்கவற்றுக்கும் ஏற்றுக்கொண்டு விளக்கம் கூறினமையால் அவை அகவொழுக்கத்தின் வழுவமைதி ஆயின

தொல்காப்பியத்துக்கும் வெகுகாலம் கழித்து பன்னிரு படலம் என்ற நூல் தோன்றிற்று இது பொருளிலக்கணம் ஆகும். இது பாதுகாக்கப்படாமல் அழிந்தது.  இதன் வழிநூலாகத் தோன்றியதே புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலாகும் இஃது ஐயனாரிதனார் என்னும்  சிறந்த ஆசிரியரால் பன்னிரு படலத்தைப் பின்பற்றி எழுந்ததென்று புலவர் கூறுவர்

தொல்காப்பியத்துக்கும் வெண்பாமாலைக்கும் உள்ள இடைக்காலத்தில் இலக்கண நெறிகளும் சிறிது மாற்றமடைந்தன. ஐயனாரிதனார் ஒருதலைக் காமத்தையும் (கைக்கிளை)  எல்லைமீறிய காமத்தையும் (பெருந்திணை) அகவொழுக்கத்தின் வழுக்களாகக் கருதாமல் அவற்றை “அகப்புறம்” என்று கோவைப்படுத்தினார்.

இது பட்டியற்படுத்துதலில் ஏற்பட்ட வேறுபாடேயன்றி இலக்கண உள்ளீடுகளில் விளைந்த மாற்றமன்று என்று நாம் கருதுதல் வேண்டும்.
மரபுகளைப் போற்றிச் செல்லும் நெறியில் விகற்பங்களையும் உள்வாங்கி இலக்கணமுரைத்தல் இதுவாகும்.

தமிழ்ப் பொருளிலக்கணக் கூறுகள் சமயத்துறை சாராதவை. இங்கனம் பொதுநிலையாக இலக்கணம் வகுத்த பெருமை தமிழனுடையது ஆகும். இத்தகைய நெறிகளை மிகப்பழங்காலத்திலேயே தமிழர் பின்பற்றியது போற்றற்குரியது என அறிக.

தொல்காப்பியத்துக்கும் பிற்கால இலக்கணங்களுக்கும் உள்ள நெறிகளை அறிந்து மகிழ்க.

.

ஐயப்பன் பக்தர்கள் நாளை அறப்பணி


நாளை   21.11.2017 ஐயப்ப பற்றர்கள் முதியோர்
இல்லம் சென்று அறப்பணி செய்து

அங்குள்ளோரை மகிழ்விக்கிறார்கள்.
அவர்கள் உங்கட்குச் சொல்வதுபோல்
அமைகிற கவிதை இது .


ஐயப்ப பத்தர்கள் நாங்களே--- நாங்கள்
அன்புகொண்   டங்கு வருகிறோம்

மெய்யாய் முதியோரைக் காணுவோம் ---கண்டு
மேலாம்  அறப்பணி பூணுவோம்,


மூதாட்டி கட்குப்பல் சேலைகள்---ஆண்
முதியோர்க ளுக்குப்பல் வேட்டிகள்.
ஆதாரம் அற்றார்க்குச் சாப்பாடு---எங்கள்
அய்யப்ப    சாமிவ   ழிபாடு


இல்லமோ அன்றெங்கள் இல்லமே --- நாங்கள்
இயற்றுவ தய்யப்பன் உள்ளமே,
சொல்லிடும் நற்பணித் திட்டமே ---இங்கு
சூழ்குமு கத்துநல் வட்டமே. 




இளைஞர் திருமோகன் சாமியே --- குழு
இதன் பொறுப்பேற்ற முன்னவர்;
கிளைஞர் மினுங்குறு நட்பினர் --- போலும்
மிறைத்தல் மிகக்கொள் உறுப்பினர்.
 



ஆதாரம்  - வாழ்வாதாரம் 
அன்று   -  அத் தினத்தில் 
கிளைஞர் - உறவினர்.

குமுகம் - சமுகம்.
மிறைத்தல் - பாடுபடல். உழைத்தல்.

மினுங்குறு - ஒளிவீசும்;  மேலெழும்.

சில தொடர்களுக்குப் பொருளுரை:


இல்லமோ அன்றெங்கள் இல்லமே  :   இல்லமோ  -  குறிப்பிட்ட

முதியோர் இல்லம் என்பது;

அன்று எங்கள் இல்லமே:  நாங்கள் வந்து சேவையாற்றிய போது

அது எங்கள் சொந்த இல்லம் (போல் ஆயிற்று).

சூழ்குமு கத்துநல் வட்டமே.  :  சுற்றியுள்ள மக்கட்கு  நல்ல

வட்டாரமாகிவிட்டது.
 
 


வெண்டளையும் சில இடத்துப் பிற தளையும்
தட்டு வந்த சிந்து கவி .

இது "எளிதாக்கப்"பட்டுள்ளது.



இப்போது சந்தக் கவிதைகளைத் தெரிந்துகொள்வோம்.
இது முதலில் சந்தமின்றி பெரும்பாலும் வெண்டளையில் எழுதப்பட்டுப் பின் சந்தம் வரும்படி மாற்றப்பட்டது.
சந்தத்தின்பொருட்டு சீர்கள் அறுக்கப்பட்டு ( வகையுளி ) சொற்கள் முழுமையாக நில்லாமல் தொடுக்கப்படும்.  எடுத்துக்காட்டு:
ஒரு சொல்லின் பகுதி அடுத்த சீரில் சென்று சேரக்கூடும்.
மூதாட்டி கட்குப்பல் சேலைகள்---ஆண்
முதியோர்க ளுக்குப்பல் வேட்டிகள்.
இது  சொற்களாக நிறுத்தப்பெறின்:
மூதாட்டிகட்குப்   பல் சேலைகள்---ஆண்
முதியோர்களுக்குப்   பல் வேட்டிகள்.
என்று வரவேண்டும்.
ஆனால் சந்தம்:
மூதாட்டி/ கட்குப்பல்/ சேலைகள்---ஆண்
முதியோர்க/ ளுக்குப்பல்/ வேட்டிகள்.
என்றபடி அமைதல் காண்க.


சில இடங்களில் இது பின்பற்றப்படாமல் விடப்பட்டது.

கிளைஞர் மினுங்குறு நட்பினர் --- போலும்
மிறைத்தல் மிகக்கொள் உறுப்பினர்.  

இதை நீங்கள் சந்தம் வரும்படி படித்துக்கொள்ளுங்கள்:
கிளைஞர் மி / னுங்குறு/ நட்பினர் --- போலும்
மிறைத்தல் மி/  கக்கொள் உ   /றுப்பினர்.
இப்படிப் படிக்கும்போது,  நட்பினர் என்பது றுப்பினர்
என்பதுடன் இயைந்தொலிக்கும்.


இக்காலத்தில் சந்தப்படி பிரித்தெழுதுவதை ஆசிரியர் 
சிலர் விரும்புவதில்லை. பொருள்தெரியக் 
கடினமாக்விடுவதால். 
 



last edited   21/11/201 7  1225 MST
 post screen appearance differs -  noted.

WARNING:  This post may appear disorderly on
your screen.  This is due to some inherent fault 
in the post software. Please read with caution.
We are not able to rectify it.