வியாழன், 11 அக்டோபர், 2012

கண்> கரு > கருணை


வீரம், காதல், இரக்கம் போன்ற  பலவேறு பண்புகளும், கண்களின் வழியாகவே வெளிப்படுவனவாகத்  தமிழன் கருதினான்.
தமிழனின் மொழியில் அமைந்துகிடக்கும் சொற்கள் பலவும் இக்கருத்தையே நன்கு படம்படித்துக் காட்டுகின்றன.

வீரம் குறிக்கும் "தறுகண்மை" என்னும் சொல் கண்ணினையே நிலைக்களனாகக் கொண்டதாகும். காதலுக்கும் கண்ணுக்கும் உள்ளதாக இலக்கியங்கள் கூறும் தொடர்பினை ஈண்டு விரித்துரைக்கத் தேவையில்லை.

இரக்கம், மனநெகிழ்வு முதலிய கண்ணினின்றே வெளிப்படுவன என்று இலக்கியம் கூறும். கண்ணோடுதல், கண்ணோட்டம் என்ற சொற்களை ஆய்ந்து இதனை அறியலாம்.கண்ணோட்டம் என்பது இரக்கம்.

கண் என்பது கரு என்று திரியும் என்பதை நாம் மேலே ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம்.

கண்> கரு > கருணை.

முகத்தின் ஏனை உறுப்புகட்கு இல்லாத ஒரு  திறம்  கண்ணுக்கு உண்டு. கண் கலங்கி நீர் சிந்தி அழக்கூடியது. கண்ணிலிருந்து (கண் என்றசொல்லில் இருந்து)  கரு என்பதமைந்து கருணையில் முடிந்தது மிக்கப் பொருத்தமுடையதாகும்.

நெய்(தல்) என்ற சொல்லே "ணை" என்று மாறி சொல்லீறாக நிற்கின்றது. கண் சென்று ஈடுபாடு கொள்ளுதல் என்பது பொருள்.

கண்> கரு > கருநெய் > கருணை.

எண்ணெய என்ற சொல் எண்ணை என்று வழங்குதல் காண்க. தமிழ்ப் புலவன் இதை எண்ணெய் என்றே எழுதவேண்டுமென்றாலும் எண்ணெய் வணிகர் கேளார். திரிபு வழக்கில் உள்ளது.

அங்ஙனமே, கருணை என்ற திரிபையும் புலவர் ஏற்கமாட்டார்.எனினும் சங்கதத்தில் நல்ல  இடப்பிடித்துக்கொண்டு இது மீண்டும் தமிழுக்கு வந்து வழங்குகிறது,


குறிப்பு: கண்+ எய்(தல்) =கண்ணெய் > கருணை எனினும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

கருத்துகள் இல்லை: