வியாழன், 30 ஏப்ரல், 2026

எரிதவழ் வேலன், ஒரு சுடர்ப்பையன் சுப்பையன்.



பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமோ நான்முகன் படைப்பு

நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்

கரிய மாலோ அலைகடல் துயின்றோன்

அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்

கலசமோ புவியிற் சிறுமண்

புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்

அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்

உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்

இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.


இதில் ஔவைப்பாட்டி, வேலனை எரிதவழ் வேலன் என்கின்றார்.

சிலர் வேலனின் வேல் தீயின் நிறமானது என்று கூறுவர். ஆனால் இஃது வேல் அந்நிறத்தினது என்பதாக இருக்கலாம். வேலன் அந்நிறத்தவன் என்பதாகவும் இருத்தல் கூடும். எமது ஆய்வில் வேலனே அந்நிறத்தவனாக வணங்கப்பட்டான் என்பதுதான். சிவந்த நிறமுடையோன் என்றும் பொருள்படும் சிவன் என்ற சொல் ( வட இந்தியாவில் ஷிவா என்பது வெண்ணிறத்தினன் என்றா;லும்) செம்மை நிறத்தினன் என்றே கொள்ளல்வேண்டும். அரன் என்ற சொல்லும் அரத்தம அரக்கு முதலிய சொற்கள் சிவப்பு நிரம் காட்டுவதால், சிவப்பு நிறத்தினன் என்றே சிவனைக் காட்டுகிறது. அர் என்பது சிவப்பு என்பதே.


இனிச் சுப்பையன் என்ற சொற்பொருள் காண்போன். இச்சொல் தமிழன்று என்று சிலர் கூறினும், இது சுடர்ப்பையன் என்பதன் திரிபு என்பதே உண்மை. சுடர் என்பது செம்மை நிறமே ஆகும்.


இச்சொல்லில் சுடர்ப்பையன் என்பது சுப்பையன் என்று இடைக்குறையாகிற்று. இன்னொன்றும் கவனிக்கவேண்டியதாகிறது. சு(டர்)ப்பையன் என்பது எந்த இடர்ப்பாடும் இல்லாத குறுக்கமாகும். இச்சொல் சுப்பையன் ஆன பிறகு, சுப்பு ஐயன் ஆகி, பையன் என்பது ஐயன் என்று கொள்ளும்படியாக மாறிற்று. சுடர்ப்பு + ஐயன் என்று பொருத்தினும் சுடர்தல் என்ற வினை பெயராகி ஐயன் என்பதனோடு இணைந்தது, அடிப்படைப் பொருள் மாற்றம் எதையும் தரவில்லை.


சுடர்ப்பையன் என்பதும் எரிதவழ் வேலோன் என்பதற்கு வேறுபடாத கருத்தே ஆகும். தாமே சுடர் என்பது மட்டுமின்றி, சுடர்ப்பினுக்கு அடிப்படையான தெய்வம் என்றும் பொருள் தரும்.

தீயும் கும்பிடப்பட்டதே ஆகும். தீயினைக் கும்பிடும் பார்ப்பார் என்று பாரதியாரின் பாட்டில் வருவதையும் காண்க. பார்ப்பார் என்போர் கோயிற்காரியம் பார்ப்போர்.

இதன் மூலம் சுப்பையன் என்பது தமிழ் எனபது அறிவிக்கப்பட்டது. இதை Subbaiah எனினும் ஒன்றும் இழுக்காது. பலசொற்கள் எடுத்தொலிக்கப்பட்டு வேற்றுச்சொல் போல் எண்ணப்படுகிறது. இந்தச் சொல் ஏனைத் தமிழின் இணைமொழிகளிலும் வழங்கும் சொல்லேயாகும். உச்சரிப்புகள் மொழிக்குமொழி  வேறுபடும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை




செவ்வாய், 28 ஏப்ரல், 2026

ரகர ஒற்றுகள் மறைதல்

 ரகர ஒற்றுகள் மறையும் சொற்கள் பலவாகும்.  அவற்றில் சிலவற்றை எழுதி வெளியிட்டது நினைவில் உள்ளது.

பேச்சுத் தமிழில் இவ்வாறு மறைதல்  மிகுதியாகும். வாருங்கள் என்பது அப்படியே பேச்சுத் தமிழில் வருவதில்லை.  அது  வாங்க ( வா(ரு)ங்க(ள்) )  என்று பிறையிட்ட எழுத்துக்கள் மறைதலைக் காணலாம்.  தாருங்கள் என்பதும் இவ்வாறே  தாங்க என்று மாறிவிடுகிறது.  வந்தார்கள் என்பதிலும் வந்தாக என்று திரிந்து,  ர் என்பதுடன் ள் என்பதும் மறைவு எய்துதல் காணலாம்.  பேச்சு மொழியில் திரியாமல் வழங்கும் சொற்கள் சிலவே என்னலாம்.  இப்படிச் செய்தலின் மூலமாக,  மிகுதியான உடல்வலிமையைத் தமிழர்கள் எட்டினர் என்று சொல்லத் தோன்றுகிறது. இது முயற்சிச்சிக்கனம்.

ஆனால் பார்வை என்ற சொல்லை இப்படித் திரித்துப் பேசுவதில்லை.   கோவை என்ற சொல்லில், ஒரு ரகரத்தை வரவழைத்துப் பேசுவதைக் காணலாம்.  கோர்வை என்பது வழுவிய சொல் என்று சில நூல்கள் காட்டினாலும், அவற்றை படித்துப் போற்றுவோர் சிலரே ஆவர் கூடுதலாக ஓர் எழுத்தைச் சேர்ப்பது முயற்சியை மிகுத்தல் என்று நினைப்பதில்லை.  அதாவது மூச்சுச் செலவு!

அவர் என்பது அவா, அவாள் என்று திரிவதைக் காணலாம்.  வகரம் நீண்டதுடன் ஒற்று ரகரத்துக்குப் பதில் ளகர ஒற்று வருதலையும் அறியலாம்

சோர்வு என்ற சொல்லில் ரகர ஒற்று உள்ளது.  இச்சொல்லிலிருந்து சோகம் என்ற சொல்லை ஆக்குகையில்,  சோர்+கு+ அம் > சோர்கம்> சோகம் என்று வந்துவிடும். கு என்பது இங்கு இடைநிலையாய் நிற்கும். அம் விகுதி. ஆர்கலி என்ற சொல்லில் இவ்வாறு நிகழாது.

சீர்த்துவம் என்ற சொல்,  சீத்துவம் என்று ரகர ஒற்றை இழந்துவிடுகிறது.  அதாவது சீரான தன்மை என்பது இது.  இது பேச்சில் வரும்  ''பாத்தா'' தெரியும்  என்பது போன்றதே.  பார்த்தால் என்பது இப்படித் தன் மெய்யை இழக்கிறது.

சீதனம்  எனபது  எப்படி?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

ஆனந்தம்

 ஆன்மாவின் அடிப்படைக் குணம் அல்லது பண்பு  அளவற்ற மகிழ்ச்சி என்று சொல்லப்படுகிறது,   இதற்குக் காரணம் அஃது உடலோடு கூடியிருக்கும் தன்மையே  ஆகும். இதுவும் ஆனந்தம் என்ப்படுகிறது. இந்தப் பொருளில் இது இப்போது வழங்குவதில்லை எனலாம். இது சத்து, சித்து எனவும் கூறுவர்.

இஃது மட்டுமின்றி,  ஒன்பது வகைப்பட்ட குபேரநிதிகளில் நந்தமும் ஒன்றெனப்படும்.  ஆ நந்தம்  என்பதால்  ஆ= ஆக்கந்தருகின்ற,  நந்தம் -  செழிப்பு என்பது. இந்த நந்தம் , நன்று  என்ற சொல்,  நல்+ து>  நன் து > நந்து+ அம் என்று வந்து, நந்தம் :   செழிப்பு  , வளர்ச்சி என்று பொருள்தரும்.  நல் > நன் என்று வருவது லகர நகரத் திரிபு.   மேலும் இன்னொரு வழியில் நோக்கின்,  நரந்தம் என்பது இடைக்குறைந்து, நந்தம் என்றாகி  இனிய மணமாகிய நன்மை என்றும் பொருள்படும்.  நந்துதல் ஆதலுமாகும் என்பதால்,  ஆனந்தம் என்றும் கொள்ளற்குரியது.  

நந்தம், நந்தல் என்பதற்குக் கெடுதல் என்ற பொருளும் உண்டு.  மிகுந்த நலங்கள் உண்டாதல்,  கெடுதலுக்கும் இட்டுச் சென்று  அழிவும் தருமாதலின்,  கெடுதற் பொருள் ஏற்பட்டுள்ளது.  நன்மையும் தீமையும் பிரிக்க இயலாதவை என்பதை உணர்க.    அதிகம் பொன் வைத்திருக்கும் ஒருவன் திருடனால் கொல்லப்பட்டு அவன்றன் பொருள் எடுத்துச்செல்லப் படுதல் காண்க.  தீதும் நன்றும் ஒருகளத்தில் தோன்றக்கூடியவை.

இவை நிற்க,  ஆனந்தம் என்பது   ஆக நன்று>  ஆ + நன் + து+ அம்  > ஆனந்தம் ஆகும். இதில் நல் > நன் என்றானது.  ஆகவே இது தமிழ் மூலமுடைய சொல்லே ஆகும்.  பனி என்ற சொல், பல்> பன்> பனி என்றாதல் காண்க.

ஆ+ நன்(  மை ) + து + அம் >  ஆனந்தம் என்றும் காட்டலாம். ஆநந்தம் என்றும் ந-வரவும் எழுதப்படுதல் உள்ளது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை