வியாழன், 3 டிசம்பர், 2020

ஏடன், ஏலன் - தோழமைப் பொருள்.

 எடுத்தல் என்பது அன்றாட வழக்கில் உள்ள சொல். எழுதுகோலை எடுத்தல், இலையை எடுத்தல் என்று பொருள்களை எடுத்தலுக்கும் இதை ஆள்வர். பெண் எடுத்தல், மாப்பிள்ளை எடுத்தல், விழா எடுத்தல் என்றும் வழக்கில் வரும். ஒரு நண்பனையும் எடுக்கலாம், நல்லபடியாக எண்ணிப்பார்த்த பின் நண்பனை எடுக்கவேண்டும். " நாடாது நட்டபின் வீடில்லை"  என்பதிலிருந்து நன்கு ஆய்ந்தபின்னரே ஒருவருடன் நட்புக்கொள்ளுதல் வேண்டும் என்பது தெளிவாகிறது.  நட்பும் எடுக்கவும் விடுக்கவும் கூடிய ஒன்றே ஆகும்.

எடுத்தல் என்பது வினைச்சொல்.

எடு + அன் =ஏடன். (தோழனாய் எடுக்கப்பட்டவன்)

இது முதனிலை திரிந்து (நீண்டு)   அன் விகுதி பெற்றது. அன் என்பது ஆண்பால் விகுதி.  தோழன் என்பது பொருள்.

ஏடன் -  ஏடி :  ஏடி என்பது  தோழி என்று பொருள்படும். இன்று பொருள் இழிந்துவிட்டதனால், இதைப் பொருள் வீழ்ச்சி அடைந்த சொல் (இழிபு) என்னலாம். இ என்பது பெண்பால் விகுதி.

ஏடன் என்பது  ஏடே. ஏடா என்றும்  ஏலே. ஏலா என்றும் திரியும்.

ஏல் என்பதற்கும் ஏற்கப்படுதல் என்னும் பொருள் உள்ளது.

ஏலன்( ஏலா) என்பது இதன்படி உரிய பொருள்பெறும்.

எனவே எவ்வாறு நோக்கினும் தோழமைப் பொருள் காண்பது இயலும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


ஏலா - இது விளிவடிவம்


புதன், 2 டிசம்பர், 2020

வினை மற்றும் பெயரில் விளைந்த வினைகள் (முயற்சித்தல்)

இக்காலத்தில் பார் என்ற சொல்லின் உண்மைப்பொருளைப் பெரிதும் மக்கள் கவனிப்பதில்லை. இதற்குக் காரணம் நோக்குதல் என்ற சொல் ஓரளவு மக்கள் மொழியிலிருந்து (பேச்சு) நீங்கிநிற்பதுதான். நாம் ஒன்றைக் கூர்ந்து "பார்க்குங்கால்" அதை நோக்குதல் என்றே சொல்லவேண்டும். பார்வை பரந்து செல்லுமாயின் "பார்த்தான்", "பார்த்தேன்" என்றெல்லாம் பார் என்ற வினைச்சொல்லினடிப் பிறந்த முற்றுக்களையும் பார்த்த, பார்த்து என்ற எச்சவினைகளையும் பயன்படுத்தலலாம்.


பார்வை பரந்து செல்லுதல் என்று குறிப்பிட்டோம். பர (பரத்தல்) என்ற வினையினின்றுதான் பார் என்ற வினைச்சொல் விளைந்தது. பரத்தல் என்பதும் வினை குறித்தது, பார்த்தல் என்பதும் வினைகுறித்தது, எனவே வினையினின்று இன்னொரு வினை தோன்றுவதற்கு இதுவும் ஓர் உதாரணம் ஆகும்.


பர > பார்.


ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றுவதுண்டா என்று யாரும் வினவின் இந்தச் சொல்லமைப்பினை நீங்கள் சுட்டிக்காட்டுவது சரி.


இன்னும் பல வினைகள் வினைகளிலிருந்தே திரிந்துள்ளன. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் பெருகும். இன்னும் ஓர் எடுத்துக்காட்டு மட்டும் காண்போம்.


இறுதல் என்றால் முடிந்துவிடுதல் என்று பொருள். இதைக் கண்டுகொள்வது எளிது. இறுதி என்ற சொல்லைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.


இறு என்ற வினைச்சொல்லிலிருந்து இற என்ற சொல் தோன்றியது. இறத்தல் என்றாலும் முடிவுதான். ஆனால் உயிருடன் வாழ்வோன் அல்லது வாழும் ஓர் உயிரியின் முடிவு. இச்சொல் ஒரு சிறப்புப் பொருளில் வருகின்றது. இறுதல் என்பது பொதுப்பொருள்:


இறு > இற.


இறத்தல் என்பதும் பின்னர் பொருள் விரியத்தான் செய்தது. உயிரற்றவை இறுதியடைதலையும் குறிக்க விரிந்தது. -டு: ஒரு சொல் வழக்கிறந்தது. இது "வழக்கு" என்பதை உயிருள்ளதுபோல் பாவிக்கிறது. --- உயிர்ப்பொருள் போல் ஒப்புமையாக வைக்கப்படுகிறது.


முயற்சித்தல் என்ற வழக்கில் உள்ள சொல்லைப் பார்ப்போம்.


முயல் (முயலுதல் ) என்பதே வினைச்சொல் ஆம். சி என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து, அஃது முயற்சியாகும். தொழிற்பெயரானபின் இகர வினையாக்க விகுதி பெற்றும் அது முயற்சித்தல் ஆகுதல் இயலாது என்றனர் தமிழ் வாத்தியார்கள். எனினும் தமிழ்ப்பேரகராதி இதனை பேச்சுமொழிச் சொல் என்று குறித்து பதிவு செய்துள்ளது. இது இப்போது அறிஞர் மொழிநடையிலும் இடம்பெற்றிருப்பதால் தொழிற்பெயரானபின்னும் மீண்டும் வினைச்சொல் ஆதலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இதன் எழுச்சியை மறுக்கின்ற முயற்சியால் பயனொன்றும் இல்லை என்றே நாம் சொல்லவேண்டும். முயற்சியெடுத்தல் என்பதன் இடைக்குறை என்றும் கொள்ளலாம். (யெடு) என்பது குறைவுற்றது என்று முடித்தல் கூடும்.


மெய்ப்பு பின்னர்

திங்கள், 30 நவம்பர், 2020

குசேலா என்ற பெயர்.

 குசேலா (குசேலன்) என்பதில் இரு சொற்கள் உள்ளன.  ஒன்று குச என்பது. இன்னொன்று ஏலா என்பது.  குச என்பது இவர் குயவர் வழியினர் என்பதை உணர்த்தும். குய என்ற சொல் இன்றும் குச என்றே திரிந்து வழங்குகிறது. இது தமிழ்ச்சொல். ஏலா என்பது விளிப்பெயர். இதன் எழுவாய் வடிவம் ஏலன் என்பது. இது ஏடன் என்பதன் திரிபு.  இதன் பொருள் தோழன், நண்பன் என்பதே. எனவே, இஃது ஓர் இயற்பெயரன்று என்பது தெளிவாகிறது.

வியாசர் இதனைக் காரணப்பெயராய்க் கதையில் அமைத்துள்ளார்.

பிற்காலத்தில் குசேலன் பிரம்மம் என்னும் பெருமானை உணர்ந்து வாழலானார். பிரம்மத்தை உணர்ந்தவனே பிராமணன்.  ஆதலின் இவர் வாழ்ந்த காலத்தின்பின்பு இவர் பிராமணர் என்றே குறிக்கப்படலாயினார்.. குசேலனின் தொடக்கத் தொழிலை இலைமறைகாய்போல் பெயரில் அமைத்தது வியாசரின் கதைசொல்லும் திறனையே கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ்ச்சொற்கள் சில திரிபுகளுடன் எவ்வளவு அழகுள்ளவையாக அமைந்துவிடுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். தொடக்கத்தில் எத்தொழில் உடையரேனும் பின்னர் அவர் தெய்வத்தொண்டராய் மாறுதற்கு இவர் வாழ்ந்த காலத்தில் வழியிருந்தது என்பது தெளிவு.   கண்ணன் அரசானதும் இதையே மீண்டும் வலியுறுத்துகிறது,  வியாசன் மீனவத் தொழிலினின்றும் கவியானதும் இதையே தெளிவுபடுத்துகிறது.

மக்கள் அனைவரும் ஒருவரே போல் வேறுபாடின்றி வாழ்ந்தனர். இதனைக் கூர்ந்துணரலாம் என்பதறிக.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

பிறழ்வுகளைச் சரிசெய்தல் பெரிய வேலையாய் உள்ளது. நீங்கள்

பின்னூட்டமிட்டு உதவினால் நன்றியுடையேம்.